22 டிசம்பர் 2020

உதிரம் உறைந்த பூமி

 


     கி.பி.,ஒன்பதாம் நூற்றாண்டு.

     காவிரிக்கும் மேற்கே தொடங்கி, திருவேங்கடத்தையும் தாண்டியப் பெருநிலப் பரப்பில் பல்லவப் பேரரசும், காவிரிக்கு தெற்கே தொடங்கி, குமரியின் அடிமுனை வரையிலானப் பெரும் பரப்பை பாண்டியரும் ஆண்டு கொண்டிருந்த காலம்.

     முத்தரையரிடம் போரிட்டு கைப்பற்றிய சிறு பகுதிகளை மட்டுமே, பல்லவர்களின் துணையோடு, சோழர்கள், குறு நில மன்னராய் ஆண்டு கொண்டிருந்த காலம்.

     எப்படியும் பல்லவர்களை அழித்தே தீருவது என்ற எண்ணத்தில் இருந்த, இரண்டாம் வரகுண பாண்டியன், சற்றேறக்குறைய ஒன்றரை இலட்சம் படை வீரர்களோடு புறப்பாட்டான்.

   

  பல்லவ மன்னன் நிருபதுங்க வர்மனோ முதுமையை எட்டியிருந்தான்.

     எனவே தன் மகன் அபராஜித வர்மனைப் போர் முனைக்கு அனுப்பினான்.

     மேலும் பல்லவப் படையானது, தொடர் போர்களால் வலிமை குன்றியிருந்ததால், கங்க மன்னன் பிருதுவீ பதியையும், சோழ மன்னன், விஜயாலயனையும் துணைக்கு அழைத்தான்.

     பல்லவனைப் போல் முதுமையைத் தொட்டிருந்த விஜயாலயன், தன் மகன் ஆதித்த சோழனை அனுப்பினான்.

     சோழர் படை சிறிதுதான் எனினும், திறம்படப் போர் செய்வதில் அனைவரையும் வல்லவர்களாய் மெருகேற்றியிருந்தான், அனைத்து அரசியல் தந்திரங்களையும், போர் நெறிகளையும், நன்கு கற்றுத் தேர்ந்திருந்த ஆதித்தன்.

     தொடக்கத்திலேயே ஆதித்தனுக்குத் தெள்ளத் தெளிவாய் புரிந்து விட்டது, இந்தப் போர், பாண்டியர்களுக்கும், பல்லவர்களுக்கும் இடையிலான இந்தப் போர், சோழர்களுக்குச் சாதகமாய் மாறும் என்பது தெரிந்து விட்டது.

     எனவே தன் படையில் இருந்த சொற்ப அளவிலான வீரர்களுக்கு, தங்களுக்கு இழப்பேதும் இல்லாமல், எதிராளிக்கு மட்டும் பெரு இழப்பினை ஏற்படுத்தி வெல்லும் கலையை, பயிற்சியை முழுதாய் அளித்திருந்தான்.

     கி.பி.880.

     தை மாதத்தில் ஒரு நாள்.

     காலை 9.00 மணி

    கொம்பு ஊதியது.

     பாண்டியப் படைகளும், பல்லவப் படைகளும் நேருக்கு நேராய் சந்தித்தன.

     போர் தொடங்கியது.

     தொடக்கத்தில் இருந்தே, பாண்டியர் படைகளுக்கு இழப்பு.

     கங்க மன்னன் வளைத்துத் தாக்கினான்.

     சோழப் படைகளோ, இடமும் வலமுமாய் மாறி, மாறி பாண்டியப் படைகளை ஊடறுத்துத் தாக்கி, பாண்டியர்களைக் கொன்று கூறு போட்டன.

     வெகுண்டு போன வரகுணன், களத்தினுள் புகுந்து, கங்க மன்னன் பிரதிவீபதி அமர்ந்திருந்த யானையின் மேல் தாவி ஏறி, அவனை வீழ்த்தினான்.

     ஆனால் அதற்குள், பாண்டியர் படை முற்றாய் அழிந்தே போய்விட்டது.

     மீதமிருந்த சில நூறு வீரர்களுடன் வரகுணன் தப்பியோடினான்.

     பன்னிரெண்டரை மணியளவில் போர் முடிந்தே விட்டது.

     மூன்றே மூன்று மணி நேரம்.

     சுமார் இரண்டு இலட்சம் பேர் வீர மரணம்.

     களம் நெடுகிலும் வெட்டுண்ட உடல்கள், எண்ணற்ற யானைகளின், குதிரைகளின் சடலங்கள்.

     ஓலக் குரல்கள்.

