06 டிசம்பர் 2020

தஞ்சையார்



நம்பினா நம்புங்க

நம்பாட்டி போங்க

எனப் பாட்டின் பல்லவியைப் பாடலாசிரியர் கூற, இயக்குநர் பதறிப் போனார்.

     வாத்தியாரய்யா, பாட்டை கேட்டுட்டு, படத்தை யாரும் வாங்காமல் போய்விட்டால் என்ன செய்வது? வேற ஒரு பாட்டு, ஜாலியாய் வர்ற மாதிரி எழுதிக் கொடுங்க என்றார்.

  

   அடுத்தநொடி, பாடல் அருவியாய் கொட்டியது.

ஜாலிலோ ஜிம்கானா

டோலிலோ கும்கானா

ஆளுங்கோ ரவுண்டானா

அசந்திட்டா டஹல்தானா?

     பாடல் இயக்குநருக்குப் பிடித்துவிட்டது. ஆனாலும் தயங்கினார்.

     இப்பாடலுக்கு என்ன அர்த்தம்? என்றார்.

     கதைப்படி இது குறவன், குறத்தி பாடுறப் பாட்டு. குறவர்கள் மொழி எனக்கும் தெரியாது. உங்களுக்கும் தெரியாது. குறவர்களைத் தவிர மற்றவர்களுக்கும் புரியாது. போய் தைரியமா, பாடலை ஒலிப் பதிவு செய்யுங்கள். படம் வெற்றியடையும் என வாழ்த்தினார் பாடலாசிரியர்.

     வாத்தியாராய்யா சொன்னது பலித்தது.

     படம் அமோக வெற்றி.

     பாடல் அதனினும் அமோக வெற்றி.

     எம்.ஜி.ஆர்., நடித்த குலேபகாவலி திரைப்படத்திலும் இப்படி ஒரு பாடலை எழுதினார்.

சொக்கா போட்ட நவாபு

செல்லாதுங்க ஜவாபு

     இப்பாடலும் இவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தது.

     கலைஞர் அவர்களின் குறவஞ்சிப் படத்திற்கு ஒரு பாடலை, இப்படித்தான் எழுதினார்.

எந்நாளும் தண்ணியிலேதான்

எங்க பொழப்பு இருக்குது

ரா .. ரா.. ரா..

     இப்பாடலும் இவருக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

     வாத்தியாரய்யாவின் இதுபோன்றப் பாடல்களை விரும்பாத ஒரு வசனகர்த்தா, இவரது பாடல்களை கிண்டல் செய்து, ஒரு நாளிதழில், கட்டுரையே எழுதிவிட்டார்.

     செய்தியறிந்த வாத்தியாரய்யா அவரை அழைத்து, நல்லாத்தான் என்னைத் திட்டியிருக்கே தம்பி .. சினிமா என்ன தமிழ் வளர்ச்சிக் கழகமா? இங்கே என்ன சங்கப் பலகையா வச்சிருக்கான் என் புலமையை சோதிக்க?

     நான் கரந்தைப் புலவர் கல்லூரியில் படித்தவன்.

    எனக்கு ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், கட்டளைக் கலித்துறை, கழிநெடிலடி, ஆசிரிய விருத்தம் எல்லாம் எழுதத் தெரியும்.

     ஆனால், அதை எழுதவா, நான் சினிமாவுக்கு வந்தேன்?

     வேட்டிய வரிஞ்சு கட்டிக்கிட்டு, நாலணா டிக்கெட் வாங்கி தரையிலே உட்காருறான் பாரு, அவனை நான் குஷிப்படுத்தனும். அதுக்குத்தான் எனக்கு காசு குடுக்குறாங்க என்று விளக்கமளித்து, வசனகர்த்தாவின் வாயை அடைத்தார்.

     ஒரு புறம் இப்படிச் சில பாடல்களை எழுதினாலும், இவர் எழுதிய ஏராளமானப் பாடல்கள், பாமரத்தனமான, எளிய சொற்களால், அடித்தட்டு மக்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துவிட்டன.

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் – கல்வி

தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்

கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் – ஊரில்

கஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்

     என்று எழுதியவரும் இவர்தான்.

