12 நவம்பர் 2014

சுவாசிப்போம்


ஆண்டு 1968. செப்டம்பர் 14. அமெரிக்காவின் நியூயார்க் நகரம். மெமோரியல் மருத்துவமனை. அறுவை சிகிச்சையில் புகழ் பெற்ற மருத்துவர் தியோடர் மில்லர் அவர்கள், மெதுவாக, அந்த அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்கிறார்.

      படுக்கையில் குள்ளமாக ஒரு மனிதர் அசந்து போய் படுத்திருக்கிறார். அவரின் தலையணை அருகே, தலையணையைப் போலவே, ஓர் பெரிய புத்தகம்.

நாளை காலை உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்துள்ளேன். தயாராக இருங்கள்.


     ஒரு கணம் தயங்கிய அம் மனிதர், மருத்துவரைப் பார்த்துக் கேட்டார்.

அறுவை சிகிச்சையினை ஒரு நாள் தள்ளிப் போடலாமா?

     மருத்துவருக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை.


நீங்கள், ஒரு சிறந்த பகுத்தறிவுவாதி என்றல்லவா கூறினார்கள். நீங்களுமா, நல்ல நாள், நல்ல நேரம் பார்க்கிறீர்கள்?.

அம்மனிதர் மெல்லச் சிரித்தார். தனது தலையணையின் அருகில் இருந்த, பெரிய புத்தகத்தைச் சுட்டிக் காட்டினார்.

இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து முடிக்க இன்னும் ஒரு நாள் கால அவகாசம் தேவைப் படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்தபின், உயிருடன் இருப்பேனோ? இல்லையோ? என்பது தெரியாது. எனவே உயிருடன் இருக்கும்பொழுதே, இப்புத்தகத்தை முழுமையாய் படித்து முடித்துவிட விரும்புகிறேன்.

     இப்படியும் ஒரு மனிதரா? மருத்துவர் பேச்சின்றி நின்றார்.

நண்பர்களே, இம் மாமனிதர்தான்
பேரறிஞர் அண்ணாதுரை.

---

        

ஆண்டு 1931 மார்ச் 23. திங்கட் கிழமை. லாகூர் மத்திய சிறைச்சாலை. இரவு மணி 7.15. சிறைக் கண்காணிப்பாளர், காவல் துறை கண்காணிப்பாளர், அவ்வூர் நீதிமன்ற நீதிபதி, சிறை மருத்துவர்,  காவலர்கள் சிலர், என ஒரு சிறு கூட்டமே, சிறைக் கொட்டடியை நோக்கி நடக்கிறது.

     ஒரு அறையின் கதவினைத் திறந்தவர்கள், மறு நொடி அதிர்ந்து போனார்கள். அவர்களின் கண்களை அவர்களாலேயே நம்பமுடியவில்லை.

அவ்வறையில் கை, கால்களில் விலங்குகள் மாட்டப்பெற்ற நிலையில் மூவர். மூவருமே தூக்கு தண்டனை விதிக்கப் பட்டவர்கள். விடிந்தால் தூக்கு. ஆனால் அவர்களின் முகங்களில் வருத்தமே இல்லை. ஏதோ நாளைக்கு விடுதலை என்பதைப் போல், கவலைச் சிறிதும் இன்றி அமர்ந்திருக்கின்றனர்.

     அதிலும், அம்மூவரில் ஒருவர் செய்து கொண்டிருந்த செயலைத்தான், அறைக்குள் நுழைந்த கூட்டத்தால், நம்பவே முடியவில்லை.

     ஒருவர் மட்டும், சம்மணமிட்டுத் தரையில் அமர்ந்தவாறு, தலைகுனிந்து, லெனின் அவர்களின், அரசும் புரட்சியும் என்னும் நூலினை, நாளைய பள்ளித் தேர்விற்குப் படிக்கும் மாணவனைப் போல, படித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கூட்டமே, அறைக்குள் நுழைந்ததைக் கூட அறியாமல், கவனியாமல், உணராமல், புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார்.

      சிறைக் கண்காணிப்பாளர் கனைக்கவே, தலை நிமிர்ந்து பார்க்கிறார்.

உங்கள் மூவரையும், இப்பொழுதே தூக்கிலிடுவதற்கு உத்தரவு வந்துள்ளது. கிளம்புங்கள்.

