01 நவம்பர் 2014

சிம்பனி


ஆண்டு 1824. மே 7 ஆம் நாள். வியன்னா. அது ஒரு விழா அரங்கு. மேடையில் பல்வேறு இசைக் கருவிகளுடன், அதை வாசிப்பவர்கள், அரை வட்ட வடிவில் நின்கின்றனர். அவர்களுக்குப் பின்னால் இரு பாடகிகள்.

    
கரோலின் உங்கர்

ஒரு பாடகி, 21 வயதே நிரம்பிய கரோலின் உங்கர். மற்றொரு பாடகி, 18 வயதே நிரம்பிய ஹன்ரிட்டீ சன்டாங்.

     இவர்களை நோக்கியவாறு, அரங்கில் அமர்ந்திருப்பவர்களுக்குத் தன் முதுகினைக் காட்டியவாறு நின்கின்றார், அரங்கில் அரங்கேற இருக்கின்ற இசைக்குச் சொந்தக்காரர்.

    


ஒரு நாள், இரு நாள் அல்ல, இரண்டு ஆண்டுகள், ஒவ்வொரு இசைக் கருவியினையும், மனதிலேயே வாசித்து வாசித்து, பற்பல இசைக் கருவிகளை ஒருங்கிணைத்து, இசைத்தால், எழும் நாதம் எவ்வாறு ஒன்றிணைந்து ஒலிக்கும் என்பதையும், மனதிலேயே இசைத்து, இசைத்து, ரசித்து, ரசித்து, இழைத்து, இழைத்து உருவாக்கிய இசை இது.

     சிம்பனி இசை.

     பொதுவாக, சிம்பனி இசை என்பது, இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப் படும் இசையாகவே அன்று வரை இருந்து வந்தது.

     இன்றுதான் முதன் முதலாக, சிம்பனி இசையுடன், இரண்டறக் கலந்து, இரு மங்கையரின் இனிய குரலும், இணைந்து ஒலிக்கப் போகிறது. ஷில்லர் என்னும் கவியின் கவிதையினை, சில நேரங்களில், குழுவினருடன் இணைந்தும், சில நேரங்களில், தனித்தும் பாடுவது போல், இசை கோர்க்கப் பட்டிருந்தது.

       நண்பர்களே, இதோ இசை தொடங்கி விட்டது. இசையமைப்பாளர், சிறிய கழி ஒன்றினைக் கையில் வைத்துக் கொண்டு, இசைப்பவர்களுக்கு, சைகையால், கட்டளைகள் பிறப்பிக்கத் தொடங்குகிறார்.

     அடுத்த நொடி, அரங்கே இசை மழையால் நனையத் தொடங்கியது. அதுநாள் வரை யாருமே கேட்டிராத, ஓர் புதிய ராகம், ஆனந்த ராகம், அபூர்வ ராகம், அற்புத ராகம் அனைவரின் செவிகளிலும் நுழைந்து, அனைவரையும், இவ்வுலகினையே மறக்கச் செய்தது.

     ஒரு மணி நேரத்திற்கும் மேல், இசை, இடைவெளியின்றி, நீண்டு கொண்டே செல்கிறது. அரங்கில் இருந்தவர்களுக்குச், சில நிமிடம், இருளடர்ந்த காட்டில் நடப்பதை போல் ஓர் உணர்வு, மறு நிமிடம், கடற்கரையில் நின்று, ஆர்ப்பரிக்கும் அலைகளை ரசிப்பது போல் ஓர் உணர்வு, அடுத்த நிமிடம் நெடிது உயர்ந்த மலையில் ஏறுவதைப் போல் ஓர் உணர்வு, திடீரென்று அமைதியான கிராமச் சூழலில்,பரந்து விரிந்து நிழல் கொடுக்கும், மரத்தடியில் அமர்ந்திருப்பதைப் போல் ஓர் உணர்வு.

     வாழ்வில் இதுவரை அனுபவித்திராத ஓர் அனுபவம், கனவில் கூட நினைத்துப் பார்க்க இயலாத, ஓர் இன்னிசை. அனைவருமே மயங்கித்தான் போனார்கள்.

     இசை மேதையோ, அசராமல் கைகளை ஆட்டி, இசைக் கலைஞர்களை இயக்கிக் கொண்டே இருக்கிறார். சில சமயம் நிமிர்ந்து நின்றும், சில நேரம் கூனிக் குறுகி, தரையிலே அமர்வது போலவும், குனிந்தும், நிமிர்ந்தும், கழிகளை ஆட்டி, சைகை செய்து கொண்டே இருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவும், செய்கையும், மேடையிலுள்ள இசைக் கருவிகள் ஒவ்வொன்றினையும், அவரே, வாசிப்பது போலத்தான் தோன்றுகிறது.

     ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்ட இசை, நிறைவிற்கு வந்த பொழுது, இசைக் கலைஞர்களைப் பார்த்தபடியே, அமைதியாக நிற்கிறார். தன் இசை, தன் உயிரினையும், உணர்வினையும் கலந்து உருவாக்கிய இசையினை, அரங்கில் உள்ள மக்கள் ஏற்றுக் கொண்டார்களா, இல்லையா என்பது கூடத் தெரியாமல், புரியாமல், சோகமே உருவாய் அசந்து போய் நிற்கிறார்.

