15 ஆகஸ்ட் 2020

இரண்டு நான்கானது


 நாளும் உடற்பயிற்சி நன்று, தமிழ்மொழியில்

நாலும் இரண்டும் நனிநன்று, நம்மதுரை

பொற்றா மரைக்குளம் நன்று, பொறுப்புடன்

நற்றமிழ் கற்றிடல் நன்று

     இவர் தனது கவிநூலை இப்படித்தான் தொடங்குகிறார். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி என்பார்கள்.

     இவரோ, இரண்டை, நான்காக்கி ஒரு நூல் ஆக்கியிருக்கிறார்.

    

புரியவில்லையா?

     திருக்குறளின் கருத்துக்களோடு, நிகழ்காலச் சிந்தனைகளையும் சேர்த்து, நான்கு நான்கு வரிகளில், அமுது படைத்திருக்கிறார்.

     சுருங்கச் சொல்வதானால், திருக்குறளை, நாலடியாராய் மாற்றியிருக்கிறார்.

     இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது வரிசையில், நல்லவை நாற்பதைப் படைத்திருக்கிறார்.

சொல்லிலே சோர்வுகள் சூழாமை நன்று

நெல்லிலே களைகளும் நில்லாமை நன்று

ஏட்டில் எழுதுங்கால் எங்கனும் பேசுங்கால்

கூட்டும் பிழைநீக்கல் நன்று.

     நாம் ஒரு சொல்லைச் சொல்லும் பொழுது, அச்சொல்லை வெல்லக் கூடிய வேறொரு சொல் இல்லாத வகையில், சொல்ல வேண்டும் என்பார் வள்ளுவர்.

     நமது சொல், கேட்பவருக்கு மகிழ்ச்சியைத் தரவேண்டும், ஊக்கத்தைத் தர வேண்டும்.

     எழுதும் போதும், பேசும் போதும் பிழை தவிர்த்துப் பேசுவதும், பிழை தவிர்த்து எழுதுதலும், நமக்கும் நன்று, நம் மொழிக்கும் நன்று என்பதை  வலியுறுத்துகிறார்.

கற்றலும் கற்றபடி நிற்றலும் நன்று, மொழிப்

பற்றினைக் காட்டல் மிகமிக நன்று, நல்

நட்பினைப் பேணுதல் நன்று, நலமிலா

உட்பகை நீக்குதல் நன்று.

     இவரது பாடல்களின் ஒவ்வொரு சொல்லும், எளிமை, இனிமை.

     பொருள் புரிய, அகராதியை நாடிச் செல்ல வேண்டியதும் இல்லை, கோணாரைத் தேடி ஓட வேண்டியதும் இல்லை.

     படித்தாலே போதும், காட்சிகள் கண் முன்னே ஓடும்.

தமிழர் மனையில் தமிழ்பேசல் நன்று

தமிழர் மரபின் தரம்காத்தல் நன்றே

அமிழ்து தமிழே அறிந்திடல் நன்று

நமரதை உன்னுதல் நன்று.

     கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளொடு முன்தோன்றிய மூத்த குடியில் பிறந்துவிட்டு, பிறந்ததை மறந்துவிட்டு, வீட்டில் கூட, வேற்று மொழியில் பேசுவது அழகா? நம் குலப் பெருமையைக் காத்தல் நம் கடமையல்லவா?

     எனவே, தமிழில் பேச, தமிழர் மரபின் தரம் காக்க அழைக்கிறார்.

பாசமிகு நண்பரைப் பார்க்கும் பொழுதிலே

பாசமுடன் கைகூப்பிப் பாங்காய் வரவேற்போம்

பாரில் கொரோனா பரவாதிருகக நாம்

யாரிடத்தும் கைகூப்பல் நன்று.

     தமிழின் தொன்மையில் தொடங்கியவர், நிகழ்காலத் தொற்று நோயை, தொற்றா நோயாக்க, கை கூப்புவோம், கை கூப்பலே நன்று என்று நிறைவு செய்கிறார்.

     இவர் ஓர் ஆசிரியர்.

     எழுத்தாளர்.

     கவிஞர்.

     இயற்கை ஆர்வலர்.

     மன நல ஆலோசகர்.

     கல்லூரியில் இளங்கலையில் இயற்பியலில் தொடங்கி, முதுகலையில் தமிழுக்குத் தாவியர்.

     முதுகலையில் தமிழைப் படித்தபின், மீண்டும் முதுகலைக்கே திரும்பி, உளவியலை, உள்ளவியலாக்கியவர்.

     தீபம் நா.பார்த்தசாரதியின் நாவல்களில், குடும்பச் சிக்கல்களை ஆய்ந்து முனைவர் பட்டமும் பெற்றவர்.

     ஆசிரியர், பள்ளித் தலைமையாசிரியர், முதல்வர் எனத் தொடர் பணியாற்றி, ஓய்விற்குப் பிறகும், ஓய்வில்லாமல், மனநல ஆலோசகராகப் பணியேற்று, மாணவர்தம் மன அழுத்தத்தைக் குறைத்து வருபவர்.

மேனாள் குடியரசுத் தலைவர்

டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களின்

திருக்கரங்களால்,

நல்லாசிரியர்

விருதும் பெற்றவர் 

தமிழ்ப் பூ

இவரது வலைப் பூ.

கவிஞர் இனியன்

என்னும்

புனைப் பெயர் கொண்ட இனியவர்.


முனைவர் அ.கோவிந்தராஜு அவர்கள்.

இவரது நூல்

நல்லவை நாற்பது.

உருவத்தில் சிறிது எனினும்,

உட்பொருளால் மலையினும் பெரிது.

நல்லவை நாற்பதை நாடிப் படித்திடின்

அல்லவை தேயும் அறங்கள் செழிக்கும்

இந்தஓர் நூல்போன்று நூறுநூல் ஆக்கிட

முந்தினேன் வாழ்த்த மகிழ்ந்து

எனமுந்திக்கொண்டு வாழ்த்திய, 

புலவர் கருவூர்க் குறளகனார் அவர்களின், 

கவி வரிகளுள் நுழைந்து, நாமும் வாழ்த்துவோம்.

வாழ்த்துகள் ஐயா.



 

 குரல் வழிப் பதிவு - கேட்டுத்தான் பாருங்களேன்