18 மார்ச் 2016

பங்களா கொட்டா




     அது ஒரு தனி உலகம். பூமிப் பந்தில், இந்திய வரைபடத்தில், தனியே புள்ளி வைத்துக் காட்ட அவசியப்படாத ஊர்.

     வேலங்குடி.

     அன்றைய கீழத் தஞ்சை மாவட்டம்.

     இன்றைய திருவாரூர் மாவட்டம்.

     மேலே அண்ணாந்து சூரியனைப் பார்த்து சரியாக மணி சொல்லும் மனிதர்கள். வேட்டி துண்டைத் தாண்டி, மேல் சட்டை போடுவதையே ஆடம்பரமாக நினைப்பவர்கள்.

     மரம், சொடி, கொடிகளைத் தாண்டி, மண்ணோடும் மாடுகளோடும் பிழைப்பவர்கள். அது வயலுக்கு உரமாக சாணமும், சாம்பலும், எருவும் தழையும் கலந்து போட்ட காலம்.

      இயந்திரங்கள் இல்லாத இயற்கையோடு கலந்த விவசாயம். பருவம் தவறாமல் மழையும், பனியும் செய்து விவசாயம் செழித்திருந்த நாட்கள் ….

     நண்பர்களே, நமது பதிவுலக நண்பர், இப்படித்தான் தொடங்குகிறார் கதையை.

     இது இவருக்கு முதல் நாவலாம்.

     நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது.

    ஒரு தேர்ந்த எழுத்தாளரின், கிராமிய மணம் வீசும் எழுத்து நடை. கிராமத்துத் தெருக்களில், புகுதி படிந்த மண்ணில், நெஞ்சில் ஈரம் மிகுந்த மனிதர்களோடு, தோளில் கைபோட்டபடி, நடைபோடும் ஓர் உணர்வு.

       அமெரிக்க மண்ணில் காலடி பதித்து, வருடங்கள் பலப் பல கடந்துவிட்ட போதிலும், தன் சொந்த மண்ணின் மொழியை, சொந்த கிராமத்து மண்ணின் நறுமனம் வீசும் மொழியை, தன்னுள் உயிர்ப்போடு, அடைகாத்து, இவர் போற்றிப் புரந்து வருவது புரிகிறது.

பங்களா கொட்டா.

    ஒரு மாபெரும் கனவை நனவாக்கிடத் துடித்துத் துடித்து, அதற்காகத் தன் வாழ்க்கையினையே அடகு வைப்பவனின் கதை.

நகமும் சதையுமாய் இருந்த உறவுகள் கூட பங்காளியாகும் போது, கோர்ட் கேசு என அலைந்து கொண்டிருப்பதை தினமும் பார்க்கிறார். எவ்வளவோ குடும்பப் பிரச்சனைகளுக்குப் பொண்ணும், மண்ணுமே அடிநாதமாய் இருப்பதென்பதே நிதர்சனம்.

      இன்றைய வாழ்வியலை, இன்றைய வாழ்வியல் யதார்த்தத்தை நூலின் ஒவ்வொரு பக்கமும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.


ஒவ்வொரு ஷெட்யூல்தாரரும் விவசாயம் செய்ய, ஒருவருக்கொருவர் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ள தண்ணீர் விட வேண்டியது. ஜல பாகத்தை எந்த காரணத்தைக் கொண்டும் தடுக்கவோ, மறைக்கவோ கூடாது.

       பெரியவரின் உயிர் பிரிந்தபின், உயிர் பெற்ற உயிலின் வாசகங்கள் நம்மை நெகிழச் செய்கின்றன.

    வயலினைப் பிரித்துக் கொடுத்த போதும், வாய்க்கால் வழி வழிந்தோடும் நீரைப் பொதுவில் வைக்கும் பாங்கு நம்மை வியப்படையச் செய்கிறது.

       நாவலின் ஒவ்வொரு பக்கமும், தெளிந்த நீரோடை போல், தங்கு தடையின்றி, இயல்பாக, வெகு இயல்பாக நகர்ந்தோடுகிறது.

