13 ஏப்ரல் 2013

கரந்தை - மலர் 4


நாமே நமக்காக ஒரு புதியத் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி, நம்மால் இயன்றப் பணிகளைச் செய்தால் என்ன?



------------ கடந்த வாரம் -----------
குயிலையாவிற்குத் தான் செலுத்தும் குருதட்சணையாக ஆசானாற்றுப் படை என்றும் கவிதை நூலைப் படைத்தார். இந்நூலுக்கு பதிப்புரை எழுதி வெளியிட்டவர் யார் தெரியுமா? வேங்கடாசலம் பிள்ளையின் அருமை நண்பர் இராதாகிருட்டினன் அவர்கள்தான்.
--------------------------------------

     தனது ஆசிரியருக்கு நன்றியறிதலைத் தெரிவிக்கும் வகையிலும், தனது நண்பரின் முதல் நூலினை வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தினாலும், இராதாகிருட்டினன் அவர்களே இந்நூலினை வெளியிட்டடார்.

     பழந்தமிழ் இலக்கியங்களில் பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் தமிழர்களின் பைந்தமிழ்ச் கருவூலங்களாகும். திருமுருகாற்றுப் படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை, கூத்தராற்றுப் படை ஆகியவை பத்துப் பாட்டில் அடங்கும். இவை ஆற்றுப்படை நூல்களாகும். இப்பாட்டில் ஆற்றுப் படுத்தப்பெறும், பாணர், கூத்தர், விறலியர், பொருநர் ஆகியோர் தாம் பெற்ற பேறு பெருக இவ்வையகம் எனும் பழந்தமிழ் பண்பாட்டுக் கொள்கையினை உடையவர்கள்.

     ஆற்றுப்படை என்பது, தமக்குப் பெரும் பரிசு வழங்கிச் சிறப்பித்த அரசர்களின் உயரிய பண்புகளையும், அந்த அரசனது நாடு, அதன் தலை நகர் முதலியவற்றின் சிறப்பினையும், அந்த அரசனின் அரண்மனைக்குச் செல்வதற்கு உரிய வழிகளையும், தம்மைப் போன்ற பிற புலவர்களுக்கு எடுத்துரைப்பதாகும்.

                                          முத்தமி  ழறிநர்  முழுமதிக்  குடிபுகு
                                           மடியார்க்  குநல்லா  ரவர்,  பயன்  காண
                                          முடியார்க்  குநல்லா  ரிவர்மற்  றெனவும்
                                           புலம்பூத்  தொளிருமிப்  புவிகொண்  டெஞ்சிய
                                           கலம்படு  புகழி  னலம்பல  விழைத்தவர்

                                           நச்சினார்க்  கினியர்,  அச்சுவரு  களத்து
                                           நச்சார்க்  குமினிய  ரிவரோ  வெனவுங்
                                           கடுகைத்  துளைத்துட்  கடலே  ழளித்தோர்
                                           பரிமே  லழகர்,  பணித்த  பன்மதமாங்
                                           கரிமே  லழக  ரெனவுங்  கவினுடைக்

                                          குளிர்ந்த  சொல்லினர்  குணமொன்  றில்லாக்
                                           குணங்குண  மாக்கொள்  குரிசினன்  செய்யார்
                                           வையைச்  சுப்பிர  மணிய
                                           ஐயரென்  நாமத்  தருட்  கிழவோரே



     ஏ நெஞ்சமே, நின் அறியாமையைப் போக்கவல்ல நல்லாசான் ஒருவரைக் காணப் பெறாமால் வருந்துகின்றாயா? அந்தணர் குடியில் பிறந்தவரும், பரிமேலழகர், நச்சினாரக்கினியர் முதலிய உரையாசிரியர்களைப் போன்ற பேரறிவும், நல்லொழுக்கமும் உடையவராகிய சுப்பிரமணிய அய்யர், தஞ்சை தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். அவர் தம்முடைய இனிய வாழ்க்கைத் துணைவியுடன் இல்லறம் நடாத்தும் வீடு, நாளங்காடிக்கு வடகீழ் திசையில் உள்ளது. நீ அவ்வீட்டிற்குச் சென்று அவரைக் கண்டு பயன்பெறலாம்  அல்லது அவர் பணிபுரியும் பள்ளியில் சென்று காணலாம் என்பது வேங்கடாசலம் இயற்றிய ஆசானாற்றுப்படையின் உட்பொருளாகும். மேலும் இந்நூலில் வயல் சூழ்ந்த கரந்தையிலுள்ள கலைமகள் நிலையமும் (பால சரசுவதி வித்யாசாலா), மக்கள் கூட்டம் அதிகமுள்ள கீழவாசலும், புகைவண்டி நிலையமும், சிவகங்கைப் பூங்காவும், அய்யங்கடைத் தெருவும் மற்றும் தஞ்சை நகர் அமைப்பும் விரிவாக கூறப்பட்டுள்ளது.

