20 நவம்பர் 2015

நம்ப முடியாத உண்மைகள்



   அது ஒரு அடர்ந்த காடு. காட்டின் மரங்களுக்கிடையே நுழைந்து மெல்ல, மெல்ல முன்னேறுகிறது அப்படை. குதிரைப் படை, காலாட் படை. மெல்ல மெல்ல புதர்களையும், சிறு சிறு செடி கொடிகளையும் மிதித்து நசுக்கிய வண்ணம், அந்தப் படை முன்னேறிக் கொண்டிருக்கிறது.

   நீண்ட தூரம் நடந்த களைப்பு போர் வீரர்களின் முகங்களில் தெரிகிறது. அவர்களுடைய ஆயுதங்கள், உடைகளில் சொருகப் பட்டிருக்கின்றன.

    படைத் தலைவன் எச்சரிக்கையோடு, விழிகளால், காட்டினை சல்லடை போட்டுச் சளித்த வண்ணம், முன்னே செல்கின்றான்.

   திடீரென்று குறுக்கே ஓடுகிறது, ஒரு பூனை.


   அடுத்த நொடி, படைத் தலைவன் தன் கைகளை உயர்த்திப் படைகளை நிறுத்துகிறான்.

பூனை

   ஒற்றைச் சொல், மெதுவாக, மிக மெதுவாக அவன் நாவில் இருந்து வெளிப் படுகிறது.

பூனை, பூனை, பூனை, பூனை, பூனை

   படைத் தலைவன் மெதுவாகத்தான் கூறினான். ஆயினும் அந்த ஒற்றைச் சொல், மந்திரம் போல் படை முழுவதும் பரவுகிறது.

   நடந்து நடந்து களைத்துப் போயிருந்த வீரர்களின் உடல்களில் ஒரு மாற்றம். சோம்பல் முன்றிலும் நீங்கி, சண்டைக்குத் தயாராகிறார்கள்.

பூனை, பூனை, பூனை, பூனை, பூனை

    உடைகளில் உறங்கிக் கொண்டிருந்த ஆயுதங்கள், கைகளில், போருக்குத் தயாராய்.

     நண்பர்களே, ஒரு பூனையைக் கண்டு ஒரு பெரும் படையே, போருக்கு ஆயத்தமாவது வியப்பாக இருக்கிறது அல்லவா.

     காரணம் இருக்கிறது.

     பூனைகள் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் மட்டுமே வாழும் தன்மையுடையவை. எனவே ஒரு பூனை குறுக்கே செல்கிறதென்றால், அருகில், மக்களின் குடியிருப்புகள் இருக்கின்றன என்று பொருள்.

     அங்கு குடியிருப்பவர்களுக்குத் தங்களை நெருங்கும் படை, தங்களின் அரசருடையதா? அல்லது எதிரி நாட்டு அரசருடையதா? என்பது தெரியாது அல்லவா? எனவே தங்களை நெருங்கும் படைகளை, அக் குடியிருப்பு வாசிகள் மறைந்திருந்து தாக்கவும் கூடும்.

     எனவே குடியிருப்புப் பகுதிகளை நெருங்கும் படை வீரர்கள், எச்சரிக்கையுடன் செல்ல வேண்டியது அவசியம்.

     பூனையானது மக்களின் குடியிருப்புப் பகுதிகளை உணர்த்தும் ஒரு கருவியாகத்தான், பண்டைய நாட்களில், படை வீரர்களால் பார்க்கப் பட்டது.

      ஆண்டுகள் செல்லச் செல்ல, பூனை குறுக்கே சென்றால் ஆபத்து என்ற எண்ணம் படை வீரர்களின் ம்னதில் பதியத் தொடங்கியது. இந்த எண்ணம் மெல்ல, மெல்லப் பரவி, பொது மக்களும் பூனையினை ஆபத்தின் அறிகுறியாக, அபசகுனத்தின் தூதுவனாகப் பார்க்கத் தொடங்கினர்.

     இன்று மன்னன் இல்லை. போருக்கு குதிரையின் மேல் அமர்ந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

     ஆனால் பூனையின் பயம் மட்டும் தொடர்கிறது.

     பூனை அபசகுனத்தின் அறிகுறி என்றும் ஒரு மூட நம்பிக்கை, ஆழமாக, வெகு ஆழமாக, மக்களின் மனதில் பதிந்து போனதுதான் வேதனை.

---
     வளர்ச்சி என்னும் பெயரில் காடுகளை அழிப்பது நமக்குப் பொழுது போக்கு. மரம் வளர்ப்போம் என்று சொல்லிச் சொல்லி, சிறு சிறு செடிகளை நடுவோம், ஆனால் அடுத்த நாளே மறந்து போவோம். நீர் ஊற்ற மாட்டோம், பேணிக் காக்க மாட்டோம்.

     ஜப்பான் நாடு காடுகளே இல்லாத நாடு. ஜப்பானியர்களுக்கு நெடுங்காலமாகவே, நமது நாட்டில் ஒரு காடு கூட இல்லையே என்னும் கவலை உண்டு.

