07 ஜூன் 2013

திப்பு சுல்தானின் கோட்டையில் ஓர் நாள்


மே மாதத்தின் மத்தியில், ஓர் நாள், நண்பர் பால்ராஜ் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, இம்மாதம் 24 ஆம் தேதி, திருச்சியைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன், மைசூர் மற்றும் ஊட்டி சுற்றுலா செல்ல இருக்கின்றேன், வருகிறீர்களா? என அழைத்தார். வருகிறேன் என்றேன்.

     24.5.2013 வெள்ளிக் கிழமை இரவு ஒன்பது மணியளவில், நானும் நண்பர் பால்ராஜ் அவர்களும், பேரூந்தில், தஞ்சையில் இருந்து திருச்சிக்குப் புறப்பட்டோம். 10.30 மணியளவில், திருச்சி தொடர் வண்டி நிலையத்தின் அருகில் இறங்கினோம்.

     அங்கிருந்த முருகன் கோயிலுக்கு எதிரில், திரு நேரு, திரு அசோகன், திரு நரசிம்மன் ஆகியோர் எங்களுக்காகக் காத்திருந்தனர். மூவருமே திருச்சி தேசியக் கல்லூரியில் பணியாற்றுபவர்கள். இவர்களுடன் திரு நேரு அவர்களின் இளைய மகன் செல்வன் அழகேசன் அவர்களும் எங்களுக்காகக் காத்திருந்தார்.

     நண்பர் பால்ராஜ் நால்வரிடமும் என்னை அறிமுகப்படுத்தினார். அறிமுகப் படுத்திக் கொண்டோம். அறுவரும் முருகப் பெருமானை வணங்கி, டவேரா காரில் பயணத்தைத் தொடங்கினோம்.
    
     மறுநாள் சனிக் கிழமை அதிகாலை மைசூர் சென்றடைந்தோம். மைசூர் செல்லும் வழியில், பன்னாரி மாரியம்மனையும், நஞ்சங்கூடு சிவபெருமானையும் தரிசித்தோம்.

    
 மைசூரில் விலங்கியல் பூங்காவிற்கு எதிரிலேயே ஸ்ரீகீர்த்தி தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம்.

     அன்று காலை விலங்கியல் பூங்காவையும், பிற்பகல் மைசூர் அரண்மனையினையும் பார்த்து ரசித்துவிட்டு, மாலை பிருந்தாவன் தோட்டம் சென்றோம். இசைக்கு ஏற்றபடி வண்ண விளக்குகளின் ஒளியினைத் தாங்கி, நடனமாடும், நீறூற்றுகளின் நடனக் காட்சிகளை மெய்மறந்து பார்த்தோம்.

     மறுநாள் காலை விடுதியினை காலிசெய்து விட்டுப் பயணத்தைத் தொடங்கினோம். அப்பொழுது அலைபேசி வழி தொடர்பு கொண்ட நண்பர் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், மைசூரின் ரெங்கனா திட்டு பறவைகள் சரணாலயத்தையும், சீரங்கப் பட்டிணத்தையும் தவறாது பார்த்து வருமாறு அறிவுறுத்தினார்.

      முதலில் சாமுண்டீஸ்வரி கோயில் சென்று வணங்கினோம். வசந்த மாளிகை திரைப் படத்தில், வசந்த மாளிகையாய் காட்சிதரும் லலித் மகால் சென்று சுற்றிப் பார்த்தோம். அடுத்து ரெங்கனா திட்டு பறவைகள் சரணாலயம். எங்கு நோக்கினும் பறவைகள். மனித மற்றும் வாகனங்களின் சத்தத்தையே கேட்டுப் பழகிப்போன காதுகளுக்கு, ஆயிரக் கணக்கான பறவைகளின் ஒலி சங்கீதமாய் இனித்தது. பறவைகளின் சரணாலயத்திலிருந்து புறப்பட்டு வெகுநேரமாகியும், பறவைகளின் ரீங்காரம் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்த்து.

