10 மே 2021

அஞ்சினான் புகலிடம்





     சமணம்.

     சமண சமயம் பண்டைக் காலத்தில், தமிழ் நாடு முழுவதும் பரவி உச்சம் பெற்றிருந்தது.

     சமணம், தமிழ் நாட்டில் ஆழங்கால் பதித்து, தழைத்து, வளர்ந்திருந்ததை, தேவாரம், நாலாயிர பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலான பிற்காலத்து நூல்களும், மணி மேகலை, சிலப்பதிகாரம் முதலான சங்ககாலத்து நூல்களும் தெரிவிக்கின்றன.

     இலக்கியங்கள் மட்டுமல்ல, சாசனங்களும், அழிந்தும் அழியாமலும் காணப்படுகின்ற சமணக் கோயில்களும், காடுமேடுகள், மலைகள் என ஆங்காங்கே காணப்படுகினற சமண சமய தீர்த்தங்கர்களின் சிலைகளிலும் சான்றுகள் கிடைக்கின்றன.

    

சமணம் தமிழகத்தில் தழைத்ததற்கு முக்கியக் காரணம், பிறப்பினால் உயர்வு தாழ்வு கருதாத, அதன் தன்மையும்,

பறையன் மகனெனினும் காட்சி யுடையான்

இறைவன் என உணரற் பாற்று

என அனைவரையும், சமமாய் போற்றிய சமணக் கொள்கையுமே ஆகும்.

     சமணர்கள் நான்கு தானங்களை, தங்களின் பேரறமாய்ப் போற்றினர்.

     அவையாவன,

     அன்னதானம்

     அபய தானம்

     ஔசச தானம்

     சாத்திர தானம்

     இவற்றுள் அன்னதானத்தை நாம் நன்கறிவோம்.

     ஔசச தானம் எனில் மருத்துவ சேவையாகும்.

     நோயாளிகளுக்கு இலவசமாகவே மருந்து கொடுத்து நோயைத் தீர்த்தனர்.

     இன்றும் கூட, மதுரைப் பகுதிகளில் உள்ள மலைகைளில், பல குகைகள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

     இக்குகைகளுக்கு அருகிலேயே, மருந்து இடிப்பதற்கானப் பல குழிகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

     இக்குழிகளுக்கு கழுவம் என்று பெயர்.

     நான்காவதான, சாத்திர தானம் என்பது கல்வி தானமாகும்.

     சமணப் பெரியோர்கள், தங்கள் பள்ளிகளிலேயே, பாகுபாடின்றி, ஊர்ச் சிறுவர்களுக்கு இலவசமாகக் கல்வியை போதித்தனர்.

     பாடசாலைகளுக்குப் பள்ளிக் கூடம் என்னும் பெயர் உண்டாவது இதனால்தான்

     சமணர்கள் எந்தப் பகுதியில் இருக்கிறார்களோ, அப்பகுதி மக்களின் மொழியைக் கற்றுத் தேர்ந்து, அம் மொழியினையும் வளப்படுத்தினர்.

     இப்படித்தான் இவர்களால்தான், தமிழில் பல இலக்கண, இலக்கியங்கள் தோன்றின.

     சமணர்கள் இல்லையென்றால், தமிழே இல்லை என்று கூறும் அளவிற்குத் தமிழைப் போற்றி வளர்த்திருக்கிறார்கள்.

     இனி, சமணர்களது தானத்தில், இரண்டாமிடம் பெற்றுள்ள அபயதானம் பற்றிப் பார்ப்போம்.

     அபய தானம்.

     அஞ்சினான் புகலிடம்.

     சமணர்களின் அபயதானமே, தமிழகத்தில் அஞ்சினான் புகலிடங்களாக வளர்ந்து தழைத்தன.

     அஞ்சினான் என்றால் அச்சப்படுபவன் என்பது பொருளாகும்.

     பொருளாதார ரீதியில் தாழ்வுற்ற நிலைக்குச் சென்றவர்களுக்கும், பகைமையால், பகை நாட்டினால் பாதிக்கப் பட்டவர்களுக்கும், இருக்க இடமும், உண்ண உணவும் கொடுத்துக் காக்கும் இடமே, அஞ்சினான் புகலிடமாகும்.

     மீண்டும், மீண்டும் பிறவி எடுத்து அல்லல் படுவதைத் தவிர்க்க, மீண்டும் பிறவாமை வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும், முக்தியை நோக்கிய பயணத்தைத் தொடரும் துறவிகளுக்கும்,அடைக்கலம் கொடுத்த இடமே அஞ்சினான் புகலிடம் என்று கூறுவாரும் இருக்கிறார்கள்.

