10 ஏப்ரல் 2014

வகுப்பறை நினைவுகள்


அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே.....

     நண்பர்களே, நான் ஒரு ஆசிரியர் என்பது தங்களுக்குத் தெரியும். கடந்த 7.3.2014 வெள்ளிக் கிழமை, வருவாய் துறையினைச் சார்ந்த பணியாளர் ஒருவர், எங்கள் பள்ளிக்கு வருகை தந்து, நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிச் சென்றார்.

     நான் வாக்குச் சாவடி தலைமை அலுவலராக நியமிக்கப் பெற்றிருந்தேன். அடுத்த நாள் 8.3.2014 சனிக் கிழமை பயிற்சி வகுப்பு. இடம் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி.


     சரபோஜி கல்லூரி என்ற பெயரினைப் பார்த்ததுமே, நினைவலைகள் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கின. நான் பயின்ற கல்லூரி அல்லவா? முப்பதாண்டுகளுக்கு முன்னர் நான் பி.எஸ்ஸி., கணிதம் பயின்ற கல்லூரி அல்லவா? நினைக்கவே நெஞ்சம் இனித்தது.

     நண்பர்களே, 1981 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற, மேனிலைப் பள்ளி அரசுப் பொதுத் தேர்வில், நான் வெற்றி பெற்ற பொழுது, தஞ்சையில் இருந்த கல்லூரிகள் மூன்றே மூன்றுதான். ஒன்று மன்னர் சரபோஜி அரசினர் கல்லூரி. இரண்டாவது மகளிருக்கான, குந்தவை நாச்சியார் அரசு கல்லூரி. மூன்றாவது பூண்டி புட்பம் கல்லூரி.

     மேற்படிப்பைப் பொறுத்தவரை எனது ஒரே விருப்பம், கணிதம் பயில வேண்டும் என்பதுதான். சரபோஜி கல்லூரியில் பி.எஸ்ஸி., கணிதம் சேர்ந்தேன். நண்பர்களே, இன்றும் நன்றாக நினைவிருக்கிறது, முதலாமாண்டுக் கட்டணமாக நான் கட்டிய தொகை ரூ.162 மட்டும்தான்.

     1981 முதல் 1984 வரை மூன்றாண்டுகள் சரபோஜி கல்லூரியில் பயின்றேன். கல்லூரியைச் சுற்றிலும், கண்ணிற்கு எட்டியவரை, எங்கெங்கும் முந்திரித் தோப்புகள்தான். இன்று ஒரு முந்திரி செடி கூட இல்லை. எங்கெங்கு பார்த்தாலும கட்டடங்கள், கட்டடங்கள், கட்டடங்கள் மட்டும்தான்.

     பல புதிய நண்பர்களை உருவாக்கித் தந்தது இக்கல்லூரிதான். உடன் பயின்றவர்கள் அனைவருமே இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    

மூன்றாமாண்டு இறுதியில், ஆசிரியர்கள் அனைவருக்கும், பிரியாணி விருந்து வழங்கி, குழுப் புகைப்படமும் எடுத்துக் கொண்டு, பிரியா விடைபெற்றது, இன்றும் பசுமையாய் நினைவில் தேங்கி இருக்கிறது.

பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்தத் தோழர்களே
பறந்து செல்கின்றோம் – நாம்
பிரிந்து செல்கின்றோம்

      இயற்பியல் துறையில் பேராசிரியராக இருந்தவர் பேராசிரியர் சேகரன் அவர்கள். இன்றும் அவருடன் தொடர்பில் உள்ளேன். தஞ்சையில் லக்மி அச்சகம் என்னும் பெயரில் அச்சகம் ஒன்றினை இன்றும் நடத்தி வருகிறார்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், மாதாந்திர இதழான தமிழ்ப் பொழில் இதழினை, கடந்த இருபது ஆண்டுகளாக, இவரது அச்சகத்தில்தான் அச்சிட்டேன்.