      இசைக் கருவிகளை வாசித்த, கலைஞர்களின் முகங்களைப் பார்க்கிறார். ஒவ்வொருவரின் முகத்திலும், மகிழ்ச்சி தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இசை மேதைக்குக் காரணம்தான் புரியவில்லை. மேலும் கீழும் சைகை காட்டி, காட்டி, ஓய்ந்த கைகளைத் தொங்க விட்டபடியே சோகமாய் நிற்கிறார்.

      தன் இசை ஏற்றுக் கொள்ளப் பட்டதா?  இல்லையா என்பது புரியவில்லை.

      பாடகி கரோலின் மெதுவாக முன்னே வந்து, இசை மேதையினை நெருங்கி, அவரது தோள்களைத் தொட்டு, அவரை, அரங்கில் குழுமியிருக்கும் மக்களை நோக்கித் திருப்புகிறார்.

      இதுவரை அரங்கத்து மக்களுக்குத், தன் முதுகினையே காட்டியபடி நின்ற மேதை, மெதுவாகத் திரும்பி, மக்களைப் பார்க்கிறார்.

     அரங்கு முழுவதும் நிரம்பி வழிந்த மக்கள் அனைவரும், தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, கைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் கைக் குட்டைகளை, தொப்பிகளை உயர்த்தி, உயர்த்தி, தங்களின் மகிழ்ச்சியினை, பாராட்டினை, வாழ்த்தினை தெரிவித்த வன்னம் உள்ளனர்.

     இக் காட்சியைக் கண்ட இசை மேதையின் கண்கள் கலங்குகின்றன. கண்களில் இருந்து கண்ணீர், ஆறாகப் பெருக்கெடுத்து, கன்னங்களை நனைக்கிறது. தன் இசையை இவ்வுலகு ஏற்றுக் கொண்டு விட்டது என்பது புரிகிறது. மக்கள் கை தட்டும் காட்சியைக் காண்கிறார். கைக் குட்டைகளை உயர்த்தி ஆட்டும் காட்சிகளைக் காண்கிறார். பாதிக்கும் மேற்பட்டோர், தங்கள் தொப்பிகளை உயர்த்தி, மகிழ்ச்சியினை வெளிப் படுத்தும் காட்சிகளைக் காண்கிறார். ஆயினும் அவரைப் பொறுத்தவரை, அரங்கு முழுதும் ஓர் நிசப்தம் குடி கொண்டிருக்கிறது.

      அம்மேதையைப் பொறுத்தவரை எங்கும், எங்கெங்கும் அமைதி, அமைதி.

     நண்பர்களே, புரியவில்லைதானே? சொன்னால் நம்ப மாட்டீர்கள், இந்த இசை மேதையின் காதுகள், கேட்கும் திறனற்றவை. ஒலிகளை உணரும் சக்தியற்றவை. நம்புவது கடினம்தான் நண்பர்களே, ஆனால் அதுதான் உண்மை.

        ஜெர்மனியில் உள்ள பான் நகரத்தில் 1770 இல் பிறந்த இவருக்கு, சிறு வயது முதலே, இசையின் மீது தீராத காதல். சின்னஞ்சிறு வயதில், இவர் பியானோ வாசிப்பதைக் கேட்ட பலரும் சொக்கித்தான் போனார்கள். தொடர்ந்து ஆர்கன், வயலின், வயோலா போன்ற பல இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார்.

இசை மேதை பிறந்த இல்லம்
     1800 வது ஆண்டில்தான், தனது 30 வது வயதில், கேட்கும் தன்மையை, தனது செவிகள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருவதை உணர்ந்தார். ஆண்டுகள் செல்லச் செல்ல, நிலைமை மோசமாகி, 1819 ஆம் ஆண்டில், இவர் முழுச் செவிடராகவே மாறிப் போனார்.

      நண்பர்களே, இசை என்பது செவிகளால் கேட்டு ரசிக்கக் கூடியது. இசையை ரசிப்பதற்கே செவிகள் முக்கியம். ஆனால் இவரோ, செவிடரான பிறகுதான், இவ்வுலகு உள்ளவரை நிலைத்து நிற்கக் கூடிய இசையை உருவாக்கினார்.

     இரண்டு ஆண்டுகள், மனதிற்குள்ளாகவே, ஒவ்வொரு கருவியாய் இசைத்து இசைத்து, இழைத்து இழைத்து, உருவாக்கிய இசையை, கடந்த 12 ஆண்டுகளாகவே மேடையே ஏறாதவர், இதோ இன்று மேடையேறி, உலகிற்கு அர்ப்பணித்துள்ளார்.




நண்பர்களே, இந்த இசையின் பெயர்தான்
சிம்பனி 9
இந்த இசை உருவாக்கிய இசை மேதைதான்
பீத்தோவன்.

இசை மேதை பீத்தோவனைப்

போற்றுவோம்.