28 மார்ச் 2014

நல்லாரைக் காண்பதுவும் நன்றே

நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலம்மிக்க
நல்லார்சொல் கேட்பது வும்நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே, அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று

     நண்பர்களே, ஔவையின் அமுத வரிகளில், எளிமையும், இனிமையும், பொருள் வளமையும் நிறைந்த, இப்பாடலைப் பலமுறைப் படித்துப் படித்து, நீங்கள் நிச்சயம் பரவசப்பட்டிருப்பீர்கள். இப்பாடலின் பொருளினை நேரிடையாய் உணர்ந்து, அனுபவிக்கும் ஓர் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.


     கடந்த 14.2.14 முதல் 23.2.14 வரை பத்து நாட்கள், தஞ்சையில் ரோட்டரி புத்தகக் கண்காட்சி நடைபெற்றதைத் தாங்கள் நன்கறிவீர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தமிழறிஞரின் சொற்பொழிவு இனிதாய் அரங்கேறியது.

     ஓலைச் சுவடி வடிவில் சிதறிக் கிடந்த பழங்கால இலக்கண, இலக்கியங்களை மீட்டு, அச்சு வடிவில் வழங்கி, அவை இறந்துபடாது, காத்த பெருமைக்கு உரிய தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின், 160 வது பிறந்த நாள் 19.2.2014 ஆகும்.

     புத்தகக் கண்காட்சியின் அன்றைய நிகழ்வு உ.வே.சா அவர்களின் பிறந்த நாள் விழாவாகவே நடத்தப் பெற்றது.
சமயம் கடந்த உ.வே.சா- வின் தமிழ்ப் பணிகள்
என்னும் தலைப்பில்
அன்று மேடையேறி முழங்கியவர் யார் தெரியுமா?
கவிஞர் முத்து நிலவன் அவர்கள்தான்.
http://valarumkavithai.blogspot.com/

    

கடந்த 35 ஆண்டுகளாகத் தமிழாசிரியர் பணி. எழுதுதல், எழுதுவித்தல், பேசுதல், பேசுவித்தல். இதுதான் இவரது தலையாய பணி. தான் மட்டும் எழுதினால் போதாது, தான் மட்டும் மேடையேறிப் பேசினால் போதாது என்று, மற்ற தமிழாசிரியர்களையும், தமிழாசிரியைகளையும் எழுதவும், பேசவும் ஊக்குவித்து வருபவர்.

     35 ஆண்டுகால அரசுப் பணியில் எவ்வளவு சேர்த்திருப்பார் என்று எண்ணுகிறீர்கள்?  15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களையும், எண்ணற்ற தமிழ் உள்ளங்களின் நட்பினையும் சேமித்து, பத்திரமாய் பாதுகாத்து வருகிறார்.

     அன்று மாலை 6.00 மணியளவில், தஞ்சை புதிய பேரூந்து நிலையத்தில், கவிஞரை வரவேற்றேன். இருவரும் இரு சக்கர வாகனத்தில், புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றோம்.


அங்கே, எங்களுக்காக
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள்
சோழ நாட்டில் பௌத்தம்
முனைவர் பா.ஜம்புலிங்கம்
http://drbjambulingam.blogspot.com/
காத்திருந்தார்.

     இருபதாண்டுகால நண்பர். உழைப்பின் உறைவிடம். தமிழ்ப் பல்கலைக் கழகத்தில், தட்டச்சராய் நுழைந்து, பணியோடு கல்வியிலும் உயர்ந்து, முனைவர் பட்டம் பெற்றவர். ஆறு நூல்களின் ஆசிரியர். தமிழ்ப் புலமை மிக்கவர்.

      தமிழ்ப் புலமைக்கு நிகராக ஆங்கிலப் புலமையினையும் வளர்த்துக் கொண்டவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நற்புலமை பெற்ற மனிதர்கள், அருகி வரும் இக்காலத்தில், இருமொழிகளிலும் உயர்ந்து நிற்பவர்.

