31 மார்ச் 2018

பஞ்சும் பசியும்





     ஒரு சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, பலகையை, அதன் கைப் பிடிகளில் வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டே இருப்பார்.

     எழுதுவதற்கானக் குறிப்புகளைத் தயாரித்துவிட்டார் எனில், அனைத்துக் குறிப்புகளையும் ஒருமுறை படித்து, உள் வாங்கிக் கொண்டு எழுதத் தொடங்கி விடுவார்.

      எழுத, எழுத பக்கத்திற்குப் பக்கம், எண்கள் கொடுத்து எழுதுவார்.

      எழுதி முடிக்க முடிக்க காகிதங்கள் கீழே விழுந்து கொண்டே இருக்கும்.

       பதிப்பகத்தார் வந்து, அறை முழுவதும், பரவிக் கிடக்கும், தாட்களை எடுத்து,  வரிசைப் படுத்தி, அச்சிட எடுத்துக் கொண்டு போய்விட வேண்டியதுதான்.

       எழுதியதை மீண்டும் சரிபார்க்கும் பழக்கமோ, அடித்து அடித்துத் திருத்தம் செய்யும் வழக்கமோ இவரிடம் கிடையவே கிடையாது.

       அப்பேர்ப்பட்ட எழுத்தாளர்.

       கடந்த மூன்று நாட்களாய் பேனாவைத் தொட்டுக்கூடப் பார்க்காமல், சாய்ந்த வண்ணம் அமர்ந்தே இருக்கிறார்.


       வீட்டில் யாரிடமும் எதுவும் பேசாமல், மூன்று நாட்களாய் அமைதியாய் அமர்ந்தே இருக்கிறார்.

        கண்களில் இருந்து நீர், அவ்வப்போது எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கிறது.

         மனம் முழுவதும் சோகம் நிரம்பி வழிகிறது.

        இந்நிலையில் இருந்து மீண்டு வர, எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்.

        ஆனாலும் மனதில் சோகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

        காரணம் ஒரு மரணம்.

        துர் மரணம்.

        கைலாச முதலியாரின் மறைவு.

---

       முருகா, என் அப்பனே, எனக்கு ஏனப்பா இந்தச் சோதனை? என்னை ஏன் இப்படி சந்தி சிரிக்க வைக்கிறாய்? உனக்கு நான் என்ன குறையப்பா வைத்தேன்?

       கோயில் சொத்தைத் திருடித் தின்றவர்களெல்லாம் நல்ல முறையில் வாழும் போது, தெய்வத் திருப்பணியில் ஒரு குறையும் வைக்காத எனக்கா இந்த நிலைமை? எனக்கா இந்த அவமானம்?

       பதில் சொல் …

       சொல்ல மாட்டாயா?

       சிரித்துக் கொண்டா நிற்கிறாய்?

       நான் படும் அல்லல்களைக் கண்டு, உனக்குச் சிரிப்பா வருகிறது?

      என் மீது உன் சித்தம் இறங்கவில்லை?

      கள்ள மார்க்கெட்காரனுக்குத்தானா உன் கருணா கடாட்சம்?

      அடே, கல் நெஞ்சக்காரா, என் வீடு வாசல், நிலம் புலம் எல்லாவற்றையும் சூறையாடி வாரியிறைக்க வைத்ததும் காணாதென்று, என் குழந்தையையுமா பலி கேட்டுச் சிரிக்கிறாய்?

       பெற்றெடுத்த பிள்ளைக்கு ஒரு வேளை மருந்து வாங்கிக் கொடுக்கக் கூட விதியற்றுச் செய்து விட்டாயே.

        நீ தெய்வம்தானா?

        நீயா தெய்வம்? இல்லை

        நீ ஈரநெஞ்சமற்ற வெறுஞ் சித்திரம்தானா?

        பணக்காரர்கள் எங்களை ஏமாற்றிக் கொள்ளையடிப்பதற்காக, பிடித்து வைத்த பொம்மைதானா?

       நீ உண்மையிலேயே தெய்வமானால், நல்லவனை ஏன் துன்புறுத்துகிறாய்?

       ஏமாற்றுகிறவனை ஏன் வாழ வைக்கிறாய்?

       சீ, நீ ஏழைகளுக்குத் தெய்வமல்ல.

       பணக்காரனுக்குத் தெய்வம். பணக்காரனுக்குப் பங்காளி.

       இனி உன்னை நம்பி என்ன பலன்?

       நீ என்னை, இனியா, கௌரவம் கொடுத்து வாழ வைக்கப் போகிறாய்?

       கடன்காரர்கள் முன்னால் நானும், என் மனைவி மக்களும், கதி கலங்கி நிற்பதைத் தடுத்து ஆட்கொள்ளப் போகிறாயா?

       இல்லை, இல்லை . …………

---

       டாக்டரையா, என் பிள்ளையைப் பார்த்து ஒரு நல்ல வார்த்தை சொல்லுங்கையா என்று குழறினாள் தங்கம்.

         பிறகு மணியிடம் திரும்பி, மணி, அப்பாவைக் கூப்பிடு என வேண்டிக் கொண்டாள்.

         மணி எழுந்து அவசர அவசரமாக மாடிப்படி ஏறினான்.

         டாக்டர் மௌனமாகச் சென்று ஆறுமுகத்தின் கையைப் பிடித்துப் பார்த்தார். மூக்கின் முன்னால் விரலை வைத்துப் பார்த்தார்.

         ஆறுமுகத்தின் கை கொளக் கென்று விழுந்தது.

         தங்கத்திற்கு விசயம் புரிந்து விட்டது.

        போயிட்டியாடா மகனே என்று அலற்றினாள்.

