27 ஜூலை 2015

நெருதா


திடீரென்று நம்மைவிட்டுப் பிரிந்த
மாமனிதருக்கு
கண்ணீர் அஞ்சலியைச்
சமர்ப்பிப்போம்


நெருதா


ஆண்டு 1972. சிலி நாடு. தெருவே அதிரும் வகையில் வேகமாய் வந்த, இராணுவ லாரியானது, அந்த வீட்டின் முன், தரைதேய கிறீச்சிட்டு நின்றது.

    லாரியில் இருந்து குதித்த ராணுவ வீரர்கள், வீட்டின் கதவினை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்கிறார்கள். வீட்டில் யாருமில்லை.

     வீட்டினை சல்லடை போட்டுத் தேடிய வீரர்களின் கண்களில், அந்த அறையின் கதவு தென்பட்டது. பாதாள அறையின் கதவு.

     ஒரு இராணுவ வீரன், தன் துப்பாக்கியின் பயனட்டால் கதவை உடைக்க, கீழ் நோக்கிச் செல்லும் படிகள் தெரிந்தன.


     இராணுவ வீரர்கள் துப்பாக்கியை முன்புறமாக நீட்டியபடி, திபு திபுவென்று படிகளில் இறங்குகிறார்கள். இறங்கிய வீரர்கள் அங்கு கண்ட காட்சியைக் கண்டு, ஒரு கணம் திகைத்துத்தான் போனார்கள்.
    

தாங்கள் தேடி வந்த மனிதர், அமைதி தவழும் முகத்துடன், எதையோ எழுதிக் கொண்டிருக்கும் காட்சியைக் காணுகிறார்கள்.

      இராணுவ வீரர்கள் வீட்டிற்குள் நுழைந்ததையோ, கதவினை உடைத்துக் கொண்டு, பாதாள அறைக்குள் வந்ததையோ அறியாமல், அம் மனிதர் எழுதிக் கொண்டிருக்கிறார்.

     இராணுவ வீரர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உலகையே மறந்து இப்படிம் ஒரு மனிதரால் எழுத முடியுமா?

    சிறிது நேரம் கழித்து, தலை நிமிர்ந்த அம் மனிதர், அறை முழுவதும், இராணுவ வீரர்களால் நிரம்பி வழிவதைப் பார்க்கிறார்.

    ஒரு நொடிதான், ஒரே ஒரு நொடிதான். நிலைமையை உணர்ந்து கொள்கிறார். முகத்தில் கவலையின் அறிகுறி கொஞ்சம் கூட இல்லை. மாறாக புன்னகை புரிகிறார்.

நீங்கள் தேடி வந்த அணுகுண்டு, அதோ அங்கே இருக்கிறது.

     நிதானமாக அமைதியாகக் கூறினார்.

     அம்மனிதர் சுட்டிக் காட்டிய திசையைப் பார்க்கின்றனர். பின் அச்சத்தோடு, அந்த மேசையினை நெருங்குகிறார்கள். வெடித்து விடுமோ என்று அஞ்சுவதைப் போல், தயங்கித் தயங்கித்தான், அந்த மேசையின் அருகில் சென்றார்கள்.

     மேசையில் வெள்ளைத் தாட்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. ஒவ்வொரு தாளிலும், அம் மனிதரின் கையெழுத்துக்கள் தெளிவாய் தெரிகின்றன.

     அணுகுண்டினைக் காட்டிலும் சக்தி வாய்ந்த கவிதைகள், ஒவ்வொரு பக்கத்திலும். மக்களின் பார்வையில் பட்டு, கண்கள் வழி, உள்ளத்தில் புகுந்து, கிளர்ச்சி செய்து, புரட்சி எனும் பேராயுதத்தை வெடிக்கச் செய்யும் வார்த்தைகள், ஒவ்வொரு பக்கத்திலும் ததும்பிக் கொண்டிருக்கின்றன.

