19 அக்டோபர் 2013

இணைய வானில் தமிழ்ப் பறவைகள்

தாயெழிற்  றமிழை,  என்றன்
    தமிழரின்  கவிதை  தன்னை
ஆயிரம்  மொழியிற்  காண
    இப்புவி  அவாவிற்  றென்ற
தோயுறும்  மதுவின்  ஆறு
    தொடர்ந்தென்றன்  செவியில்  வந்து
பாயுநாள்  எந்த  நாளோ,
    ஆரிதைப்  பகர்வார்  இங்கே?

என ஏக்கத்தோடு பாடுவார் பாரதிதாசன். பாவேந்தரின் ஏக்கத்தைப் போக்க, வாட்டத்தை நீக்க, தாயெழில் தமிழை உலகெலாம் பரப்ப, அயரா முயற்சி மேற்கொண்டு, தளராது பாடுபட்டு வரும் தமிழாசிரியர் ஒருவரைச் சந்திப்போமா நண்பர்களே.

     மனதில் உறுதியோடும், வாக்கினில் இனிமையோடும், புதியன விரும்பும் புலவர் நா. முத்து நிலவன் அவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சார்ந்தவர். தமிழாசிரியர். சிறந்தப் பட்டிமன்றப் பேச்சாளர்.
 
கவிஞர் முத்து நிலவன்
     நண்பர்களே, நாமெல்லாம் கணினி என்னும் வானூர்தியில் ஏறி, நித்தம் நித்தம் உலகை வலம் வருகிறோம். நண்பர்களின் எழுத்துக்களைக் கண்டு ரசிக்கிறோம், பாராட்டுகிறோம், மகிழ்ச்சியடைகிறோம்.

     நாமெல்லாம் வலைப் பூவில் வாசம் செய்பவர்களைத்தான் நாள்தோறும் சந்திக்கிறோம். ஆனால் கவிஞர் முத்து நிலவன் அவர்களோ, கணினியைக் கண்டாலே, காத தூரம் விலகியோடும், நண்பர்களைப் பற்றிச் சிந்தித்தார். என்ன செய்தால், இவர்களையும் வலைப் பூவிற்குள், வண்டாய் பறக்க விடலாம் என்று யோசித்தார்.

     நண்பர்களே, ஆசிரியர்களிலேயே பல பிரிவினர் உண்டு. ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாற்று ஆசிரியர்களை எடுத்துக் கொண்டால், இவர்கள் கணினியை அதிகம் நாடுபவர்களாக இருப்பார்கள். ஆனால் இவர்களுள் எழுத்துப் பழக்கம் உள்ளவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள்.

     தமிழாசிரியர்களை எடுத்துக் கொண்டால், மேடைப் பேச்சில் வல்லவர்களாகவும், எழுத்தில் ஈடு இணையற்ற விற்பன்னர்களாகவும் இருப்பார்கள். ஆனால் இவர்களில் பொரும்பாலானவர்கள், கணினி இருக்கும் திசைக்கே பெரிய கும்பிடு போடுபவர்களாக இருப்பார்கள்.

     இப்படிப்பட்ட தமிழாசிரியர்கள் நாற்பது பேரைத் தேர்வு செய்தார் கவிஞர் முத்து நிலவன். 17 தமிழாசிரியைகள், 23 தமிழாசிரியர்கள். இவர்களுள் உதவிக் கல்வி அலுவலர் திருமதி ஜெயலட்சுமியும் ஒருவர்.

     இரண்டு நாட்கள் இவர்களுக்குப் பயிற்சி அளித்து, கணினிக்குள் இவர்களையும் இழுப்பது என்று முடிவு செய்தார். நாற்பது பேருக்கு கணினி பயிற்சி அளிப்பது என்றால், கணினி வேண்டுமல்லவா? இணைய இணைப்பு வேண்டுமல்லவா?
கவிஞர் கதிரேசன்

       கவிஞரான இவர், மற்றொரு கவிஞரை நாடினார். புதுக்கோட்டையில் ஸ்ரீ வெங்கடேசுவரா பாலிடெக்னிக்கின் தாளாளர் ஒரு கவிஞர். கவிஞர் கதிரேசன். எனது கணினி ஆய்வகத்தையே தந்தேன் உனக்கு எனக் கூறி அவ்வண்ணமே வழங்கியும் மகிழ்ந்தார். தமிழ் நெஞ்சமல்லவா.

     நண்பர்களே, நானும் ஒரு ஆசிரியன். கல்வித் துறை அலுவலர்களின் பணிச் சுமையினை ஓரளவு அறிவேன். இந்நாளில் கல்வித் துறை அலுவலர்களுக்கு ஓய்வு என்பதே இல்லை. இருபத்து நான்கு மணி நேரமும் இடைவிடாமல் பம்பரமாய் சுழன்று கொண்டேயிருப்பவர்கள்.
 