எதற்காக வாழறோம் என்னும் கேள்வியையே பல பேர் கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும் எத்தனை பேருக்கு பதில் தெரியும்….. லட்சியமில்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? அது இல்லாமல் மனிதனாகப் பிறந்ததற்கே அர்த்தம் இல்லையே.

     இலட்சியத்தோடு வாழும் ஒரு மனிதனின் கதை.

பங்களா கொட்டா.

     உயிர்ப்பின்மையோடு இயங்கும் உலகில், விவேகத்தோடும், முதிர்ச்சியோடும், தன் சுயத்தை தக்க வைத்துக் கொள்ளப் போராடும் ஒரு மனிதனின் கதை.

பங்களா கொட்டா.

   இதை எழுதியர் யார் தெரியுமா?

   நமது நண்பர்.

   வலைப் பூவில் வலம் வருபவர்.

நானும் என் முன்னோர்களும் நூறாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த வாழ்க்கையின் மௌன சாட்சி எங்கள் கிராமம்.

அந்த கிராமம் என் கண் முன்னே மாறிக் கொண்டிருக்கிறது.

வெகுவேகமாய் நகரமயமான இலட்சக் கணக்கான இந்திய கிராமங்களில் எங்கள் கிராமமும் ஒன்று என்று சொல்லிக் கொள்வதில், எனக்குப் பெருமை ஒனறுமில்லை.

நகரமயமாதல் என்னும் சூறாவளியில் சிக்கி, கிராமங்கள் தன் சுய அடையாளங்களை இழந்து, சிதிலங்களுடன் இன்று உள்ளன.

அங்கே வாழ்ந்த மனிதர்களின் தடயங்கள் முற்றிலும் அழிந்துவிடும் முன், கொஞ்சமேனும் மிச்சம் இருக்கும், கிராமிய மணம் காற்றில் கரைந்து போகும் முன், அந்த நினைவுகள் நிறமிழந்து போகும்முன், என் இழந்த வாழ்க்கையை மீட்டெடுக்கும் முயற்சி இந்நூல்.

     இவ்வாறுதான் தன் முதல் நாவலை அறிமுகப் படுத்துகிறார் இவர்.


இவர்தான்

   சுட்டெரிக்கும் வெயிலில் நாள் முழுதும் அலைந்து, களைத்து வீடு திரும்பும் பொழுது, ஒரு குவளை குளிர்ச்சியான மோர் குடித்தால் எப்படியிருக்கும், அப்படி ஒரு மன நிறைவைத் தருகிறது இவரது நூல்.



பங்களா கொட்டா.

படித்துப் பாருங்கள் நண்பர்களே.

       அன்பு நண்பர் ஆரூர் பாஸ்கர் அவர்களுக்கு ஓர் வேண்டுகோள், ஒரு அன்பு வேண்டுகோள்.

      மீதமிருக்கும் கிராமத்து நினைவுகளை எல்லாம், நினைவிருக்கும் பொழுதே, நேரமிருக்கும் பொழுதெல்லாம், கொஞ்சம் கொஞ்சமாய், வெள்ளைத் தாளில் இறக்கி வையுங்கள்.

அடுத்தமுறை தமிழகம் வரும்பொழுது.
திரு ஆரூர் வரும் பொழுது
எழுத்துக்களைச் சுமந்த தாட்கள்
புத்தகமாய் பிரசவிக்கட்டும்.
நினைவுப் பெட்டகமாய் மலரட்டும்.


வெளியீடு
அகநாழிகை பதிப்பகம்,
26,ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு -613001.
அலைபேசி 99 94 54 10 10

விற்பனை உரிமை
டீஸ்கவரி பேலஸ்,
கே.கே.நகர் ( மேற்கு) சென்னை-78
தொலைபேசி 044 – 6515 7525, அலைபேசி 99 40 44 66 50


விலை ரூ.130