13 அக்டோபர் 2014

வேருக்கு நீர்


ஜுலை 15
காமராசர் பிறந்தநாள்
கல்வி வளர்ச்சி நாள்
நம் வாழ்நாளில், ஒரே ஒரு முறையேனும்,
ஒரே ஒரு ஏழை மாணவனுக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவோம்
இதுவே,
கர்மவீரர் காமராசருக்கு
நாம் செலுத்தும்
உண்மை அஞ்சலியாகும்.

     நண்பர்களே, கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் அன்று வெளியிட்ட எனது பதிவினை, மேற்கண்டவாறுதான் நிறைவு செய்திருந்தேன்.

     இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், ஒரு மின்னஞ்சல் வந்தது.


அன்புள்ள ஆசிரியருக்கு,

     அவ்வப்போது உங்கள் வலை தளத்தைப் பார்த்து வருகிறேன்.

      ஏழை மாணவர்களைக் கடக்கும் வாய்ப்பை நீங்கள் பெற்றிருப்பீர்கள். இன்றைக்கு உடனே பணம் தேவைப்படுபவர்கள் இல்லாவிடினும், நாளை தேவைப் படுபவர்கள் இருப்பார்கள்.

     அதிலும் கல்வி கற்கும் மாணவன், அதற்கான வெறும் பணம் இல்லாமல், கற்பதை நிறுத்துவது மிகவும் கொடுமை.

     உங்களின் வங்கிக் கணக்கு எண்ணோ அல்லது வேறு வழிகளோ இருப்பின் எனக்குத் தெரியப்படுத்தவும். என்னால் இயன்ற தொகையை உடனே அனுப்ப ஆவலாக உள்ளேன்.

     மனித மனம் விசித்திரமானது, இன்றைக்கு இருக்கும் எண்ணம் திரும்ப நாளைக்கு வருமா என்பதே சொல்வதறிது. இன்றைக்கு நாமிருக்கும் நிலைமையில் நாளை இருப்போமா என்றும் சொல்வதறிது.

அன்புடன்,
முரளி

     மின்னஞ்சலைப் படிக்கப் படிக்க வியப்புதான் மேலிட்டது. கடல் கடந்து வந்த மின்னஞ்சல் இது.
    

நண்பர் முரளி சேஷன், பகரைனில் உள்ள JAWAD BUSINESS GROUP என்ற நிறுவனத்தில், முதன்மைத் தகவல் அலுவலராகப் பணியாற்றி வருபவர்.

     இவர் திருநெல்வேலியைச் சார்ந்தவர். இவரது தந்தை எனது சாதியைச் சார்ந்தவர். ஆசிரிய சாதி.

     இவரது தந்தை ஓர் ஆசிரியர் என்றதுமே, என்னையுமறியாமல், ஓர் பெருமை, என் உள்ளத்தில் இருந்து எட்டிப் பார்த்தது.

     மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். பிதாவே குருவானால். கொடுத்து வைத்தவர்தான்.

     நண்பர் முரளி, பொன்னமராவதியின் அருகிலுள்ள, பூலாங்குறிச்சி என்னும் ஊரில், தன் தந்தை தலைமையாசிரியராய் பணியாற்றிய பள்ளியிலேயே படித்தவர்.

     தலைமையாசிரியராய் பணியாற்றிய, இவரது தந்தை, பதவி உயர்வு பெற்று, சிலகாலம், தூத்துக்குடி மாவட்டத்தின், முதன்மைக் கல்வி அலுவலராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

       கடந்த 2008 ஆம் ஆண்டு, வாழ்வினின்றும் ஓய்வு பெற்று, இறைவனின் திருவடி நிழலில் வாழ்ந்து வருபவர்.

      நண்பர் முரளி அவர்களுக்கு எனது வங்கிக் கணக்கு எண்ணை அனுப்பினேன். சரியாக இரண்டே நாளில், என் அலைபேசியில், ஓர் குறுந்தகவல்.

எனது வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப் பெற்றிருந்தது.

     நண்பர்களே, எனது கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. ஒரு மாணவனின் கல்விச் செலவிற்காக, ரூபாய் ஆயிரமோ அல்லது இரண்டாயிரமோ அனுப்புவார் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் முழுதாய் பத்தாயிரம்.

