12 ஆகஸ்ட் 2015

ஒளி பிறந்தது


ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
                                   பாரதியார்



    நண்பர்களே, என் அலைபேசி அழைத்தது.

சார், நல்லா இருக்கீங்களா, எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

குரலில் மகிழ்ச்சி கரை புரண்டோடியது.

குழல் இனிது யாழ் இனிது என்பர்
மக்கள்தம் மழலைச் சொல் கேளாதவர்
என்று சும்மாவா கூறினார்கள்.

மகிழ்வினும் பெரு மகிழ்வு, தன் குழந்தையின் குரலினைக் கேட்பதில் அல்லவா இருக்கிறது.

   பிறந்த நாள் என்றால் என்ன? என்று கேட்கப் பெற்ற கேள்விக்கு, டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் வழங்கிய, பதில் இருக்கிறதே, அது ஒன்றே போதும்.


வாழ்க்கையில் அந்த ஒரே ஒரு நாள், உன்னுடைய அழுகுரல் குரல் கேட்டு, உன் தாய் சிரிப்பது.

    நண்பர்களே, அலைபேசியில் அழைத்து மகிழ்வினைப் பகிர்ந்து கொண்டவர் யார் தெரியுமா? உங்களுக்குத் தெரிந்தவர்தான்.


  அமெரிக்காவின், நியூயார்க் நகரில் டாக்டர் பட்டம் பெற்றாரே, அந்த வெற்றி வேல் முருகன்.

ஆம் நண்பர்களே, அவரேதான்.

     பிறவியிலேயே பார்க்கும் வல்லமையினை இழந்தும், மூலையில் முடங்கி விடாமல், வீறு கொண்டு எழுந்து, வாழ்வின் தடைகளைத் தகர்த்து எறிந்து, சோதனைகளையே சாதனைகளாக்கிக் காட்டியவர்.
    

கடந்த 14.11.2013 அன்று, தன்னைப் போலவே, புறவிழிப் பார்வையற்ற நித்யாவை வாழ்வியல் இணையராக ஏற்று, புத்தம் புது வாழ்வைத் தொடங்கியவர்.

இவர்களது இல்லறத்தின் பயனாய், நாளை இவ்வுலகில் தோன்றவிருக்கும் மழலை, ஒளிவீசும் கண்களோடு தோன்றி, இவ்விருவரையும், கண்ணே போல் போற்றிப் புரக்க நெஞ்சார வாழ்த்தினோமே, நினைவிருக்கிறதா?

நண்பர்களே, நம் வாழ்த்துதல் பலித்திருக்கிறது.

மழலை முத்துக் குமரன்

வெற்றிவேல் முருகன் நித்யா
தம்பதியினரின்
மழலை
முத்துக் குமரன்
ஒளி வீசும் கண்களோடு
பிறந்திருக்கிறான்.

தன் பெற்றோரை
கண்ணே போல்
போற்றிப் புரக்கப்
பிறந்திருக்கிறான்.

கடலூர் மருத்துவர்
திருமதி ஞான சௌந்தரி அவர்கள்
போற்றுதலுக்கு உரியவர்.
நம் வணக்கத்திற்கும் உரியவர்.

வணிகமயமாகி விட்ட இன்றைய மருத்துவ உலகில்,
தாய்மை உணர்வோடு,
தொடர்ந்து நித்யா அவர்களுக்கு
மருத்துவம் பார்த்து, தக்க அறிவுரைகளை வழங்கி
மழலை முத்துக் குமரனை
தன்  தாய், தந்தையரைக்
கண்ணாரக் காண வைத்திருக்கிறார்.


வெற்றிவேல் முருகன் நித்யா தம்பதியினரை
வாழ்த்துவோம்.

மருத்துவர் ஞான சௌந்தரி அவர்களைப்
போற்றுவோம்.
அவர்தம் தொண்டு தொடர

வாழ்த்துவோம், வணங்குவோம்.

.....................
நண்பர்களே, 
நண்பர் வெற்றிவேல் முருகன் அவர்களின் மின்னஞ்சல்