06 நவம்பர் 2014

என் ஆசான்

நண்பர்களே, 
6 ஆம் ஆண்டு
ரோட்டரி புத்தகத் திருவிழாவிற்கு
வருமாறு
தங்களை அன்போடு அழைக்கின்றேன்
வருக      வருக



என் ஆசான்


பன்நெடுங் காலம் பணிசெய்து பழையோர்
     தாம்பலர் ஏம்பலித் திருக்க
என்நெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த
     எளிமையை என்றும்நான் மறக்கேன்
                             - திருவிசைப்பா

     நண்பர்களே, மாதா, பிதா, குரு, தெய்வம் எனத் தெய்வத்தினும் மேலாய், குருவைப் போற்றுதல் நம் மரபு.

     ஆசிரியரைப் பள்ளியில் இருக்கும் பெற்றோர் எனவும், பெற்றோரை வீட்டில் இருக்கும் ஆசிரியர் எனவும் பெருமை பொங்க போற்றுபவர்கள் அல்லவா நாம்.

     ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும், ஓரு பெண் இருப்பார் எனக் கூறுவர். ஆணோ, பெண்ணோ, ஒவ்வொருவரின் வெற்றிக்குப் பின்னும், நிச்சயம் ஒரு ஆசிரியர் இருப்பது உறுதி.

     நண்பர்களே, நான் இன்று ஆசிரியராய்ப் பணியாற்றுகின்றேன், ஐந்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன், வலைப் பூவில் வாரந்தோறும் ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் எனது ஆசிரியர்கள்தான்.

     அறிந்தோ, அறியாமலோ, மற்ற பாட ஆசிரியர்களைவிட, தமிழாசிரியர்களுடனேயே, மிகவும் நெருங்கிப் பழகியவன் நான்.

    என்னைக் கரம் பிடித்து அழைத்துச் சென்று, நல்வழி காட்டியவர்கள், நெறிப் படுத்தியவர்கள், எனது தமிழாசிரியர்களே ஆவர். மேலும் கல்வி பயின்ற பள்ளியிலேயே, ஆசிரியராய்ப் பணியில் சேர்ந்தபோது, தோழமையோடு என்னை ஏற்று, முன்னிலும் அதிகப் பாசம் காட்டி, நேசத்தோடு அரவணைத்தவர்கள் எனது தமிழாசிரியர்களே.

     நண்பர்களே, அத் தமிழாசிரியர்களுள் முதன்மையானவரைத் தங்களுக்கு அறிமுகம் செய்து வைக்க விரும்புகின்றேன்.

புலவர் சிவ. திருஞான சம்பந்தம்

     ஒன்பதாம் வகுப்பிலும், பத்தாம் வகுப்பிலும் எனது தமிழாசிரியர் இவர். எப்பொழுதுமே ஓர் புன்னகை, நிரந்தரமாய் தவழும் முகத்திறகுச் சொந்தக்காரர். இவர் வாய் திறந்தால், பழ மொழிகள் அருவியெனக் கொட்டும்.

     ஒரு மாணவனைக் கண்டிப்பதற்கும், அவன் செய்த தவற்றை உணர்த்தித் திருத்துவதற்கும் கூட, இவர் நாவில், எப்பொழுதும் ஓர் பழமொழி, தயாராய் காத்திருக்கும்.

     பழமொழிகளின் நாயகன் இவர்.

     இவர் மிதிவண்டியோ அல்லது வேறு இரு சக்கர வாகனமோ ஓட்டி, நான் பார்த்ததில்லை. பள்ளிக்கு அருகாமையிலேயே வீடு. நடந்தே வருவார். நடந்தே செல்வார்.

     பள்ளி விழாவாயினும் சரி, கரந்தைத் தமிழ்ச் சங்க விழாவாயினும் சரி, இவரின் பங்களிப்பு இல்லாமல், விழாக்கள் நடைபெறாது.

     விழாவிற்கு ஏற்பாடு செய்தல், தக்கவரை அழைத்தல், அழைப்பிதழ் தயார் செய்தல், மேடை நிர்வாகம், நிகழ்ச்சி நிரலினை வடிவமைத்தல் என ஒவ்வொன்றையும் எனக்குக் கற்றுக் கொடுத்தவர் இவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் முதற்றலைவராய் அமர்ந்து, முப்பதாண்டுகள் ஒப்பிலாப் பணியாற்றியவர் தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களாவார்.

