22 ஜூலை 2015

காமராசர் இல்லத்தில் வேதனைமிகு நிமிடங்கள்

   

அந்த அம்மையாருக்கு வயதாகிவிட்டது. முன்புபோல் உழைக்க இயலாத நிலை, சிறு வயது முதலே, உழைத்து உழைத்துக் களைத்த தேகம். இப்பொழுது வயதும் தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது.

    வீட்டில் கழிவறை வசதிகூடக் கிடையாது. இயற்கை அழைக்கும் பொழுதெல்லாம், பகலானாலும் சரி, நடு இரவானாலும் சரி, தெருவினைக் கடந்து, பொது இடத்திற்குத்தான் சென்றாக வேண்டும்.

      வீட்டிற்கு அருகிலேயே, வீட்டினை ஒட்டியபடி இருந்த ஒரு சிற்றிடம் விற்பனைக்கு வந்தது.

     ஒரு நாள் வீட்டிற்கு வந்த தன் மகனிடம், தயங்கித் தயங்கிக் கேட்டார்.


நீ கழிப்பறைக்கு இடம் வாங்க வேண்டும் என்கிறாய். ஊரில் உள்ளவன் நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான். அப்படியே சிலர் பத்திரிக்கைகளிலும் எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம் போ.

     தன் தாய்க்கு கழிவறை வசதிக்காக, இடம் வாங்கித் தர மறுத்தவர், தமிழகத்தின் முதல்வர் என்றால் நம்ப முடிகிறதா?

     நம்பித்தான் ஆக வேண்டும்.

     கர்மவீரர் காமராசரின் இல்லத்தில் இன்றும் கூட கழிவறை கிடையாது.

     தமிழகத்தில் நடைபெறும் கல்வியியல் நிகழ்ச்சிகளில், கடவுள் வாழ்த்து சொல்வதை நிறுத்திவிட்டு, காமராஜருக்கு வாழ்த்துச் சொல்லுவதுதான் முறை என்று கூறிக் கூறி மகிழ்வார் தந்தைப் பெரியார்.

    

கல்விக் கண் திறந்த, கர்மவீரர் காமராசரின் இல்லத்தில், கல்விக் கடவுளின் ஆலயத்தில், கால் பதிக்கும் ஓர் பொன்னான வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

    





கடந்த 19 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, பிற்பகல் 2.30 மணியளவில், உமாமகேசுவர மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் என பத்து பேர், காமராசரின் இல்லத்தில், கல்விக் கடவுளின் ஆலயத்தில், ஒருவித பெருமித உணர்வோடும், ஓர் நன்றியுணர்வோடும், தமிழகத்தையே படிக்க வைத்த கல்விக் கடவுள் அல்லவா, எனும் பக்தி உணர்வோடும் நுழைந்தோம்.

     ஆனால் காமராசர் இல்லத்தில் நுழைந்த நொடி முதல், நாங்கள் அனுபவித்தது என்னவோ, வேதனை வேதனை சொல்லொன்னா வேதனைதான்.

     நண்பர்களே, கும்பகோணத்தில் இருக்கும் கணித மேதை சீனிவாச இராமானுஜனின் இல்லத்திற்குப் பலமுறை சென்றிருக்கிறேன். சென்னை தியாகராய நகரில் இருக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு இல்லத்திற்கும் சென்றிருக்கிறேன். இலண்டனில் இருக்கும் காரல் மார்க்ஸ் அவர்களின் இல்லத்தை பல முறை, இணைய வழி கண்டிருக்கிறேன்.

      நான் பார்த்த நினைவு இல்லங்கள் அனைத்தும், அம்மாமனிதர்கள் வாழ்ந்த காலத்தில், என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலையிலேயே, இன்றும் பராமரிக்கப் படுகின்றன.

     அப்பொழுதுதான் அந்த இல்லங்களுக்குள் நுழைந்ததும், அம்மாமனிதர்கள் வாழ்ந்த காலத்தின், கால எல்லைக்குள், நம்மால் நுழைய முடியும், அக்காலத்தில் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை, மனக் கண்ணால் கண்டு மெய் சிலிர்க்க இயலும்.

     காமராசர் இல்லத்தில் நுழைந்து, வீட்டினுள் பாதம் பதித்த அடுத்த நொடி பாதம் சில்லிட்டது. விலை உயர்ந்த கற்களால் புதுப்பிக்கப் பட்ட தளம் எங்களைப் பார்த்துச் சிரித்தது.

