31 மே 2018

மறக்கப்பட்ட புரட்சி





     இந்திய மக்களுக்குச் சுதந்திரம் அளித்தால், அதிகாரம் நாணயமற்றவர்கள், கொள்ளைக்காரர்கள் மற்றும் போக்கிரிகள் கைகளுக்குச் சென்றுவிடும்.

     ஜாதி, மதம், பதவி ஆகிய காரணங்களுக்காகவும் மற்றும் எந்த காரணமும் இல்லாமலும் கூட, தங்களுக்குள் அடித்து மோதிக் கொள்வார்கள்.

     இந்திய நாடே மலிவான அரசியல் சண்டை, சச்சரவுகளால் காணாமல் போகும் நிலை வரும்.


      லஞ்சம் தலைவிரித்தாடும்.

      தண்ணீரையும், காற்றையும் கூட விலை பேசி, விற்றுக் காசு சம்பாதிப்பார்கள்.

                                                         ----  வின்ஸ்டன் சர்ச்சில்.

----
     


     இந்தியா கொந்தளிக்கத் தொடங்கி இருந்தது.

     காரணம்

     இரண்டாம் உலகப் போர்

     இரண்டாம் உலகப் போரில், ஆங்கிலேயர்கள், இந்தியாவையும் ஈடுபடுத்தினர்

       இந்தியப் படை வீரர்களை, ஏடன், சிங்கப்பூர் என அனுப்பி போரில் பங்கேற்கச் செய்தனர்.

       இந்தியர்களின் மன உணர்விற்கு எதிராக, இந்தியாவை போரில் இணைத்ததை விரும்பாமல் இந்தியர்கள் கொந்தளிக்கத் தொடங்கினர்.

----

        1940 ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியைக் காண வந்த, பிரிட்டனின், நியூஸ் ஸ்டாண்டு என்னும் பத்திரிக்கையின் நிருபர், காந்தியைப் பார்த்துக் கேட்கிறார்.

ஆங்கிலேயர்களை எதிர்க்க ஏதேனும் ரகசியத் திட்டம் வைத்திருக்கிறீர்களா?

      காந்தி கூறினார்

என்னுடைய பொது வாழ்வில், நான் ஒரு திறந்த புத்தகம்.

என்னிடம் ரகசியம் ஏதும் கிடையாது

ரகசியமானப் போராட்டத் திட்டங்கள் எதிலும் ஈடுபடவில்லை

என்னுடையப் போராட்டம் வெளிப்படையானது

அதனை நான் அறிவிப்பேன்

மக்களை நான் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

     காந்தி மக்களைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார்.

     போராட்டக் களம் காண, காந்தி மக்களைத் தயார் படுத்திக் கொண்டிருந்தார்.

     மாதங்கள் கடந்தன.

     1942 இல் கிரிப்ஸ் என்னும் ஆங்கிலேயர், ஒரு புதிய திட்டத்தோடு இந்தியாவிற்கு வருகிறார்.

     தன் திட்டங்களை அறிவிக்கவும் செய்தார்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இந்தியாவின் மாநிலங்கள் அனைத்திற்கும் தேர்தல் நடத்தப்படும்.

• தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில், பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்களைக் கொண்டு, அரசியல் நிர்ணய சபை அமைக்கப்படும்

• 1935 இல் இயற்றப்பட்ட அரசியல் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய மாட்டோம்.

      என அறிவித்தவர், இறுதியாய் ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார்.

இந்தியாவில் இருந்து எந்த மாநிலமாவது, பிரிந்து போக விரும்பினால், அதை நாங்கள் அனுமதிப்போம்.

அவர்கள் தனிப்பட்ட முறையில், தனி நாடு அமைக்க, அனைத்து உதவிகளையும் செய்வோம்.

பிரிந்து போகும் நாட்டை, டொமினியன் அந்தஸ்த்து உள்ள நாடாக அங்கீகரிப்போம்.

       இந்திய மக்கள் குமுறத் தொடங்கினார்.

       இந்தியத் தலைவர்கள், இத்திட்டத்தைப் புறக்கணித்தனர்.

       விளைவு.

       Quit India Movement

        வெள்ளையனே வெளியேறு இயக்கம்.

        1942 ஆம் ஆண்டு, ஆகஸ்டு திங்கள், 8 ஆம் நாள், வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப் பட்டது.

         இந்தியா கிளர்ந்து எழுந்தது

         தமிழ் நாட்டில் களம் சூடு பிடித்தது

         அனல் பறந்தது

         கோயமுத்தூரில், சூலூர் விமான நிலையம், கோவையின் பஞ்சாலைத் தொழிலாளர்களால், முற்றிலுமாய் தீ வைத்துக் கொளுத்தப் பட்டது.

         சீர்காழியில் உப்பனாற்றுப் பாலம் தகர்க்கப் பட்டது.