     காடுதான் இல்லையே தவிர, குப்பைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருந்தன. யோசித்தார்கள். ஒரு முடிவிற்கு வந்தார்கள்.

      இதுவரை இல்லாத காட்டை உருவாக்குவது என்று முடிவு செய்து செயலில் இறங்கினார்கள்.

      குப்பைகளை எல்லாம் கடலில் கொட்டிக், கொட்டி செயற்கையாய் ஒரூ தீவினையே உருவாக்கினார்கள். குப்பைகளின் தீவில், மண்ணை நிரப்பினார்கள். சிறு சிறு தாவரங்களை நட்டார்கள். செடிகளை மரங்களாய் வளர்த்தார்கள்.

     செயற்கையாய் ஒரு காடு. 88 ஹெக்டேர் பரப்பளவு. ஒன்பது ஆயிரம் மரங்கள்.

     அடுத்த ஆண்டு, 2016 இல் இக்காட்டின் திறப்பு விழா.

     நம்ப முடிகிறதா, ஆனாலும் உண்மை.

---

    

கேரள மாநிலத்தில், மலப்புரம் மாவட்டத்தில், கொடிஞ்சி என்னும் சிற்றூர்.

     இச்சிறு கிராமத்தின் மொத்த மக்கள் தொகையே 13 ஆயிரம்தான்.

     இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இவர்களுள் 270 பேர் இரட்டையர்கள்.

     இக்கிராமத்தின் ஒவ்வொரு தெருவிலும் இரட்டையர்கள், இரட்டையர்கள்.

      இதற்கான காரணம் மட்டும், இதுநாள் வரை எந்த விஞ்ஞானிக்கும் புரியவில்லை.

---

     ஆண்டு 1989. அமெரிக்காவின் ஒக்லஹாமா.

     74 வயது நிரம்பிய பில்லி டிப்டனின் மரணம், அவர் வசித்து வந்த தெருவினையே சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

    பில்லிக்கு குழந்தைகள் இல்லை. எனவே அவரும், அவரது மனைவியும் மூன்று குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

    பில்லியின் மனைவி, தனது  கணவர் இறந்த சோகத்தில் மூழ்கியிருக்க, குழந்தைகளோ, தங்களது தந்தையின் பெருமைகளைச் சொல்லிச் சொல்லி, அவ்வூர் மக்களையேக் கண் கலங்க வைத்தனர்.

     இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடந்தன. பில்லியின் உடலினை வீட்டில் இருந்து கல்லறைத் தோட்டத்திற்குக் கொண்டு சென்றாக வேண்டும்.

    அதற்கு முன் பில்லிக்கு புதிய உடைகளை உடுத்தியாக வேண்டும்.

     பில்லி அணிந்திருந்த பழைய உடைகளை அகற்றியவர்கள், தாங்கள் கண்ட காட்சியில், பேச்சு மூச்சின்றி உறைந்துதான் போனார்கள்.

    பல நிமிடங்கள் யாராலும் பேசக் கூட முடியவில்லை.

    செய்தி மெல்ல, மெல்லப் பரவ அந்த ஊரே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.

    காரணம் பில்லி ஆணே அல்ல. நூறு சதவிகிதம் முழுமையான வளர்ச்சி அடைந்த ஒரு பெண்.

    

ஒரு பெண், ஒன்றல்ல, இரண்டல்ல முழுதாய் 73 வருடங்கள் எதற்காக, ஆணாக நடிக்க வேண்டும்.

     இன்று வரை யாருக்கும் தெரியாது.

---

     கிட்டத்தட்ட 20 கோடி ஆண்டுகளாக அழியாமல், நிலைத்து நின்று, இன்றும் வாழும் ஒரு உயிரினம் எது தெரியுமா?

     குளிர் மெல்ல மெல்ல உயர்ந்து, நீர் நிலைகள் எல்லாம் பனியாக உறைந்தாலும் சரி, வெயில் மெல்ல மெல்ல உச்சத்தைத் தொட்டு, தனலாய் தகித்தாலும் சரி, இந்த உயிரினம் தாக்குப் பிடிக்கும்.

     ஒரு சொட்டு நீர் அருந்தாமல், ஒரு சிறு துண்டு உணவு கூட உண்ணாமல், ஒரு மாதம் வரை இந்த உயிரினம், உயிர் வாழும்.

     தலையையே வெட்டித் துண்டாக்கினாலும், முண்டமாய் ஒரு வாரம் வரை உயிர் வாழும்.

      நமக்கெல்லாம் வாயில் மட்டும்தான் பல். இதற்கு வயிற்றிலும் பல் உண்டு. உண்ட உணவை அரைத்துச் செரிக்க வைக்க.

     ஒரு முறை, தன் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும், இந்தப் பெண் இனம், ஒரு ஆண் இனத்துடன் உடலுறவு கொண்டால் போதும். ஆமாம் நண்பர்களே, ஒரே ஒரு முறை போதும். அதன் பிறகு, இந்தப் பெண் இனம், தன் வாழ்நாள் முழுதும் கர்ப்பம் தரித்துக் கொண்டே இருக்கும்.