     தமிழகம் எங்கும் இந்த அஞ்சினான் புகலிடங்கள் இருந்ததற்கானச் சான்றுகள் உள்ளன.

     தமிழக மன்னர்கள் பலரும், இந்த அஞ்சினான் புகலிடங்களுக்கு, இடம், பொருள் கொடுத்து உதவியுள்ளனர்.

     சமணர்களால் பின்பற்றப்பட்ட இந்த தானங்கள், பிற்காலத்தில் மற்றவர்களாலும் தொடரப் பட்டிருக்கின்றன.

     சமணத்தைத் தொடர்ந்து, அயலகம் வழியாக, இந்தியாவிற்குள் புகுந்த மற்ற மதங்களும் கூட, இந்த தானங்களைத் தொடர்ந்து கடைபிடித்துள்ளன.

     அஞ்சினான் புகலிடம் என்பதற்கு ஆசிரியம் என்ற சொல்லாட்சியும் பயன்படுத்தப் பட்டுள்ளது.

விருப்பனமுடையார்க்கு செல்லா நின்ற பிங்கள ஸ்ரீ ஆனி மாதம் …… பற்று தந்திரிமார்க்கும் மற்றும் பாவூரில் தந்திரிமார்க்கும், மலையாளங்குடி … கிராமம் எல்லாம் ஆசிரியம் என்று உரைக்கிறது திருமயம் கல்வெட்டு.

     தமிழகமெங்கும் உள்ள அஞ்சினான் புகலிடங்களில் சிலவற்றைப் பார்ப்போம் வாருங்கள்.

     ஏடகம் அமைப்பின் நிறுவுநர் மற்றும் தலைவர், முனைவர் மணி.மாறன் அவர்களின் களப் பணியின் மூலம், அண்மையில், புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக் கோட்டைக்கு அருகில், தச்சன் குறிச்சியில் ஒரு குகை கண்டுபிடிக்கப் பட்டது.

     இக்குகை அஞ்சினான் புகலிடம் என்பதை சான்றுகளுடன் நிறுவியுள்ளார் முனைவர் மணி.மாறன்.

     தொண்டை நாட்டில், திருக்கோயிலூர் வட்டத்தில் உள்ள, ஜம்பையில் உள்ள கண்டராதித்தப் பெரும்பள்ளிக்கு அருகிலும்,

     அன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில், இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசிக்கு அருகில் உள்ள, தெள்ளாற்றில் ஒரு பெரும் போர் நடந்திருக்கிறது. அப்பொழுது அப்போர் நடைபெற்ற இடத்திலும்,

     வாலாஜா பேட்டை, கீழ் மிள்ளலிலும்,

     போளூர் வட்டம், வடபாதி மங்கலம் என்று இன்று அழைக்கப்படுகின்ற, அன்றைய வடமகாதேவி மங்கலத்திலும் அஞ்சினான் புகலிடங்கள் இருந்திருக்கின்றன.

     கோயமுத்தூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தில், பட்டணம் என்ற ஊரில். நானாதேசிக வணிகக் குழுவைச் சேர்ந்த ஆறு வணிகர்கள், பழுதடைந்து இருந்த, அஞ்சினான் புகலிடத்தைப் புதுப்பித்து, அதனைத் தொடர்ந்து பராமரிக்கப் பெரும் நன்கொடையினையும் வழங்கியுள்ளார்கள்.

     இதனை, வாயுறைக்கா நாட்டு மடுக்கொடு அனாதி, பாழாய் கிடக்கையில், இவ்வூர் இந்த நம் பெருமார்க்கு, சீநாதப் பட்டணம் ஆதி செட்டிகளில், மும்முடி சோழ வைரானவரும், ஸ்ரீ கைலாயம் உடையாரும், அரிய நயினாரும், வன்னியன் உடையாரும், ஆனந்தக் கூத்தரும், உத்தமநாதப் பெருமாளும், இந்தப் பட்டணமாகவும், அஞ்சினான் புகழிடமாகவும் குடியேற்றுகையில், ராசராச புறச் சாவடிக்குச் செல்லும், ஏழுகரை நாட்டிலும், நொய்யிலுக்கு வடகரையிலும், கோயிலுக்கும் சவர்மடிக்குச் செல்லும்படி என்றுபல்லடம் தொகுதி பட்டணம் கல்வெட்டு உரைக்கிறது