     சிறிது நேரத்தில் ஒரு மின்னஞ்சலும் வந்தது.

அன்புள்ள ஆசிரியருக்கு,

     என்னால்  முடிந்ததை அனுப்பியுள்ளேன். ஆசிரியரிடமிருந்து, தகுதியுள்ளவர்களை அது சென்றடையட்டும்.

     எந்த காரணத்தைக் கொண்டும், செய்யும் சிறு உதவிகளில் கூட, என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. தயவு செய்து இதனை மனதில் கொள்ளவும். மிக்க நன்றி.

அன்புடன்,
முரளி

     நண்பர்களே, எனக்குப் புரியவில்லை. என்ன மனிதர் இவர்.

    
நண்பர் முரளி என்.சேஷன்
( நண்பரின் புகைப்படம் இல்லாமையால், இவ்விடத்தினை நண்பருக்காக
ஒதுக்கீடு செய்து வைத்துள்ளேன்)

சிறு கோயிலுக்கு, குழல் விளக்கு ஒன்றினை காணிக்கையாக வழங்கி, அந்த விளக்கின் மீது, உபயம் என்று தங்களது பெயரினைப் பெரிதாக எழுதி, அவ்விளக்கின் ஒளியினையே, பாதிக்கும் மேல் மறைக்கும், மனிதர்கள் வாழ்ந்து வரும் உலகில், இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்து போனேன்.

     நண்பரும், நான் பணியாற்றும் பள்ளியின் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களிடம், நண்பர் முரளி அவர்கள் அனுப்பியுள்ள தொகை குறித்துத் தெரிவித்தேன்.

     நான் பணியாற்றும் பள்ளியானது, மிகவும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் அதிக எண்ணிக்கையில் பயிலும் பள்ளியாகும். அதிலும் ஏராளமான மாணவர்கள், பள்ளியில் காலடி எடுத்து வைத்திருக்கும், முதல் தலைமுறை மாணவர்கள்.

     தேங்காய் எண்ணயினையேச் சந்தித்தேயிராத தலைமுடி, காலணி காணாத கால்கள், ஆங்காங்கே கிழிந்து தொங்கும், ஒற்றைச் சீருடையினையே, ஆண்டு முழுவதும் அணிந்து வரும், மாணவ, மாணவியர் இருபத்தோரு பேரைத் தேர்ந்தெடுத்தோம். அனைவருமே ஆறாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் பயில்பவர்கள்.

     இந்த இருபத்தோரு பேருக்கும் சிருடை ஒன்றினை, அளவெடுத்துத் தைத்தே வழங்குவது என்று முடிவு செய்தோம்.

      தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள், இருபத்தோரு பேருக்கும், துணி எடுக்க நானும் வருகிறேன் என்றார். பள்ளி உடற் கல்வி இயக்குநர் நண்பர் திரு கே.திவாகர் அவர்கள், நானும் வருகிறேன் என்றார். மூவருமாகச் சென்று சீருடைத் துணிகளை வாங்கினோம்.

     கரந்தைப் பகுதியினைச் சேர்ந்த, சிப்பி தையற் கடை உரிமையாளர், நண்பர் திரு எம்.லஷ்மி குமார் அவர்கள், திபாவளித் திருநாள் பணிகளுக்கு இடையிலும், ஏழை மாணவர்களுக்கு, என் பங்கிற்கு, என்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறேன் என்று கூறி, மிகக் குறைந்த, தொகையினைத் தையற் கூலியாகப் பெற்றுக் கொண்டு, 21 பேருக்கும் சீருடைகளைத் தைத்து வழங்கினார்.

     இடையில் காலாண்டுத் தேர்வும், காலாண்டு விடுமுறையும் குறுக்கிட்டதால், 13.10.2014 திங்கட் கிழமையன்று, நடைபெற விருக்கும், பள்ளிப் பேரவைக் கூட்டத்தின் போது, பள்ளியின் அனைத்து மாணவர்களின் முன்னிலையிலும், சீருடைகளை வழங்குவது என்று முடிவெடுத்தோம்.