எனது புது இல்லத்தின், புதுமனைப் புகு விழாவின் போது
பேராசிரியர் சேகரன் அவர்கள், தனது துணைவியாருடன் வருகை தந்து
சிறப்பித்தார்
தமிழ்ப் பொழில் பதிப்பாசிரியர் குழுவில் நானும் ஒரு உறுப்பினர். தமிழ்ப் பொழில் இதழில், நானும் அவ்வப்பொழுது, கட்டுரைகள் எழுதுவதுண்டு. பேராசிரியர் சேகர் அவர்கள், எனது கட்டுரையினைப் படித்து மகிழ்வார். தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் எழுத்துக்களை வாசிக்க வாசகன் நானிருக்கிறேன் என்று கூறி உற்சாகப் படுத்துவார்.

     எனது வாழ்வில் நான் மறக்க முடியாத மற்றொரு பேராசிரியர் எனது கணிதப் பேராசிரியர். திரு எஸ்.வி.பலராமன் அவர்களாவார். தன்னம்பிக்கை, தன்னம்பிக்கை என்று அடிக்கடி கூறுகிறோமல்லவா, அந்த வார்த்தையின் முழு வடிவம் இவர்.

     நண்பர்களே, நாமெல்லாம், குழந்தையாய் பிறந்து, சில மாதங்கள் தவழ்ந்திருப்போம். கால்களோடு, கைகளையும் தரையில் ஊன்றி சில காலம் நடந்திருப்போம். பிறகு எழுந்து நின்று, கால்களால் நடை பயிலக் கற்றிருப்போம்.

     பேராசிரியர் எஸ்.வி.பலராமன் அவர்கள், பிறந்தது முதல் இன்று வரை, கைகளைத் தரையில் ஊன்றியே நடப்பவர். ஆம் நண்பர்களே, சூம்பிச் செயலிழந்தக் கால்களைத்தான், தன் பிறந்த நாள் பரிசாய்ப் பெற்றவர் இவர்.

     செயலிழந்தக் கால்களைப் பெற்றாலும், தளரா உறுதி படைத்த மனதினைப் பெற்றவர். மெல்ல, மெல்ல படித்து, விரிவுரையாளராய், பேராசிரியராய், ஓய்வுக்கு முன் கல்லூரி முதல்வராகவும் உயர்ந்தவர்.

      கைகளால் சுற்றிச் செலுத்தக் கூடிய, மூன்று சக்கர வாகனத்தில், தினமும் ஆறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து, கல்லூரிக்கு வருவார். கணித வகுப்புகளோ மாடியில். கைகளை ஊன்றியே படியேறி வருவார். வகுப்பிற்குள் வந்ததும், இடது கையை மேஜையில் ஊன்றி எழுந்து நிற்பார். இடது கையால் மேஜையினைப் பிடித்தவாரே, வலது கையால், கரும் பலகையில் கணிதப் பாடங்களை எழுதி நடத்துவார்.

      என்னையும் ஒரு நண்பராய் ஏற்றுக் கொண்ட மாமனிதர் இவர்.

     சரபோஜி கல்லூரிக்குப் பிறகு நான் பயின்றதெல்லாம் அஞ்சல் வழிக் கல்வியில்தான். எம்.எஸ்ஸி., கணிதம் பயின்றதும், பி.எட்., பயின்றதும் அஞ்சல் வழியில்தான். பின்னர் எம்.ஃபில்., பயின்றது பகுதி நேரப் படிப்பில்.

      இக் கால கட்டத்தில், அஞ்சல் வழியில் படித்துக் கொண்டே, வேலையும் பார்த்தேன். மருந்து உற்பத்தி நிறுவனத்தில் முகவராக ( Medical Representative)   மூன்று ஆண்டு பணி. இரு சக்கர வாகன விற்பனை நிலையத்தில், உதிரிப் பாகங்களின் பொறுப்பாளராக ஓராண்டுப் பணி. மெட்ரிகுலேசன் பள்ளி ஒன்றில் ஆசிரியராக ஓராண்டுப் பணி, என ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் செலவிட்ட நிலையில், 1990 இல்தான் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பணியில் சேர்ந்தேன்.