     அடுத்ததாக சீரங்கப் பட்டிணம். சீரங்கப் பட்டிணத்தில் நுழைந்த்துமே, ஒரு வித உணர்வு, உள்ளக் கிளர்ச்சி மெல்ல, மெல்ல உடலெங்கும் பரவுவதை உணர முடிந்தது.


     
திப்பு சுல்தான். இப்பெயரினை உச்சரிக்கும்போதே, ஓர் வீர உணர்வு உதிரத்தில் எழுகிறதல்லவா? புலிகளை மிகவும் நேசித்தவர் திப்பு. தன்னையும் புலியாகவே எண்ணி, எண்ணி, புலியாகவே வாழ்ந்தவர். தன் கொடியில் கூட புலியையே பொறித்தவர். ஆங்கிலேயர்களின் சிம்ம சொப்பனம்.

     இந்திய விடுதலைப் போராட்டத்தின் வீர வரலாற்றைத் தொடங்கி வைத்தவர் அல்லவா திப்பு சுல்தான். ஆங்கிலேயர்கள் மீண்டும், மீண்டும் திப்புவைச் சீண்டிச் சீண்டி, மண்னை அல்லவா கவ்வினார்கள். ஆங்கிலேயர்களின் சதி, சூழ்ச்சி, போர் எதுவுமே பலிக்கவில்லையே திப்பு சுல்தானிடம். இறுதியில் உடனிருந்தே கொல்லும் துரோகத்திற்கல்லவா இறையாகிப் போனார்.

      துரோகிகளும், நய வஞ்சகர்களும், சுயநலப் பேய்களும் உலாவும் காடல்லவா, இப்பூமி. திப்பு சுல்தான் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

          வாருங்கள், சீரங்கப் பட்டிணத்திற்குள் நுழைவோம். பெரிய மதில் சுவர் எங்களை வரவேற்கிறது. அதோ ஒரு பாதை தெரிகிறதல்லவா? அதுதான் மைசூர் கேட். வாருங்கள்.

     சீரங்கப் பட்டிணத்தை ஒரு தீவு என்றே சொல்லலாம்.  நாற்புறமும் கடலால் சூழ்ந்த தீவு அல்ல, ஆனால் நாற்புறமும் காவிரியால் சூழப்பெற்ற தீவுப் பகுதிதான் சீரங்கப் பட்டிணம். மேற்கில் இருந்து ஓடி வரும் காவிரியானது, சீரங்கப் பட்டிணத்திற்கு முன் இரண்டாகப் பிரிந்து, ஒரு புறம் காவிரியாகவும், மறுபுறம் வாகினி நதியாகவும் ஓடி, மீண்டும் ஒரே நதியாக, காவிரியாக ஒன்றிணைந்து ஓடுகிறது.


    
 இதோ ரெங்கநாதசுவாமி கோயில். ஒன்பதாம் நூற்றாண்டில் கங்க மன்னரால் கட்டப்பெற்ற கோயிலாகும் இது. பின்னர் ஹோசல மன்னர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் புதுப்பிக்கப்பட்ட, விரிவு படுத்தப் பட்ட கோயிலாகும். பாற்கடலில் ஆதிசேசன் என்னும் நாகத்தின் மேல் ரெங்கநாத சுவாமி துயில் கொள்ளும் காட்சியைக் கண்டு வணங்கினோம்.


    
 ரெங்கநாத சுவாமி கோயிலுக்கு எதிரிலேயே, கூப்பிடு தூரத்தில், திப்பு சுல்தான் வாழ்ந்த அரண்மனை. வானளாவிய அரண்மனையினை எதிர்பார்த்துச் சென்றால், அதிர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது. எங்கே அரண்மனை? வெறும் தரையும், சில குட்டிச் சுவர்களும் மட்டுமே மிஞ்சியுள்ளன. ஆம் ஆங்கிலேயர்களின் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இறையாகி, தரை மட்டமாக அல்லவா காட்சியளிக்கின்றது. திகைப்புடன் அரண்மனை இருந்த இடத்தையே பல நிமிடம் பார்த்துக் கொண்டு நிற்கிறோம். ஆங்கிலேயர்கள் திப்பு சுல்தான் மீது கொண்டிருந்த கோபத்தின் எல்லை புரிகிறது. பேசுவதற்கு வார்த்தைகள் ஏதுமின்றி, இடதுபுறமாகத் திரும்பிப் பயணிக்கின்றோம்.

