15 ஜனவரி 2012

மறதியே, உன் தாய்மொழி தமிழா ?


பென்னி குக்
     மறதி என்பது ஒரு தனி மனிதனைப் பொறுத்த வரையில் நன்மை பயக்கக் கூடியது என்று கூறுவர். ஒருவன் தனது வாழ்வின் நேற்றைய பிரச்சினைகள், சோகங்கள், நம்பிக்கை துரோகங்கள், துயரங்கள் அனைத்தையும் நிகழ்காலத்தில் நினைத்துக் கொண்டே இருப்பானேயானால், அம்மனிதனது எதிர்காலம் பாதிக்கப்படும்.

     ஒருவன் தனக்கு மற்றவர்கள் செய்த உதவிகளை, தனது முன்னோர்களின் பெருமைகளை, சாதனைகளை மறந்து விடுவானேயானால் அல்லது தனது சந்ததியினருக்கு, இத் தகவல்களைக் கொண்டு சேர்க்காமல் விட்டு விடுவானேயானால், அவனது குலப் பெருமை அவனோடு சேர்த்துப் புதைக்கப்பட்டுவிடும்.
    தனி மனிதர்கள் சேர்ந்ததுதான் சமூகம். பழமையினை மறந்த தனி மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பொழுதும், சமுதாய ஒற்றுமை சீர்குலையும் போதும், அவன் சார்ந்த சமூகத்தின் பழம்பெருமைகளும், உரிமைகளும், மறுக்கப்படுவதும், மறக்கப்படுவதும் எளிதான செயலாக மாறிவிடும். அச்சமூகத்தின் பெருமைகள், சாதனைகள், போதனைகள் அனைத்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழிக்கப்பட்டு, இதுபோன்று ஒரு சமூகம் இருந்ததே வருங்காலத் தலைமுறையினருக்குத் தெரியாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகமுண்டு.
     கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி என்று தமிழராகிய நாம், பெருமைப்பட்டுக் கொண்டாலும், மறதி என்னும் ஒர் கொடிய தொற்று நோயின் பிடியில் சிக்கி, நம்மை நாமே மறந்து வாழ்கிறோமா? என்று எண்ணத் தோன்றுகிறது.
     கர்நாடகத்துடன் காவிதி நீர் குறித்த பிரச்சினை, ஆந்திராவுடன் பாலாற்று பிரச்சினை, கேரளாவுடன் முல்லை பெரியாறு அணை பிரச்சினை, இலங்கையுடன் கச்சத் தீவு பிரச்சினை என தமிழ் சமூகத்தின் பிரச்சினைகளின் எல்லைகள் விரிந்து கொண்டே செல்கின்றன.
     தமிழ் மக்களது உள்ளத்தில் நாமார்க்கும் குடியல்லோம் என்னும் நல்லுணர்வினை ஊட்டி, தேவாரத் திருப்பதிகங்களுக்குப் புத்துயிர் அளித்து, செந்தமிழும் சிவநெறியும் செழித்து வளர ஆக்கந்தரும் நெறிமுறைகளை உருவாக்கியவர் முதலாம் இராசராச சோழன் ஆவார்.
     தமிழர்களின் கட்டிடக் கலைச் சிறப்பிற்கும், சிற்பக் கலையின் செழிப்பிற்கும், கல்வெட்டுகளின் பெருக்கத்திற்கும் எடுத்துக் காட்டாக விளங்குவது, ஆண்டுகள் ஆயிரம் ஆகியும், மங்காத பொழிவுடன் காட்சியளிப்பது, இராசராச சோழன் எழுப்பிய கற்றளி தஞ்சைப் பெரிய கோயிலாகும்.
     ஆனால் சென்ற நூற்றாண்டு வரை, தமிழர்கள் இப் பெரியக் கோயிலைக் கட்டியவர் யாரென்று கூட  தெரியாதவர்களாக, நமது மூதாதையரின் பெருமையினை அறியாதவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதுதான் மிக மிக வருத்தப்பட வேண்டிய உண்மையாகும்.
     கிருமி கண்ட சோழன் என்பவனால் கட்டப் பெற்றது என்று பிரகதீஸ்வர மகாத்மியம் என்னும் வடமொழி புராணத்திலும், காடு வெட்டிச் சோழனால் கட்டப் பெற்றது என்று ஜி.யு.போப் அவர்களாலும் தவறானத் தகவல்களே பதிவு செய்யப்பட்டன. தமிழர்கள் அதனையும் நம்பி வந்தனர்.
     ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது, கல்வெட்டு ஆய்வாளராக நியமிக்கப் பட்ட ஜெர்மன் அறிஞர் ஹூல்ஸ் என்பவரே 1886 ஆம் ஆண்டு பெரிய கோயில் கல்வெட்டுக்களைப் படியெடுத்துப் படித்து, இப்பெரிய கோயிலைக் கட்டியவர் இராசராச சோழன் என்று உலகிற்கு அறித்த பெருமைக்கு உரியவராவார். ஒரு ஜெர்மானியன் சொல்லித்தான் நமது முன்னோர்களைப் பற்றி நமக்கே தெரிந்தது.
     தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாத புரம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த, 1886 ஆம் ஆண்டு முதல் 1895 ஆம் ஆண்டுவரை கடுமையாகப் போராடி, தனது சொந்த சொத்துக்களை விற்று, நமக்காக முல்லைப் பெரியாறு அணையினைக் கட்டிக் கொடுத்தவர் ஒரு ஆங்கிலேயர் பென்னி குக்.
      தமிழர்களாகிய நமக்காக, தனது சொந்த சொத்துக்களை விற்று, அணையினைக் கட்டி, நமது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொடுத்தாரே, பென்னி குக், அவரையாவது நாம் நினைவில் வைத்திருந்தோமா என்றால், இல்லை என்பதே வேதனைத் தரக்கூடிய பதிலாகும்.
     முல்லைப் பெரியாறு அணை கட்டப் பெற்று 116 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் பென்னி குக்கை மறந்து விட்டோம்.
ஓ.ஆண்டி
      ஆம், பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, பென்னி குக் யாரென்று நமக்குத் தெரியாது. தேனி மாவட்டத்தின், பாலார் பட்டி கிராமத்தின் அனைத்து வீடுகளிலும், பென்னி குக்கின் புகைப்படம் மாட்டப் பட்டிருந்தது. ஆனால் அவ்வீடுகளிலுள்ள மக்களுக்கும், ஏன் நமக்கும் கூட அவர் யாரென்று தெரியவில்லை. இந்தப் படம் எங்கள் வீட்டில் காலங் காலமாக மாட்டப் பட்டிருக்கிறது, ஆனால் அவர் யாரென்று எங்களுக்குத் தெரியாது என்பதுதான் அனைவரின் பதிலாக இருந்தது.
     பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், அதே பாலார் பட்டி கிராமத்தைச் சேர்ந்த, ஓ.ஆண்டி என்பவரை, இந்தப் படம்  வெகுவாக பாதித்தது. எதற்காக நமது கிராமத்தில் உள்ள அனைவரின் வீடுகளிலும் இந்தப் படம் மாட்டப்பட்டுள்ளது? இவர் யார்? என்று பலரையும் விசாரித்தார். பதில் கூறுவார் யாருமில்லை. விடை அறியாமல் விட்டு விடவும் மனம் வரவில்லை. ஒவ்வொரு நூலகமாக நுழைந்து விடையினைத் தேடினார்.
     முடிவில் இப்படத்தில் இருப்பவர் முல்லைப் பெரியாறு அணையினை நமக்காகக் கட்டிக் கொடுத்த பென்னி குக் என்று ஊரறிய உரத்த குரலில் அறிவித்தார்.
       பாலார் பட்டி விழித்துக் கொண்டது. தங்கள் வீட்டில இருக்கும் படத்தில் இருப்பவர் யார் என்பதை உணர்ந்து கொண்டனர். அன்று முதல் பென்னி குக்கைப் பற்றி பல்வேறு கட்டுரைகள் , நூல்கள் பாலார் பட்டியை வலம் வரத் தொடங்கின. தமிழகமும் தன் துயில் கலைத்து எழுந்தது.
பாலார் பட்டியில் கர்னல் பென்னி குக் நினைவு கலை அரங்கம் கட்டப்பெற்றது. சிலை நிறுவப்பட்டது. அன்று முதல் பென்னி குக் பிறந்த நாளான சனவரி 15 ஆம் நாளினை, தைத் திங்கள் முதல் நாளினை, பென்னி குக் பொங்கலாகவே பாலார் பட்டி கொண்டாடத் தொடங்கியது. பென்னி குக்கை மீட்டெடுத்ததற்காக தமிழர்களாகிய நாமெல்லாம் ஓ. ஆண்டி அவர்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம்.

 
     ஹூல்ஸ் வந்தார் பெரிய கோயிலைக் கட்டியவரை நமக்குக் காட்டினார். ஆண்டி வந்தார், முல்லைப்பெரியாறு அணையினைக் கட்டியவரை கண்டுபிடித்துக் கொடுத்தார். இன்றும் எதை எதை எல்லாம் மறந்திருக்கின்றோமோ? தெரியவில்லை. யாராவது கண்டுபிடித்து நினைவு படுத்தினால்தான் நமக்கே தெரியவரும்.
      யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உரைத்து உலகையே தமிழன் ஆண்டது ஒரு காலம். நமக்குச் சொந்தமானதைப் பெறுவதற்குக் கூட போராட வேண்டியிருப்பது இந்தக் காலம்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.