நண்பரே, வணக்கம். நலம்தானே.

     தாங்கள் அனுப்பிய தொகையில், தீபாவளித் திருநாளைக் கொண்டாட, புதுத் துணி எடுக்க இயலாத, மாணவ, மாணவியர் 21 பேருக்கு, பள்ளிச் சீருடையினையே, தீபாவளிப் பரிசாக வழங்க எண்ணியுள்ளோம்.

     இச்சீருடைகளை மாணவ, மாணவியருக்கு வழங்கும்போது, தங்களைப் பற்றி, ஓரிரு வார்த்தைகளாவது பேச வேண்டுமல்லவா?

     தங்களைப் பற்றிய சிறு குறிப்பு ஒன்றினை அனுப்ப அன்புடன் வேண்டுகிறேன். நண்பரே, தங்களின் முகத்தினை, படத்தில் கூட, நான் இதுவரை பார்த்ததில்லை.

      முகம் தெரியா நண்பரே, தங்களின் புகைப் படம் ஒன்றினை, மின்னஞ்சலில் அனுப்பினால் மகிழ்வேன்.

என்றென்றும் தோழமையுடன்,
கரந்தை ஜெயக்குமார்

      நண்பர்களே, இவ்வாறு ஒரு மின்னஞ்சலை, நண்பருக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன். அடுத்த நாளே பதில் வந்தது.

அன்புள்ள ஆசிரியருக்கு,

    தங்களின் கடிதத்துக்கு நன்றி. சிறிய தொகையையும் பெருமிதத்துடன் நோக்கும் தங்களின் மனதிற்கு நன்றிகள்.

     மனதில் திடீரென்று உங்களுக்குப் பணம் அனுப்பலாம். அதனால் சிலருக்குப் பலன் இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. பணம் அனுப்பினேன். இந்தச் செயல் புரியத் தூண்டிய இறைவனுக்கு நன்றி. அதனை அப்படியே மறத்தல்தான் சரியான செயலாக இருக்கும். தயவு செய்து என்னுடைய எண்ணத்தைப் புரிந்து கொள்ளவும். தங்களின் மற்றும் தங்களின் தலைமையாசிரியரின் எண்ணத்துக்கு நன்றி. இந்தச் சிறிய செயலை மறந்து விடவும்.

     இந்தச் சிறு துளி எவருக்காயினும் உபயோகமாக இருப்பின், அவர்கள் நல்ல நிலைமைக்கு வரும்போது, தன்னிலும் எளியவரை மனதில் நினைத்துத் தகுந்த வாய்ப்பு வரும்போது, அவர்களுக்குச் சிறிதேனும் உதவுகிற எண்ணம் வரப்பெற்றால் அதுவே பெரிது.

      நம் ஆசிரியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் மகன், தன் சமூகக் கடமையாக நினைத்து, இந்த உதவியைச் செய்துள்ளார் என்று நினைவு கூர்ந்தால் போதுமானது.

     சமயம் வரும்போதெல்லாம் தொடர்பு கொள்கிறேன். நம் எல்லோரையும் இணைப்பது தமிழ் மற்றும் தமிழ் நிலம்.

      சரியான பிள்ளைக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் எழுதுங்கள். இறைவன் அத்தகைய உதவியைச் செய்யும் நிலையில் என்னை வைத்திருப்பானாகில் அவசியம் வேருக்குச் சிறிது நீராகிறேன்.

அன்புடன்,
முரளி

     நண்பர்களே, வேருக்குச் சிறிது நீராகிறேன் என்று கூறியவர், தன் படத்தினையோ, தனது தந்தையின் படத்தினையோ, இன்று வரை அனுப்பவே இல்லை. இவ்வளவு ஏன், தனது தந்தையின் பெயரினைக்கூட தெரிவிக்க மறுத்துவிட்டார்.

      மின்னஞ்சலில் அவரது பெயரினைத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், தன் பெயரினைத் தெரிவித்துள்ளார். இல்லையேல் தனது பெயரினைக் கூட தெரிவித்திருக்க மாட்டார்.