     ஒரு சில நிமிடங்களிலேயே எதிர்படுகிறது ஒரு மேட்டுப் பகுதி. இதுதான் கர்னல் பெய்லிஸ் டங்கன் எனப்படும், திப்பு சுல்தான் உருவாக்கிய சிறை.


   
  மெதுவாகப் படிக்கட்டுகளில் ஏறுகிறோம். மேடான பகுதிக்குச் சென்றவுடன், தரைப் பகுதிக்கும் கீழே தெரிகிறது சிறைச் சாலை. தரை மட்டத்தில் மதில் சுவர். மதில் சுவற்றினை ஒட்டியவாறு ஓடுகிறது காவிரி. காவிரியின் தரை மட்டத்திற்கும் கீழே சிறைச்சாலை தெரிகிறது. படிக்கட்டுகளின் வழியே கீழே இறங்குகிறோம். பூமிக்கு முப்பது அடி ஆழத்தில் அச்சிறைக் கூடம். உள்ளே நுழைகிறோம்.

     நடுவில் இரு வரிசையில் பெரிய பெரிய தூண்கள். தூண்களுக்கும், இரு புறச் சுவர்களுக்கும் இடையே வளைவுகள். சுவற்றில் வரிசையாய் சிறு சிறு கற்கள் ஒரு அடி நீளத்திற்கு, ஒரே அளவினதாய், சம இடைவெளிகளில் பொறுத்தப்பட்டுள்ளன. கைதிகளை இரு கற்களுக்கும் இடையில் நிற்க வைத்து, இரு கைகளையும் தோள் உயரத்திற்கு, கிடைமட்டமாக நீட்டச் செய்து, இக் கற்களுடன் கைகளை பிணைத்துக் கட்டுவார்களாம். பின்னர் சுவற்றில் உள்ள ஒரு துவாரத்தினைத் திறந்து விட்டால், காவிரி நீரானது இச்சிறையினை மெல்ல மெல்ல நிரப்பும். முதலில் கைதிகளின் கணுக்காலினைத் தொடும், நீரானது, மெல்ல மெல்ல படிப்படியாக உயர்ந்து, கைதியினை முழுமையாய் மூழ்கடித்து விடும். கைதிகள் ஜலசமாதி ஆக வேண்டியதுதான்.


    
 திப்பு சுல்தானிடம் சிறைபட்டு, இச்சிறையில் அடைத்து வைக்கப்பட்ட ஆங்கிலேய அதிகாரியின் பெயர் கர்னல் பெய்லி என்பதாகும். அவர் பெயரே இச்சிறையின் பெயராக நிலைத்து விட்டது. சிறையின் மையப் பகுதியில், மேற் கூறையில் ஓர் பெரிய ஓட்டை. வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்கானதால் விழுந்த ஓட்டையாம் இது. சிறையின் வலப்புற மூலையில் ஓர் பள்ளம் தெரிகிறது.


     


இப்பள்ளத்தில் இறங்கினால், சுரங்கப் பாதை வழியாக பல இடங்களுக்கும் செல்லலாம் என்று கூறுகின்றனர். மீண்டும் படிகளில் ஏறி மேலே வருகிறோம். மதில் சுவற்றை தொட்டவாறு காவிரி ஓடுகிறது. மதில் சுவரில் வரிசையாய் சதுர வடிவில் துளைகள்.


    

சற்று குனிந்து, துளைகளுக்கு உள்ளே பார்த்தால், இந்த ஒரு துளை மூன்று துளைகளாக பிரிந்து செல்வதைக் காண முடிகிறது. வீரர்கள், இத்துளைகளுக்குள் துப்பாக்கியைச் சொருகி, ஆங்கிலேயர்களுடன் போரிட இந்த ஏற்பாடு. சற்று இடதுபுறமாகவோ, வலது புறமாகவோ சுட வேண்டும் எனில், சற்று துப்பாக்கியை வெளியே இழுத்து, வேண்டிய திசையைக் காட்டும் துளைக்குள் சொருகிச் சுடவேண்டியதுதான்.


