14 ஏப்ரல் 2020

அறம்




     அறம்

     அறம் என்னும் சொல் கிரேக்க மொழிச் சொல்லில் இருந்து பிறந்ததாகச் சொல்லுவார்கள்.

     அறம் என்றால் என்ன?


     ஒழுக்கம், நடத்தை, பழக்க வழக்கம், ஒரு மரபைப் பின்பற்றுதல் இவையே அறமாகும்.

     உலகு முழுவதும் அறம் பேசப்படுகிறது.

     கிரேக்க அறம்

     கிறித்துவ அறம்

     ப்ரோடஸ்டண்ட் அறம்

     ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட தொழிற் புரட்சியின் காரணமாக, பிரெடெரிக், நீட்சே போன்றோர் கூறிய அறம்.

     மனிதன் இயற்கையை ஆட்கொண்டிருக்கிறான், இயற்கை மனிதனை ஆட்கொண்டிருக்கிறது என்று சொல்லக் கூடிய, உற்பத்தியும், மறு உற்பத்தியும் சார்ந்த, காரல் மார்க்ஸ் கூறிய அறம்.

     கன்ஃப்யூசியஸ் கூறிய இனக்குழு அறம்

     சீனா போன்ற நாடுகளிலே பரவியிருக்கக் கூடிய பௌத்த அறம், சமண அறம்.

     இந்த அறங்கள் யாவுமே மனிதனுடைய ஒழுங்கு முறையைப் பேசுகின்றன.

     இந்த அறங்களால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

     இந்த அறங்கள்தான் நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கின்றன.

     மனிதர்களை, குழுக்களை, அவர்களுக்கு இடையே உள்ள சமூக உறவை இணைப்பதற்கான, நெறிமுறைகள், நியதிகள், அறங்கள், பண்பாடுகள் சொல்லப்படுகின்றன.

     இந்த அறம் எதோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதை தொல்காப்பியர் அழகாகக் கூறுவார்.

ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே
தாயென் கிளவி ஒப்போன் கூற்றே
கொடுயென் கிளவி உயர்ந்தோன் கூற்றே

     ஈ என்று சொன்னால், ஒருவர் தனக்குக் கீழாக இருப்பவர்களுக்குக் கொடுப்பது.

     தா என்று சொன்னால் நமக்குச் சமமாக இருப்பவர்களுக்குக் கொடுப்பது.

     கொடு என்று சொன்னால் உயர்ந்தோர்கள் அனைவருக்கும் கொடுப்பது.

     இதைத்தான் கொடை என்று சங்க இலக்கியம் கூறுகிறது.

     மழையின் மேகக் குறியினைக் கண்டு, ஆடிய மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன்.

     படர்வதற்குக் கொடியின்றித் தவித்த முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி.

     அமிழ்தினும் இனிய நெல்லிக் கனியை ஔவைக்குக் கொடுத்த அதியமான்.

     இவைகள்தான் அறங்கள்.

     கொடை அறங்கள்.

     அறம் இருவகைப்படும்

     ஒன்று அக அறம்.

     மற்றொன்று புற அறம்.

     போர் முடிந்து திரும்பிக் கரம் பற்றுவேன் என்று கூறிச் சென்ற காதலன், தான் சொன்னபடி காதலியின் கரம் பற்றுவது அக அறம்.

     தேர் ஏற்றிப் பசுவின் கன்றைக் கொன்றான் என்பதற்காகத், தன் மகனையே தேர்க்காலில் இட்டு நீதி காத்தது புற அறம்.

படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

     மன்னன் என்பவன் மக்களை மட்டுமல்ல, பிற உயிரினங்களையும் காக்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.

     இப்படி எல்லாவற்றையும் காக்கக் கூடிய மாபெரும் அரசியல் அறம் இன்றைக்குத் தேவையாக இருக்கிறது.

     கொரோனா

     வெறுங்கண்களால் பார்க்க இயலாத, சிறிதினும் சிறிதான, கொரோனா இன்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

     அரசு, தேவையான அனைத்தையும் முழுவீச்சில் செய்து கொண்டிருக்கிறது.

     இருப்பினும் அரசின் கண்களுக்கு எட்டாத சில இடங்களில், சில மக்கள் பசி, பசி என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

     கொரோனாவின் தாக்குதல் ஒரு புறம்.