முனைவர் நா. அருள் முருகன்
      நண்பர்களே, புதுக்கோட்டை மாவட்டத்திற்குக் கிடைத்திருக்கின்ற, முதன்மைக் கல்வி அலுவலர், ஒரு தமிழாய்ந்த தமிழறிஞர். தமிழ் இலக்கியங்களிலேயே மிகவும் கடுமையானச் சொற்களை உடையது என கற்றறிந்த சான்றோர்களால் கூறப்படும், நேமிநாதம் என்னும் இலக்கண நூலை ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் நா. அருள் முருகன்.

     தமிழ் மொழியின் மீது உள்ள பற்றினாலும், தமிழைத் தழைக்கச் செய்ய வேண்டுமே, தமிழை கணினி மொழியாக மாற்ற வேண்டுமே என்ற, உயரிய, உன்னத எண்ணத்தினாலும், இரண்டு நாள் பயிற்சியின் போதும் உடனிருப்பதாய் கவிஞர் முத்து நிலவன் அவர்களிடம் உறுதியளித்தார்.

     நண்பர்களே, கவிஞர் முத்து நிலவன் அவர்கள், எனது வலைப் பூவிற்குத் தொடர்ந்து வருகை தருபவர். இவரை நான் பார்த்ததில்லை, பேசியதில்லை. ஆயினும் வலை வழித் தொடர்பின் காரணமாக, என்னையும், இப் பயிலரங்கிற்கு, மின்னஞ்சல் வழி அழைத்திருந்தார்.

     நண்பர்களே, வலைப் பூ ஏற்படுத்தித் தருகின்ற உறவை, நட்பைப் பார்த்தீர்களா? இதுவல்லவோ நட்பு.

கணினியில் தமிழ் எழுத, வலைப் பக்கம் உருவாக்க இரண்டு நாள் பயிலரங்கம்

களம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரி, கைக்குறிச்சி, புதுக்கோட்டை
காலம்
5, 6.10.2013 சனி மற்றும் ஞாயிறு
காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

தலைமை
முனைவர் நா.அருள் முருகன்,
முதன்மைக் கல்வி அலுவலர், புதுக்கோட்டை
முன்னிலை
கவிஞர் கதிரேசன்,
தாளாளர், ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக்

    இப்பயிலரங்கில் கலந்து கொள்ளக் கட்டணம் கிடையாது. தனி ஊதியம் (T.A./D.A)  வருகைச் சான்று எதுவும் தரப்பட மாட்டாது. இரு வேளை தேநீர் மட்டுமே வழங்கப்பெறும். மதிய உணவினை, அவரவர்களே கொண்டு வருதல் வேண்டும்.

      நண்பர்களே, அழைப்பிதழிலேயே மேற்கண்ட நிபந்தனைகளை விதித்திருந்தார்.

      ஆசிரியர்களாகிய, எங்களுக்கு ஒரு வாரத்திற்குக் கிடைப்பதோ, இரு நாள் விடுமுறை. அதுவும் பல வாரங்களில் கிடைக்காது. சனிக் கிழமை பல வாரங்களில் அலுவல் நாளாகிவிடும். விடுமுறையில் கலந்து கொள்ள வேண்டும். தேநீர் மட்டுமே தருவோம். ஆனால் கணினியை போதும், போதும் என்கிற வகையில் திகட்டத் திகட்டக் கற்றுத் தருவோம். வாருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார்.

     நாற்பது பேர் திரண்டனர். முதல் நாள் நிகழ்வில், தனது வலைப் பூவில் மாயா ஜாலங்கள் பலவற்றை நிகழ்த்துபவரும், எவ்வலையின் பக்கம் திரும்பினாலும், கருத்து தெரிவிப்பதில் முதல் மனிதராய் விளங்குபவருமான, வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் ( நண்பர்களே, திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இப்பட்டம் மிகவும் பொருத்தம்தானே) அவர்கள் கலந்து கொண்டார். நாற்பது பேரையும் மின்னஞ்சல் முகவரி பெறச் செய்தார். நாற்பது பேரும் வலைப் பூவினை உருவாக்க அருகிலிருந்து கற்றும் கொடுத்தார்.

     இரண்டாம் நாள் நிகழ்வில் நான் கலந்து கொண்டேன். புதுக்கோட்டை பேரூந்து நிலையத்தில், பேரூந்தில் இருந்து இறங்கியவுடன், கவிஞர் முத்து நிலவன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். பேரூந்து நிலையத்திற்கு எதிரிலேயே உள்ள, அபிராமி ஹோட்டலில் இருக்கிறேன், வாருங்கள் என்றார். சென்றேன். முதன் முறையாக கவிஞர் முத்து நிலவன் அவர்களை நேரில் சந்தித்தேன்.
பெரம்பலூர் இரா.எட்வின் 
     வலைப் பக்க எழுத்தாளர், பெரம்பலூர் இரா. எட்வின் உடனிருந்தார். தமிழாசிரியர் திரு மகா.சுந்தர் அவர்களும் உடனிருந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டேன். காலை உணவு உண்டோம். வெங்கடேசுவரா பாலிடெக்னிக் சென்றோம். இரண்டாம் நாள் பயிலரங்கு தொடங்கியது.