சத்தியம் தவறாத உத்தமன் போலவே நடிக்கிறான்

சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறான்

     என்று எழுதியவரும் இவர்தான்.

ஏய்ச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா?

எண்ணிப் பாருங்க அய்யா எண்ணிப் பாருங்க

     என போக்கிரிகளின் முகமூடியை கிழித்துக் காட்டியவரும் இவர்தான்.

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே

தங்கச்சி கண்ணே

     எனத் திருமணமாகி, புகுந்த வீடு புகும் மணப் பெண்ணுக்கு, அண்ணனின் அறிவுரையாய், அன்பு ததும்பி வழியும் பாடலை, எக்காலத்திற்கும் பொருந்தும் பாடலை எழுதியவரும் இவர்தான்.

பழகத்தெரிய வேணும் – உலகில்

பார்த்து நடக்க வேணும் பெண்ணே

-

வாராயோ வெண்ணிலாயே

கேளாயோ எந்தன் கதையே

-

கண்களும் கவி பாடுதே – கண்ணே உன்

கண்களும் கவிபாடுதே

-

மயக்கும் மாலைப் பொழுதே

நீ போ, போ

இனிக்கும் இன்ப இரவே

நீ வா, வா

-

அழைக்காதே

நினைக்காதே

அவைதனிலே எனை

நீ ராஜா

-

அசைந்தாடும் தென்றலே தூது செல்வாயோ – தேன்

அமுதான கவிபாடி தூது செல்லாயோ

     எனத் தன் அருந்தமிழ்ப் பாடல்களால், தமிழக மக்களின் உள்ளங்களைக் கொள்ளையடித்ததும் இவர்தான்.

     காட்சியைச் சொன்ன அடுத்த நொடி, இவரிடமிருந்து பாடல் பறந்து வரும்.

     இவரது பாடல் எழுதும் வேகத்தைக் கண்டு மலைத்த எம்.ஜி.ஆர்., இவருக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா?

     எக்ஸ்பிரஸ் கவிஞர்.

     532 பாடல்கள்.

     25 படங்களுக்குக் கதை, வசனம்.

     10 படங்களுக்குத் திரைக் கதை.

     இவர் தஞ்சை மண்ணின் மைந்தர்.

     தஞ்சையின் மானம்புச் சாவடியில் பிறந்தவர்.

     கீழவாசல் தூய பேதுரு பள்ளியில் பயின்றவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்று, புலவர் பட்டம் பெற்றவர்.

     தொடர்ந்து, தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தைத் தெருவில் அமைந்திருந்த, ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றியவர்.

     ஆசிரியராய்ப் பணியாற்றிய காலத்திலேயே, கதராடை அணிந்து, காங்கிரசு மேடையேறி, வெள்ளையனே வெளியேறு என முழங்கியவர்.

     அரசுப் பணியில் இருந்து கொண்டே, ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராட்டமா? என மேலதிகாரி கண்டித்தபோது, எச்சரித்தபோது, துளியும் தயங்காது, தன் பணியினைத் துறந்து, போர்க்களம் புகுந்தவர்.

     பாரதநாடு சுதந்திரம் பெற்றபின், இவரைத் தேடி வந்த, போராட்ட தியாகி என்னும் பட்டத்தினையும், பதக்கத்தினையும், என் கடமையினைச் செய்யமைக்குப் பட்டமா? என்று கூறி, வாங்க மறுத்தவர்.

     திருக்குறளின் 1330 குறள்களையும் இசைப் பாடல்களாய் தொகுத்து, திருக்குறள் இசையமுதம் படைத்தவர்.

     திருவாரூரில் இருந்து, தன்னிடம் வந்து சேர்ந்த யேசுதாஸ் என்ற இளைஞருக்கு, கதை, வசனக் கலையில் பயிற்சியளித்து, அவரை ஆரூர்தாஸாய் உயர்த்தியவர்.

     தஞ்சையார் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர்.

இவர்தான்

கரந்தைப் புலவர் கல்லூரியின்

மேனாள் மாணவர்

திரைப்படப் பாடலாசிரியர்,

கதை, திரைக்கதை, வசனகர்த்தா


தஞ்சை இராமையாதாஸ்.