     பசியின் வேதனை மறுபுறம்.

     ஊரடங்கு என்பது இன்று பல்வேறு மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாய் சிதைத்திருக்கிறது.

     காவல் துறை, தன் கடமையை மிகவும் சரியாக, மிகவும் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிற இந்த நேரத்திலும், எதற்கும் செவிமடுக்காமல், வேடிக்கை பார்ப்பதற்காக, வெளியில் சுற்றும் சில இளைஞர்களின் போக்கு, முற்றிலும் அறமற்ற செயலாகும்.

     இந்த நோய்க்குப் பலியாகக் கூடிய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இந்தச் சூழலில், மருத்துவர்கள் கடவுளாகக் காட்சி அளிக்கிறார்கள்.

     மருத்துவ அறம், இன்று பெரிதாகப் பேசப்படுகிறது.

     மருத்துவர்கள் மட்டுமல்லாது, செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், அனைவரும், தங்களுடைய கடமையினைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள்.

     இதுதான் கடமை அறம்.

     கடமை என்ற அற உணர்வை தார்மீகமாக ஏற்றுச் செயலாற்றிக் கொண்டிருக்கின்ற, இந்த நேரத்திலும் பசிப்பிணி மருத்துவமும் முக்கியமானதாகிறது.

     இலக்கியத்தில்  பார்த்திருக்கிறோம்.

     அமுதசுரபியின் மூலம், உலக உயிர்களின், பசிப்பிணி அகற்றிய மகத்துவத்தை மணிமேகலையில் பார்த்திருக்கிறோம்.

     இதனை முழுவீச்சில் அரசு இன்று செய்தாலும்கூட, தன்னார்வலர்களின், தர்ம சிந்தனையால், பசிப்பிணி நீக்க, நீளும் கரங்கள்கூட, இன்றைக்கு மருத்துவ அறமாகத்தான் பார்க்கப்படுகிறது.

அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்
மறவாது  இதுகேள், மன்னுயிர்க்கு எல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல்

என்கிறது மணிமேகலை. இந்த அடிப்படைத் தேவைகளைத் தரவேண்டியது ஒரு அரசனின், ஒரு  மன்னனின், ஒரு அதிகாரியின் கடமை.

     மக்களையும் காப்பாற்ற வேண்டும், மன்னிலுள்ள உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டும்.

     இதுதான் அரசியல் அறம்.

---

ஏடகம்
ஞாயிறு முற்றம்
சொற்பொழிவு

கடந்த 12.4.2020 ஞாயிற்றுக் கிழமையன்று,
சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி
தமிழ் இலக்கியத் துறைத் தலைவர், பேராசிரியர்


முனைவர் அரங்க.மல்லிகா அவர்களின்,

இலக்கியத்தில் தமிழர் அறம்

என்னும் தலைப்பிலானப் பொழிவு கேட்டு மகிழ்ந்தேன்.
அறம் என்றால் என்னவென்று அறிந்தேன்.

ஞாயிற்றுக் கிழமை பொழிவு கேட்டீர்களா?

ஊரே, ஏன் உலகே அடங்கிக் கிடக்கையில், வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கையில்
பொழிவா? எப்படி? என்னும் கேள்வி எழுகிறதல்லவா?

இணைய வழிக் காணொலிச் சொற்பொழிவு.

ஏடகம் அமைப்பின் 31 வது சொற்பொழிவு வீடு தேடி வந்தது.

கடந்த முப்பது மாதங்களாய்
முத்தாய் – ஏடகத்தின்
தனிச் சொத்தாய் நடைபெற்ற
ஞாயிறு முற்றப் பொழிவு
இம்மாதம் தடைபட்டுவிடுமோ – எனத்
தவித்திருந்த வேளையில்,

கொரோனாவிற்குத் தலைணங்காமல்
தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்ளாமல்
முகமூடி அணிந்து முகம் மறைக்காமல்

இணையவழி எழுந்து
காற்றில் தவழ்ந்து
உலகெங்கும் பறந்து
அலைபேசி வழி முழங்க

அரும்பாடு பட்ட
ஏடக நிறுவுநர், தலைவர்

முனைவர் மணி.மாறன் அவர்களைப்
போற்றுவோம், வாழ்த்துவோம்.

அறம் செவி கொடுத்துக் கேளுங்களேன்