26 பிப்ரவரி 2017

விடுமுறையில் படித்தவர்


 பொருள்.

     பொருளாதாரம்

     ஒரு வீடு வளமிக்கதாக விளங்க, பொருளாதாரம் மிக முக்கியமான ஒன்று.

    அன்பும் பண்பும் வழிந்தோடும் குடும்பமே ஆயினும், பொருளில்லை என்றால் வாழ்வானது வேதனையைத்தான் வாரி வாரி வழங்கும்.

     இன்றைய பெரும்பாலான குற்றங்களுக்கு, சட்ட மீறல்களுக்கு அடி நாதமாய் விளங்குவது இந்தப் பொருளின்மைதானே.

     45 வயது நிரம்பிய இம்மனிதருக்கும் இதே பிரச்சினைதான்.

      இம்மனிதரின் சிந்தனை முழுமையும் பொருளாதாரத்தைச் சுற்றிச் சுற்றியே வந்தது.

      பொருளாதாரச் சூழலை எவ்வாறு மேம்படுத்துவது.

       ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியிம் மாறி மாறி, முன்னேறி வரும் தொழில் நுட்ப முன்னேற்றங்களை, வணிக முறைகளை எவ்வாறு முழுமையாய் புரிந்து கொள்வது.

     புரிந்து கொண்டால்தானே, நிருவாக, பொருளாதார, தொழில் வளர்ச்சி முடிவுகளை மிகச் சரியாக எடுக்க முடியும்.

      வளர்ச்சியை சரியான திசையில், வெகுவேகமாய் உயர்த்த முடியும். மேம்பட முடியும். மேம்படுத்த முடியும்.

       தீவிரமாய் சிந்தித்தவர், ஒரு தீர்க்கமான முடிவிற்கு வந்தார்.

      ஒரு வெள்ளைத் தாளினை எடுத்தார்.

      எழுதுகோலைத் திறந்தார்.

      மனதில் உள்ளவற்றை எல்லாம் இறக்கி வைத்து, ஒரு விடுமுறை விண்ணப்பம் எழுதினார்.

      24 மணி நேரமும், கண் துஞ்சக் கூட நேரமின்றி, தான் ஆற்றிவரும் பணியில் இருந்து, சற்றே விடுபட, விடுமுறை விண்ணப்பம் எழுதினார்.

      விடுமுறை என்றால் எத்தனை நாளைக்கு?

      ஒரு நாளா, இரண்டு நாளா?

      இல்லை.

     ஒரு மாதத்திற்கா அல்லது இரண்டு மாதத்திற்கா?

     அதுவும் இல்லை.

      முழுதாய் ஒரு வருடத்திற்கு விடுமுறை.

      செய்தியறிந்த அனைவரும் திகைத்துத்தான் போனார்கள்.

     விடுமுறையா?

     இவர் ஆற்றிவரும் பணிக்கு ஏது விடுமுறை.

     ஞாயிறும் அலுவல் நாள்தானே.

     ஒரு நாளின் 24 மணி நேரமும், அலுவல் நேரம்தானே.

     இதுவரை இப்பதவியில் இருந்தோர், விடுமுறை எடுத்ததாக வரலாறே இல்லையே?

     மக்கள் அதிர்ந்துதான் போனார்கள்.

     ஆனால் இம்மனிதரோ, எடுத்த முடிவில் உறுதியாய் நின்று, விமானம் ஏறினார்.

    அமெரிக்காவில் இறங்கினார்.
   

உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின், கென்னடி அரசு நிர்வாகவியல் கல்லூரியில், ஒரு வருடப் படிப்பில் சேர்ந்தார்.

     செய்தியறிந்து அமெரிக்கா மட்டுமல்ல, உலகே மூக்கின் மேல் விரல் வைத்து வியந்துதான் போனது.

     உலகு முழுவதுமே வைத்த கண் வாங்காமல், தன்னையே பார்ப்பதையே அறியாமல், இம்மனிதரோ முழு நேரமும் அறிவுத் தேடலில் மூழ்கினார்.

    பாடப் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தார்.

    நூலகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் ஒளிந்திருக்கும் பொருளாதார, தொழில் நுட்ப நூல்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்து, ஒவ்வொரு வரியையும் விடாமல் படித்து, அனைத்தையுமே, தன் மூளையின் நினைவு அடுக்குகளில் சேமித்தார்.