     இரு இராணுவ வீரர்கள், அந்த தாட்களை எல்லாம், மெல்ல மெல்ல எடுத்து, ஒரு பையில் போடுகிறார்கள். அப்பொழுதுதான் அவர்களின் கண்ணில் படுகிறது அந்த பரிசுப் பொருள்.


நோபல் பரிசு

     கடந்த ஆண்டு, இம்மனிதருக்கு, இலக்கியத்திற்காக வழங்கப் பெற்ற நோபல் பரிசு, இராணுவ வீரர்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது.

     நோபல் பரிசினையும் எடுத்து, அதே பையில் போட்டுக் கட்டுகிறார்கள். நோபல் பரிசு பெற்ற  அக்கவிஞரையும் கைது செய்கிறார்கள்.

     இராணுவ லாரி கவிஞரோடும், அவர்தம் கவிதையோடும், நோபல் பரிசோடும், வந்த வழியே திரும்பிச் செல்கிறது.

நண்பர்களே, இக்கவி, இம் மகாகவி யார் தெரியுமா?

கனவுகள், பசுமைமிகு இலைகள், பெரும் எரிமலைகள் பற்றி அவர் கவிதைகள்
ஏன் பேசுவதில்லை என நீங்கள் கேட்கலாம்
தெருக்களில் ஓடும் குருதியைக் காண வாருங்கள்
தெருக்களில் படிந்துள்ள குருதியைக் காண வாருங்கள்

என அழைத்தவர். இவருடைய சொல், போராளிகளின் ஆயுதமாயிற்று. அடக்கி ஒடுக்க நினைப்போருக்கு எதிரான, சக்தி வாய்ந்த, அழிக்க இயலாத போர்க் கருவி இவரது கவிதைகள்.


இவர்தான்
பாப்லோ நெருதா.

    இம் மகாகவி பாப்லோ நெருதாவை தமிழுக்கு, கரம் பற்றி அழைத்து வந்திருக்கிறார், மற்றொரு மகாகவி.

    வாழ்வின் மென்மை வினாடிகளை, இனிமைகளை, அவற்றின் சிலிர்ப்புகளை, உள்ளவாறு உணர்ந்து, அவற்றின் மீது அன்பு பாராட்டுபவர்.

     பாசாங்கு அற்ற ஓட்டம், ஒவ்வொரு எழுத்திலும், ஒவ்வொரு சொல்லிலும், நிரம்பி வழியும் கவிதைகள் இவரது கவிதைகள்.

     இவர் புகழ் பெற்ற கவிஞர் மட்டுமல்ல, சிறந்த பேராசிரியர், உன்னத உரைநடை வல்லுநர், சீரிய பேச்சாளர், உயரிய மொழி பெயர்ப்பாளர்.

     இச்சிறப்புகள் எல்லாம், தற்செயலாய், இவரிடம் குடிபுகுந்தவை அல்ல, கடுமையான உழைப்பினால் வந்தவை.

    தான் பிறந்த மண்ணை மறவாது, தன் பெயருடன் இணைத்து, தன் மண்ணுக்கும் பெருமை சேர்த்து வருபவர் இவர்.


கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

     இவரால் தமிழுக்கு வந்திருக்கும், தமிழ்த் தாய்க்க்குக் கிடைத்திருக்கும், ஓர் புதிய அணிகலன்தான்,

பாப்லோ நெருதா
கவிதைகள்.

பொன்னான பகுதிகள் கொண்ட
வண்ணமிகு பூமியிலிருந்து
என் அன்பு அன்னையே
உனக்குக் கொடுக்க
எளிய இந்த அஞ்சல் அட்டையைத்
தேர்ந்தெடுத்தேன் நான்.

     தனது பதினோராவது பிறந்த நாளுக்கு, இரு வாரங்களுக்கு முன், உணர்வும் தவிப்புமாய் பொங்கி வழிந்த மன நிலையில், நெருதா எழுதிய அவர்தம், முதல் கவிதையோடு தொடங்குகிறது இந்நூல்.