     அப்பகுதியே இரத்த வெள்ளத்தில் நனைந்து போனது, உறைந்து போனது.

     இப்போரில் பாண்டியர்க்கு மட்டுமல்ல, பல்லவப் படைக்கும் பேரிழப்பு.

     இனியும் தென்பகுதியைக் கட்டிக் காக்க இயலாது என்பதை உணர்ந்த அபராஜித வர்மன், பாண்டிய நாட்டின் வட பகுதியையும், தஞ்சையைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சோழருக்கு அளித்தான்.

     சோழர் பேரரசு புத்துயிர் பெற்றது.

     மீண்டு எழுந்தது.

---

     கி.பி.9 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற, இப்பெரும் போரின், எச்சமாய் இன்று ஒரு சிறு தோப்பு மீதமிருக்கிறது.

     பச்சை பசேல் என்று விரிந்து பரந்து, நெற்கதிர்கள் வளர்ந்து நிற்கும் வயல் வெளிகளுக்கு நடுவில், ஒரு சிறு தோப்பு.

     ஆலமரங்கள், மூங்கில் புதர்கள் மற்றும் கருவேல மரங்களால் அடர்ந்திருக்கும் ஒரு சிறு தோப்பு.

     அதனுள் ஒரு படை வீடு.

     தன் தந்தை விஜயாலய சோழனுக்கும், யானையின் மீது வீர மரணம் அடைந்த, கங்க மன்னன் பிரதீவிபதி மன்னனுக்கும், ஆதித்த சோழன் எழுப்பிய படைவீடு.

விஜயாலய ஐயனார் சன்னதியாய்

பிரித்திவிராஜ ஐயனார் சன்னதியாய்

போற்றப்பட்டப் படை வீடு,

இன்று

அருள்மிகு பகவதி ஐயனார் திருக்கோயிலாய்

நடுகற் கோயிலாய்

பழுதடைந்து காணப்படுகிறது.

மேற்கூறை எங்கும் செடிகள்.

இதுதான்

திருப்புறம்பியம்

பள்ளிப் படை.

---

     கடந்த 13.12.2020 ஞாயிறன்று காலை, நானும் நண்பர் திரு கா.பால்ராஜ் அவர்களும், இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.

     தஞ்சாவூர், கும்பகோணம் சாலையில் பயணித்து, திருவலஞ்சுழியில் இடது புறம் திரும்பி, சுவாமிமலையை அடைந்தோம்.

    


சுவாமிமலையில் இருந்து கொட்டையூர் பாதையில் பயணித்து, புளியஞ்சேரியில் இடது புறம் திரும்பினால், ஐந்தே ஐந்து கி.மீ தொலையில் திருப்புறம்பியம்.

     சிற்றூர்.

     ஐயனார் கோயில் எங்கிருக்கிறது? என ஒரு மீன் கடைக்காரரைக் கேட்டோம்.

     போர் நடந்த இடம்தானே, நேராய் போய், இடது புறம் திரும்பிச் செல்லுங்கள் என்றார்.

     சென்றோம்.

     சிறு தெரு.

     சிறிது தூரத்தில், தெரு முடிந்து போனது.

     வயல் வெளி தொடங்கியது.

     இரு சக்கர வாகனத்தைத் தெருவின் முனையிலேயே நிறுத்திவிட்டு, நடக்கத் தொடங்கினோம்.

    




       சுமார் ஒன்றரை கி.மீ., வயல் வரப்புகளில் நடந்தோம்.

     ஒரு தோப்பு.

     தோப்புக்குள், இதோ பள்ளிப்படை.

     இரத்தம் தோய்ந்த பூமியில் நின்றோம்.

     உடலெங்கும் ஒரு சிலிர்ப்பு.


    





பல்லவர் படைகளோடு இணைந்து, சோழர் படையும், கங்க படையும், பாண்டியர் படைகளை வேரறுத்த காட்சி, மனக் கண்ணில் திரைப்படமாய் ஓடியது.

     நேரம் நகர்வது தெரியாமல் நின்றோம்.

     சில்லென்ற காற்று முகத்தில் மோதி, சுய நினைவூட்ட, மீண்டும் வயல் வரப்புகளில் நடக்கத் தொடங்கினோம்.

     ஆயிரம் ஆண்டுகளாய், இலட்சக் கணக்கான வீரர்களின், ஆயிரக் கணக்கான யானைகளின், குதிரைகளின் உதிரத்தை, உரமாய் கொண்டு, தொடர்ந்து எழும் நெற்கதிர்கள், காற்றில் அசைந்தாடி, எங்களை வழி அனுப்பி வைத்தன.



பள்ளிப் படையைக் காண வாருங்கள்