29 நவம்பர் 2013

இணைந்த இதயங்களின் ஓராயிரம் நன்றிகள்

நான் உன்னை எப்படி நேசிக்கிறேன்
இதோ வழிகளை எண்ணுகிறேன்.

பார்வைக்கு அப்பால் உன்னை உணரும்போது
ஆன்மாவின், தெய்வீக அருளின் உச்சியில்
நான் உன்னை நேசிக்கிறேன்.

பாராட்டால் குளிர்வதைப் போல்
நான் உன்னைத் தூய்மையாக நேசிக்கிறேன்

சுவாசம், புன்னகை
கண்ணீர்
வாழ்வின் சகல விஷயங்களோடும்
நான் உன்னை நேசிக்கிறேன்.
-           எலிசபெத் பேரட் பிரவுனிங்

     நண்பர்களே, இருளில் இணைந்த இதயங்களான, வெற்றிவேல் முருகன் நித்யா தம்பதியினரின் திருமண நிகழ்வினை, மனக் கண்ணால் கண்டு, நெஞ்சார வாழ்த்தி, இனம் புரியாத உணர்வுகளின் பிடியில் சிக்குண்டு நீங்கள் தவிப்பது எனக்குப் புரிகிறது.

     கருத்துரைகளையே, திருமண அட்சதையாய்த் தூவி, மணமக்கள் வாழ்வாங்கு வாழ வாழ்த்தி மகிழ்ந்திருக்கும், தங்களின் அன்புள்ளம், உங்களின் ஒவ்வொரு எழுத்திலும் தெளிவாய் தெரிகிறது.

     நண்பர்களே, சுவாமிமலை அம்பாள் சன்னதியில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய உற்றார், உறவினர்களை விட, வலைப் பூவின் வழியாக, இருளில் ஒளி தேடி இணைந்த உள்ளங்களை, நெகிழ்ந்து வாழ்த்திய நேச மிகு நண்பர்களின் எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்து விட்டது.


     உண்மையிலேயே மணமக்கள் கொடுத்து வைத்தவர்கள்தான். பூமிப் பந்தின் ஒவ்வொரு மூலையில் இருந்தும், நேசமிகு வலைப் பூ உறவுகளின், பாசமிகு வார்த்தைகளில் நனைந்திருக்கிறார்கள். இவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்தான்.

     நண்பர்களே, உங்கள் ஒவ்வொருவருக்கும் மணமக்கள் இருவரும், தங்களது நன்றியினைத், தங்களது மகிழ்வினைத் தெரிவித்துள்ளார்கள்.

     ஆம் நண்பர்களே, கடந்த புதன் கிழமை 27.11.2013 பள்ளி முடிந்து, வீடு திரும்பிய பின், கணினி முன் அமர்ந்து, மின்னஞ்சலைப் பார்த்தபோது, மனம் இன்ப அதிர்ச்சியில் உறைந்தது. காரணம், மனமகண் வெற்றிவேல் முருகனின் மின்னஞ்சல் காத்திருந்தது.

We humbly accept greetings from the other bloggers.

      மணமக்களை வாழ்த்திய ஆயிரக்கணக்கான வலைப் பூ உறவுகளுக்கு, மணமக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்து மகிழ்கின்றேன்.

     நண்பர்களே, அம்மின்னஞ்சலிலேயே ஒரு பாடல். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்றான நான்மணிக் கடிகை-யில் இருந்து.

கொடுப்பின் அசனம் கொடுக்க, விடுப்பின்
உயிர் இடையீட்டை விடுக்க, எடுப்பின்
கிளையுள் அழிந்தார் எடுக்க, கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்.

     சத்தியமாக எனக்குப் பொருள் விளங்கவில்லை நண்பர்களே. மனம் கூசித்தான் போனது. கண்ணிருந்தும், தாய் மொழியாம் தமிழில் நான்கு வரிகளைப் படித்து பொருள் உணர இயலவில்லையே என்ற இயலாமை.

     அலைபேசியை எடுத்தேன். எனது ஆசிரியர் புலவர் கோ.பாண்டுரங்கன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். பாடலைச் சொன்னேன். அடுத்த நொடி, விளக்கம் அருவியாய் கொட்டியது.

     ஒருவருக்கு ஒன்றைக் கொடுப்பதானால், உணவைக் கொடு. ஒன்றை விட்டுவிடுவதானால், உயிரைப் பற்றிய பற்றை விட்டு விடு. ஒருவரை உயர்த்த வேண்டுமென்றால், உன் உறவினருள் ஏழையரைத் தாங்கி உயர்த்து. ஒன்றைக் கெடுப்பதானால், கோபத்தைக் கெடு.