அந்த வயதில்
கவிதை வந்தது என்னைத்தேடி
நான் அறியேன்
நான் அறியேன்
எங்கிருந்து அது வந்ததென்று.

ஆனால்
ஒரு தெருவிலிருந்து
இரவின் கிளைகளிலிருந்து
எதிர்பாராதபடி
திடீரென்று மற்றவர்களிடமிருந்து
அது கூப்பிட்டது என்னை.

சீறும் நெருப்பிற்கிடையே
அல்லது
தனியாய் திரும்புகையில்
முகமற்று இருந்தது
என்னைத் தொட்டது.

தான் கவிஞனான கதையை இப்படித்தான் கூறுகிறார் நெருதா.

     கவிதை வந்த வழியை மட்டுமல்ல, தன் கடமையே கவிதைதான் என்கிறார் நெருதா.

என் கடமை
என் கவிதையோடு இயங்குவது
நான் நானாக இல்லை
அது என் விதி.

துயறுற்றவர்கள்
வலிகளை நான் கவனிக்கவில்லை எனில்
நான் இருப்பதாக எப்படிச் சொல்வது?
அவை
என்னுடைய வலிகள்.

எல்லோருக்காவும்
ஊமையர்கள்
ஒடுக்கப் பட்டவர்கள்
எல்லோருக்காகவும் நான்
இருக்கவில்லை எனில் ......
இருக்க முடியாது என்னால்
மக்களிடமிருந்து வருகிறேன் நான்
மக்களுக்காகப் பாடுகிறேன் நான்.

என்
கவிதை
பாடலும்தான்
தண்டனையும்தான்

எனக்குச் சொல்லப்பட்டது நீ இருளுக்குச்
சொந்தமானவன் என்று
இருக்கலாம், இருக்கலாம்
ஆனால்
ஒளியை நோக்கி
நான் நடக்கிறேன்.

     சிறு வயது முதலே, கவிதையின் கரம் பற்றிய நெருதா, வயதை ஒரு போதும் நம்பியதில்லை.

வயதை நான் நம்புவதில்லை.

எல்லா முதியவர்களும்
கண்களில் ஒரு குழந்தையோடு
இருக்கிறார்கள்.

பிறந்ததிலிருந்து
எவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்கள்?

எல்லா மனிதர்களையும் போல்
பூமியின் மேலே நடப்பதற்குப் பதிலாக
பூமியின் கீழே
ஓய்வெடுக்கப் போகும் வரை
எவ்வளவு காலம் அலைவீர்கள்?

   தனது நாட்டினையும், நாட்டு மக்களையும் தன் உயிரினும் மேலாய் நேசித்தவர்தான் நெருதா.

எனது நாட்டில்
ஒரு மலை உண்டு.
எனது நாட்டில்
ஒரு நதி உண்டு
என்னோடு வா.

துயறுரும் அவர்கள் யார்?
எனக்குத் தெரியாது.
எனினும் என் மக்கள் அவர்கள்
என்னோடு வா.

எனக்குத் தெரியாது
எனினும் என்னைக்
கூப்பிட்டுச் சொல்கிறார்கள்
நாங்கள் துயர்படுகிறோம் என்று
என்னோடு வா.

அவர்கள் என்னிடம்
சொல்கின்றனர், உன் மக்கள்
உன் நல்விதியில்லா மக்கள்
மலைக்கும் நதிக்கும் இடையில்
பசியோடும் வேதனையோடும்

தன்னந்தனியாய்
போராட விரும்பவில்லை அவர்கள்
உனக்காகக்
காத்திருக்கிறார்கள் நண்பனே.

போராட்டம்
கடுமையானதாயிருக்கும்
வாழ்க்கை கடுமையானதாயிருக்கும்
ஆனால்
நீ என்னோடு வருகிறாய்.

    சிலே நாட்டுக் கொடுங்கோலர்களின் பிடியில் இருந்து தப்பி, தலைமறைவாய் இருந்த காலத்தில், ஓர் புத்தாண்டு தினத்தன்று, தன் நாட்டிற்கே வாழ்த்துச் சொன்ன கவிஞர்தான் நெருதா.