        திடீரென்று தங்கம்மாளின் பிரலாப ஓலத்தையும் மிஞ்சிக் கொண்டு, அப்பா என்ற கோடையிடி அலறல் மாடிப்புறத்தில் இருந்து அதிர்ந்து ஒலித்தது.

        தொடர்ந்து இடி விழுவதுபோல் திடுமென்ற பேரோசையும் கேட்டது.

       வெளியே நின்று கொண்டிருந்த டாக்டரும், இருளப்பக் கோணாரும் விழுந்தடித்துக் கொண்டு மாடிக்கு ஓடினார்கள்.

         மாடியில், பூசை அறையை ஒட்டியிருந்த வெளி வராந்தாவில், மணி அலங்கோலமாக விழுந்து கால் பரப்பிக் கிடந்தான்.

        மண்டையிலிருந்து குங்குமச் சேறு போன்ற ரத்தம் கொழகொழுத்துப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

        டாக்டர் சிறிது கூடத் தாமதிக்கவில்லை.

        இருளப்பாக் கோணார் போட்டிருந்த மேல் துண்டை இழுத்துப் பிடுங்கி, மணியின் தலையில் மடித்து வைத்துக் கட்டினார்.

         முதலாளி, முதலாளி

         இருளப்பாக் கோணார், சத்தம் போட்டு அழைத்தவாறு, பூசை அறைக் கதவை இடி இடியென்று இடித்தார்.

         பதில் இல்லை.

        கதவு உட்புறம் தாளிடப்பட்டு இருந்தது.

        பிறகு இன்னது  செய்வதென்று தெரியாமல், மொட்டை மாடிக்கு ஓடி, பூசையறை  வெளிச் சுவருக்கு மேலாக இருந்த, உயரமான சன்னலின் மீது தொத்தி நின்று, பூசை அறைக்குள்ளே பார்வையைச் செலுத்தினார்.

         பூசையறைக்குள்ளே, கிழக்கே பார்த்திருக்கும் பூசை மாடத்திற்கு எதிரே, முகட்டின் உத்திரக் கட்டையில் இருந்து, ஒரு முழக் கயிற்றில், கைலாச முதலியாரின் உயிரற்ற சடலம் ஊசலாடிக் கொண்டிருந்தது.

---

       நண்பர்களே, இந்த கைலாச முதலியார், யார் தெரியுமா?

       மூன்று நாட்கள் மீள முடியாமல், துக்கத்தின் பிடியில் சிக்குண்டு தவித்தார் அல்லவா, ஒரு எழுத்தாளர், அந்த எழுத்தாளர் எழுதிய, நாவலின், முக்கியமான பாத்திரம்தான் இந்தக் கைலாச முதலியார்.

        தான் எழுதிய கதையில், ஒரு முக்கியமான மனிதர், தற்கொலைச் செய்து கொண்டபோதுதான், இந்த எழுத்தாளர், அம் மனிதரின் இழப்பினின்று மீண்டு வர வழி அறியாமல் தவித்தார்,

நான் நினைத்திருந்தாலும் கூட அவரைச் சாவினின்றும் காப்பாற்றி இருக்க முடியாது. எத்தனையோ கைலாச முதலியார்கள், தற்கொலையைச் சரண் புகுந்த காலச் சூழல் அது.

அதை நான் ஒருவனாக எப்படித் தடுத்தி நிறுத்த முடியும்?

அன்று அவர் சாக நேர்ந்ததுதான் யார்த்த விதி என்றாலும், அந்த  சாவு என் உள்ளத்தைத் தொட்டது, சுட்டது.

பஞ்சும் பசியும்

1951 ஆம் ஆண்டு  வெளியான நாவல்.

      அக்கால கட்டத்தில், இந்திய அரசாங்கம் பின் பற்றிய, ஜவுளிக் கொள்கை, நாசகரமான விளைவுகளை நாடு முழுவதிலும் ஏற்படுத்தியது.

       கைத்தறி, மில் துணிகளின் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப் பட்டது.

       நூல் விலை கடுமையாக உயர்ந்தது.

       இந்திய நாட்டின் கைத்தறித் துணியில் கிட்டத் தட்ட, பேர்பாதி அளவு, அக்கறைச் சீமைகளுக்கு ஏற்றுமதியாகி வந்தது.

       ஆனால் அரசு விதித்த தடையால்,  வெளிநாட்டு ஏற்றுமதிக்கு அட்டமத்துச சனி  பிடித்தது.

       கொஞ்சம் நஞ்சம் ஏற்றுமதியாகும் துணிக்கும், சிறப்பு வரி விதிக்கப் பட்டது.

        உள் நாட்டிலோ, நாளுக்கு நாள் மக்களுடைய வரும்படி சுருங்கியது.

        ஆனால் பொருள்களின் விலைவாசிகள் மட்டும், கொம்பேறி மூக்கனைப் போல், உச்சிக் கொம்பை விட்டு இறங்கவே யில்லை ………

      அன்றைய அரசாங்கத்தின் ஜவுளிக் கொள்கை, கைத்தறி நெசவுத் தொழிலை, எந்த அளவிற்குச் சீரழித்தது. அதிலிருந்து விடுபட அந்த மக்கள் நடத்தியப் போராட்டங்கள், தனி மனிதர்களின் வாழ்க்கையில், இந்த அவலச் சூழலில் ஏற்பட்ட சூறாவளிகள் ஆகியவற்றை  விவரிக்கும் நாவல் இது.

       படித்துத்தான் பாருங்களேன்.


பஞ்சும் பசியும்

கைலாச முதலியாருக்காக,
தன் கதாபாத்திரத்திற்காக
மூன்று நாள் துக்கம்
கடைபிடித்த அந்த எழுத்தாளர்,


தொ.மு.சி.ரகுநாதன்