திரு த.ம.ஆறுமுகம் பிள்ளை
நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில், ஊதியம் என்று எதுவுமின்றியே, இரண்டாண்டுகள் எழுத்தராகப் பணியாற்றி இருக்கிறேன். திரு த.ம.ஆறுமுகம் பிள்ளை என்னும் ஓர் உயர்ந்த மனிதரின் தொடர்பு கிடைத்தது இச்சமயத்தில்தான். கரந்தைப் புலவர்க் கல்லூரியில் எழுத்தராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர்.

     கல்வி நிலையங்களின், கணக்கு வழக்குகளை எழுதுவது எப்படி என, எனக்குக் கற்றுக் கொடுத்த குரு, இந்த ஆறுமுகம் பிள்ளை ஐயாதான்.

      கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், 1992 ஆம் ஆண்டில், தி.ச.பழனிச்சாமி பிள்ளை தொழிற் பயிற்சி மையம் தொடங்கப் பட்டபோது, அம் மையத்தின், எழுத்தராய் பணியமர்த்த பட்டேன். மாத ஊதியம் ரூ.300.

      நண்பர்களே, 1993 ஆம் ஆண்டில்தான், உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், நிரந்தரப் பணி கிடைத்தது. அதுவும் ஆசிரியராக அல்ல, அலுவலக உதவியாளராகப் பணியில் சேர்ந்தேன். அடுத்த ஆண்டே, ஆசிரியராய் பதவி உயர்வு கிடைத்தது.

      உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், நிரந்தரப் பணி கிடைப்பதற்கு, மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் எனக்குத் திருமணம் நடந்தது.

      நண்பர்களே, என் திருமணம் எங்கு நடைபெற்றது தெரியுமா? சொன்னால் நம்ப மாட்டீர்கள். எனது பள்ளியிலேயே நடைபெற்றது. நான் படித்த பள்ளி வளாகத்திலேயே என் திருமணம்.

     பள்ளி வளாகத்தில், தமிழ்ப் பெருமன்றம் என்னும் பெயரில் விழா அரங்கு ஒன்று உள்ளது.

புண்ணிய நெடுவரைப் போகிற நெடுங்கழைக்
கண்ணிடை யொருசாண் வளர்ந்த்து கொண்டு
நூனெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோலன விருபத்து நால்விரலாக்
எழுகோலகலத் தென்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி
உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோலாக
ஏற்ற வாயிலிரண்டுடன் பொலியத்
தோன்றிய அரங்கு
என சிலப்பதிகாரத்தில், மாதவி நடனமாடிய அரங்கின் அமைப்பை, அளவை விவரிப்பார் இளங்கோவடிகள்

     சிலப்பதிகாரத்தில் அளவிலா ஈடுபாடு கொண்டிருந்த, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவர், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களால், மாதவி நடனமாடிய அரங்கின் அளவைப் பின்பற்றி, அதே அளவில், அதே அமைப்பில், சிலப்பதிகார அரங்கினைப் போலவே, 1929 ஆம் ஆண்டு கட்டப் பெற்றதுதான், இந்தத் தமிழ்ப் பெருமன்றம்.

      இத்தகு பெருமை வாய்ந்த தமிழ்ப் பெருமன்றத்தில்தான், எனது திருமணம் நடைபெற்றது. படித்த பள்ளியிலேயே பணி, அவ்விடத்திலேயே திருமணம். வேறு என்ன வேண்டும் எனக்கு. நினைக்கவே நெஞ்சம் மகிழ்ச்சியில் விம்முகிறது.

      நண்பர்களே,  சொல்ல வந்த செய்தியை, விட்டு விட்டு, நினைவலைகளின் போக்கிலேயே சிறிது தூரம் சென்று விட்டேன்.

எனது திருமணத்தின்போது, தன் மனைவியுடன் வருகை தந்து வாழ்த்திய
எனது பேராசிரியர் திரு எஸ்.வி.பலராமன்
எனது பேராசிரியர் திரு எஸ்.வி.பலராமன் அவர்களைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தேனல்லவா? கல்லூரிப் படிப்பு முடிந்து, ஒன்பதாண்டுகள் கடந்த நிலையில், நடைபெற்ற எனது திருமணத்திற்கு, மறக்காமல், மனைவியுடன் வருகை தந்து, என்னை வாழ்த்தியருளிய பெருமகனார் இவர்.

