22 ஆகஸ்ட் 2013

கரந்தை - மலர் 19

தமிழர்களும் காந்தியும்

     மொழிகளில் எல்லாம் தூயதும், இனியதும், தொன்மையானதுமாகிய, நம் செந்தமிழ் மொழியானது, மக்களிலெல்லாம் இனியவரும், தூயவரும், பெரியவருமாகிய மகாத்மாவைப் பெரிதும் கவர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.  முப்பத்தி ஆறாவது வயதில், தமிழ் மொழியைக் கற்கத் தொடங்கிய காந்தி மகான், முதிய வயதில் மறையும் வரை, தமிழ் மொழியைக் கற்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது ஒவ்வொரு தமிழரும் எண்ணி எண்ணிப் பெருமைப் பட வேண்டிய ஒன்றாகும்.


     மாக்ஸ், முல்லர், போப், பெஸ்கி, ஹீராஸ் போன்ற அந்நிய நாட்டு அறிஞர்களைக் கவர்ந்து ஆட்கொண்ட, நம் மொழி, நம் நாட்டு மகானையும் கவர்ந்தது.
சபர்மதி ஆஸ்ரமம்

     ஆசிரமத்தில் நாங்கள் தமிழர்கள் இல்லாது, சில சமயங்களில் வழிபாடு நடத்தியிருக்கலாம், ஆனால் தமிழ்ப் பாடல்கள் பாடாது நடத்தியதில்லை என்று ஆச்சார்ய கலேல்கார் கூறுகிறார் என்றால், மகாத்மாவின் தமிழ்ப் பற்றை இதிலிருந்தே அறியலாம்.

     முதன் முதலில் காந்திஜி தமிழ் கற்கத் தொடங்கினாரே அது ஏன்? இது பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. தமிழருக்குப் பட்ட நன்றிக் கடனைத் திருப்பிச் செலுத்தவே, தமிழை மகாத்மா கற்க முற்பட்டார் என்று ஒரு சாரர் கூறுவர். திருக்குறளைக் கற்க வேண்டும் என்ற பேர் அவாவின் காரணமாகவே, அவர் தமிழ் கற்றார் என்று மற்றொரு சாரர் கூறுவர். ஆனால், இவை இரண்டுமே உண்மைதான். மகாத்மாவே இவ்விரண்டையும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆயினும் முதன்மையான காரணம் எண்ண?

     தென்னாப்பிரிக்காவில் தொடங்கப் பெற்ற போராட்டங்களில் தமிழர் அளவுக்கு, வேறு எந்த இந்திய மொழி பேசும் வகுப்பினரும் தியாகம் செய்யவில்லை. ஆக்கம் தரவில்லை என்று மகாத்மா காந்தி மனதாரக் கருதினார். ஆகவே உயிரைத் துச்சமாக எண்ணி, பொருள் இழப்பைப் பற்றிக் கவலைப் படாது, சிறைக்குச் செல்வதை விருந்துக்குப் போவதுபோல் விரும்பிப், பன்முறை முற்றுகையிட்டுத் தம்முடன் ஒத்துழைத்தத் தமிழர்களுக்கு சிறந்த முறையில் நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்று விரும்பினார்.


    
மகாத்மா காந்தியின் தென்னாப்பிரிக்க ட்ரான்ஸ்வால் போராட்டக் காட்சிகள்
  இந்தியன் ஒப்பீனியன் என்னும் இதழில 5.6.1909 அன்று காந்திஜி அவர்கள், தான் எழுதிய கட்டுரையில், தாம் அக்கறையுடன் தமிழைக் கற்க வேண்டும் என்று விரும்பியதற்கானக் காரணத்தை, அவரே கீழ்க் கண்டவாறு விளக்கி எழுதியிருக்கிறார்.