     கடின உழைப்பு என்றால் என்ன என்பதை இவரிடம் நாம் கற்றுக் கொள்ளலாம். சோழ நாட்டில் பௌத்தத்தின் அடிச்சுவடுகளைத் தேடித் தேடி, அயராது, தளராது பயணித்துக் கொண்டே இருப்பவர். இவரால் உலகின் கவனத்திற்கும், பார்வைக்கும் வந்த பௌத்தச் சிற்பங்கள் ஏராளம், ஏராளம்.

     நண்பர்களே, இவரை அலைபேசியில் அழைத்து, பேரூந்தே சென்றறியாத ஓர் ஊரில், ஓர் இடத்தில், ஒரு சிலையினைக் கண்டேன், அச்சிலை புத்தர் சிலை போலத்தான் தெரிகிறது என்று சொல்வீர்களேயானால், அடுத்த நாள் அவ்விடத்தில் இருப்பார். பேரூந்து இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன. மிதிவண்டியில் செல்வார். அதுவுமில்லாவிட்டால், நடந்தும் செல்வார். அச்சிலையைக் காணாமல் வீடு திரும்ப மாட்டார்.

     இவர்தான், எனது வலையுலக குருநாதர். நான் வலைப் பூ தொடங்கியதற்கே, காரணகர்த்தா இவர்தான். இவரின் நட்பினைப் பெறாதிருந்தால், வலையுலக உறவுகளே இல்லாத, தனியனாய், வீட்டில் முடங்கிப் போயிருப்பேன்.

     கவிஞர் முத்து நிலவன் அவர்களும், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களும் முதன் முதலாய் சந்தித்தனர். இனிமையான உரையாடல் தொடர்ந்தது. வாயை மூடி, காதுகளைத் திறந்து வைத்துக் கொண்டேன்.

     சிறிது நேரத்தில் அழைப்பு வரவே, கவிஞர் மேடையேறினார். நாங்கள் முதல் வரிசையில் அமர்ந்தோம். கவிஞரின் பேச்சு, வந்திருந்த அனைவரையும் கட்டிப் போட்டது.

     ஒருமுறை உ.சே.சா அவர்கள் இராமநாதபுரம் சென்றார். பாண்டித்துரைத் தேவரோடு ஒரு மாதம் தங்கியிருந்தார். காலையிலும், மாலையிலும் பாண்டித்துரைத் தேவரைச் சந்தித்து உரையாடினார். என்னுடைய தாயார் இறந்துபோன துக்கத்தைச் சம்பிரதாயமாக விசாரிக்க வந்தீர்கள். உங்களோடு சல்லாபம் செய்து கொண்டிருப்பதில் என் அன்னை இறந்து போன துக்கமே மாறிவிட்டது. என்னுடைய தாயார் மிகச் சிறந்தவர். அவர் வாழ்ந்திருந்தக் காலத்திலும் எனக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்தார்கள். இறந்தபிறகும் உங்களை எல்லாம் வரும்படி செய்து எனக்குத் தமிழின்பம் உண்டாகச் செய்தார்கள் என்று பாண்டித்துரைத் தேவர் உள்ளம் உருகிப் பேசினார்.

     ஒரு நாள் பாண்டித்துரைத் தேவர் அரசராகிய பாஸ்கர சேதுபதியைப் பார்க்கப் போனார். மன்னரைப் பார்த்து விட்டு உ.வே.சா அவர்களைக் காண வந்தார். உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றினைச் சொல்ல வந்திருக்கிறேன் என்றார்.

     ஏதாவது புதிய நூலைப் பதிப்பிக்க வேண்டுமென்று சொல்லப் போகிறீர்களா என உ.வே.சா கேட்டார்.