     பற்பல நினைவுகள் உள்ளத்தில், சுழன்றடிக்க. இதோ, பாராளுமன்றத் தேர்தல் பயிற்சி வகுப்பிற்காக, முப்பதாண்டுகளுக்குப் பிறகு, சரபோஜி கல்லூரி மண்ணை மிதிக்கின்றேன். உடலெல்லாம் சிலிர்க்கிறது.

     ஒவ்வொரு கட்டடமாக சுற்றிச் சுற்றி வருகிறேன். விளையாட்டு மைதானத்தை, மிதி வண்டி நிறுத்தத்தை, சிற்றுண்டியகத்தை என சுற்றி சுற்றி வருகிறேன். கவலையற்ற, அந்த மாணவப் பருவத்திற்குத் திரும்பிச் செல்ல, ஓர் வாய்ப்பு கிடைக்காதா என மனம் ஏங்குகிறது
    


வகுப்பறைப் படங்களை எடுத்து உதவியவர் நண்பரும்,
உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஆசிரியருமான
திரு வி. பாலசுப்பிரமணியன் அவர்கள்
இதோ, நான் பி.எஸ்ஸி., கணிதம் மூன்றாமாண்டு படித்த வகுப்பறை. முப்பதாண்டுகளுக்கு முன்னர், அமர்ந்திருந்த இடத்தில், சிறிது நேரம் அமைதியாய் அமர்கிறேன்.

      வகுப்பறையில் என்னைத் தவிர யாருமில்லை. ஆயினும் ஏதேதோ ஒலிகள் வந்து, என் செவிப்பறையில் மோதுகின்றன. நண்பர்களின் சிரிப்பொலிகள், கிண்டல் பேச்சுக்கள் கேட்கின்றன, கவனியுங்கள், கவனியுங்கள் என்னும் பேராசிரியர்களின் குரல்களும் இடையிடையேக் கேட்கின்றன.

     வகுப்பறையை விட்டு வெளியேற மனமின்றிக் கிளம்பி, தேர்தல் வகுப்பு நடைபெறும், விழா அரங்கிற்குச் சென்று அமர்ந்தேன்.

      நண்பர்களே, கல்லூரி கால நினைவலைகளில் மூழ்கித் திளைத்திருந்த என்னை, 26.3.2014 மாலை வந்த அலைபேசிச் செய்தி, பள்ளிப் பருவத்திற்கு அழைத்துச் சென்றது.

     கடந்த 26.3.2014 முதல் 9.4.2014 வரை பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகள் நடைபெற்றதைத் தாங்கள் நன்கறிவீர்கள். இத்தேர்வினைப் பொறுத்தவரை, நான் பறக்கும் படை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தேன். தினமும் ஒரு பள்ளிக்குச் சென்று, தேர்வினைக் கண்காணிக்க வேண்டும்.

     மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் இருந்து, ஒவ்வொரு தேர்விற்கும், முந்தைய தினம் மாலை, அலைபேசி வழி,  நாளை நீங்கள் இந்தப் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்னும் உத்தரவு வரும்.

     26.3.2014 புதன் கிழமை மாலை, அலைபேசி அழைப்பு வந்தது. நாளை நீங்கள், திருவையாறு புனித வளனார் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

     நண்பர்களே, பள்ளியின் பெயரினைக் கேட்டவுடன், மனம் ஆனந்தக் கூத்தாடத் தொடங்கியது. ஆமாம், நீங்கள் நினைப்பது சரிதான். நான் பயின்ற பள்ளிதான் அது. எத்தனையாவது வகுப்பு தெரியுமா? நண்பர்களே, நான் முதல் வகுப்பு பயின்ற பள்ளி இது. யாருக்குக் கிடைக்கும் இது போன்ற ஓர் வாய்ப்பு.

