09 ஜனவரி 2015

வேலு நாச்சியார் 8


 அத்தியாயம் 8 முப்பெரும் தேவியர்
    

வேலு நாச்சியாருக்கு ஒரு நிமிடம் என்ன நடந்ததென்றே புரியவில்லை. நனைந்த உடலோடு, கையில் தீ பந்தத்தோடு, குயிலி ஓடியதைப் பார்த்தார். அடுத்த நொடி, பூமியே இரண்டாகப் பிளந்தாற் போல், இடி முழக்கம் தொடர்ந்தது.

     சிவகங்கைக் சீமையே புகை மூட்டத்தால் மூச்சுத் திணறியது.

குயிலி

பெருங்குரலெடுத்துக் கதறினார் வேலு நாச்சியார்.

என்ன காரியம் செய்து விட்டாய் குயிலி.


     குயிலியின் தன்னலமற்ற வீரமும், தியாகமும், வேலு நாச்சியாரைத் தன்னிலை மறக்கச் செய்தன.

   குயிலி, குயிலி என வாய் விட்டு கதறியபடி, ஆயுதக் கிடங்கு இருந்த இடம் நோக்கி ஓடினார்.

            துப்பாக்கிகள், வேல்கள், வாள்கள் என அனைத்து ஆயுதங்களும் கருகிக் கிடந்தன. கருகிக் கிடந்த பொருள்கள் அனைத்தில் இருந்தும் கரும் புகை வெளியேறிக் கொண்டிருந்தது. வெடிக்காத குண்டுகள், ஒன்றிரண்டு, தாமதமாக, திடீர் திடீரென வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன.

      குயிலியின் எலும்புகளைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

       இவ்வுலகின் முதல் மனித வெடிகுண்டு குயிலி.

       தனது தாய் நாட்டிற்காகத் தனது இன்னுயிரையே, தானே முன் வந்து ஈந்த, துறந்த, ஒப்பற்ற தியாகி குயிலி.

       குயிலி உடலின் ஒரு சில பாகங்களாவது  கிடைக்காதா? எனத் தேடிக் கொண்டிருந்த, வேலு நாச்சியாரை, ஒரு துப்பாக்கிக் கொண்டு உரசிச் செல்லவே, சுய நினைவு பெற்றார். குண்டு வந்த திசையை நோக்கினார்.

               ஆங்கிலேயத் தளபதி பான் ஜோர்,  காளயார் கோயிலில் சுட்டது  போலவே, இங்கும் ஒரு தூணின் மறைவில் இருந்து, வேலு நாச்சியாரை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தான்.



  வாளை உயர்த்தி, வெறிக் கூச்சலிட்ட வேலு நாச்சியார், அரண்மனையை நோக்கிப் பாய்ந்தார்.

      தூணில் மறைந்து, மறைந்து, பாய்ந்து பாய்ந்து, முன்னேறி, அனைத்து குண்டுகளையும், செயலிழக்கச் செய்தார்.

      துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தீர்ந்து விடவே, வேறு வழியின்றி, வாளை உருவினான் பான் ஜோர்.

      தூணின் மறைவில் இருந்து வெளிப்பட்ட, வேலு நாச்சியார் சிரித்தார். காரணம் புரியாது பான் ஜோர் விழித்தான்.

      பான் ஜோர், இந்த, இந்த ஒரு நிமிடத்திற்காகத்தான், இத்தனை ஆண்டுகளாய் காத்திருந்தேன். வா, வா, வாளை உயர்த்தி வா, வந்து போரிடு, வா.

      உன்னைப் போன்ற கோழையைக் கொல்வதற்கு, இரண்டு கரங்களிலும் ஆயுதம் ஏந்திப் போராடினால், அது இந்த ஆயுதங்களை அவமானப் படுத்துவதாகும்.
  
       வா, மறைந்திருந்து என் கணவரைக் கொன்ற கோழையே வா, வாளை உயர்த்தி வா

       வேலு நாச்சியார், வலது கையில் இருந்து வாளை, தூக்கி எறிந்து விட்டு, இடது கை வாளினை சுழற்றத் தொடங்கினார்.

       ஒரு சில நிமிடங்களிலேயே, பான் ஜோரின் வாள், அவன் கையை விட்டுப் பறந்தது. இரு கரங்களையும் உயர்த்தியவாறு, தட்டுத் தடுமாறி, நிற்க இயலாது, தரையில் மல்லாந்து விழுந்தான்.

      வேலு நாச்சியார், பான் ஜோரின் மார்பில், தன் காலை வைத்து அழுத்திக் கொண்டு, இடது கை வாளினை ஓங்கினார்.

     பான் ஜோர், நான் நினைத்தால், இப்பொழுதே, இக்கணமே, உன் குடலை உருவி, மாலையாக அணிந்து கொள்ள முடியும். உன்னைக் கொன்றால், கணவரின் மரணத்திற்காக, வேலு நாச்சியார் பழி தீர்த்துக் கொண்டார், என எதிர்கால உலகம் பேசும்.

     பான் ஜோர், எனக்கு, என்னை விட, என் கணவரை விட, என் குடும்பத்தை விட, என் நாடும், என் நாட்டு மக்களும்தான் முக்கியம். எனவே உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். போ, நாயே பிழைத்துப் போ.

     வேலு நாச்சியாரின் காலில் விழுந்தான் பான் ஜோர்,

      தாயே, இனி எக்காலத்தும், இப் பக்கம் தலை வைத்தும் படுக்க மாட்டேன்.  இது சத்தியம்.

     ஓடி மறைந்தான் பான் ஜோர்.

சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்த
வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க

சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்த
வீரத்தாய் வேலு நாச்சியார் வாழ்க

வாழ்த்து முழக்கங்கள், அரண்மனை எங்கும் எதிரொலித்தன.

வேலு நாச்சியார்,
மீண்டும்
சிவகங்கைச் சீமையின்
மகாராணியானார்.

வேலு நாச்சியாரின் வரலாறு என்பது,
உடையாளின் வரலாறு,       குயிலியின் வரலாறு.

வேலு நாச்சியாரின் வரலாறு என்பது
சாதி, மத, இன உணர்வுகளால்
சற்றும் கறை படியாத மனித நேயத்தின் வரலாறு.

வேலு நாச்சியார்
உடையாள்            குயிலி
என்னும்
முப்பெரும் தேவியரும்
இவ்வுலகு உள்ளவரை போற்றப்பட வேண்டியவர்கள்.
கோயிலில் வைத்து
வணங்கப் பட வேண்டியவர்கள்.

முப்பெருந் தேவியரையும்
போற்றுவோம்       வாழ்த்துவோம்       வணங்குவோம்.