     ஒரு நூல் அல்ல, பல நூல்களை நீங்கள் பதிப்பிக்கலாம். அந்த அளவுக்குச் செல்வம் அளிக்குமாறு ஒரு கிராமத்தையே, உங்கள் பெயரில் எழுதிவைக்க மகாராஜா நினைக்கிறார் என்றார்.

     அடுத்த நாள் மகாராஜாவைச் சந்தித்தார். பாண்டித்துரைத் தேவர் அவர்கள், மகாராஜா சொல்லி அனுப்பிய செய்தியைத் தெரிவித்தார். அதன் மூலம் தங்களுக்கு என்பால் எவ்வளவு அன்பும், நம்பிக்கையும் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொண்டேன். எனக்கு இப்போது குறை ஒன்றும் இல்லை. ஆண்டவர் திருவருளால் கல்லூரியில் சம்பளம் வருகிறது. தாங்கள் வழங்குவதை ஏற்க மறுக்கிறேன் என எண்ணக் கூடாது. நான் தமிழ் நூல்களை ஆய்ந்து பதிப்பு செய்தே வாழ விரும்புகிறேன். இக்கிராமத்தை ஏற்றால், என் மீதமுள்ள வாழ்வு , கணக்கு பிள்ளைப் பணியிலேயே கழிந்து விடும் என்றார்.

     இதுதான் உ.வே.சா அவர்களின் தமிழுள்ளம். தாயுள்ளம். உ.வே.சா., நேசித்தது தமிழை மட்டும்தான் பொருளையல்ல என்பதை, கவிஞர் எடுத்துரைத்தது, அனைவரின் உள்ளங்களையும் புரட்டிப் போட்டது.

     கவிஞர் முத்து நிலவன் அவர்கள் பொழிவினை நிறைவு செய்தபோதுதான், அருகில் வந்தவரைக் கவனித்தேன்.

தஞ்சையம்பதி
http://thanjavur14.blogspot.com/
என்னும் ஆன்மீக வலைத் தளத்திற்குச் சொந்தக்காரரான
திருமிகு துரை.செல்வராஜ்.

     வாருங்கள், வாருங்கள் எனக் கைகளைப் பற்றிக் கொண்டேன். நினைவலைகள் பின்னோக்கிப் பயணிக்கத் தொடங்கின.

     நான் ஆசிரியராகப் பணியாற்றும், உமாமகேசுவர மேனிலைப் பள்ளிக்கு அருகில், ஸ்ரீ விஷ்னு நெட் கபே என்னும் பெயரில், சில ஆண்டுகளுக்கு முன், கணினியகம் ஒன்றினை நடத்தி வந்தார்.

     நான் எனது எம்.ஃபில்., ஆய்வுப் படிப்பிற்காக, கணித மேதை சீனிவாச இராமானுஜன் அவர்களைப் பற்றிய, தகவல்களைத் திரட்டத் தொடங்கிய பொழுது, எனக்குப் பேருதவி புரிந்தவர் இவர்தான்.

     அவ்வமயம் என்னிடம் கணினி இல்லை. கணினி மையங்களில் அமர்ந்து, இணையத்தைப் பயன்படுத்தவது எப்படி என்பதைக் கூட அறியாதவனாய், நான் இருந்த காலம் அது.

     கணித மேதை இராமானுஜன் பற்றிய பல செய்திகளை, ஆவணங்களை மிகவும் பொறுமையுடனும், ஆர்வத்துடனும், எனக்குத் திரட்டிக் கொடுத்தவர் இவர்.

     ஆனால் நண்பர்களே, நான் எனது எம்.ஃபில்., படிப்பினை நிறைவு செய்வதற்கு முன்னமே, இவர் குவைத் சென்று விட்டார். என் மனதில் ஒரு குற்ற உணர்ச்சி இன்றும் இருந்து கொண்டேயிருக்கிறது. கணித மேதை சீனிவாச இராமானுஜன் ஆய்வேட்டினை, நூலாக வெளிக் கொணர்ந்த பொழுது, நன்றியுரையில், இவரது பெயரினை, எப்படியோ சேர்க்காமல் விட்டுவிட்டேன். எப்படி மறந்தேன் என்பது இன்று வரை புரியவில்லை.