      -----------------------------------------------------------
 சனவரி 15 ஆம் நாள்
கர்னல் பென்னி குக்கின் பிறந்த நாள்.
இந்நன்நாளில் பென்னி குக்கின் 
நினைவினைப் போற்றுவோம்

                  ___

தமிழர் திருநாளாம் பொங்கல் எனும் இப்
பொன்நாளில் புதிதாய் ஓர் சபதமேற்போம


பென்னி குக்கின் செல்வத்தையும் -வற்றா
நல் உள்ளத்தையும் அடித் தளமாக்கி,
தமிழர்களின்  உழைப்பால் உதிரத்தால் உயர்ந்த
முல்லைப் பெரியாறு அணையினைக் காக்க ...

தமிழர் திருநாளாம்  பொங்கல் எனும் இப்
பொன்நாளில் புதிதாய் ஓர் சபதமேற்போம்...

 _______________________________________
நன்றி - டெக்கான் குரோனிக்கல்
சிந்தனை செய் மனமே
கேட்டதில் பிடித்தது

ஆசிரியர் என்னும் சொல் ஐந்து எழுத்துக்களை உடையதாகும்.

முதல் எழுத்து
ஆ எனில்  பசு, அமைதியானவர், பொறுமை மிக்கர்

முதல் இரண்டு எழுத்துக்கள்
ஆசி எனில் மாணவர்கள் நல்வாழ்வு வாழ வாழ்த்துபவர்

இரண்டு மற்றும் மூன்றாம் எழுத்துக்கள்
சிரி எனில் எப்பொழுதும் சிரித்த,மலர்ந்த முகத்துடன் இருப்பவர்

இரண்டாம் எழுத்து தவிர மற்றைய எழுத்துக்கள்
ஆரியர் எனில் நன்கு படித்தவர், உலகியல் அறிவு பெற்றவர்

ஒன்று, நான்கு மற்றும் ஐந்தாம் எழுத்துக்கள்
ஆயர் எனில் மாடுகளை மேய்த்துக் காப்பர் ஆயர், மாணவர்களை ஓரிடத்தில் அமரச் செய்து,கல்வி புகட்டி நல்வழி படுத்துபவர்

(கடந்த 16.1.2012 அன்று தஞ்சாவூர், பெசண்ட் அரங்கில் நடைபெற்ற உலகத் திருக்குறள் பேரவையின் விழாவில், முனைவர் இரா.கலியபெருமாள் அவர்கள் வரவேற்புரையின் போது உரைத்தது)


கேட்டதில் பிடித்தது

      மனிதனின் விவசாயப் பணிகளில் உடனிருந்து உழைப்பவை மாடுகள். விளைந்த நெற்பயிர்களை அரிசியாக்கி மனிதன் உணவாய் உண்ண, மாடுகளோ மீதமிருக்கும் பதர்களையும், வைக்கோல்களையும் உண்டு, நமக்காக பால் வழங்கி உதவுகின்றன. மாட்டுச் சாணம் தான்,  திருநீறாக நமது நெற்றியினை அலங்கரிக்கின்றது. இம் மாடுகளைக் கட்டி வைக்கும் இடத்திற்கு தமிழர்கள் தொழுவம் என்று பெயரிட்டனர். இந்த தொழுவம் என்ற சொல்லானது தொழுவோம் என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
     கோவிலின் கருவறையில் இருக்கும் இறைவனை வணங்குதலை தொழுதல் என்று கூறுவர். நம்மைப் படைத்து, காத்து அருளும் தெய்வத்தைத் தொழுகிறோம். அதனைப் போலவே, நாம் உயிர் வாழ்வதற்காக மேற்கொள்ளும் விவசாயப் பணிகளில், பெரும்பங்காற்றி வரும் மாடுகளையும் தொழ வேண்டும் என்றும் நோக்கிலேயே, மாடுகள் தங்குமிடத்திற்கு தொழுவோம், தொழுவம் என்று தமிழர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

(கடந்த 16.1.2012 அன்று தஞ்சாவூர், பெசண்ட் அரங்கில் நடைபெற்ற உலகத் திருக்குறள் பேரவையின் விழாவில், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முனைவர் மு. சிவச்சந்திரன் அவர்கள் தனது சிறப்புரையின்போது உரைத்தது)