    
 திப்பு சுல்தானின் முன்னேற்பாடுகளை உணர்ந்து மலைப்புடன் வெளி வருகிறோம். வந்த வழியாகவே மீண்டும் பயணம். ஐந்து நிமிடப் பயணம்.

      இதோ, இதோ இடது புறம் தெரிகிறதே இதுதான் தண்ணீர் வாயில் ( Water Gate )  காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.


    
  கர்னல் பெய்லி சிறையைப் பார்த்தபோது, நமக்கு ஏற்பட்ட மலைப்பு மெல்ல மெல்ல கரைகிறது. எத்துனை, எத்துனை முன்னேற்பாடுகள் செய்தும் என்ன பயன்? பாதுகாப்பினை எந்தெந்த வகைகளில் பலப்படுத்த முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் பலப்படுத்தியிருந்தாலும் என்ன பயன்?

     உடன் பிறந்தே கொல்லும் துரோகம் இருக்கிறதே, அத்துரோகத்திற்கு முன், இப்பாதுகாப்புகள் எல்லாம் எம்மாத்திரம். ஆம் ஒரு துரோகியின் நயவஞ்சகச் செயலுக்கு, நினைவுக் சின்னமாய், அவமானச் சின்னமாய் தண்ணீர் வாயில் ( Water Gate ) தலை குனிந்து நிற்கிறது.

     திப்பு சுல்தான் தினமும் அதிகாலையில் இவ்வழியே நுழைந்து, காவிரியில் நீராடுவது வழக்கம். பல்வேறு வழிகளில் போராடியும், திப்புவை ஒழிக்க இயலாத ஆங்கிலேயர்களின் வஞ்சக வலையில் விழுந்தவன்தான் மீர் சாதிக். எப்பொழுதும் திப்புவின் உடனிருக்கும் வீரன். உடனிருந்தே கொல்லும் வியாதி என்பது இதுதானோ?

     ஒரு நாள் அதிகாலை, மீர் சாதிக், யாரும் அறியா வண்ணம் தண்ணீர் வாயிலை ஆங்கிலேயர்களுக்குத் திறந்து விட்டான். வழக்கம்போல் நீராட வந்த திப்பு சுல்தான், ஆங்கிலேயர் படை திடுமென உள் நுழைந்து எதிர்பாராமல் தொடுத்திட்ட தாக்குதலை, முறியடிக்க முடியாமல், நயவஞ்சகத்தால் கொல்லப் பட்டார்.

      1799 ஆம் ஆண்டு மே மாதம் 4 ஆம் நாள், தனது 48 வது வயதில் திப்பு சுல்தான் துரோகத்திற்கு பலியான இடம் இது.

     கனத்த இதயத்துடன் தண்ணீர் வாயிலையே சிறிது நேரம் வெறித்து பார்த்தபடி நின்று விட்டு புறப்பட்டோம். சிறிது தூரம்தான் சென்றிருப்போம்.

     இதோ பாருங்கள், இதுதான் மே 4 ஆம் நாள் மதியம் திப்புவின் உடல் கண்டுபிடிக்கப் பட்ட இடம்.


      
கண்கள் திறந்திருந்தன. உடலில் மூன்று இடங்களில் வெட்டுக் காயங்கள். வலது காதில் கீழ் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு, கன்னத்தில் பதிந்து கிடந்தது. பட்டாடை, தலைப்பாகை எதுவும் இல்லை. ஆபரணங்கள் எதுவும் இல்லை. உடலுக்கு அருகே குர் ஆன் பிரதி. அவ்வளவுதான்.

      அமைதியாய், சிறிது நேரம் திப்புவின் உடல் கண்டெடுக்கப் பட்ட இடத்திலேயே நின்றோம். சிறிது நேரத்திற்குப் பிறது மௌனமாய் புறப்பட்டோம்.