     கல்லூரிப் பேராசிரியர்களை ஒவ்வொரு நாளும் சந்தித்து, கேள்விக் கணைகளால் துளைத்து எடுத்தார்.

    தன் சிந்தனைகளை, எண்ணங்களை அவர்களோடு மோத விட்டு, அயரா விவாதம் செய்தார்.

    விளைவு. பொருளாதார, வணிக நுணுக்கங்கள் வரிசை வரிசையாய் வலம் வந்து, இவர்தம் கரம் பற்றி நட்புப் பாராட்டத் தொடங்கின.

    நிலையான, தொடர்ச்சியான வெற்றியினைக் காண வேண்டுமாயின், பலங்களை, பலவீனங்களை, தன்னை எதிர்நோக்கியிருக்கும் அபாயங்களை, வாய்ப்புகளை சரியாக எடை போட வேண்டும்.

   மிகச் சரியான வியூகங்களை வகுக்க வேண்டும்.

   இது தனி மனிதன், சமுதாயம், வட்டம்,. மாவட்டம், மாநிலம், நாடு ஆகிய அனைத்திற்கும் பொருந்தும் என்பதை துல்லியமாய் உணர்ந்தார்.

   புது மனிதராய்

   புத்துணர்ச்சியுடன்

   பேரெழுச்சியுடன் நாடு திரும்பினார்.

   சுழியத்தில் இருந்து தொடங்கி, தன் நாட்டை, வளமான நாடாக்கினார்.

    சேறுகள் நிறைந்த இடங்களில், சிதறிய கனவுகளோடு, வறுமைத் தாண்டவமாடும் குடிசைகளில் வாடியவர்களை, பெருமையோடு உயர்ந்து நிற்கும், நெஞ்சம் நிமிர்த்தி வளர்ந்து நிற்கும், வானளாவியப் பலமாடிக் குடியிருப்புகளுக்கு அழைத்துச் சென்றார்.

    தரமான கல்வி, உயரிய சுகாதாரமான நல் வாழ்க்கைத் தரம், வலுவான பொருளாதாரம், ஊழலற்ற அரசுக் கட்டமைப்பு, ஒழுங்கு, தூய்மை என ஒரு முன் மாதிரி நாடாக, தன் நாட்டைத் தகவுறக் கட்டமைத்தார்.

     நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

     தன் பணியில் இருந்து, சாதாரணப் பணியில் இருந்து அல்ல, வெகு உயர்வானப் பதவில் இருந்து, உயர்வானப் பதவி என்றால், அதுதான் அந்நாட்டின், உச்சப் பதவி, ஆம் தன் பிரதமர் பதவியில் இருந்து, விடுமுறை எடுத்துக் கொண்டு, ஒரு வருட விடுமுறை எடுத்துக் கொண்டு, வேறொரு நாட்டிற்குச் சென்று, அங்கொரு கலாசாலையில் மாணவராய்ச் சேர்ந்து, பாடம் படித்து, தன் நாட்டின் வறுமை நிலையினை, தலைகீழாய்ப் புரட்டிப் போட்ட, இம் மனிதர், இம் மாமனிதர் யார் தெரியுமா?

சிங்கப்பூரின் சிற்பி

    மன உறுதி, தொலை நோக்குப் பார்வை, திட்டமிடும் திறன், திட்டமிட்டதை பாங்குற செயலாற்றும் நேர்த்தி, ஆளுமைப் பண்பு, ராச தந்திரம் ஆகியவற்றால் சிங்கப்பூரை உலகில் தலை சிறந்த நல்லரசாய், நல் வளமிக்க நாடாய் உயர்த்திய மனிதர், மாமனிதர்

    மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு தலைவரிடம், முழுமையான அதிகாரங்கள் கிடைத்தால், ஒரு நாடு, எந்த அளவிற்கு முன்னேற முடியும் என்பதற்கு, ஒரு உதாரணம்


சிங்கப்பூரின் சிற்பி
லீ குவான் யூ

நமக்கும்,
இவர் போல் ஒரு சிற்பி
கிடைக்க மாட்டாரா,
நம் பாரதத்தைச் செதுக்கிச்
சீரிய சிற்பமாக்க மாட்டாரா
என்னும் ஏக்கத்தோடு

லீ குவான் யூ
அவர்களைப்
போற்றுவோம் வாழ்த்துவோம்.