அன்புநிறை அரோக்கானியா
இனிய புத்தாண்டு உனக்கு. வாழ்த்துகிறேன்.
இவ்வாண்டு
மானுடம் அனைத்திற்கும் மண்ணுலகம் முழுவதற்கும்
இனிய ஆண்டாகுக.

உனக்கும், எனது இருப்புக்கும் இடையே நம்மைப்
பிரிக்கிறது ஒரு புதிய இரவு, அப்படியே காடுகளும்
நதிகளும், பாதைகளும்
என் சின்னஞ்சிறிய நாடே
கறுத்த குதிரையாக என்மனம் தாவுகிறது
உன்னே நோக்கி.

இயற்கையான தண்ணீரைப் போலப்
பூமியிலிருந்து புறப்பட்டுவரும் என உச்சரிப்பு
உங்களைச் சூழ்கிறதே, உணர முடிகிறதா உங்களால்
தாய் மண்ணின்
தித்திப்பு தேகம் முழுவதையும், மலர் மருங்குலையும்
தழுவிக் கொண்டிருப்பது நான்தான்.

இருளுள் இருக்கும் நாட்டுக்கு
எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

      சொந்த நாட்டில் வாழ வழியின்றி, நடந்து நடந்து, நாடு கடந்த மனிதர்களைப் பாடும் பாட்டைக் கேளுங்கள், நம் நெஞ்சம் வெடிக்கும்.

புலம் பெயர்ந்தவர்களின்
நூற்றாண்டு
வீடு இழந்தமையின் புத்தகம்
நரைபடிந்த நூற்றாண்டு
கறுப்புப் புத்தகம்.

திறந்த தினத்தில்
இதைத்தான் எழுதிவிட்டுப் போகவேண்டும்
நான்,
அதுவும்
இந்த நூற்றாண்டிலிருந்து
தோண்டி எடுத்துப்
பக்கங்களில் எல்லாம் சிந்திய
குருதியால் வண்ணம் அடித்துவிட்டு

வெட்டி வீசப்பட்ட கைகள்
எத்தனை என்று நான் எண்ணினேன்
சாம்பல் மேடுகளை எண்ணினேன்
துண்டு துண்டாக்கப்பட்ட
அழுகை அலறல்களை எண்ணினேன்
கண்களை இழந்த கண்ணாடிகளை எண்ணினேன்
தலைகளை இழந்த முடிகளை எண்ணினேன்

பிறகு
தங்கள் நாடுகளைப் பறிகொடுத்தவர்களின்
உலகத்தைத் தேடினேன்
தோற்கடிக்கப் பட்ட
அவர்களின் கொடிகளையும்
அவர்களின் ஆறுமுனை நட்சத்திரங்களையும்
துயரம் கப்பிய அவர்களின் படங்களையும்
அர்த்தமின்றி ஏந்திக் கொண்டு

நானும்
வாழ்விடம் இன்மையை உணர்ந்தேன்
ஆனால் அலைந்து அனுபவப்பட்ட ஒருவனாக
வெறும் கையோடு
என்னை நன்கு தெரிந்த
இந்தக் கடலுக்கத் திரும்பினேன்.

மற்றவர்களோவெனில்
தப்பிக்க வழியின்றி இன்னும் அங்கேயே
இருக்கின்றனர்
தங்களை உறவுகளையும் தவறுவளையும்
கைவிட்டு விட்டவர்களாக.

    தன் நாட்டு மக்களைத் தன் பாடலால், கிளர்ந்தெழச் செய்து போராட்டத்திற்கு ஊக்கப் படுத்திய மகாகவியை, கொடுங்கோலர்களால் வெல்ல முடியாத மகாகவியை, அற்பப் புற்று நோய் வென்றதுதான் கொடுமையிலும் கொடுமை.
   

புற்று நோய்க்குக் கூட அஞ்சாமல், எழுதுகோலை எடுத்து, தன் முடிவையும் கவிதையாக்கியவர்தான நெருதா.

