04 மே 2021

மகாகவியைக் கொண்டாடுவோம்

 


     பாரதியை இன்னும் நாம் முழுமையாகக் கொண்டாடவில்லை.

     பள்ளி மாணவர்களுக்கானப் போட்டிகளின் தலைப்புகளில் ஒன்றாக மட்டுமே, பாரதி இன்று பார்க்கப்படுகிறார்.

    

ஆனால், மேலை நாடுகளில், படைப்பாளர்கள் தலையில் தூக்கி வைத்துப் போற்றப் படுகிறார்கள், பாராட்டப் படுகிறார்கள், நினைவு கூரப் படுகிறார்கள்.

     பாப்லோ நெருதா, தன் கவி நூல்களுக்கு வைத்த தலைப்புகள் எல்லாம், இன்று சிலி நாட்டுத் தெருக்களில் பெயர்களாக மாறியுள்ளன.

     இந்தப் படுக்கையில்தான், திகில் படைப்பாளி எட்ஜர் அலன்போ படுத்து சிகிச்சை பெற்றார், என்னும் பெருமைமிகு அறிவிப்பு, இன்றும் பால்டிமோர் மருத்துவமனைக் கட்டிலில் உள்ளது.

     ஷேக்ஸ்பியர்,  தன் நாடகங்களை அரங்கேற்றிய மேடை, அன்று போலவே, இன்றும், அதே நிலையில், அதே உருவில் பராமரிக்கப்படுகிறது.

     வில்லியம் வோட்ஸ்வொர்த் பிறந்த ஊர், இன்றும் அப்படியே காக்கப்படுகிறது.

     இப்படைபபாளி இங்கு தேநீர் அருந்தினார், இந்தப் படைப்பாளி இங்கு தங்கினார் என்னும் அறிவிப்புப் பலகைகள் ஆங்காங்கு தலை நிமிர்ந்து நிற்கின்றன.

     ஆனால், நம் நாட்டில்… ?

     வாழும் வரை கண்டு கொள்ளவே மாட்டோம்.

     வாழ்ந்து மறைந்த பிறகு, அப்படி, இப்படி எனப் போற்றுவோம், புகழாரம் சூட்டுவோம்.

      ஒரு மனிதருக்காக, இந்நிலை, இன்று மாறியிருக்கிறது.

     ஒரு கவி, மகாகவி போற்றப்படுகிறார்,

     அதுவும் நம் நாட்டில், தமிழ் நாட்டில்.

     இவர் புகழ் பெற்ற கவிஞர்.

     சிறந்த பேராசிரியர்.

     உன்னத உரையாளர்.

     சீரிய பேச்சாளர்.

     உயரிய மொழி பெயர்ப்பாளர்.

     இச்சிறப்புகள் எல்லாம், தற்செயலாய் இவரிடம் குடிபுகுந்தவை அல்ல.

     கடுமையான உழைப்பின் பயனாய் வந்தவை.

     இவரது கவிதைகள், விதியைப் புறந் தள்ளிவிட்டு, விடுதலையின் அடி, முடியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் திறன் படைத்தவை.

     ஓர் அமைதியான வாழ்வை நடத்திக் கொண்டிருப்பது போன்ற தோற்றம், இவர் பக்கம் இருந்தாலும், பேராட்டங்களின் தேவையை மறுத்தவரில்லை.

     அநீதியைக் கண்ட பொழுதெல்லாம் பொங்கி எழுந்தவர்.

உலகனாய் இருக்கும் நான்

நிச்சயமாய் இந்தியன் ….

அதைவிடச்

சத்தியமாய்

தமிழன்.

 

தமிழனாக இருப்பதற்குத்

தடைபோட்டால்,

இந்தியனாகத்

தொடர்வது பற்றிச்

சிந்திக்க வேண்டிவரும் என்று முழங்கியவர்.

     அநீதியின்பால் கொண்ட வெறுப்பும், நீதியின்பால் கொண்ட விருப்புமே, இவரை வழி நடத்துகின்றன.

     மகாகவி என்னும் உயரிய நிலையினை அடைந்தவர்.

     மகாகவி, மகாகவி எனக் கற்றறிந்த சான்றோர்கள் அனைவரும், ஒருமித்துக் குரல் கொடுத்த போதும், அடக்கமாய், தன் கவிதையாலேயே, அப்பெருமையின அன்னைத் தமிழுக்குப் படைத்தவர்.

ஒரு மகாகவி

எப்போது சாத்தியம்?

 

கொல்லர்களில் ஒரு மகா கொல்லன்

கிடைக்கும்போது …

தச்சர்களின் ஒரு மகா தச்சன்

படைக்கப்படும்போது …

உழவர்களின் ஒரு மகா உழவன்

முளைக்கும்போது …

நெசவாளியில் ஒரு மகா நெசவாளி

தறியால் நெய்யப்படும்போது

ஒரு மகாகவி உருவாவதும் – அப்போது

சாத்தியம்.

 

அவர்கள் வரிசையில்

ஓரிடம் கிடைக்குமெனில்

எனக்கென்ன பெருமை?

 

எனை வளர்த்த

மூத்த கவிஞர்களான என்

முன்னோடிகளுக்கும்

முத்தமிழுக்கும் மட்டும்

பெருமை.