இந்த ட்ரான்ஸ்வால் போராட்டத்தில் தமிழர்களுக்கு இணையான அளவு, இந்தியர்களில் வேறு எவருமே பங்கேற்கவில்லை. ஆகையால் தமிழை நான் மிகுந்த கவனத்துடன் கற்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. வேறு காரணத்திற்காக அல்லாவிட்டாலும், என் மனத்தளவிலாவது என் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்வதற்காக நான் தமிழைக் கற்றேன். நான் அம்மொழியைப் படிக்கப் படிக்க, அதனுடைய அழகுகளை கண்டு அனுபவிக்கிறேன். அது மிக மிக எழில் நிறைந்த இனிய மொழி. அதனுடைய அமைப்பில் இருந்தும், அதில் நான் படித்தவற்றுள் இருந்தும், தமிழர்கள் மத்தியில், புத்திக் கூர்மையும், சிந்தனா சக்தியும் உள்ள, விவேகம் நிறைந்த ஏராளமான மக்கள் இருந்திருக்கிறார்கள், மேலும் மேலும் அவர்கள் தோன்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்கிறேன் என்று எழுதியுள்ளார்.

                   கற்க கசடற கற்பவை கற்றபின்
                   நிற்க அதற்குத் தக

என்ற குறள் அவருக்கு மிகவும் பிடித்தமானதாகும்.

                   திக்கற்றவருக்குத் தெய்வமே துணை

என்ற தமிழ்ப் பழமொழியை எண்ணி எண்ணி மகிழ்வார்.

                   பிறப்புண்டேல் இறப்புண்டு

என்ற பழமொழியும் அவருக்கு மிகவும் பிடித்த பழமொழியாக விளங்கியது.

     திருக்குறளுக்கு அடுத்தாற்போன்று, அவருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பக்திப் பெரு நூல் மாணிக்க வாசகப் பெருமானின் திருவாசகம் ஆகும். அதிலும்

              முத்திநெறி  யறியாத  மூர்க்கரொடு  முயல்வேனைப்
              பக்திநெறி  யறிவித்துப் பலவினைகள்  பாறும்வண்ணம்
              சித்தமல  மறுவித்துச்  சிவமாக்கி  யெனையாண்ட
              அத்தனெனக்  கருளியவா  றார்பெறுவா  ரச்சோவே

என்ற பாடலினை, சேவா கிராமத்திலும், சபர்மதி ஆசிரமத்திலும் நாள்தோறும் பாடச் செய்து, கேட்டு அவர் பேரானந்தம் அடைவார். மேலும் சென்னைக்கு வெளியே உள்ளவர்களும் தமிழைக் கற்க வேண்டும் என்றும் அவர் தனது கட்டுரைகளில் எழுதியதில் இருந்தே, அவர் தமிழ் மொழியின் மேலும் தமிழர்களின் மீதும் வைத்திருந்த அன்பையும் பாசத்தினையும் உணரலாம்.

தமிழ் நாட்டில் காந்தி

     காந்திஜி அவர்கள் முதன் முதலாகத் தமிழகத்திற்கு வந்தது 1896 ஆம் ஆண்டிலாகும். அவர் கடைசி முறையாக தமிழகத்திற்கு வந்தது 1946 ஆம் ஆண்டிலாகும். இந்த ஐம்பது ஆண்டுகளில், காந்திஜி 28 முறை தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.

     காந்திஜியின் வாழ்வில் தமிழகம் எத்துனையோ முதன்மைகளை அடைந்திருக்கின்றது. காந்திஜி தோற்றுவித்த புது சகாப்தத்தில், எதிரி மீது, ஆத்திரமோ கோபமோ கொள்ளாது மனம் உவந்து உயிர் நீத்த உண்மைத் தியாகிகளின் முதல் வரிசையில் வள்ளியம்மா, நாகப்பன், நாராயண சாமி ஆகிய தமிழர்கள்தான் தலைமை இடத்தினைப் பெற்றார்கள்.

     1932 ஆம் ஆண்டில் கொடியேந்தி ஊர்வலம் சென்றபோது, போலீசாரால் அடிபட்டு உயிர் நீத்த, கொடி காத்த குமரனை தமிழகம் உள்ளவரை மறக்க இயலுமோ? தென்னாப்பிரிக்காவில் பாமர மக்களின் நண்பரான காந்தியிடம், முதன் முதலாக பாமர மக்களை, கூலிகளைக் கொண்டு வந்து இணைத்து வைத்தவன் பாலசுந்தரம் என்ற ஒரு தமிழன் அல்லவா.

