15 ஜூலை 2015

பச்சைத் தமிழன்


அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
-          பாவேந்தர் பாரதி

     நடுநிலைப் பள்ளிகளை எல்லாம், உயர் நிலைப் பள்ளிகளாக உயர்த்த, கல்வி அதிகாரிகளுடன், திருச்சிக்கு சென்றார் அம் மாமனிதர்.

     ஒரு பள்ளியில் தலைமையாசிரியர் தலைமையில், ஐந்து ஆசிரியர்கள், மாலையோடு, வரவேற்கக் காத்திருந்தனர்.

     பள்ளியினுள் நுழைந்த அம் மாமனிதர், மாலைகளோடு நிற்கும் ஆசிரியர்களைப் பார்த்தார்.


பையன்களுக்குப் படிப்பு சொல்லிக் குடுங்கண்ணா, படிக்காதவனுக்கு மாலை போட நின்னுக்கிட்டு இருக்கீங்களே, போய் வேலையைப் பாருங்கண்ணே.

     இம்மனது யாருக்கு வரும்.

      ஒரு முறை அலுவலக அறையில் அம்மாமனிதரை அணுகிய, கவிஞர் எஸ்.டி.சுந்தரம் அவர்கள், தயங்கித் தயங்கி, மெல்ல கூறினார்.

மூன்று இலட்சம் ரூபாய் இருந்தால், நமது சாதனைகளை எல்லாம் எடுத்துரைக்கும் வகையில், ஒரு விளம்பரப் படம் எடுக்கலாம். அத்திரைப்படம், அடுத்தத் தேர்தலின்போது, நாம் வாக்கு சேகரிக்க மிகவும் உதவும்.

     அடுத்த நொடி, அம்மனிதர் சீறி எழுந்தார்.

அடப்பாவி, படமெடுக்கும் மூன்று இலட்சத்தில் இன்னும் 10 ஊர்களில் நான் பள்ளிக் கூடம் கட்டுவேன். பிள்ளைகள் படிக்க வழி சொல்லாமல், நியூஸ் ரீல் எடுக்க வழி சொல்லுகிறாயே. முதலில் இங்கிருந்து நடையைக் கட்டு.

இம்மாமனிதர்தான்
கல்விக் கண் திறந்த
கர்மவீரர் காமராசர்
என்று கூறத் தேவையில்லை.

தங்கமே... தண்பொதிகைச் சாரலே..... தண்ணிலவே....
சிங்கமே.... என்றழைத்துச் சீராட்டுந் தாய்தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை, துணையிருக்க மங்கையில்லை
தூயமணி மண்டபங்கள், தோட்டங்கள் ஏதுமில்லை
ஆண்டிகையில் ஓடிருக்கும் அதுவும் உனக்கில்லையே
என்று காமராசரைப் பாடுவார் கவியரசு கண்ணதாசன்.

நாமும் காமராசரைப் போற்றுவோம்
வாழ்க வாழ்க என்றே வாழ்த்துவோம்.

-----

நண்பர்களே, கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் விழாவானது, எம் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பெற்றது.
       
பள்ளி மாணவ,மாணவியரிடையே சிறப்புரை வழங்கும்
பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன்





என் வகுப்பிலும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்தினேன்.அனைத்து மாணவ, மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

        போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கானப் பரிசளிப்பு விழாவானது, என் வகுப்பறையில் மாலை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியரும் நண்பருமான திரு வெ.சரவணன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்குப் பரிசில்களை வழங்கி மகிழ்ந்தார்.

      

கரும்பலகையில் கர்மவீரரின் படத்தினை வரைந்த மாணவர்

வரவேற்புரை ஆற்றும் மாணவர்


சிறப்புரையாற்றும் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள்















பள்ளி ஓவிய ஆசிரியரும் நண்பருமான திரு எஸ்.கோவிந்தராசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தார்.