     ஈரோடு மாவட்டம், புகழ் மங்கலம் என்று அன்று அழைக்கப்பட்ட, இன்றைய பழமங்கலத்திலும்,

     குமரி நாட்டு திருச்சாரத்து மலையிலும்,

     பிற்காலத்தில், பதினொன்றாம் நூற்றாண்டில், பஞ்சவன் காடு என்னுமிடத்தில், வீர கேரள நல்லூர் குடிகளுக்காகவும்,

     பதினைந்தாம் நூற்றாண்டில், அகஸ்தீசுவரத்திலும்,

     குமரி முட்டம் என்கிற இடத்திலும்,

     பத்மநாதபுரத்தில் சிவ மாந்தர்களுக்கு என, பல இடங்களில் அஞ்சினான் புகலிடங்கள் இருந்தமையை கல்வெட்டுகள் ஓங்கி உரைக்கின்றன.

     சங்க இலக்கியங்களிலும் அஞ்சினான் புகலிடங்கள் பற்றிய செய்திகள் வருகின்றன.

     ஒரு நாடு, மற்றொரு நாட்டோடு போர் செய்யும் பொழுது, ஒரு அறிவிப்பு செய்வார்கள்.

     அந்தணர், அறவோர், பெண்டிர், உடல் நலிந்தவர்கள், குழந்தைகள் என, உடல் வலிமை இல்லாதவர்களைப் பட்டியலிடுவார்கள்.

      இவர்களுக்குப் போரில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கு அளிப்பார்கள்.

     இவ்வாறு விலக்கு அளிப்பதோடு நின்று விடாமல், இவர்கள் அனைவரையும், ஓரிடத்தில் அமர்த்தி, பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தி, புகலிடம் தருவார்கள்.

     இதுவும் அஞ்சினான் புகலிடம்தான்.

     அஞ்சினான் புகலிடம்.

---

     என்னைப் பொருத்தவரை, இதுநாள் வரை நான், நான் கேள்விப்பட்டிதார சொல், இந்த அஞ்சினான் புகலிடம்.

கொரோனா பெருந் தொற்றின் காரணமாக,

இலக்கியக் கூட்டங்கள் நடத்த இயலா நிலையினை ஈடு செய்ய,

கடந்த 9.5.2021 அன்று

ஏடகம்

ஞாயிறு முற்றம்

சொற்பொழிவில்,

கரந்தை சமண ஆலய அறங்காவலரும்.

ஏடகப் புலவலருமாகிய,

உடலின் வயதால் முதிர்ந்திருந்தாலும்.

உள்ளத்தால் இளையவராய்,

என்றும், எப்பொழுதும் சிரித்த முகத்தோடும்,

இன்சொல்லோடும்

வலம் வந்து,

எதிர்படுபவர்களை எல்லாம்,

நண்பர்களாய் மாற்றும் வல்லமை வாய்ந்த


திரு ச.அப்பாண்டைராஜ் அவர்களின்

அஞ்சினான் புகலிடம்

என்னும் தலைப்பிலான அற்புதப் பொழிவு,

இணைய வழி தவழ்ந்து வந்து,

என் உள்ளத்துள் நுழைந்தது.

 

அஞ்சினான் புகலிலிடம்

அறிந்தேன்

மகிழ்ந்தேன்.

 

கொரோனாவிற்கு

அஞ்சி

வீடு மட்டுமே

அஞ்சினான் புகலிடமாய்

மாறிப் போயிருக்கும் இக்காலத்தில்,

பழங்கால

அஞ்சினான் புகலிடத்தை

அறியத் தந்த

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களை

போற்றுவோம், வாழ்த்துவோம்.

------

நண்பர்களே, வணக்கம்.

       சிறிய இடைவெளிக்குப் பிறகு, எனது மூன்று மின்னூல்கள், அமேசான் தளத்தில் இணைந்திருக்கின்றன.




     இம்மூன்று நூல்களையும், நாளை (11.5.201) செவ்வாய்க் கிழமை முதல்  (13.5.2021) வியாழக் கிழமை வரை கட்டணம் ஏதுமின்றி, தரவிறக்கம் செய்து வாசித்து மகிழலாம்.

வலைச் சித்தருக்கு ஜெ

என்றென்றும் பேரன்புடன்,

கரந்தை ஜெயக்குமார்