27 ஆகஸ்ட் 2013

கரந்தையில் குடந்தை

   
 திங்கட்கிழமை (26.8.13) காலை 10.55 மணி. வகுப்பறையில் இருந்தேன். அலைபேசி ஒலித்த்து. மறுமுனையில் நண்பரும் உடற்கல்வி ஆசிரியருமான திரு துரைபிள்ளை நடராசன்.

     பொதுவாக ஆசிரியர்கள் வகுப்பறைக்குச் செல்லும் பொழுது அலைபேசியை தவிர்த்துவிட்டுச் செல்வதுதான் நல்லது. இருப்பினும் இந்த அவசர யுகத்தில், எந்த நேரத்திலும், யாரிடமிருந்தும் அவசர அழைப்பு வரலாமல்லவா? எனவே வகுப்பறைப் பணிகளைப் பாதிக்காதவாறு அவ்வப்போது அலை பேசியைப் பயன்படுத்துவது உண்டு.


    
தங்களின் வலைப் பூ நண்பர் சரவணன் அவர்கள், ஆசிரியர் அறையில் காத்திருக்கிறார் என்றார் நண்பர் நடராசன். அப்பொழுது இரண்டாவது பிரிவு வேளை முடிவுற்றமைக்கான மணியும் ஒலித்தது. இதோ வருகிறேன் என்றேன்.

     ஆசிரியர்கள் ஓய்வு அறைக்குச் சென்றேன். குடந்தையூர் சரவணன் அவர்கள் காத்திருந்தார். எதிர்பார்க்காத இனிமையான சந்திப்பு. வாருங்கள் வாருங்கள் என கைகளைப் பற்றிக் கொண்டேன்.

     வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்னும் உன்னத வழியில் தனது வாழ்வினை அமைத்துக் கொண்டவர். பிறந்த மண்ணை மறவா நல் மனத்தினர். குடந்தையூர் எனத் தன் வலைப் பூவில், தனது ஊரினையும் இணைத்து பெருமிதம் கொள்பவர்.

     சென்னையில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் பணி. இல்லம் இருப்பதோ குடந்தையை ஒட்டியுள்ள வலங்கைமானில். திங்கள் முதல் வெள்ளிவரை சென்னையிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வலங்கைமானிலும் வாசம் செய்பவர்.


     
   தஞ்சைக்கு ஒரு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தேன். உங்களைக் காண வேண்டும் என்ற ஆவலில் கரந்தை வந்தேன் என்றார். மனம் மகிழ்ச்சியில் மிதந்த்து.

     வலைப் பூவின் வாசம் எப்படியெல்லாம் புதுப்புது உறவுகளை உண்டாக்கித் தருகிறது என்பதை எண்ணி வியந்தேன்.

       சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும்
      கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
எனப் பாடுவார் பாரதி. ஆனால் இன்று வீட்டில் அமர்ந்தவாறே உலகத்துச் சொந்தங்களை எல்லாம் ஒன்றிணைக்க முடிகிறதே. உறவாடி மகிழ முடிகிறதே.

     வலைப் பூ என்று யார் பெயர் வைத்தார்களோ தெரியவில்லை. ஆனால் என்னவொரு பொருத்தமான பெயர். உலகத்து உறவுகளை எல்லாம் வலை வீசிப் பிடித்து ஓரிடத்தில உறவாட விடுகிறதே.

     அரைமணி நேரத்திற்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்தோம். நண்பர்கள்,


துரைபிள்ளை நடராசன்
http://duraipillainatarajan.blogspot.com/


கரந்தை சரவணன்
http://karanthaisaravanan.blogspot.com/

ஆகியோரை அறிமுகப் படுத்தினேன்.

     சென்னைப் பதிவர் மாநாட்டிற்கு வாருங்கள் என அழைத்தார்.

     அவ்வப்போது, ஓரிரு பதிவுலக நண்பர்களைச் சந்திக்கும் போதே, மனம் இப்படி ஆனந்தக் கூத்தாடுகிறதே, பதிவுலகச் சகோதர, சகோதரிகளை எல்லாம் ஓரிடத்தில் சந்தித்தால் எப்படியிருக்கும்?

     வலைப் பூ என்னும் பரமபத வாசலின் வழி சென்று, சொர்க்கத்தையே சொந்தமாக்கிக் கொண்ட உணர்வல்லவா ஏற்படும். சொர்க்கத்தில் கால் பதிக்க யார்தான் மறுப்பார்கள். ஆசைதான். ஆனாலும் வடபழநிக்கு வர இயலாத நிலை.

     தலைவலி என்னும் கடுமையானத் தாக்குதலுக்கு ஆளான என் மனைவி, தற்பொழுதுதான் மெல்ல, மெல்ல குணமடைந்து வருகிறார். ஆகையினால் தஞ்சையிலேயே இருக்க வேண்டிய சூழல்.

     ஆகவே நண்பர்களே, என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.


   தமிழ்நா டெங்கும் தடபுடல் அமளி
  தமிழின்  தொண்டர்  தடுக்கினும்  நில்லார்.
  ஓடினார்  ஓடினார்,  ஓடினார்  நடந்தே

 ஐயோ, எத்தனை அதிர்ச்சி, உற்சாகம்
  சமுத்திரம் போல அமைந்த  மைதானம்
 அங்கே கூடினார் அத்தனை பேரும்

  உள்ளம்பு ஊற்றி  ஊற்றி  ஊற்றித்
  தமிழ் வளர்க்கும்  சங்கம் ஒன்று
  சிங்கப் புலவரைச் சேர்த்தமைத்  தார்கள்

   உணர்ச்சியை, எழுச்சியை, ஊக்கத் தையெலாம்
   கரைத்துக் குடித்துக் கனிந்த கவிஞர்கள்
   சுடர்க்கவி தொடங்கினர்  பறந்த்து தொழும்பு

   கற்கண்டு மொழியில் கற்கண்டுக் கவிதைகள்
   வாழ்க்கையை வானில், உயர்த்தும் நூற்கள்
   தொழில்நூல், அழகாய்த் தொகுத்தனர் விரைவில்

    காற்றி லெலாம் கலந்த்து கீதம்
    சங்கீ தமெலாம்  தகத்தகா யத்தமிழ்

வலைப் பூ பதிவர் மாநாட்டிற்காகவே எழுதப்பட்டது போல் தோன்றுகிறதல்லவா இப்பாடல்.

     பாவேந்தர் பாரதிதாசன் கண்ட தமிழ்க் கனவு இப்பாடல். வலைப் பூ பதிவர் மாநாட்டின் மூலம் பாரதிதாசன் கண்ட கனவு நிறைவேறிவிட்டதாகவே எண்ணுகின்றேன். சான்றோர் கண்ட கனவு ஒருபோதும் பொய்ப்பதில்லை.

       ஞாயிற்றுக் கிழமை நான் (1.9.2013) அன்று தஞ்சையிலேயே இருந்தாலும் மனம் என்னவோ, வடபழநியைத்தான் கிரி வலம் வந்து கொண்டிருக்கும்.

      பதிவர் மாநாடு வெல்லட்டும்.     புதுமைகளைப் படைக்கட்டும்.