மண் என்னை மூட
மண்ணாகிவிடும் விதிகளின்படி
வெற்றாரவாரம் இல்லாமல் இப்போது நான்
இறக்கப் போகிறேன்.

வானுலகைப்
பிரித்துப் பட்டா போட்டுக் கொண்டவர்கள்
அடித்து நொறுக்கும்போது
மரணத்தை உற்றுக் கவனிக்க முடியாமற்போன
ஏழைகளோடு
மரணத்தில் நான் இருக்க விரும்புகிறேன்.
    

மகாகவி நெருதா, தன் இறுதி நாட்களில், மருத்துவ மனையில் படித்தபடியே, தன் மனைவி மாட்டில்தி பற்றி எழுதிய இக் கவிதையே, இவரது கடைசிக் கவிதையாகும்.

மாட்டில்தி
ஆண்டுகள் அல்லது நாள்கள்
உறக்கம், காய்ச்சல்
இங்கோ, அங்கோ நிலைகொண்ட
நெடுநேரப் பார்வை.

முதுகுத்தண்டு
முறுக்குகிறது, இரத்தக் கசிவு
விழித்திருக்கிறேனா?
மயக்கத்தில் கிடக்கிறேனா?
தூங்குகிறேனா?

மருத்துவமனைப் படுக்கைகள்
அந்நியமான சாளரங்கள்
ஓசைப்படாமல் நடப்பவர்களின்
வெள்ளைச் சீருடைகள்
நிம்மதி குலைக்கம் பாதங்கள்.

அப்புறம்
இந்தப் பயணங்கள்.
புதுப்பித்துக் கொள்ளும் என் கடல்.
தலையணைமேல் உன் தலை
வெளிச்சத்தில்
எனது பூமிக்கு மேலே வெளிச்சத்தில்
மிதக்கும் உன் கைகள்.

நீ வாழ்ந்தபோது
நான் வாழ்ந்தது அழகுமிக்கது.

இவ்வுலகம் நம்பகமானது
இரவில் நான் உறங்கும்போது
உன் சிறு கைகளுக்குள்
இது மிகப்பெரியது.

     கவிஞர் ஈரோடு தமிழன்பனின் அற்புத மொழி பெயர்ப்பில் வந்துள்ள, இந்நூலில் நுழைவது எளிது. நூலினை மூடிய பிறகும், மூடாமல், மனக் கண்ணில் என்றென்றும் இக்கவிதைகள் திறந்தே இருக்கும்.

     கவிதை ஓர் அழகு எனில் அதனை ஆராதனை செய்பவர் தமிழன்பன். வள்ளுவத்தில் ஊற்றெடுத்து, பாரதி, பாரதிதாசன், ரவீந்திரர் எனப் பரவி, ஷெல்லியைத் தொட்டுத் தொடர்ந்து விரியும் நோக்கு, ஈரோடு தமிழன்பனின் கவிதை நோக்கு.

      நெருதாவின் எஸ்பானிய மொழிக் கவிதைகளை, சிலே மண்ணின் மணத்தை, தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்.

       மகாகவியின் கவிதைகள் வேலிகளைத் தாண்டி, வெகு மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே இவர் விருப்பம்.

     நெருதாவின் மேல் இவர் கொண்டுள்ள, ஆழ்ந்த பற்று, ஈடுபாடு இந்நூலின் ஒவ்வெரு எழுத்திலும், ஒவ்வொரு சொல்லிலும் முகம் காட்டி நிற்கிறது.

     நண்பர்களே, நாற்பதாண்டுகளுக்கு முன் பிறந்த, தன் மகனுக்கு, கவிஞர் ஈரோடு தமிழன்பன் வைத்த பெயர் என்ன தெரியுமா?

பாப்லோ நெருதா.

..............


நூல் வெளியீடு

Indian Universities Press

பாரதி புத்தகாலயம்,
7,இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை,
சென்னைஸ் 18
தொலைபேசி 044 24332424, 24332924