     நண்பர்களே, பாட்டின் பொருள் அறிந்த பிறகு வெற்றிவேல் முருகன் மீதான மதிப்பு மேலே, மேலே உயர்ந்த கொண்டே செல்கிறது.

சந்தித்தாக வேண்டியதை எதிர்கொள்பவனை நான் நேசிக்கிறேன்
வெற்றிகரமாக அடிவைத்து சந்தோஷமான இதயத்துடன்
தினசரி சண்டையில் பயமின்றி சண்டையிடுபவன் அவன்.
-          சாரா கே. போல்டன்

     வாழ்வே போராட்டமாய் மாறிய பிறகும், தமிழை நேசித்து வாழும் உள்ளம் வெற்றிவேல் முருகனுடையது என்பதை அறியும்போது, நெஞ்சம் பெருமையில் விம்முகிறது நண்பர்களே.

     நண்பர்களே, இதோ வெற்றிவேல் முருகனின் மின்னஞ்சல், தங்களின் நேசமிகு பார்வைக்கு.
-------------------------------
Dear Jeyakumar Sir,

We (Nithya and I) have read your blog post and are honoured to be presented in such a wonderful. We also very humbely accept greetings from the other bloggers. Once again our sincere gratitude to you for positively writing our life history.

Sincere Regards,
Vetrivel Murugan and Nithya.


கொடுப்பின் அசனம் கொடுக்க; விடுப்பின்
உயிர் இடையிட்ட விடுக்க; எடுப்பின்
கிளையுள் அழிந்தார் எடுக்க; கெடுப்பின்
வெகுளி கெடுத்து விடல்!
                                           நான்மணிக்கடிகை - (பாடல்-79)


Vetrivel Murugan Adhimoolam,
Department of Sociology,
The New School for Social Research,
65 fifth avenue,
New York, New York 10003.

Home:

1370 Saint Nicholas avenue,
APT 15M,
New York, NY 10033.

Phone: +1-347-208-6976.

E-mails:

avm124@gmail.com

murua795@newschool.edu

vadhimoolam@lagcc.cuny.edu

vadhimoolam@bmcc.cuny.edu

Skipe ID: vetrivelmurugan

Twitter: avm124

-----------------------------------------

     இதுமட்டுமல்ல நண்பர்களே, 28.11.2013 மாலை 6.30 மணியளவில், அலைபேசி அழைத்தது. மறுமுனையில் வெற்றிவேல் முருகன்.

     சார், உங்களது கட்டுரையினைப் படிக்கக் கேட்டேன். மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். கட்டுரையினைப் படித்துக் கருத்துரை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அடுத்த முறை இரும்புத் தலைக்கு வரும்பொழுது, உங்களைச் சந்திக்க விரும்புகிறேன் என்றார்.

     மகிழ்ச்சியோடு காத்திருக்கிறேன் ஐயா, வரும்பொழுது தெரியப் படுத்துங்கள். அவசியம் வருகிறேன் என்றேன்.

     உங்களோடு பல செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். என் போன்ற மனிதர்களின் உணர்வுகள், செயல்பாடுகள் குறித்துப் பேச ஆசைப் படுகின்றேன். நீங்கள் இதை வெளி உலகிற்குத் தெரியப்படுத்த வேண்டும். என் போன்றோரை, இவ்வுலகம், இன்னும் முழுமையாய் புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுகின்றேன் என்றார்.


     நண்பர்களே, இதைவிட வேறு என்ன வேலை எனக்கிருக்கிறது. நண்பர் வெற்றிவேல் முருகன், இரும்புத் தலைக்கு வரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.

பாடகன் பாடியதற்கு மேலான இன்பம் இருக்கிறது
இருவரும் தெய்வீக அருளால் ஒன்றிணைந்து
இதயம் மாறாதிருத்தல், நெற்றி சுருங்காதிருத்தல்
எல்லா இன்னல்களிலும் அன்பாய் சாகும்வரை இருத்தல்

ஒரு மணி நேரம் புனிதமான அன்போடு இருப்பது
பல யுகங்கள் இதயமற்றுத் திரியும் இன்பத்திற்கு ஈடானது
மண்ணுலகில் சொர்க்கம் இருக்குமானால்
அது இதுதான் அது இதுதான்.
-          தாமஸ் மூர்

மணமக்கள் இருவரும்
இன்புற்று இனிது வாழ

வாழ்த்துவோம் நண்பர்களே.