        எனவே, கிடைத்த இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, திரு துரை.செல்வராஜ் அவர்களிடம் மன்னிப்புக் கோருவதோடு, என் மனமார்ந்த நன்றியினையும்  தெரிவித்துக் கொள்கின்றேன்.

தங்களின் பேருதவிக்கு நன்றி ஐயா.

     கடந்த வருடத்தில் ஓர் நாள், வலைப் பூவில், நண்பர்களின் வலையினைப் படித்துக் கொண்டு வந்த பொழுது, எதிர்பாராத விதமாக, வலையில், தஞ்சையம்பதி என்னும் தளத்தில், இவரின் அன்பு முகத்தினைக் கண்டேன். வியப்பு அடங்கவிலை. நன்றாக கண்களைக் கசக்கிக் கொண்டு, மீண்டும், மீண்டும் பார்த்து உறுதி செய்து கொண்டேன்.

      எங்களது நட்பில், மறுமலர்ச்சியும், உறவில் தொடர்ச்சியும் ஏற்பட்ட நான் அன்றுதான்.

     படத்தில் பார்ப்பதற்கு வேண்டுமானால், இவர் தடித்த உருவம் உடையவராகத் தெரியலாம். உண்மையில் மிகவும் இளகிய மனதினர்.

     நண்பர்களே, சே குவேரா வாழ்கிறார் என்னும் பெயரில், ஒரு பதிவினை, என் வலையில், பகிர்ந்தது உங்களுக்கு நினைவிருக்கும். சே குவேரா பற்றிய பதிவினை, பதிவிட்ட அன்று இரவு 10.30 மணி அளவில், என் அலைபேசி அழைத்தது. மறுமுனையில், குவைத்தில் இருந்து தஞ்சையம்பதி.

     திரு துரை.செல்வராஜ் அவர்களால் பேசவே இயலவில்லை. எப்படி சார், சே குவேராவால் இப்படிப்பட்ட ஒரு வாழ்கையை, இவ்வுலகிற்காக அர்ப்பணிக்க முடிந்தது என தழுதழுக்கிறார். குரல் விம்மி விம்மி உடைகிறது. அத்தருணத்தில்தான் உணர்ந்தேன், இவரின் குழந்தை உள்ளத்தை.

      என்னால் அன்றிரவு உறங்கவே முடியவில்லை. ஒரு சந்தேகம் என் மனதினை வாட்டி எடுத்தது. இவ்வளவு இரக்க குணமும், குழந்தை உள்ளமும் கொண்டவரால், எப்படி தன் குடும்பத்தைப் பிரிந்து, குவைத்தில் தனியொருவராக வாழ முடிகிறது? பதிலும், கேள்வியில் இருந்தே கிடைத்தது. தன் குடும்பத்தினர் மீது கொண்ட அளவற்ற பாசமும், தன் குழந்தைகள் நிம்மதியாக எதிர்கால வாழ்வை, வாழ வேண்டுமே என்ற தணியாத ஏக்கமே, இவரது குவைத் வாழ்விற்குக் காரணம் என்பது புரிந்தது.

      தனது அன்பு மகளின் திருமணத்திற்காக, ஒரு வார விடுப்பில் தஞ்சைக்கு வந்தவர், நட்புணர்வின் மிகுதியால், என்னையும் காண வந்ததை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன்.


தஞ்சையம்பதியின் அன்பு மகளின் திருமணம்
வாழ்த்துவோம் நண்பர்களே
நண்பர்களே, தஞ்சையம்பதியும், சோழ நாட்டு பௌத்தமும், புதுக்கோட்டையின் வளரும் கவிதையோடு, ஒன்றாய் சங்கமித்தக் காட்சியைக் கண்டும், உரைத்த சொற்களைக் கேட்டும், கரைந்தது இக் கரந்தை.