     தமிழவேள் உமாமகேசுவரனாரின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்து எழுதி, தனியொரு நூலாக வெளியிடும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. புலவர் அ.இராமசாமி என்பாருடனும், எனது ஆசானுடனும் இணைந்து, நூலினை உருவாக்கிய நாட்கள், என்றென்றும் மறக்க இயலாதவை.
    

புலவர் சிவ.திருஞான சம்பந்தம், திரு ஆ.இராமகிருட்டின்ன், முனைவர் துரை.பன்னீர் செல்வம் ஆகியோருடன் இணைந்து, உமாமகேசுவரனார் கட்டிய, நாகத்தி பாலத்தில் நடந்து, நடந்து மெய் சிலிர்த்ததும், தொண்டராயன் பாடி பாலத்தைத் தேடி, பூதலூர் முழுதும் அலைந்து, திரிந்ததும், என் வாழ்வின் பொன்னான நாட்களாகும்.

     தமிழவேள் உமாமகேசுவரனாரின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு விழாவின்போது, புலவர் அ.இராமசாமி அவர்களுக்கும், புலவர் சிவ.திருஞான சம்பந்தம் அவர்களுக்கும், எனக்கும், நூல் வெளியீட்டு விழா மேடையிலேயே, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தார், கணையாழி அணிவித்துப் பாராட்டிய காட்சி, இன்றும் பசுமை மாறாம்ல் நெஞ்சில் நிலைத்திருக்கிறது.

பார்த்த அழகையும், மலேசியப் பயணத்தையும்
சேர்த்து எழுதி சிறந்த நூலாக்கி
என்றுமுள செம்மொழி ஏற்றம் பெற்றிடவே
இன்னொரு நூலை இனிதாகச் சேர்த்தாய்

விழியோரக் கண்ணில் வெளிவந்த நீரால்
பழகிய நட்பின் பாங்கினைக் கூறி
உன்னறுஞ் செயலுக்கு உறுதுணையாய் இருந்த
நண்பருக்கு எல்லாம் இன்பம் அளித்தாய்

என்பணி கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கே
என்றுபணி யாற்றும் இனியநல் தம்பிஜெயக்குமாரா
பண்புடனே பணியாற்றி, பயனுள்ள நூலியற்றும்
உன்பணி தொடர்ந்திடவே உளமாற வாழ்த்துகின்றேன்

எனது பயணக் கட்டுரை நூலான, விழுதுகளைத் தேடி வேர்களின் பயணம் என்னும் நூலுக்கு, என் ஆசான் வழங்கிய வாழ்த்துரை இது. இதைவிட வேறு என்ன பெருமை வேண்டும் எனக்கு?
    
பணி ஓய்வு பெற்றபோது,நினைவுப் பரிசு வழங்கும் காட்சி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல திருக்கோயில்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான். இவருடன் சேர்ந்து பல கோயில்களுக்குச் சென்றிருக்கிறேன். எக்கோயிலுக்குச் சென்றாலும், அக்கோயிலின் சிறப்புக்களை, பெருமைகளை, சிறு குழந்தைக்குக் கூறுவது போல் கூறி மகிழ்வார்.

     நண்பர்களே, இவர் மிகப் பெரிய பக்தர். மிகப் பெரிய ஆன்மிக வாதி. ஆயினும் இவரின் ஒரு செயல் கண்டு, பல முறை நான் வியந்திருக்கிறேன்.

    எந்தக் கோயிலுக்குச் சென்றாலும், இறைவனுக்குக் காட்டப்பெறும் தீப ஆராதனையின்போது, தூர நின்று, மனமுருகி, கைக் கூப்பி வணங்குவார். ஆனாலும் திருநீரு பெறாமலேயே திரும்பி வந்து விடுவார்.

     எனக்கெதிரில் இறைவன் இருக்கிறார். எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுகிறேன். இறைவனும் மனமிறங்கி, எனக்கு அருளிக் கொண்டே இருக்கிறார். எங்கள் இருவருக்குமான புனிதமான உறவில், இடையில் புக, எவரையும் அனுமதியேன் என்பார்.

சித்தர் கருவூரார்
கொங்கணச் சித்தர்
இருவரையும், வாரந் தவறாமல் வழிபடும் தன்மையினர். இவ்விருவரின் அருளாளேயே, இன்றும் நலமுடன் இருப்பதாகக் கூறுவார்.

