01 டிசம்பர் 2019

13 ஆம் உலகம்




     ஏய், என்ன பண்ணப் போறே? என்று அவள் கையைப் பிடித்து இழுத்தான் மதி.

     இங்கேயிருந்து குதிக்கப் போகிறேன் என்றாள் அவள் தீர்மானக் குரலில்.

     ஒரு நொடி திகைத்துப் போனான் மதி

     உனக்கென்ன வெறி புடிச்சுருக்கா? இப்போ நாம எவ்ளோ உயரத்துல இருக்கோம் தெரியுமா? என்று கேட்டதும்

     பத்தாயிரம் அடி உயரத்தில் என்று மிரட்சியோடு பதிலளித்தாள் பக்கத்தில் இருந்த பணிப்பெண்.


     கேட்டியா? குதிச்சா ஒரு எலும்பு கூடத் தேறாது

     பரவாயில்லை, என் மூளை மட்டும் அவங்களுக்கு முழுசாக் கெடைச்சா போதும்.

     மகிழினி அவன் கையை உதறிவிட்டுப் பறக்கும் தட்டின் உடைந்த சன்னல் வழியாக வெளியே பாய்ந்தாள்.

     கதையின் துவக்கத்திலேயே, நம்மை மிரள வைத்து, நூலுக்குள் நம்மை முழுமையாக இழுத்துவிடுகிறார் இவர்.

     முதல் கேள்வியே தப்பு? ஏலியன்ஸ் இருக்காங்களான்னு கேக்கக் கூடாது. எங்கே இருக்காங்கன்னு கேளு

     ஏலியன்ஸ்

     வேற்றுக் கிரகவாசிகள்

     பறக்கும் தட்டு

     எவரையும் எளிதில் ஈர்க்கும் தன்மை வாய்ந்த கதைக் களத்தைத் தேர்வு செய்ததற்காகவே, இவரைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.

     நீ மியூசியத்துல டைனோசர் எலும்புக் கூடு பாத்திருக்கியா?

     ம் … பார்த்திருக்கேன் என்றாள் மகிழினி

     மத்த எலும்புக்கூடுகளுக்கும், டைனோசர்ஸ் எலும்புக் கூட்டுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கு தெரியுமா?

     மத்த எலும்புகளை சாதாரணமாகத்தான் மெயின்டெயின் பண்ணுவாங்க.

     ஆனா, டைனோசரசோட எலும்புக் கூடுகளுக்கு மட்டும, ரேடியேஷனைக் கண்ட்ரோல் பண்றதுக்கான ஸ்பெஷல் பெயிண்ட் அடிப்பாங்க மியூசியத்துல தெரியுமா?

     என்னது?

     எஸ். மனித இனம் பொறக்கறதுக்குக் கோடிக்கணக்கான வருஷங்களுக்கு முன்னாடி வாழ்ந்த டைனோசர்ஸ் உடம்புல, அணுக்கதிர்வீச்சு எங்கிருந்து வந்தது?

     அதுவும் இவ்வளவு காலத்துககு அப்புறமும் நீடிச்சிருக்கிற அளவுக்கு

     சோ, மனித இனம் இங்க பாதுகாப்பா வாழறதுக்காக, பல காலத்துக்கு முன்னாடியே, யாரோ அணுகுண்டு வீசி அதுங்களை அழிச்சிருக்காங்கங்கிறது தெரியலை?

     வியப்பாக இருக்கிறது அல்லவா.

     டைனோசர் எலும்புக் கூடுகளில் இருந்து கதிர் வீச்சு வெளிப்படுகிறதா?

     உண்மையா, கற்பனையா என்று தெரியவில்லை.

     ஆயினும், வேற்றுலகத்தினர் அணுகுண்டுகளை வீசி டைனோசர்களை அழித்து, மனிதர்கள் வாழ வழிவகுத்தனர் என்று கூறி, நமது நாடித் துடிப்பை அதிகமாக்கிக் கொண்டே செல்கிறார் இவர்.