    
புதன் கிழமையன்று நடைபெற்ற, இச்சந்திப்பின் நினைவலைகளில் மூழ்கித் திளைத்திருந்த எனக்கு, மேலும் ஓர் நல்லாரைக் காணும் வாய்ப்பு சனிக்கிழமை கிட்டியது.


வாழ்வில் வெல்லத் துடிக்கும் இளம் உள்ளங்களின்,
வாசிப்பிற்கும், நேசிப்பிற்கும் உரியதாய்,
பல்லாயிரக் கணக்கான உள்ளங்களிலும், இல்லங்களிலும்
நம்பிக்கைச் சுடறேற்றிவரும்
நமது நம்பிக்கை
திங்களிதழின் ஆசிரியர்
கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா
http://marabinmaindanmuthiah.blogspot.com/
அவர்களைச் சந்தித்தேன்.

      நண்பர்களே, வலைப் பூவின் வழியாகத்தான் இவரது தொடர்பினைப் பெற்றேன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

     எனது வலைப் பூவில் வெளிவந்த கணித மேதை சீனிவாச இராமானுஜன் வாழ்க்கை வரலாற்றுத் தொடரானது, நமது நம்பிக்கை இதழில் கடந்த ஓராட்டிற்கும் மேலாக, தொடராக வெளிவந்து கொண்டிருக்கிறது. வலைப் பூவின் மகிமை அப்படிப் பட்டது. வலையில் வந்ததை, அச்சு இதழுக்குக் கொண்டு சேர்த்தவர் மரபின் மைந்தன் அவர்கள்.

     கரந்தைத் தமிழ்ச்  சங்கத்தின் இன்றையப் பொருளாளரும், ஓய்வு பெற்ற ஆசிரியரும், இன்னும் சொல்லப்போனால், எனது ஆசிரியருமான திரு கே.இராசமன்னார் அவர்களுடன் சென்று மரபின் மைந்தன் அவர்களைச் சந்தித்தேன்.

     திரு கே.இராசமன்னார் அவர்கள், நான் பத்தாம் வகுப்பு பயின்ற போது, எனது வரலாற்று ஆசிரியர். உலக வரலாற்றை, விரல் நுனியில் எப்பொழுதும் பத்திரமாய் பாதுகாக்கும் உயர்ந்த மனிதர். வாசிப்பு என்பதை உயிர் மூச்சாய் நேசிப்பவர். நமது நம்பிக்கை திங்களிதழின் வாசகர்.

    மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தஞ்சைக்கு வந்திருக்கிறார் என நான் கூறியபோது, அவரைப் பார்க்க வேண்டும், பேச வேண்டும் எனக் கூறினார். மரபின் மைந்தன் அவர்களை, அலைபேசியில் தொடர்பு கொண்டு, எனது ஆசிரியர் தங்களைக் காண ஆர்வமாயிருக்கிறார் என்று தெரிவித்த பொழுது, சற்றும் தயங்காமல், அழைத்து வாருங்கள் என்றார்.

    

தஞ்சை ஞானம் விடுதியில் மரபின் மைந்தரைச் சந்தித்தோம். சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பேசினர்.

அன்று மாலை, புத்தக அரங்கில்,
வாழ்வை வாசிப்போம்
என்னும் தலைப்பில், மரபின் மைந்தர் சொற்பெருக்காற்றினார்.

ஊர் எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேர்இட்டு
சூரைஅங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே

என்று பாடுவார் திருமூலர். மனிதனுக்கு உயிர் இருக்கும் வரைதான் பெயரிட்டு அழைப்பர். சுவாசிக்க மறந்த, மறு நொடி பிணம் என்றே பெயரிட்டு அழைப்பர். எனவே சுவாசிக்கும் போதே, வாழ்வை வாசிப்போம்.