     என்ன செய்ய வலை? என்னும் தலைப்பில் பெரம்பலூர் கவிஞர் இரா.எட்வின் உரையாற்றினார். நண்பர்களே உங்களுக்குத் தெரியுமா, இவர் மேனிலைப் பள்ளி ஒன்றில், ஆங்கில அசிரியர்.

      சமூக வலைத் தளங்களின் பயனையும், அதன் வலிமையினையும் எடுத்துரைத்தார். சுமார் ஒன்றரை மணி நேரம் பேசியிருப்பார். இரா.எட்வின் அவர்கள் தனது உரையினை நிறைவு செய்த பொழுது, பெய்லின் புயல் சுற்றி, சுழன்று அடித்து ஓய்ந்ததைப் போல் தோன்றியது.
முதன்மைக் கல்வி அலுவலர்
     அடுத்ததாக, புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் நா.அருள் முருகன் அவர்கள், கருவி நூல்கள் என்னும் தலைப்பில், நழுவுப் படக் காட்சியின் உதவியுடன் உரையாற்றினார். கவிஞர் இரா.எட்வின் புயலென்றால், இவர் தென்றல். இவரது பேச்சு தென்றலாய் தவழ்ந்தது. ஒவ்வொரு தமிழாசிரியர் இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல்களையும், அதன் அவசியத்தினையும் பாங்குற எடுத்துரைத்தார். நூல்களுக்காக ஒரு ஆசிரியர் செய்யும் செலவு என்பது, செலவேயல்ல, வரவு, அறிவின் முதலீடு, ஆகவே வரவுதான் என்று நயம்பட எடுத்துரைத்தார்.

     பிற்பகல் அமர்வில் நான் பேசினேன். புயல் அடித்து ஓய்ந்த பிறகு, தென்றல் தவழ்ந்து வருடிச் சென்ற பிறகு நான் என்ன பேசுவது? இருப்பினும் நானும் எனது வலையும் என்னும் தலைப்பில் பேசினேன்.

     வலைப் பூவில் எழுதுவதற்கு செய்தி தேடி எங்கும் ஓட வேண்டாம். நூல்களின் பக்கங்களில் மூழ்கி, மூச்சுத் திணற வேண்டாம் என்றேன். உங்கள் அனுபவங்களை எழுதுங்கள், வாழ்வில் வென்ற தருணங்களை, தோல்வியைத் தழுவிய நிமிடங்களை, சாதித்த சாதனைகளை, சோதனையின் பிடியில் சிக்கி வேதனையால் புழுவாய்த் துடித்திட்ட யுகங்களை எழுதுங்கள் என்றேன்.

      மகிழ்ந்தால் நம்மோடு சேர்ந்து மகிழவும், வேதனையென்றால், நமக்காக வருந்தி, துயர் துடைக்க, வார்த்தை என்னும் கரம் கொண்டு ஆறுதல் மொழி பேசி, அரவணைக்க, வலைப் பூவின் உடன் பிறவா உறவுகள், நட்புகள், உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வாருங்கள் வலைப் பூ என்னும், அன்பு மயமான உலகில் ஒன்றிணைவோம் என்றேன்.

      நண்பர்களே, இரண்டு நாள் பயிலரங்கின் நிறைவில், கவிஞர் முத்து நிலவன் அவர்களின் முயற்சியால், வலையுலகிற்கு, நாற்பது புதிய பதிவர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதுவும் தமிழாய்ந்த தமிழறிஞர்கள் பதிவர்களாய் உருவெடுத்துள்ளனர்.

உள்ளன்பு ஊற்றி  ஊற்றித்
தமிழை வளர்க்கும் சங்கம் ஒன்று
சிங்கப் புலவரைச்  சேர்த்தமைத்  தார்கள்.
உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத்தை யெலாம்
கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
சுடர்கவி  தொடங்கினர். பிறந்த்து தொழும்பு
கற்கண்டு மொழியில் கற்கண்டு கவிதைகள்
வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூல்கள்
தொழில் நூல், அழகாய் தொடுத்தனர்  விரைவில்
காற்றி லெல்லாம் கலந்த்து கீதம்
சங்கீ  தமெலாம்  தகத்தகா  யத்தமிழ்

என்பார் பாரதிதாசன். பாவேந்தரின் கனவை கணினி வழி மெய்ப்படுத்த முயற்சியினைத் தொடங்கி விட்டார் கவிஞர் முத்து நிலவன்.

     நண்பர்களே, இப்பயிலரங்கின் விளைவாய், புதுக்கோட்டையில், புதிதாய் ஓர் அமைப்பு, தமிழை உலகெலாம் கணினி வழி எடுத்துச் செல்ல, கணினித் தமிழ்ச் சங்கம் மலர இருக்கின்றது.

     கணினித் தமிழ்ச் சங்கம், சாதனைகள் பல படைக்க நாமும் வாழ்த்துவோம். தமிழாசிரியர்களின் முயற்சியினைப் போற்றுவோம்.