      இந்நூலைப் பற்றிய மிகுந்த வியப்புக்கு உரிய செய்தி என்னவென்றால், இந்நூல் வெளியிடப்பெற்ற ஆண்டு 1910 ஆகும். அதாவது தனது 24 ஆம் வயதிற்குள்ளாகவே கவி புனையும் ஆற்றல் கைவரப் பெற்று கவியரசு என பின்னாளில் அழைக்கப் பட்டமைக்கு உரிய அனைத்துக் தகுதிகளையும் பெற்றவராகத் திகழ்ந்தார்.

     வேங்கடாசலம் பிள்ளையின் மனையியார் மங்கலத்தம்மை என்பவர் ஆவார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தனக்குத் தமிழறிவு புகட்டிய, குயிலையா என்னும் சுப்பிரமணிய அய்யருக்காக ஆசானாற்றுப் படை இயற்றியதோடு, வேங்கடாசலம் பிள்ளையின் மனம் நிறைவடையவில்லை. தனது குழந்தைக்கு, அத்தமிழாசிரியரின் நினைவாக சுப்பிரமணியம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

     தஞ்சாவூர் கும்பகோணம் சாலையில் நெடார் என்னும் சிற்றூர் உள்ளது. இந்த நெடாருக்கு அருகில் அமைந்துளள மற்றொரு சிற்றூர் கோணார்ப் பட்டு என இன்று அழைக்கப்படும் கோணார் பற்று ஆகும். இவ்வூரில் அமைந்திருந்த கற்பக விநாயகா கலாசாலையில், வேங்கடாசலம் அவர்கள் தலைமையாசிரியராய் பணியில் சேர்ந்தார். அப்பள்ளி மாணவர்களை மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தேர்விற்குத் தயார் படுத்தும் பணியினைச் செம்மையாகச் செய்து, தனது கல்வியாலும், ஒழுக்கத்தினாலும், உழைப்பாலும் அப்பகுதி மக்கள் விரும்பிப் போற்றும் நல்லாசிரியராய் உயர்ந்தார்.

     இக்காலகட்டத்தில், பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் நட்பு இவருக்குக் கிட்டியது. இதனால் மேலைச் சிவபுரி சன்மார்க்கத் தொடர்பும் கிட்டியது. இதன் மூலம் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், மகாவித்துவான் ரா.ராகவ அய்யங்கார், சோழவந்தான் அரசஞ் சண்முகனார், மு.இராகவ அய்யங்கார், அனந்தராம அய்யர் போன்ற பெரும் புலவர்களின் நட்பும், பழக்கமும் ஏற்பட்டது.

     இந்நிலையில்தான், கரந்தையில் வித்தியா நிகேதனம் என்னும் அமைப்புத் தொடங்கப்பட்டது. தனது நண்பர் இராதாகிருட்டினனின் அழைப்பினை ஏற்று, வேங்கடாசலம் பிள்ளை அவர்கள், வித்தியா நிகேதனத்தில் தன்னையும் ஓர் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

இளைஞர்களின் எழுச்சி

     கரந்தையில் வித்தியா நிகேதனம் தொடங்கப் பெற்றவுடன், இராதாகிருட்டினன் அவர்கள், அக மகிழ்ந்து வேங்கடாசலம் பிள்ளை அவர்களை மட்டுமல்ல, தனது நண்பர்கள் அனைவரையும், வித்தியா நிகேதனத்தில் உறுப்பினர்களாக்கினார்.

     தமிழ்ப் பணி ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு, வித்தியா நிகேதனத்தில் இணைந்த, இராதாகிருட்டினன் குழுவினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது.

     வித்தியா நிகேதனத்தின் தலைவர் அரித்துவார மங்கலம் வா. கோபாலசாமி இரகுநாத இராசாளியார் மிகவும் கண்டிப்பானவர். செயலாளர் சாமிநாத பிள்ளையோ இளைஞர்களிடத்து தனது அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினார். இதனால் இளைஞர்களின் மனம் வெதும்பியது.

     வித்தியா நிகேதனத்தில் உறுப்பினர்களாய் இருந்த, தனது நண்பர்களை அனைவரையும் அழைத்த இராதாகிருட்டினன், கரந்தையிலுள்ள கந்தப்ப செட்டியார் சத்திரத்தில் சிறு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். நாம் அனைவரும் வித்தியா நிகேதனத்தில் இணைந்தது தமிழ்ப் பணியாற்றத்தானே தவிர, அடிமை வாழ்வு வாழ்ந்தற்கு அல்லவே? நாம் இளைஞர்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இப்பெரியவர்கள் நம்மை வேலையாட்களைப் போல நடத்துவது சரியா? நாம் எதற்காக இவர்களுக்குச் சேவகம் செய்ய வேண்டும்? இந்த அமைப்பினின்று விலகி, நாமே நமக்காக ஒரு புதியத் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கி, நம்மால் இயன்றப் பணிகளைச் செய்தால் என்ன? என்று முழங்கினார்.

..... வருகைக்கு நன்றி நண்பரே. இராதாகிருட்டினனின் முயற்சி வெற்றி பெற்றதா? புதிய தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினாரா என்பதை அடுத்த வாரம் அறிவோமா நண்பரே.