18 மே 2016

இராணுவம் அழைக்கிறது




     இராணுவம்.

     இராணுவம் என்றாலே, போர்க் களக் காட்சிகளும், வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கி சிதறி வீர மரணம் எய்தும் வீரர்களின் காட்சிதான், நம் கண் முன்னே தோன்றுகிறது.

    இராணுவம் என்றாலே போர் முனை மட்டும்தானா?

    இல்லை, இல்லை இல்லவே இல்லை.

    இராணுவம் என்பது உலகளாவிய அனுபவம் பெற உதவும் ஓர் அற்புத அமைப்பாகும்.

    இராணுவம் பல பிரிவுகளைளம், ஒவ்வொரு பிரிவிலும் பல உட்பிரிவுகளையும் கொண்ட, ஒரு பரந்து பட்ட அமைப்பாகும்.

    இராணுவத்தில் சேர்வதற்கு உடலை வளர்த்தால் மட்டும் போதாது.

    உடல் நலம், மன நலம், கல்வித் தகுதி, ஒரு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடிய பொறுமை, தியாகம், விட்டுக் கொடுக்கும் தன்மை போன்ற குண நலன்களே, அடிப்படைத் தகுதிகளாகும்.

    இராணுவத்தினரைப் பொதுவாக இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

   ஒன்று அதிகாரிகள் மற்றொன்று அதிகாரியல்லாதோர்.

   அதிகாரிகளின் தொடக்க நிலையே லெப்டினன்ட் என்பதாகும். பின் இப்பதவி மெல்ல மெல்ல, கேப்டன், மேஜர், கர்னல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல், ஜெனரல் என மேலே மேலே ஏறும்.

    அதிகாரியல்லாதோரின் தொடக்க நிலை சிப்பாய் ஆகும். இப் பதவி மெல்ல மெல்ல, மெதுவாய், மிக மெதுவாய் லான்ஸ் நாயக், நாயக், ஹவில்தார், நாயப் சுபேதார், சுபேதார், சுபேதார் மேஜர், கௌரவ அதிகாரி லெப்டினன்ட், கௌரவ அதிகாரி கேப்டன் என ஊர்ந்து ஊர்ந்து மேலேறும்.

     பொதுவாகத் தென்னாட்டவரைப் பொறுத்தவரை, ஏராளமானோர் பட்டப் படிப்பு படித்திருந்தும், இராணுவம் பற்றிய அடிப்படைப் புரிந்துணர்வு இல்லாமையால், சிப்பாயாகச் சேர்ந்து, சிப்பாயாகவே தங்கள் வாழ்வினை முடித்துக் கொள்கின்றார்கள்.

     ஆனால் வடநாட்டினரோ, ஒரு சாதாரண பி.ஏ., படிப்பை வைத்துக் கொண்டு, அதிகாரியாய், முதல் நிலையிலேயே லெப்டினன்டாய் உள்ளே நுழைந்து, பதவி உயர்வில் வெகு வேகமாய் மேலே ஏறுகிறார்கள்.

     நம்மவர்களோ, சிப்பாயாகச் சேர்ந்து, பல வருடங்கள் பாடுபட்டுப் போராடிப் போராடி, அதிகபட்சமாய் எட்டிப் பிடிக்கும் பதவியே லெப்டினன்ட்தான்.

     நம்மவர்களின் உச்சகட்டப் பதவிதான், வட நாட்டினரின் தொடக்க நிலைப் பதவியாக அமைகிறது.

   நண்பர்களே, இராணுவம் பற்றிய அறியாமைதானே இதற்கெல்லாம் காரணம்.

   சரி, அப்படியானால், இராணுவம் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

   உங்களின் சந்தேகங்கள் அனைத்திற்கும் விடை தரக் காத்திருக்கிறது ஒரு புத்தகம்.

இராணுவம் அழைக்கிறது

மூலையிலோர் சிறுநூலும் புதுநூலாயின்
   முடிதனிலேய சுமந்துவந்து தருதல் வேண்டும்

என்பார் புரட்சிக்கவி பாவேந்தர்.



இராணுவம் அழைக்கிறது

    சிறு நூலாயினும், போற்றுதலுக்கு உரிய ஓர் நூல். இராணுவம் பற்றியப் புரிதலுக்கு உகந்த ஓர் நன் நூல்.

இந்நூலினை எழுதியவர் யார் தெரியுமா?

தாங்கள் நன்கு அறிந்தவர்தான்.

முப்பதாண்டு கால இராணுவப் பணி

இந்தியத் தென்துருவ ஆய்வுத் தளமான
தஷின் கங்கோத்ரிக்கு
தலைவராய் பொறுப்பேற்று,
ஒரு மாதம் இரு மாதமல்ல
முழுதாய் பதினெட்டு மாதங்களை
உறைபனி உலகில் கழித்தவர்.


வெண்பனிப் பரப்பிலும் சில வியர்வைத் துளிகள்,
இராணுவம் அழைக்கிறது,   சிவந்த மண் கைப்பிடி நூறு,
எல்லைப் புறத்தில் ஒரு இதயத்தின் குரல்,
கல் சொல்லும் கதை,   இலக்கைத் தேடும் ஏவுகணைகள்
சங்கமமாகும் இணைகோடுகள்,  மண் மேடுகள்
முதலான நூல்களின் ஆசிரியர்.


குடியரசுத் தலைவர் விருது பெற்ற
கர்னல் பா.கணேசன்


எழுபத்து ஐந்து வயதைக் கடந்த பிறகும்
அயராத தளராது
தமிழ் தட்டச்சினைத் தானே முயன்று
சுயமாய் கற்றுத் தேறி,
வலைப் பூவில் தமிழ் மணம் கமழ,
இராணுவத்தின் மகத்துவத்தை, மேன்மையை
நமக்கு உணர்த்தி வருபவர்


இவரது
வலையினையும், நூலினையும்
வாசிப்போம் வாருங்கள்

இராணுவம்அழைக்கிறது
நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் லிட்.
சென்னை.
விலை ரு.25
ஆசிரியரின் முகவரி

Colonel P.Ganesan,
THE POLES.
943, H Block, 17 th Main Road,
Anna Nagar West,Chennai -600 040

Phone :044 26163794,   Cell : 94 44 06 37 94