ஏழைமகன் ஏழையென
இன்னமுதே நீ பிறந்தாய்
நிமிர்ந்தால் தலையிடிக்கும்
நிற்பதற்கே இடமிருக்கும்
அமைவான ஓர்குடிலில்
ஐயா நீ வந்துதித்தாய்

என்று பாடி, காமராசரின் குடும்ப நிலையினைக் கண்முன்னே கொண்டு வந்து காட்சிக்கு வைப்பார் கவியரசு கண்ணதாசன்.

     அந்த ஏழைப் பங்காளனின் வீட்டின் தரையில், இன்று விலை உயர்ந்த கற்கள்.

      அறையின் மையப் பகுதியில் கர்மவீரரின் மார்பளவுச் சிலை. சுவற்றில் காமராசரின் அரிய புகைப் படங்கள்.

      காமராசர் இல்லத்தின் காப்பாளராக நியமிக்கப் பட்டிருந்த அலுவலரைப் பார்த்தோம்.

நாங்கள் தஞ்சையில் இருந்து வருகிறோம். அனைவருமே ஆசிரியர்கள். காமராசர் அவர்களின் இல்லத்திற்கு வருவது இதுவே முதல் முறை.

தஞ்சை சென்றதும், எங்கள் மாணவர்களுக்கு காமராசர் இல்லத்தினைப் பற்றியும், காமராசர் பற்றியும் அவசியம் கூறியாக வேண்டும். வார்த்தைகளால் கூறுவதை விட, காட்சிகளாகக் காட்டினால், மிகுந்த பயனுடையதாக இருக்கும். எனவே சில புகைப் படங்களை எடுக்க விரும்புகிறோம். புகைப் படம் எடுக்கலாமா?

     இல்லக் காப்பாளர், எங்களை ஓர் அலட்சியப் பார்வை பார்த்தபடி, பேரறிஞர் அண்ணா அவர்கள் கரம் நீட்டிக் காட்டுவாரே, அதைப் போல் தன் கரம் நீட்டி, சுவற்றினைக் காட்டினார்.

புகைப் படம்
எடுக்கக் கூடாது

    அதிர்ச்சி அடைந்துதான் போனோம். கணிதமேதை சீனிவாச இராமானுஜன் இல்லத்திலும், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திலும், மதுரை காந்தி அருங்காட்சியகத்திலும், புகைப் படங்களை, கை வலிக்க வலிக்க எடுத்து மகிழ்ந்த தருணங்கள், நினைவில் தோன்றி மறைந்தன.

    நமது நாட்டின் ஈடு இணையற்ற சொத்து, நம் காமராசர். பள்ளி சென்ற, செல்கின்ற, செல்லப் போகின்ற அனைவருமே, நெஞ்சில் ஏந்திப் போற்ற வேண்டிய கல்விக் கடவுளை, நாம் அனைவருக்கும் பொதுவானவரை, புகைப்படம் எடுக்கக் கூடாது என்கிறீர்களே. பிறகு எப்படி மாணவர்களிடம், வருங்காலத் தலைமுறையிடம் இவரைக் கொண்டு போய் சேர்ப்பது என்றோம்.

     இல்லக் காப்பளரின் கண்களில் ஒருவித வெறுப்புணர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது. இதுவரை இந்த விட்டிற்கு எவ்வளவோ பேர் வந்திருக்கிறார்கள், இதுவரை அவர்கள் யாருமே கேட்காத கேள்விகளைக் கேட்கிறீர்களே. இங்கு புகைப்படம் எடுக்கக் கூடாது அவ்வளவுதான்.

     இனி இவரிடம் பேசிப் பலனில்லை என்பது புரிந்து விட்டது. கடைசியாக ஒரே ஒரு கேள்வியைக் கேட்டேன்.

தங்களின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?

இலட்சுமணன்.

     இலட்சுமணன் என்றாலே, தன்னலம் துறந்து, தன் உறவுக்காக, தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்கும் உயர்ந்த உள்ளத்தின் பெயர் என்றுதான் இவ்வளவு நாள் எண்ணியிருந்தேன்.

     என் எண்ணம் தவறென்று புரிந்தது.

     காமராசரின் இல்லத்தின் மைய அறையை ஒட்டி, மேலும் இரு சிறு அறைகள். அவற்றின் சுவர்களில் மேலும் புகைப் படங்கள். கர்ம வீரர் பயன் படுத்திய உடைகள், பொருட்கள்.

     ஒரு கண்ணாடிப் பெட்டிக்குள் ஓர் உடையைப் பார்த்ததும், கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை.

காமராசருக்காகத் தைக்கப் பெற்று, காமராசர் அணியாத, இன்னும் சரியாகச் சொல்வதானால், காமராசர் அணிய மறுத்த உடை.

     கோட், பேண்ட்.