       சிறிது நேரத்தில், திப்பு சுல்தானின் வழிபாட்டுக் கூடாமாகிய ஜும்மா மசூதிக்குச் சென்றோம்.  இம்மசூதியானது, ஒரு காலத்தில் ஆஞ்சநேயர் ஆலயமாக இருந்ததாகவும், பின்னர் திப்புவால் இந்த ஆலயம் பல்வேறு மாற்றங்களைப் பெற்று மசூதியாக மாற்றப்பட்டதாகவும் வழிகாட்டி ஒருவர் கூறினார். கோயில்களை இடித்து மசூதி கட்டியவர் என்ற பெயரும், சரித்திரத்தின் பக்கங்களில் திப்புவிற்கு உண்டு, அவ்வாறு இருக்குமோ என்று எண்ணினோம்.


    
 திப்புவின் மாளிகைக்கு நேர் எதிரே இருக்கும், ரங்கநாதசுவாமி கோயில் மனதில் தோன்றியது. கோயில்களை எல்லாம் இடித்தவர் என்றால், தனது மாளிகைக்கு நேர் எதிரில் இருக்கும் கோயிலை விட்டுவைத்திருப்பாரா?

       கோட்டையினை விட்டு வெளியேறி, முதன்மைச் சாலையில் பயணித்தோம். 15 நிமிட பயணத்திற்குப் பின், வலது புறம் திரும்பி, சிறிது தூரம் சென்றோம்.

      இதோ திப்புவின் கோடை கால மாளிகை. பெரும்பாலும் மரப் பலகைகளால் கட்டப் பெற்றக் கட்டிடம். சுவரெங்கும்.,திப்பு சுல்தானின் போர்க்களக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காட்சியளிக்கின்றன. கோடை காலத்தில் சூரியனின் தாக்கம் அதிகம் தெரியாமல இருப்பதற்காகத்தான், எங்கெங்கினும் மரப் பலகைகள் பொறுத்தப் பட்டுள்ளதாக்க் கூறினார்கள்.


    


அங்கிருந்து கிளம்பினோம். சில நிமிடப் பயணம்தான். கும்பஸ் (GUMBAZ) . திப்பு சுல்தானின் கல்லறை. திப்பு சுல்தான் மரணமடைந்த அடுத்த நாளே, திப்புவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் இது. திப்புவின் தந்தை ஹைதர் அலி, தாயார் பாத்திமா பேகம் இருவருக்கும் அருகிலேயே திப்புவும் நல்லடக்கம் செய்யப் பெற்ற இடம். கண்ணைக் கவரும் நுணுக்கமான வேலைப்பாடுகள். முகப்பில் பெரிய தோட்டம். தாஜ்மகாலை நினைவு படுத்தும் வகையிலான அமைப்பு. தோட்டத்திலும், திப்புவின் உடல் உறங்கும் இடத்திற்கு வெளியிலும் எங்கு நோக்கினும், கல்லறைகள் , கல்லறைகள்.


    

திப்புவின் மனைவி, குழந்தைகள் மற்றும் வீரர்களின் சமாதிகள் என ஐம்பதிற்கும் மேற்பட்ட சமாதிகள்.

     அச்சமென்பதை என்னவென்றே அறியாத திப்புவும், ஹைதர் அலியும் மீளாத் துயில் கொள்ளும் இடமல்லவா இது. கண்மூடி வணங்கினோம். அமைதியாய் பல நிமிடங்கள் கழிந்தபின். கனத்த இதயத்துடன், மனமின்றிப் புறப்பட்டோம்.

       இரண்டு நாட்கள் மைசூரில் செலவிட்டமையைத் தொடர்ந்து, எங்களது மகிழ்வூந்து ஊட்டி நோக்கிப் பயணிக்கத் தொடங்கியது. எங்களது மகிழ்வூந்து ஊட்டி மலையின் கொண்டை ஊசி வளைவுகளில், சுழன்று ,சுழன்று ஏறத் தொடங்கினாலும், மனமென்னவோ, திப்புவை சுற்றியே சுழன்று, உழன்று கொண்டிருந்தது.

 .... வருகைக்கு நன்றி ந்ண்பர்களே, மீண்டும் அடுத்த சனிக் கிழமை, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தொடரில் சந்திப்போமா