     நண்பர்களே, நாமெல்லாம், சிறு சிறு துன்பம் வந்தாலே, துவண்டு போய் விடுவோம். மீள வழி அறியாது, பல நாட்கள் தூக்கம் இழந்து புலம்புவோம். ஆனால் என் ஆசானோ, மாபெரும் துன்பம் வந்தபோதும், துன்பத்தை எதிர் நின்று சந்தித்து, துணிவுடன் போராடி வெற்றி பெற்ற வீரர்.

     ஆமாம் நண்பர்களே, ஒரு முறை அல்ல, இரு முறை, அந்த யமனையே, எதிர்த்துப் போராடி, மறு பிறவிகளைக் கண்டவர்.

     இன்றைக்கு 26 ஆண்டுகளுக்கு முன்னர், 1988 ஆம் ஆண்டின் மத்தியில், இவருக்கு ஒரு பிரச்சினை தொடங்கியது. எச்சிலைக் கூட விழுங்க இயலாத நிலை. தொண்டயில் வலி சிறிது, சிறிதாய் வலுத்தது. காரணம் புரியாமல், மருத்துவரை அணுகினார். பரிசோதனைகள் பல செய்தனர். முடிவைக் கூறினர். நோய் பற்றிய முடிவினை மட்டுமல்ல, இவரின் முடிவினையும் சேர்த்தே கூறினர்.

உங்களின் வாழ்நாள், இன்னும் சில மாதங்கள் மட்டும்தான்.

தொண்டையில் புற்றுநோய்.

     ஆங்கில மருத்துவம் தன்னை காப்பாற்றாது, கரை சேர்க்காது என்பதை உணர்ந்தார். பதட்டப் படவில்லை. தெளிவாய் யோசித்தார். இக் கொடு நோயினைத் தீர்க்கும் பிற வழிகள் என்ன என்று சிந்தித்தார். சித்த மருத்துவமே சிறந்த வழி என்று முடிவு செய்தார்.

     உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில் அன்று பணியாற்றிய திரு க.தாமோதரன் அவர்களின் உறவினர், திருவையாற்றில், சித்த வைத்தியராக இருப்பதை அறிந்து, அவ்வாசிரியரையும் அழைத்துக் கொண்டு சென்று, அவ் வைத்தியரைச் சந்தித்தார்.
    
திருவையாறு சீனிவாச வைத்தியர்

பார்த்தாலே கையெடுத்து வணங்கத் தூண்டும் உருவம். அன்பு தவழும் முகம். கருணை பொங்கும் கண்கள். கனிவாய், நம்பிக்கையினை, நம் நெஞ்சில், விதையாய், விதைக்கும் சொற்கள்.

திருவையாறு சீனிவாச வைத்தியர்

     பரம்பரை வைத்தியர். சித்த வைத்திய நெறிமுறைகளைக் கரைத்துக் குடித்தவர். ஒருசில நிமிடங்கள், இவர் எதிரில் அமர்ந்து, பேசிக் கொண்டிருந்தாலே போதும், பாதி நோய், நம் உடலை விட்டு, அகன்று போய்விட்டதை உணர முடியும்.

    
     திருவையாற்று சீனிவாச வைத்தியரும் பல சோதனைகளைச் செய்து, என் ஆசானுக்கு வந்துள்ளது, புற்று நோய்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டார்.

     அஞ்ச வேண்டாம். கருவூரார் காப்பாற்றுவார். கொங்கணச் சித்தர் கைவிட மாட்டார். துவங்குவோம் மருத்துவத்தை எனக் கூறி, மருத்துகள் பலவற்றைத் தயார் செய்து கொடுத்தார்.

8.12.1988

      என் ஆசான், புலவர் சிவ. திருஞான சம்பந்தம் அவர்களுக்கு, மருத்துவம் தொடங்கிய நாள் இதுதான். வாழ்வின் மறக்க இயலா நாள் அல்லவா?  என் ஆசான் மறு பிறப்பை உணர்ந்த நாள் அல்லவா? இப்பொழுது கேட்டாலும், அடுத்த நொடி, இத் தேதியினை மறவாமல் கூறுவார்.