 

அவன் எழுத்துக்கும்

அதைப் படிப்பவர்க்கும்

அது பிறந்த

அன்னைத் தமிழுக்கும் பெருமை

 

இவர்தான்



மகாகவி ஈரோடு தமிழன்பன்.

மகத்தான கலைஞர்கள், மகாகவிகள்

அவர்கள் வாழும் காலத்திலேயே போற்றப்படு வேண்டும்

என்னும் பொன்னான வாசகம்

இன்று முதன் முறையாக

உயிர் பெற்றிருக்கிறது.

 



கடந்த 28.9.2020 அன்று,

மகாகவியின் 87 ஆம் பிறந்த நாள் விழா.

அமெரிக்கத் தமிழ் வானொலியில்,

வாழ்த்துகள், நூல் அறிமுகம், கவியரங்கு என

களை கட்டியது.

மேலும்

மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதையோடு நான்

என்னும் தலைப்பில்

ஒரு சிறப்பிதழ்,

 

ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி

வல்லினச் சிறகுகள், அட்லாண்டா

உலகப் பெண் கவிஞர்கள் பேரவை, அட்லாண்டா

முதலான அமைப்புகளின்

பெரு முயற்சியால்

உரு பெற்று உயிர் பெற்றிருக்கிறது.

 

இது  மட்டுமா,


மகாகவி ஈரோடு தமிழன்பன் நூலோடு நான்

என்னும் பெயரில்,

யூ டியூப் அலைவரிசையில்

பன்னாட்டு உரையளிப்போரின் தொடர் சொற்பொழிவு

கடந்த 9.4.2021 வெள்ளியன்று தொடங்கி,

ஒவ்வொரு வாரமும்,

வெள்ளி, சனி, ஞாயிறு

என வார இறுதி நாட்களில்

உலகையே வலம் வந்து கொண்டிருக்கிறது.

 

ஒவ்வொரு நாளும்

மகாகவியின்

இரு நூல்கள் குறித்தப் பொழிவு

அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

 

     நண்பர்களே, இப்பொழிவில், கவிஞர்களுக்கு இடையில், இந்த, கரந்தை, கணித ஆசிரியனுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு கிட்டியது.

 


கடந்த 1.5.2021 சனிக் கிழமை மாலை,


பாப்லோ நெருதா கவிதைகள்

(மொழியாக்க நூல்)

நூல் குறித்துப் பேசினேன்.

மகாகவியால் மொழியாக்கம் செய்யப் பெற்ற

மகாகவியின் நூல்.

 

மகாகவி பாப்லோ நெருதாவும்

மகாகவி ஈரோடு தமிழன்பனும்

காலத்தால், மொழியால், இடத்தால்

எவ்வளவுதான் மாறுபட்டிருந்தாலும்,

இருவரும் வேறு வேறு அல்லர்.

உள்ளத்தால், உணர்வால், உணர்ச்சியால்

ஒருவரேதான்

எனப் பேசினேன்.

---

அமெரிக்கத் தமிழ் வானொலியில்

மகாகவி ஈரோடு தமிழன்பன்

87 ஆம் பிறந்த நாள் விழா,

மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதையோடு நான்

சிறப்பு மலர் வெளியீடு,

மகாகவி ஈரோடு தமிழன்பன் நூலோடு நான்

யூ டியூப் அலைவரிசையில்

பன்னாட்டு உரையளிப்போரின் தொடர் சொற்பொழிவு

இவையனைத்திற்கும் காரணம்,

ஒரு மனிதரின்,

ஒரே ஒரு மனிதரின் அயரா முயற்சி.


கவிஞர் தி.அமிர்தகணேசன்.

 

இவர்

ஈரோடு தமிழன்பன் வாசகர் வட்டம், அமெரிக்கா

ஒரு துளிக் கவிதை, புதுச்சேரி

தமிழர் வாழ்வியல் ஆய்வு அறக்கட்டளை, ஈரோடு

வல்லினச் சிறகுகள், அட்லாண்டா

உலகப் பெண்கவிஞர்கள் பேரவை, அட்லாண்டா

முதலான முத்தான அமைப்புகளை

ஒருங்கிணைத்து

நிகழ்வுகளைத் திறம்பட அரங்கேற்றி வருகிறார்.

கவிஞருக்கு என் பாச வணக்கங்கள்.

 

மகாகவி ஈரோடு தமிழன்பன் நூலோடு நான்

என்னும் தொடர் பொழிவின்

அமைப்பாளர்களாய் அமர்ந்து

அரும்பணியாற்றிவரும்,

கவிஞர் பவள சங்கரி அவர்களுக்கும்,

பேராசிரியர் ரேணுகா தேவி அவர்களுக்கும்

கவிஞர் மஞ்சுளா தேவி அவர்களுக்கும்

அன்புச் சகோதரி

முனைவர் மு.கீதா, புதுக்கோட்டை அவர்களுக்கும்

என் நேச வணக்கங்கள்.

 

மகாகவி ஈரோடு தமிழன்பன்

இம்மகாகவியின்

காலத்தில் வாழ்கிறோம்

என்பதே

நமக்குப் பெருமை.

 

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள்

இன்னும் ஒரு நூறாண்டு

வாழ்க, வாழ்க

என

வாழ்த்துவோம், வணங்குவோம்.