வியப்பாக இருக்கிறது அல்லவா
நம்ப முடியவில்லை அல்லவா
ஆனாலும் உண்மை
இந்த உயிரினம் எது தெரியுமா?
கரப்பான் பூச்சி.
---

     நண்பர்களே, உங்களின் குழப்பம் புரிகிறது. என்னடா இவன், ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத, நம்புவதற்கும் இயலாத செய்திகளாக, சொல்லிக் கொண்டே செல்கிறானே என்ற உங்களின் சிந்தனையோட்டம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

     நான் மேலே குறிப்பிட்ட செய்திகள் அனைத்தையும் ஒரு நூலில் படித்தேன். என்ன ஒரு நூலிலா? என நீங்கள் வியப்பதும் தெரிகிறது. ஆம், ஒரே நூலில். அந்த நூலில் பக்கத்துக்குப் பக்கம், இதுபோன்ற செய்திகள்தான். நம்புவதற்குக் கடினமானவை. ஆனாலும் உண்மையானவை.


நம்ப முடியாத உண்மைகள்

நூலின் பெயரே இதுதான்.
இதனை எழுதியர் யார் தெரியுமா?
நமது நண்பர்தான்.
என்னும்
வலைப் பூவின் பதிவர்


நண்பர்  எஸ்.பி. செந்தில் குமார்.

     புதுகையில் நடைபெற்ற வலைப் பதிவர் சந்திப்புத் திருவிழாவில்தான், நண்பர் எஸ்.பி.செந்தில்குமார் அவர்களை முதன் முதலாகச் சந்தித்தேன்.

     புத்தகத்தின் தலைப்பினைப் போலவே, இவரையும் முதன் முதலாகப் பார்த்த பொழுது என்னால் நம்பத்தான் முடியவில்லை.

அவரா, இவர்
நம்பத்தான் முடியவில்லை.

  

கல்லூரி செல்லும் மாணவரைப் போல, தோளில் பையினைச் சுமந்தபடி, மலர்ந்த முகத்துடன் காட்சியளித்தார்.

    சமூகவியலும், இதழியலும் பயின்றவர். பயணித்துக் கொண்டே இருப்பவர். பயணக் கட்டுரைகளை யாத்ரிகன் என்னும் பெயரில் எழுதிக் கொண்டே இருப்பவர். கலா தேவி என்னும் பெயரிலும் கட்டுரைகளைப் படைப்பவர்.

     சிறந்த புகைப்படக் கலைஞர்.

     தினத் தந்தி நாளிதழின் வெள்ளி மலரில் இவர் எழுதிய சித்தர்களைப் பற்றியத் தொடரான, சித்தர் அற்புதம் தொடரினைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம்.

    ஹாலிடே நியூஸ், அக்ரி டாக்டர் ஆகிய மாத இதழ்களின் இணை ஆசிரியர்.

    புதுகையில் முதன் முதலாய் சந்தித்த போது, கரம் பற்றி வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தேன்.

    இவரது அயரா, தளரா உழைப்பினைப் பாராட்டியே ஆக வேண்டும்.

    நண்பர்களே, நான் கடந்த நான்கு ஆண்டுகளாக வலைப் பூவில் எழுதி வருகின்றேன். முதலில் மாதம் ஒரு பதிவு, தற்சமயம் வாரம் ஒரு பதிவு.

    வாரத்திற்கு ஒரு பதிவு எழுதவே, எனக்கு மூச்சுத் திணறிப் போகிறது.

     ஆனால் இவரோ, எழுதி, எழுதி, அசராமல் எழுதி, எழுதி மலைபோல் குவித்து வருகிறார்.

     பாராட்ட வார்த்தைகளே இல்லை.

     2003 ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் தொடங்கி, நாள்தோறும், ஒரு புதுப் புதுச் செய்திகளை எழுதி வருகிறார்.

      இன்று வரை எழுதி இருக்கிறார். இனியும் எழுதுவார், என்றென்றும் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பார்.

தினம் ஒரு தகவல்
என்னும் தலைப்பில், இவரது செய்திகள், தினம் தினம் தினத் தந்தி நாளிதழினை அலங்கரித்து வருகின்றன.

     நினைத்துப் பார்க்கிறேன்.

     2003 இல் எழுதத் தொடங்கி இருக்கிறார் என்றால், இதுவரை, இன்று வரை 4500 செய்திகளுக்கும் மேல் எழுதியிருக்கிறார்.

      நினைக்கவே மலைப்பாக இருக்கிறது.

      ஆனாலும் ஒன்றுமே அறியாத சிறு குழந்தை போல் பேசுகிறார், சிரிக்கிறார்.

       தங்களைச் சந்தித்ததில், உரையாடியதில், நண்பரென்னும் உறவாய் அடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி நண்பரே.


எழுதுங்கள், எழுதுங்கள்
மலை மலையாய்
எழுதிக் குவியுங்கள்.