    படித்துக் கொண்டிருந்த புத்தகத்தைப் பொறுமையாக மூடி, பத்திரமாய் பக்கத்தில் வைத்துவிட்டுக் கேட்டார்.

நாளை 24 ஆம் தேதிதானே, எங்களைத் தூக்கிலிட உத்தரவிட்டிருந்தார்கள்.

ஆம். அது பழைய உத்தரவு. இப்பொழுது புதிய உத்தரவு வந்திருக்கிறது. இப்பொழுதே தூக்கிலிடுமாறு. கிளம்புங்கள்.

    அம்மனிதர், அச்சூழ்நிலையிலும் சிரித்தார்.

ஆங்கிலேய அரசுக்குத்தான் எங்கள் மீது எவ்வளவு கருணை. இந்த அடிமை இந்தியாவில், மேலும் 12 மணி நேரம் அதிகமாக, நாங்கள் அடிமைப் பட்டிருக்கக் கூடாது, விடுதலை கொடுப்போம் என்று முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. இதோ நாங்கள் தயார்.

    என்ன ஒரு மன உறுதி. அதிகாரிகள் ஆடித்தான் போய்விட்டார்கள்.


புத்தகம் படித்துக் கொண்டிருந்தவரை முதலாவதாக தூக்கு மேடையில் ஏற்றினர். கை விலங்குகளை அகற்றி விட்டு, கைகளைப் பின்புறமாகக் கட்டினர். கண்களில் கருப்புத் துணியினைக் கட்டினர்.

     நீதிபதி கேட்டார்.

உங்களின் கடைசி ஆசை ஏதாவது?

ஒரே ஒரு ஆசை உள்ளது.  எங்களை சமூக விரோதிகளைப் போல், தூக்கில் போடாதீர்கள். இராணுவ வீரர்களைக் கொண்டு, எம் மார்பில் சுடுங்கள்.

     ஒரு நிமிடம் நீதிபதிக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

உங்களைத் தூக்கில் போடத்தான் உத்தரவு. அதனை மாற்ற முடியாது.

பரவாயில்லை. கண்களைக் கட்டியுள்ள கருப்புத் துணியையாவது அகற்றுங்கள். எங்கள் தாய் மண்ணைப் பார்த்தபடியே, உயிர் துறக்கிறோம்.

     கருப்புத் துணிகள் அகற்றப் பட்டன. ஒருவர் பின் ஒருவராக, கண்களை அகலத் திறந்தபடியே, பாரத மண்ணைப் பார்த்தபடியே, கயிற்றில் உயிரை விட்டனர்.

அவர்கள்தான்,
பகத் சிங்
ராஜ குரு
சுக தேவ்.
----

     நண்பர்களே, நாளை, உயிரோடு இருப்போமா, இருக்க மாட்டோமா என்பது கூட தெரியாத நிலையில், படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தை முடித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் அறிஞர் அண்ணா.

     நிச்சயமாக நாளை உயிரோடு இருக்க மாட்டோம், என்பது உறுதியாகத் தெரிந்த பிறகும் கூட, கலங்காமல் புரட்சி பற்றி படித்தவர் மாவீரன் பகத் சிங்.

ஈழக் கவி சச்சிதானந்தன் பாடுவார்

சாகும் போதும் தமிழ்ப் படித்துச் சாக வேண்டும்
எந்தன் சாம்பல் தமிழ் மணந்து வேக வேண்டும்.

     நண்பர்களே, புத்தக வாசிப்பில், இவர்களை எட்டிப் பிடிக்க மட்டுமல்ல, அண்ணாந்து பார்ப்பதற்குக் கூட நம்மால் இயலாது.

இருப்பினும்,
நாள் ஒன்றுக்கு, ஒரு பக்கமாவது வாசிக்கலாம் அல்லவா?
வாசித்ததை நேசிக்கலாம் அல்லவா?
நேசித்ததை சுவாசிக்கலாம் அல்லவா?

நண்பர்களே, தஞ்சையில் ஓர் புத்தகக் கண்காட்சி

ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் கிங்ஸ்
நடத்தும்
6 ஆம் ஆண்டு
ரோட்டரி புத்தகத் திருவிழா
நவம்பர் 14 முதல் நவம்பர் 23 வரை
பத்து நாட்களுக்கு.

வாருங்கள் நண்பர்களே,
வா        ரு        ங்        க        ள்