     வாழ்கையை வாசிக்க, மனித உறவை நேசிக்க வேண்டும்.

     தமிழ்  நாட்டிலே சில இடங்களில் ஓர் பழக்கம் இன்றும் இருக்கிறது. உப்பு ஜவுளி என்று பெயர். அதாவது ஒரு வீட்டில், திருமணம் நடைபெறப் போகிறது எனில், அதற்கு முன்னரே, உற்றார் உறவினர் அனைவரையும் அழைத்துக் கொண்டு, ஒரு கடைக்குச் சென்று உப்பு வாங்குவார்கள். பின்னர் ஜவுளிக் கடைக்குச் சென்று மணமக்களுக்கு உடைகள் வாங்குவார்கள். இதற்குத் தான் உப்பு ஜவுளி என்று பெயர்.

     நண்பர்களே, இதன் பொருள் என்ன தெரியுமா? திருமணத்திற்குத் தேவையான, உப்பு முதல் ஜவுளி வரை, அனைத்துச் செயல்களையும், உறவினரோடு இணைந்தே செய்ததாகப் பொருளாகும். வாழ்வை வாசிப்பது என்பது இதுதான்.

     விழாவில் மட்டுமல்ல, துக்கங்களில் கூட வாழ்வை வாசித்த இனம் தமிழினம். ஒரு இளம் குடும்பத் தலைவர் இறந்துவிட்டார் எனில், அவ்வீட்டில், உறவினர்கள் அனைவரும், சூழ்ந்திருக்கும் சபையின் நடுவில், இறந்தவரின் தாயார், ஒரு சொம்பை வைப்பார்கள். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு மகிழம்பூவை எடுத்து, கரம் உயர்த்திக் அனைவருக்கும் தெரியும்படி காட்டி, அச் சொம்பில் போடுவார். மூன்று முறை கரம் உயர்த்தி மகிழம் பூக்களைக் காட்டி, சொம்பிற்கும் போடுவார். இதன் பொருள் என்ன தெரியுமா?

பார்த்தது கோடி
பட்டது கோடி
கிடைத்தது அனுபவம்

எனப் பாடுவார் கண்ணதாசன். நம் தமிழ்ச் சமூகம் பட்டறிவால், அனுபவத்தால், உயர்ந்த, முதிர்ந்த செயல்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட, உயரிய இனம் என்பதற்கு இச்சடங்கு ஓர் எடுத்துக் காட்டு.

     மூன்று மகிழம் பூக்களை, சொம்பிற்குள் போட்டால், இறந்தவரின் மனைவி, தற்சமயம் மூன்று மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்று பொருள். ஐந்து மகிழம் பூக்களைப் போட்டால் ஐந்து மாத கர்ப்பம் என்று பொருள்.

     குடும்பத் தலைவர் இறந்த பல மாதங்கள் கழித்து, அவரின் மனைவியை, யாரும் புறம் பேசக் கூடாதல்லவா? பெண்மையின் பெருமையைக் காக்க, போற்றத் தோன்றிய சடங்குகள் இவை. தமிழர்கள் வாழ்வை வாசித்தவர்கள் என்றார்.

      நண்பர்களே, மரபின் மைந்தன் அவர்கள் பேசப் பேச, நாமும் வாழ்வை வாசிக்க வேண்டும். உறவுகளை நேசிக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் உள்ளத்தில் வேர் பரப்பி, கிளை விரித்து பரவுகிறது.

     நண்பர்களே, புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளான, 23.2.2014 ஞாயிற்றுக் கிழமை, காலை அலைபேசி அழைத்தது. மறு முனையில் தென்றல் தவழ்ந்து வந்தது.

தேங்கிய குட்டையல்ல
துள்ளும் அருவி
பாய்ந்தோடும் ஆறு
அள்ளிச் செல்வேன் அனைத்தையும்....