     கர்ம வீரர் ஒருமுறை ரஷ்யாவிற்குச் சென்று வந்தாரல்லவா. அந்த வெளிநாட்டுப் பயணத்திற்காகத் தயாரான உடை அது. கதர் தவிர வேறு துணியினை, என் வாழ்நாளில், என் கரங்களால் கூட தொடேன் என்று மறுத்து, ரஷ்யாவின் கடும் குளிரையும் பொருட்படுத்தாது, கதருக்குப் பெருமை சேர்த்தவர் அல்லவா காமராசர்.

     காமராசரின் விரல் கூட படாத உடை,. இதோ கண்ணாடிப் பெட்டிக்குள் உறங்கிக் கொண்டிருக்கிறது.

     மாடியில் காமராசர் படித்த நூல்கள், சிறு வயதில் பயன்படுத்திய கட்டில்.

     காமராசர் இல்லத்தில் நாங்கள் இருந்தபோது, மிதமான கூட்டம் இருந்தது. எங்களைத் தவிர, இருபதிற்கும் மேற்பட்டோர் காமராசர் இல்லத்தினைக் காண வந்திருந்தனர்.

     நாங்கள், இரு சிறு அறைகளுக்குச் சென்ற போதும், மாடிக்குச் சென்றபோதும், இல்லக் காப்பாளர், எங்களின் நிழல் போல் ஒட்டிக் கொண்டே வந்தார்.

     நாங்கள் அவரில்லாத நேரத்தில் புகைப் படம் எடுத்து விட்டால், அது மிகப் பெரிய குற்றமாகி விடுமல்லவா?

     உடல் நலம் குன்றியிருந்த தன் தாயைப் பார்ப்பதற்காக, காமராசர் வருகிறார். வீடு முழுவதும் உறவினர் கூட்டம். தரையில், பாயில் காமராசரின் தாய் கண் மூடிப் படுத்திருக்கிறார்.

     காமராசரைக் கண்டதும், முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க வரவேற்ற, காமராசரின் சகோதரியார் நாகம்மாள், உறவினர் கூட்டத்தைப் பிளந்து கொண்டு, தாயருகே சென்று, காதருகே குனிகிறார்.

அம்மா, அண்ணன் வந்திருக்கு.

    தாயார் கண் திறந்து, தன் அன்பு மகனைக் காண்கிறார். பொக்கை வாய் மெதுவாக, மிக மெதுவாக விரிந்து, மகிழ்ச்சியில் மலர்கிறது.

வாப்பா

    காமராசர் தன் தாயருகே, தரையில் அமருகிறார். தாயின் கரம் பற்றி, மெதுவாய் வருடிக் கொடுக்கிறார். சிறிது நேரம் கழித்து, வரட்டுமா என்றார்.

ஒரு வாய் சாப்பிட்டு விட்டுப் போப்பா,

அதெல்லாம் வேண்டாம், போகிற வழியில் சாப்பிட்டுக்கிறேன் என்று கூறி எழுந்த காமராசர், தன் தாயின் முகத்தைப் பார்க்கிறார்.

    தாயின் கண்களில் இருந்து, மெதுவாய் வெளிப்பட்ட கண்ணீர், கண்ணங்களின் வழியே வழிந்தோடுகிறது.

சரி சரி, சாப்பாட்டை எடுத்து வை.

அடுக்களைக்குப் போய் சாப்பிடப்பா.

    காமராசர் அடுக்களைக்குள் நுழைய, நாகம்மை உணவு பரிமாறுகிறார். நின்றபடியே, பெயருக்குச் சாப்பிட்டுவிட்டு, வெளியே வருகிறார்.

நான் போயிட்டு வரட்டுமா

மகராசனா போயிட்டு வாப்பா

சிவகாமி அம்மையார் வாழ்த்தி வழியனுப்புகிறார்.

    காரில் ஏறி அமர்ந்த காமராசர் அமைதியாய், சிந்தனை வயப்பட்டவராய் அமர்ந்திருக்க, அருகில் அமர்ந்திருந்த திரு பழ.நெடுமாறன், மெதுவாய், தயங்கித் தயங்கிக் கேட்கிறார்.

ஐயா, தாங்கள் வீட்டில் சாப்பிட்டு, எவ்வளவு காலம் ஆகியிருக்கும்.

என்ன ஒரு 25 அல்லது 30 வருடம் இருக்கும்.

    பழ.நெடுமாறன் பேச்சற்று உறைந்து போகிறார்.

    இவர்தான் காமராசர்.

    நண்பர்களே, எனக்கு ஓர் ஆசை. காமராசர் நின்றபடியே சாப்பிட்ட அடுக்களையைக் காண வேண்டும் என்று.

    சுற்றிச் சுற்றிப் பார்த்தேன்.

    அடுக்களையையே காணோம்.

