21 ஜூலை 2019

ஜோதி





நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதமெலாம் பிள்ளைவிளையாட்டே
மேல்வருணம் தோல்வருணம் கண்டறிவார் இல்லைநீ
வழித்துப்பார் என்றெனக்கு விளம்பியசற் குருவே.

     முட்டை

     கோழி முட்டை

     கோழி, முட்டையிட்டு, 21 நாள் அடைகாக்க, குஞ்சு வெளிவருகிறது

     குஞ்சு வெளிவருவதற்கும் முன், நன்கு வளர்வதற்கு முன் உள்ள நிலையைப் பார்த்தால், குழ, குழ என்று இருக்கும்

     பின் மெல்ல வளரும், உரு பெறும்


     முட்டையினுள் இருக்கும் கோழிக் குஞ்சுவிற்குத் தேவையான உணவு, பாதுகாப்பு அனைத்தும், முட்டைக்குள்ளேயே கிடைக்கிறது.

     ஆயினும் குஞ்சானது, முட்டையின் ஓட்டினை உடைத்து வெளி வருகிறது.

     சமயம்

     சமயமும் முட்டை போலத்தான்

     சமயத்தில் இருந்து, ஒவ்வொருவரும், தங்கள் வாழ்வியலை செழுமைப் படுத்திக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாய் முன்னேறி, சமயத்திலிருந்து வெளியே வரவேண்டும்.

     சமயத் துறப்பு செய்ய வேண்டும்

     சமயத் துறப்பு செய்பவர்தான் உண்மை ஆன்மிகவாதி

     இல்லையேல், சமயப் பெயரியாராக வேண்டுமானால் இருக்கலாம்.

     இவ்வாறு சமயத் துறப்பு செய்து வந்தவர்தான் வள்ளலார்


இராமலிங்க அடிகளார்

     சைவ சித்தாந்தம்தான் வள்ளலாருக்கு, எல்லாவற்றையும் கொடுத்தது

     ஆனால் சைவசித்தாந்தம் என்ற ஓட்டினை உடைத்துக் கொண்டு வள்ளலார் வெளியே வந்தார்

     சாதியைச் சொல்லிக் கூப்பிட்டால் குறிப்பிட்ட அளவு மக்கள் வருவர்

     மதத்தைச் சொல்லிக் கூப்பிட்டால் குறிப்பிட்ட அளவு மக்கள் வருவர்

     மனிதர் என்று கூப்பிட்டால்தான் அனைவரும் வருவர் என்று மனிதர்களை அழைத்தவர் வள்ளலார்.

     பரந்து பட்ட அன்பினையை பரபிரம்மம் என்றார்

     அன்பு

     அன்போடு சிறிது காமம் கலந்தால் காதல்

     அன்போடு சிறிது பற்றுதல் கலந்தால் பாசம்

     அன்போடு சிறிது பணிவு கலந்தால் பக்தி

     அன்போடு சிறிது பரிவை கலந்தால் தயை

     தயவு

     உயிர்க் கொலை செய்தலும், புலால் உண்ணுதலும் கூடாது. சாதி, மதம், கலம் என்ற வேற்றுமைகளைப் பார்க்கக் கூடாது. மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழப் பழக வேண்டும், மேலும், எல்லா உயிரையும் பரிவோடு பார்க்க வேண்டும் என்றார்.

    

     இந்தப் பரிவுதான் நம்மை இறை நிலைக்கு உயர்த்தும் என்றார்.

     ஐயப்பனை இன்று இந்துக் கடவுளாய் பார்க்கிறோம்

     ஐயப்பன் இந்துக் கடவுள் அல்ல

     அவர் புரட்சி செய்து, அதனின்றும் வெளியே வந்தவர்

     வழிபாட்டு அமைப்பையே மாற்றியவர்

     வள்ளலாரும் அப்படித்தான்

     புதிய வழிபாட்டு முறையைத் தோற்றுவித்தார்

     ஜோதி வழிபாடு

     கோயில்களில், தீப ஆராதனை, அதாவது ஜோதி, இன்னொரு தெய்வத்தை நமக்கு விளங்க வைக்கிறது

     பின்னால் ஒரு தெய்வம் இருக்கிறது என்பதை விளங்க வைக்கிறது

     விளக்குகிறது

     விளங்க வைப்பது தெய்வமா?

     விளக்கப்படுவது தெய்வமா?

     விளக்கப் படுத்துகிற செயலை விளக்க செய்வதால், விளக்குதான் தெய்வம், ஜோதிதான் தெய்வம்.

     ஆனால் நாம் விளக்கை வணங்காமல், விளக்கின் பின் இருக்கும் உருவத்தை வணங்குகிறோம்.

     ஜோதியை அல்லவா வணங்க வேண்டும்.

---

கடந்த 14.7.2019 ஞாயிற்றுக் கிழமை மாலை.
ஏடகம்
அமைப்பின்
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவில்
வள்ளலாரின் வாழ்வியல் சிந்தனை
என்னும் தலைப்பில்,

வான் மேகங்களில் இருந்து இறங்கிய
மழையின் பொழிவினையும் தாண்டி
திருவிடைமருதூர், துணை வட்டாட்சியர்


திரு எஸ்.சமத்துவராஜன் சம்பத் அவர்களின்
பொழிவு
உள்ளத்தை முழுமையாய் நனைத்தது.

தஞ்சாவூர், இனி சுவையக உரிமையாளர்


திரு சி.பாலசுப்பிரமணியன் அவர்களின்
தலைமையில் பொழிவு நடைபெற்றது.

ஏடகம் அமைப்பின்
சுவடியியல் மாணவர்

திரு செ.ராஜ்குமார் அவர்கள்
நன்றி கூற விழா இனிது நிறைவுற்றது


முன்னதாக, இப்பொழிவிற்கு வந்திருந்தோரை
சுவடியியல் மாணவி.
திருமதி கி.லதா அவர்கள்
வரவேற்றார்.

சுவடியியல் மாணவி

செல்வி வ.இரா.முல்லை அவர்கள்
விழா நிகழ்வுகளைத் திறம்படத்
தொகுத்து வழங்கினார்.

திங்கள் தோறும்
புதுப் புதுப் பொழிவுகளை
அரங்கேற்றி
கேட்போர் உள்ளத்திற்கு
ஒளிபாய்ச்சிக் கொண்டிருக்கும்
ஏடகம் நிறுவுநர்


திரு மணி.மாறன் அவர்களின்
பணி போற்றுதலுக்கு உரியது,

போற்றுவோம் வாழ்த்துவோம்