தென்றலாய் தொடங்கி, தேவைபெனில் பெரும் சுழற் காற்றாய் மையம் கொள்ளவும் தயார், என, இலக்கிய வானில், தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்தவரும், உயர் சிந்தனைகளும், சமூகக் கவலையும், துயரம் துடைக்கும் தன்னம்பிக்கையும் கொண்ட கவிஞர், வேலு நாச்சியாரின் விழுது,

கவிஞர் கீதா அவர்கள்
தென்றல்
http://velunatchiyar.blogspot.com/
பேசினார்.

     நான் தஞ்சைக்கு வந்திருக்கிறேன். மதியம் புத்தகக் கண்காட்சிக்கு வருகிறேன். உங்களைச் சந்திக்க வேண்டுமே என்றார்.

    

இதைவிட வேறு என்ன வேலை. பிற்பகல் எனது மனைவியுடன் சென்று சந்தித்தேன். நான் பேசியது குறைவுதான். அவர்கள் இருவரும் நெடுநாள் பழகிய தோழிகள் போல் பேசி மகிழ்ந்தனர்.

சகோதரியார் கவிஞர் மு.கீதா அவர்கள்,
விழி தூவிய விதைகள்
என்னும், தனது கவிதை நூலினை வழங்கினார்.

டீச்சர்..
எனக்குப் பிறந்த நாள் என
மழலை கொடுத்த இனிப்பை
மாணவிகளுக்கு ஊட்ட
பிறந்தன எனக்கு
நாற்பது குழந்தைகள்..
---
ஏன் படிக்கல?
கலங்கிய சிறுமியை

ஏன்டாம்மா? என்னாச்சு
சாப்டியா?

தலைவருடி இதமான வார்த்தைகளால்
பதமாய் மனம் வருட
விழி மேகம் மடை திறக்க
சாப்டல டீச்சர் .... பசிக்குது...

   கவிஞராய் மட்டுமல்ல, நல்லாசிரியராய், மழலைகளின் உள்ளத்தில், விதைகளைத் தூவி, நல் விருட்சங்களாய் வார்த்தெடுக்கும், வளர்த்தெடுக்கும் கவிஞர் மு.கீதா அவர்களின், எண்ணங்கள், பெண்ணியச் சிந்தனைகள் எல்லாம், எழுத்துக்கள்ய், வார்த்தைகளாய், வரிகளாய், கவிதை மொழிகளாய், பக்கத்துக்குப் பக்கம் ததும்பி வழிகின்றன.

      நண்பர்களே, நீங்களே கூறுங்களேன், வலையுலக உறவுகளை, நல்லாரைச் சந்தித்த இவ்வாரம், நட்பு வாரம்தானே.

ஒருநாள் பழகினும் பெரியோர் கேண்மை
இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே
                          - வெற்றி வேற்கை


-------------------------------

100வது பதிவு


நண்பர்களே, வணக்கம். நலம்தானே,

     எனது 100வது பதிவு இப்பதிவு. இரண்டரை ஆண்டுகளுக்கு முன், விளையாட்டாய் வலையில் நுழைந்த நான், இன்று நூறாவது பதிவினை எட்டிப் பிடித்திருக்கின்றேன்.

     நண்பர்களே, மனம் மழுவதும் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகின்றது. காரணம் நீங்கள்தான்.

      ஆமாம் நண்பர்களே, உங்களின் உணர்வுமிகு கருத்துரைகளும், உற்சாக வார்த்தைகளும், ஊக்கச் சொற்களும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த எளியேன்பால், தாங்கள் காட்டிவரும் மாறா அன்புமே இதற்குக் காரணம்.

நன்றி நண்பர்களே
என்றும் வேண்டும் இந்த அன்பு.

என்றென்றும் நட்புடன்,
கரந்தை ஜெயக்குமார்