     மருத்துவம் தொடங்கியது. பத்தியமும் கைப் பிடித்து உடன் வரத் தொடங்கியது. பத்தியம் என்றால் கடும் பத்தியம். உப்பு கூடவோ கூடாது, புளியின் வாசனை கூட, ஆகவே ஆகாது, என்று பலப் பல நிபந்தனைகள். புரதச் சந்தினை அதிகரிக்க, முடிந்த மட்டும் பாதாம் பருப்பினை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

     என் ஆசான், அன்று முதல், நாவின் சுவைக்காக உண்ணுவதைத் துறந்தார். வயிற்றிற்காக மட்டுமே உண்டார். என் ஆசிரியரை எண்ணும் போதெல்லாம், அவரின், துணைவியாரை எண்ணாமல் இருக்க இயலாது. காணும் போழுதெல்லாம், குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஒவ்வொருவராக நலம் விசாரித்து மகிழும் நல் மனத்தினர்.

     கணவர் பத்தியம் இருக்க, தான் மட்டும், அறுசுவைகளை உண்டு மகிழ்வதா? என்று எண்ணி, அன்று முதல் தானும், பதியுடன் இணைந்து பத்தியச் சாப்பாட்டினையே, நல் அமுதமாய் எண்ணி, உண்ணத் தொடங்கினார்.

    நண்பர்களே, ஒன்றல்ல, இரண்டல்ல, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இன்றும் அதே சாப்பாடுதான்.

திருவையாற்று சீனிவாச வைத்தியரின்
மருத்துவத் திறமை
என் ஆசானின், மன உறுதி, கலங்கா நெஞ்சம்.
புற்று நோய் உடலை விட்டே,
தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது.
காலனை வென்றார்.

     நண்பர்களே, என் ஆசானுக்கு வந்த சோதனை, இத்துடன் முடியவில்லை. இருபத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், 2013 இல், என் ஆசானின், மலக் குடலில், புற்று நோய் மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்தது.

இம்முறை
திருவையாற்று சீனிவாச வைத்தியர்
இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன்,
இயற்கை அவரைத்,
தனக்கு வைத்தியம் பார்க்க அழைத்துக் கொண்டது.

    விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலமல்லவா இது. என் ஆசான், சென்னை சென்றார். அப்போல்லோ மருத்துவர் திரு கே.இராஜாராம் அவர்களைச் சந்தித்தார். அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது நலமுடன் இருக்கிறார்.

அறுவை சிகிச்சை நடைபெற்ற நாள் 15.2.2013

இருமுறை மறுபிறவி எடுத்தவர் என் ஆசான்
புலவர் சிவ.திருஞானசம்பந்தம்.

     கும்பகோணம் செல்லும் போதெல்லாம், குடும்பத்துடன் இவர் இல்லத்திற்குச் சென்று, உரையாடி வருவது என் வழக்கம். அறுவை சிகிச்சைக்கு முன், நண்பர் பால்ராஜ் அவர்களுடன், இவரைப் பார்ப்பதற்காகவே, சென்னை சென்று வந்தேன். ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து, இவர் இல்லம் திருமபிய பிறகு, பல்வேறு அலுவல்களால், அலைச்சல்களால், இவரைச் சென்று காண இயலாமல், காலம் கரைந்து கொண்டே சென்றது.
    


சில நாட்களுக்கு முன்னர்தான், நண்பர்களுடன் இணைந்து, கும்பகோணம் சென்ற பொழுது, இன்றைக்கு சாக்கோட்டை என்றழைக்கப்படும், சாகாஜிக் கோட்டைக்குச் சென்று, என் ஆசானைச் சந்தித்தேன்.

     மகிழ்ந்து வரவேற்றார். நீண்ட நேரம் உரையாடி மகிழ்ந்தோம்.

     நண்பர்களே, எனக்கு ஒரு சந்தேகம், அடிக்கடித் தோன்றிக் கொண்டே இருக்கிறது. வஞ்சக மனத்தினர், தீய வழியில் பொருள் சேர்ப்பவர்கள், மற்றவர்கள் மனம் புண்பட ஏளனமாய் பேசி, எள்ளி நகையாடி மகிழ்பவர்கள் எல்லாம், நலமுடன் வாழும் போது, நல்லவர்களுக்கு மட்டும் ஏன் மீண்டும், மீண்டும் சோதனை. விடைதான் தெரியவில்லை.

காலனையே இருமுறை
புறம் கண்டு ஓட விட்ட
என் ஆசான்
புலவர் சிவ.திருஞான சம்பந்தம் அவர்கள்
நூறாண்டு வாழ

வாழ்த்துவோமா நண்பர்களே.