         வேதாரண்யத்தில் உப்பளம் கைப் பற்றப்பட்டது

        இராமநாதபுரம், குலசேகரப் பட்டினம், ராச பாளையம் உள்ளிட்ட இடங்களில் புரட்சி பெரு வடிவெடுத்தது.

        பலத் தமிழர்கள் தங்கள், இன்னுயிரை இழந்தனர்

        வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில், தமிழகத்தின் பங்களிப்பு மகத்தானதாகும்.

        ஆனாலும், வரலற்றின் பக்கங்களில் இருந்து, தமிழகத்தின் பங்களிப்பு மறைக்கப்பட்டு விட்டதுதான் வேதனை

        ம.பொ.சி அவர்கள் விடுதலைப் போரில் தமிழகம் என்னும் நூலை எழுதாமல், இருந்திருப்பாரேயானால், விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்கு முற்றிலுமாய், மறைக்கப் பட்டு, மறக்கடிக்கப் பட்டிருக்கும்.

          தமிழகத்தின் பங்கினை மட்மல்ல, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின், பவள விழாவினைக் கூட, கொண்டாட மறந்த தேசம்தான் நம் தேசம்.

            உண்மை, உண்மை

           வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடிட, வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக உயிர் கொடுத்த, இந்திய வீர்ர்களைப் போற்றிட, நம் நாடு மறந்து போய்விட்டதுதான் வேதனையிலும் வேதனை.

          வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் பவள விழா, நம் நாட்டில் எங்கேயும் கொண்டாடப்படவே இல்லை.

---

       நண்பர்களே, ஆகஸ்டுப் புரட்சியினை. வெள்ளையனே வெளியேறு இயக்கம் என்று மக்களால் அறியப்பட்ட, ஆகஸ்டு புரட்சியினை, புரட்சியின் தாக்கத்தை, சுமார் ஒரு மணிநேரம், கடும் இடி, மின்னலோடு பொழிந்த, அடை மழையினைப் போல, கொட்டித் தீர்த்துவிட்டார் இவர்.

       ஆகஸ்டு புரட்,சி என்னும் தலைப்பில் உரையாற்ற வேண்டுமே என்பதற்காக, வரலாற்றுப் புத்தகங்களைப் புரட்டி, குறிப்புகள் பலவற்றைத் தயாரித்து, ஆற்றப்பட்ட உரை, அல்லவே அல்ல, இவரது உரை.

       பல்லாண்டுகளாகப் படித்துப் படித்து, ஒவ்வொரு முறையும், நெஞ்சம் துடித்துத் துடித்து, ஆழ் மனதில், உள்ளத்தில் உறங்கிக் கொண்டிருந்த, உதிரத்தோடு உதிரமாய் ஊறி, ஒன்றெனக் கலந்துவிட்ட, வரலாற்று நிகழ்வுகளை, உணர்ச்சிப் பெருக்கோடு இறங்கி வைத்திருக்கிறார்.

        இவரது உரை நிறைவுற்றபோது, சுதந்திரப் போராட்டக் காலத்திற்கே சென்று வந்த ஓர் உணர்வு.

         இதில் வியப்பிற்குரிய செய்தி என்ன என்றால், இவர் வரலாற்றுத் துறை பேராசிரியர் அல்ல.

         வணிகவியல் துறைப் பேராசிரியர்.


திரு கோ.விஜயராமலிங்கம்.
மேனாள் வணிகவியல் துறைத் தலைவர்.
பூண்டி புட்பம் கல்லூரி, தஞ்சாவூர்

பவள விழா கண்ட ஆகஸ்டு புரட்சி
என்னும் தலைப்பில்
ஏடகம் ஞாயிறு முற்றத்தில்,
இவர்தம் பொழிவின் வல்லமையைக் கண்டு
மெய்மறந்துதான் போனேன்.

நன்றி ஐயா.
---

ஏடகம்
ஞாயிறு முற்றம் சொற்பொழிவு


கடந்த 13.5.2018 ஞாயிறு மாலை நடைபெற்ற,
ஏடக விழாவிற்கு, வந்திருந்தோரை,
ஏடகத்தின் நிறுவனர்
திரு மணி.மாறன் அவர்கள்
வரவேற்றார்.


தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி,
தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்
முனைவர் பு.இந்திரா காந்தி அவர்கள்
விழாவிற்குத் தலைமையேற்று, தலைமையுரையாற்றினார்.


ஏடகப் பொருளாளர்
திருமதி கோ.விஜயலட்சுமி அவர்கள்
நன்றி கூற
விழா இனிது நிறைவுற்றது.


மீண்டும் ஓர் ஏடக விழாவில்,
தன் தங்கு தடையற்றப் பேச்சால்,
பேச்சு வன்மையால், குரல் வளத்தால், கருத்துச் செறிவால்,
விழாத் தொகுப்புரையை.
குளிர் நிலவாய், இதமாய் வீசும் இளம் தென்றலாய்
வழங்கிச் சிறப்பித்தார்
செல்வி இராச.பாரதி நிலா

வாழ்த்துகள் நிலா.