       நண்பர்களே, இன்று 13.10.2014 திங்கட்கிழமை காலை, எனது பள்ளியின் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் பேசும்போது, நமது பள்ளியின் பட்டதாரி ஆசிரிய்ர் கி.ஜெயக்குமார் அவர்களின், முகமறியா நண்பர் ஒருவர் வழங்கிய தொகையில், 21 மாணவ, மாணவியருக்குச் சீருடை வழங்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார்.

      அடுத்த்தாக நான் பேசினேன். ஆசிரியர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரின் மகன், தனது சமூகக் கடமையாக நினைத்து இவ்வுதவியினைச் செய்துள்ளார். பணம் அனுப்பிய நண்பர், கருப்பா, சிகப்பா என்பது கூட எனக்குத் தெரியாது, அவரது முகத்தை இன்றுவரை நான் பார்த்த்தில்லை, ஏன் அவரது குரலைக் கூட இன்றுவரை கேட்டதில்லை. ஆயினும் மனமுவந்து ரூபாய் பத்தாயிரத்தை வழங்கியுள்ளார் என்று கூறியபோது, மாணவ, மாணவியரின் கைத் தட்டலால், பள்ளியே அதிர்ந்தது.

        முதலில் ஒரு மாணவிக்குத் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் சீருடையினை வழங்கினார். பின்னர் மற்ற ஆசிரியர்களை அழைக்கவே, ஒவ்வொரு ஆசிரியரும், ஒவ்வொரு மாணவனுக்குச் சீருடைகளை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தனர்.

        
தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் உரையாற்றுகிறார்

மாணவர்களிடையே நான் 




தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் பரிசு வழங்குகிறார்


உதவித் தலைமையாசிரியர் திரு ஆ.சதாசிவம் அவர்கள் பரிசு வழங்குகிறார்

முதுகலை ஆசிரியர் திரு மு.பத்மநாபன் அவர்கள் பரிசு வழங்குகிறார்

ஓவிய ஆசிரியர் திரு எஸ்.கோவிந்தராசன் பரிசு வழங்குகிறார்

முதுகலை ஆசிரியர் திரு எஸ்.செந்தில் குமார் பரிசு வழங்குகிறார்

முதுகலை ஆசிரியர் திரு ஜி. விஜயக்குமார் பரிசு வழங்குகிறார்

முதுகலை ஆசிரியர் திரு ஆர்.லெனின் பரிசு வழங்குகிறார்

உடற் கல்வி ஆசிரியர் திரு துரை.நடராசன் பரிசு வழங்குகிறார்

சீருடையினைப் பரிசாகப் பெற்ற மாணவ மாணவியர்

நிகழ்ச்சியின் நிறைவில், பள்ளித் தலைமையாசிரியர் திரு வெ.சரவணன் அவர்கள் மாணவர்களைப் பார்த்து, நண்பர் முரளி அவர்கள் செய்திருக்கும் இவ்வுதவியினை நீங்கள் முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும், நீங்கள் பள்ளிப் படிப்பில் வெற்றி பெற்று, வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைக்கு உயர்ந்த பிறகு, நீங்களும், உங்களால் இயன்ற உதவியினை, ஏழ்மையில் வாடும் மாணவர்களுக்குச் செய்ய வேண்டும். என்ன செய்வீர்களா என்றார்.

       செய்வோம், செய்வோம் என மாணவ, மாணவியர் உற்சாகக் குரலில் உறுதி அளித்தனர்.


தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு
    சம்பாத்யம் இவையுண்டு தானுண் டேன்போன்
சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்
     தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்

கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்
     கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
      சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்

ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்
      அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க
வாயடியும் கையடியும் வளரச் செய்வார்
      மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோம்

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்
       தொல்லுலக மக்களெலாம் ஒன்றே என்னும்
தாயுள்ளம் தனிலன்றோ இன்பம், ஆங்கே
       சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே
                                              - பாவேந்தர் பாரதிதாசன்


        தன்னலமற்ற, தூய உள்ளத்திற்கு, அன்பு உள்ளத்திற்குச் சொந்தக்காரரே, நண்பர் முரளி அவர்களே, இன்றில்லாவிடினும், ஓர் நாள், நாம் சந்திப்போம்.

வாழ்த்துக்கள் நண்பரே
---