     எங்கள் பின்னாலேயே, நிழல் போல் ஒட்டிக் கொண்டிருந்த திரு லட்சுமணன் அவர்களிடம் கேட்டேன், வீட்டின் அடுப்படி எங்கிருக்கிறது?

அதெல்லாம் எனக்குத் தெரியாது

     கேட்டு முடிப்பதற்குள், சுவற்றில் அடித்த பந்து போல், வார்த்தைகள் வந்து விழுந்தன.

     ஓர் அறையின் கதவு பூட்டியிருந்த்து.

இது என்ன அறை?

அதெல்லாம் எனக்குத் தெரியாது.

     இரண்டு ஆண்டுகளுக்கு முன், கும்பகோணத்தில் உள்ள கணிதமேதை சீனிவாச இராமானுஜனின் இல்லத்திற்கு சென்று வந்த நினைவு, நெஞ்சில் சுழன்று சுழன்று அடித்தது.

     காமராசரின் இல்லம் போலவே, இராமானுஜனின் வீட்டிலும், வீட்டின் மையப் பகுதியில், இராமானுஜனின் மார்பளவு சிலை. சிலையின் அருகில் அமர்ந்து, நானும் என் மனைவியும், வேண்டிய அளவு புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.

     இராமானுஜன் வீட்டின் சமையலறை, அன்று இருந்த நிலையில்,  இன்றும் அப்படியே பராமரிக்கப் படுகிறது.

     ஆனால், காமராசரின் இல்லத்திலோ அடுக்களை காணாமல் போய்விட்டது.

     மகிழ்ச்சியாக உள்ளே நுழைந்தவர்கள், வேதனைகளைச் சுமந்தவாறு வெளியே வந்தோம்.

     காமராசரின் இல்லத்திற்கு வெளியே, வீட்டின் படிக்கட்டில் நின்றவாறு, நண்பரை தெருவில் நின்றவாறு புகைப்படம் எடுக்கச் சொன்னேன்.

     இல்லக் காப்பாளர் ஓடோடி வந்து தடுத்தார்.

     வீட்டின் வாசலுக்கு நேராக நின்று புகைப்படம் எடுக்கக் கூடாது. அப்படி எடுத்தால், வீட்டினுள் இருக்கும் காமராசர் சிலையும் படத்தில் பதிவாகிவிடும். காமராசரின் சிலை படத்தில் விழக் கூடாது.

நீங்கள் வேண்டுமானால். இதே இடத்தில் நின்று கொள்ளுங்கள், ஆனால் புகைப்படம் எடுப்பவர், வீட்டின் வலது ஓரத்தில் நின்றபடி, காமராசர் சிலை தெரியாமல் படம் எடுக்கலாம்.

      காமராசர் சிலைக்கு மட்டும் காது கேட்கும் சக்தி இருந்திருக்குமானால், உங்களை எல்லாம் படிக்க வைத்த, எனக்கா, இந்த நிலை என்று வாய் விட்டுக் கதறியிருக்கும்.
    

ஆண்டுதோறும், கர்மவீரர் காமராசரின் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக சிறப்புடன் கொண்டாடி வரும், தமிழக அரசின் கவனத்திற்கு, காமராசர் இல்ல கெடுபிடிகளை கொண்டு செல்வது நமது கடமையாகும்.

     புகைப்படம் எடுப்பதால், சுவற்றில் இருக்கும் படங்கள் எந்நாளும் சேதமடையாது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசு இப்படியானதொரு உத்தரவினை நிச்சயம் பிறப்பித்திருக்காது என்பதும் உறுதி.

     காமராசரின் இல்லத்திற்கு, காமராசரின் அருமையினை, தன்னலமற்ற தொண்டினை அறிந்த, உணர்ந்த, மனிதர் ஒருவரை, காப்பாளராக நியமிக்க வேண்டும் என்பதே, ஒரு முன்னாள் மாணவனாக, இந்நாள் ஆசிரியராக, எந்நாளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்த, சாதி, மத, இன உணர்வுகளைத் துறந்த இந்த எளியேனின் விருப்பாகும்.

பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத் தாண்டு
பலகோடி நூறாயிரம்
செவ்வாட்சி தான் தந்த
தமிழ் மன்னா உன்
திருவடியே திருக்காப்பு....

கரியமா மலைபோல் மேனி
கருணையே கமலச் செங்கண்
அருளிலேவிளைந்த சொற்கள்
அகமெல்லாம் தேச பக்தி

இருளிலே விளக்கை ஏற்றி
இளமைக்குத் தமிழ்ப்பால் தந்த
திருவுளம் நிறைந்த செல்வா
தெய்வமாய் நிற்கின்றா யே.
-          கவியரசு கண்ணதாசன்