     எனது சொந்த ஊர் திருவையாறு. நான் முதல் வகுப்பு பயின்றது இங்குதான். தமிழ் எழுத்துக்களும், ஆங்கில எழுத்துக்களும் எனக்கு அறிமுகம் ஆனது இங்குதான். ஒவ்வொரு எழுத்தையும் முதன் முறையாய் உச்சரிக்கத் தொடங்கியதும் இங்குதான்.

     திருவையாற்று தூய வளனார் பள்ளியில், முதல் வகுப்பு பயின்ற மறு வருடமே, தஞ்சைக் கரந்தைக்கு வந்துவிட்டோம். இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, கரந்தையிலுள்ள ஜைன இலவச தொடக்கப் பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உமாமகேசுவர மேனிலைப் பள்ளி.

     திருவையாறு, தூய வளனார் தொடக்கப் பள்ளி. முதல் வகுப்பினை இங்கு படித்து, நாற்பத்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏதும் அறியா சிறு வயதில் பயின்ற பள்ளி.

     புகை மூட்டம் போல் சிற்சில நினைவுகள் மட்டுமே, மனத்திரையில் தோன்றி மறைகின்றன. ஒரே ஒரு காட்சி மட்டும், தெளிவாய் தெரிகிறது.

      பள்ளிக்குள் நுழைந்ததும், காட்சிதரும், இயேசுபிரானின் திருமுன், ஒவ்வொரு நாளும் மண்டியிட்டு, எழுந்து சென்றது மட்டும் தெளிவாய், மனதில் தேங்கியுள்ளது.

     நான் பயின்ற தூய வளனார் தொடக்கப் பள்ளி, இன்றும் தொடக்கப் பள்ளியாகத்தான் இருக்கிறது. நான் செல்ல வேண்டிய தூய வளனார் மேனிலைப் பள்ளி, இப்பள்ளிக்கு பின்புறம் உள்ளது.

    தூய வளனார் தொடக்கப் பள்ளிக்கு முன், இரு சக்கர வாகனத்தை நிறுத்தி இறங்குகிறேன். பள்ளி வளாகத்தில், காலடி எடுத்து வைக்கிறேன். மனதில் ஓர் இனம் புரியா, இன்ப உணர்வு மெல்ல மெல்லப் பரவுகிறது.

     இயேசு பிரானின் திருஉரு என்னை வரவேற்கிறது. சில நிமிடங்கள், யேசுவையே உற்றுப் பார்க்கிறேன். உள்ளே நுழைந்து, வலது புறம் திரும்பியதும், இதோ நான் பயின்ற முதல் வகுப்பு.







முதலாம் வகுப்பில் சில நிமிடங்கள், என்னை மறந்து நிற்கின்றேன். வகுப்பறையில் உட்காருவதற்கு, இன்றும் கூட இருக்கைகள் ஏதும் இல்லை. தரையில்தான் அமர வேண்டும். தரையில் சிறிது நேரம் அமர்ந்தேன்.

     தேர்வினை முன்னிட்டு, காலை 8.00 மணிக்கே சென்று விட்டதால், தூய வளனார் தொடக்கப் பள்ளியில், ஒரு சில குழந்தைகளைத் தவிர, யாரும் இல்லை.

     பள்ளியில் பணியாற்றும் ஆயாஅம்மா மட்டுமே இருந்தார். அம்மா, நாற்பத்து நான்கு வருடங்களுக்கு முன், நான் ஒன்றாம் வகுப்பு பயின்ற பள்ளி இது. நான் பயின்ற வகுப்பறை இது. இன்று நான் ஒரு ஆசிரியன். என் வகுப்பறையைக் காண வேண்டும் என்ற ஆவலில் வந்துள்ளேன் என்றேன்.

     ஆயாஅம்மா அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே. ஒரு நிமிடம் இருங்கள் எனக் கூறிச் சென்றார். திரும்பி வரும்போது, கையில் தேநீர் கோப்பையுடன் வந்தார்.

     சாப்பிடுங்கய்யா.

     அவர் குரலில்தான், எவ்வளவு அன்பு. எவ்வளவு பாசம். எவ்வளவு பெருமிதம்.

பெருமிதப் பட வேண்டியவன் நானல்லவா.