     முதன் முதலாக இந்தியா முழுமைக்குமான ஒரு போராட்டத்தை எவ்வாறு தொடங்குவது என்பதில் விடைகாண இயலாமல் தவித்துக் கொண்டிருந்த, அகிம்சா வீரருக்குக் கனவு மூலம் விடை கிடைத்தது தமிழகத்தில்தான். வாழ்நாள் எல்லாம் மாணவர்களுடன் இணைபிரியாத நட்பு கொண்டிருந்த வள்ளலுக்கு, மாணவர்களின் தொடர்பு முதன் முதலில் கிடைத்தது தமிழகத்தில்தான்.

     மேல் அங்கியைக் கழற்றி எறிந்து விட்டு, அரை ஆடை உடுத்தி தரித்திர நாராயணர்களுடன் அவர் ஐக்கியமடைந்தது தமிழகத்தில்தான்.

     முதன் முதலாக அவருக்குத் தேசப் பிதா என்ற பட்டத்தைச் சூட்டியவர்கள் தமிழக மாணவர்கள்தான். இவ்வாறு பல முதன்மைகள் தமிழகத்திற்கு உண்டு.

     காந்தியடிகள் தென் ஆப்பிரிக்காவிலிருந்து வந்து இந்திய அரசியலில் கால் பதித்தபோது, தமிழக அரசியலில் பாரப்பணரல்லாதார் இயக்கம் வீச்சுடன் மேலெழுந்து கொண்டிருந்தது.

தஞ்சையில் காந்தி

     தமிழகத்திற்கு 28 முறை வந்த காந்தியடிகள், அதில் ஏழு முறை தஞ்சைக்கு வருகை புரிந்துள்ளார். 1919 ஆம் ஆண்டில் மார்ச் 24 மற்றும் 28 தேதிகளிலும், 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 16 ஆம் தேதியும், 1921ஆம் ஆண்டில் செப்டம்பர் 18 ஆம் தேதியும், 1927 ஆம் ஆண்டில் செப்டம்பர் 16 ஆம் தேதியும், 1934 ஆம் ஆண்டில் பிப்ரவரி 15 ஆம் தேதியும், 1946 ஆம் ஆண்டில் பிப்ரவரி 4 ஆம் தேதியும், என ஏழு முறை தஞ்சைக்கு வருகை தந்துள்ளார்.

       1927 ஆம் ஆண்டு கதர் திட்டத்தை விளக்குவதற்காகத் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்த காந்தியடிகள், கதர் வளர்ச்சியைப் பற்றி மட்டுமல்லாமல், பிராமணர் பிராமணரல்லாதார் சிக்கலைப் பற்றியும் விவாதிக்க வேண்டியிருந்தது. அந்த அளவுக்கு இந்த சிக்கல் 1927 இல் தமிழகத்தில் விசூவரூபம் எடுத்திருந்தது.  ஆகையால் இந்த சிக்கலைத் தீர்த்து வைக்க அவர் உதவி வேண்டுமென்று பலர் கேட்டுக் கொண்டனர்.

            தனது சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக மன்னார்குடி வந்த காந்திஜி அவர்கள், மன்னார்குடியிலிருந்து, நாகப்பட்டிணம் பாசஞ்சர் தொடர் வண்டி மூலம் 16.6.1927 ஆம் நாள் காலை, தனது குழுவினருடன் தஞ்சைக்கு வந்து சேர்ந்தார். ஒவ்வொரு பெரிய நகருக்கு வரும்போதும, கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக, அதற்கு முந்தைய ரயில் நிலையத்தில் காந்திஜி இறங்கி விடுவார் என்பதை அறிந்திருந்த, தஞ்சை மக்கள், தஞ்சைக்கு கூட்டுரோடு வழியாக நுழையக் கூடிய இடத்தில் கூடி நின்றார்கள். ஆனால் காந்திஜி இம்முறை அவ்வாறு இறங்கவில்லை. திட்டமிட்டபடி தஞ்சாவூர் இரயில் நிலையத்திலேயே வந்து இறங்கினார். தஞ்சையில் காந்திஜி குழுவினர் உக்கடை இல்லத்தில் தங்கினர்.

     தஞ்சாவூரில் நடைபெற்ற முக்கிய காரியம், நீதிக் கட்சியைச் சார்ந்த உயர் தலைவர்களான, சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களும் உமாமகேசுவரனார் அவர்களும் காந்தியைச் சந்தித்து உரையாடியதே அகும்.

.... வருகைக்கு நன்றி நண்பர்களே. மீண்டும் சந்திப்போமா.