     உங்கள் உலகில் மட்டுமல்ல, எல்லையில்லா இந்த அண்டப் பெருவெளியின் எண்ணற்ற கோள்களில், முதன் முதலாகத் தோன்றிய இயற்கை மொழியானது தமிழ்தான்.

     இக்கதையின் எழுத்தாளர், தன் தாய் மொழிப் பற்றை, தமிழ் மொழிப் பற்றை எப்படி வெளிப்படுத்துகிறார் பாருங்கள்.

     வேற்று உலகிலும் தமிழ்

     ஆனால் பெயர் மாறுபடும், எங்கள் உலகத்தில் இதன் பெயர் அமிழ்த மொழி.

     நாங்கள் இங்கு பேசுவது, உங்கள் மொழியின் செவ்வியல் வடிவம்.

     நீங்கள் போசுவதோ, கொச்சையான வேற்று மொழிகள் பல கலந்த மொழி.

     தமிழில நாம் பிற மொழிச் சொற்களைக் கலந்து கொச்சைப் படுத்திவிட்டோம், கலங்கப்படுத்தி விட்டோம் என்பதை வேதனையோடு வெளிப்படுத்துகிறார்.

     இது உங்கள் உலகத்தின் இணை உலகம். அதாவது உங்களுக்குப் புரியும்படி சொன்னால் பேரலல் வேர்ல்டு.

     பேரலல் வேர்ல்டுன்னா, ஒரு உலகம் மாதிரியே அச்சு அசலா, இன்னொரு உலகம் இருக்கும். இங்கே இருக்கிற அத்தனை பேரும் அங்கேயும் இருப்பாங்க. இங்கே நடக்கிற எல்லாமே அங்கேயும் நடக்கும்னு சொல்வாங்களே அப்படியா.

     ஆம். குறிப்பாக காலத்தைப் பொறுத்தவரை, எங்களுக்கும் உங்களுக்கும் இடையே ஐம்பது ஆண்டுகள் வேறுபாடு. அதனால்தான் உங்களைப் போன்ற இணையுலக மனிதர்களை நாங்கள் கடத்துகிறோம்.

     கடத்துவது எதற்குத் தெரியுமா?

     உங்கள் நினைவுகளுக்காக

     நினைவுகளுக்காக வேற்றுலகவாசிகள், நம் பூமியின் மனிதர்களைக் கடத்துகிறார்கள்.

     நினைவுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள் என நீங்கள் நினைப்பது புரிகிறது.

     நூலின் அடுத்தடுத்த பக்கங்களில் இதற்கான விடையை வழங்கி, நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறார் இவர்.

     நம் நினைவுகளை வைத்துக் கொண்டு, வேற்றுலகவாசிகள் என்னத்தான் செய்கிறார்கள் என்பதை அறிய விருப்பமா?

     உடனே இவரது நூலைத் தரவிறக்கம் செய்து படியுங்கள்.

     எளிய நடை

     மகிழினி, மதி, அறிவழகன், ழகரன், இன்முனை, கமழ்நன் என நூலெங்கும், தூய தமிழ்ப் பெயர்கள் விரவிக் கிடக்கின்றன.

     இவர் ஒரு தீவிர தமிழ்ப் பற்றாளர்.

     இவரது தாய் மொழிப் பற்றும், தமிழினக் கனவுகளும், நூலின் துவக்கம் முதல், நிறைவு வரை இழையோடுகின்றன.


13 ஆம் உலகில் ஒரு காதல்
(கிண்டில்  இணைய நூல்)

     இவரது தந்தை திரு ந.இளங்கோவன்

     தாய் திருமதி இ.புவனேசுவரி

     இவர் தன் தந்தை, தாய் இருவர் பெயரின் முன் எழுத்தையும், தன் தலைப்பு எழுத்தாக வைத்துக கொண்டவர்.

இவர்தான்
அகச் சிவப்புத் தமிழ்
என்னும்
வலைப் பூவை
கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருபவர்


திரு இ.பு.ஞானப் பிரகாசன்.