06 ஜூன் 2016

அசல் மனிதர்



சட்டசபை உறுப்பினர்கள் சொல்கிற சிபாரிசுகளைப் புறக்கணித்து விடுங்கள். மக்கள் குறைகளைக் கேட்டு, அந்தக் குறைகளை நிவர்த்திக்க வேண்டும். மனசாட்சிக்கு எது சரியோ அதை மட்டும் செய்யுங்கள். தூய்மையான நிர்வாகத்துக்கு நீங்கள்தான் பொறுப்பாவீர்கள்.

எம்.எல்ஏ., தலையிட்டார், மந்திரி சொன்னார், அதற்காகத்தான் இப்படி உத்தரவு பிறப்பித்தேன் என்று சொல்லக் கூடாது.


     சுற்றறிக்கை

     இப்படி ஒரு சுற்றறிக்கை மாநிலம் முழுவதும் பறந்தது.

    சுற்றறிக்கையைப் பெற்றவர்கள் அனைவரும் ஒரு கணம் தம்மையே மறந்துதான் போனார்கள்.

     இப்படி ஒரு சுற்றறிக்கை இந்திய வரலாற்றிலேயே, இதுவரை வந்தது இல்லையே என வியந்துதான் போனார்கள்.

     இந்த சுற்றறிக்கையினைப் பெற்றவர்கள் யார், யார் தெரியுமா?

மாவட்ட ஆட்சியர்கள்,
மாவட்ட காவல்துறை அலுவலர்கள்
தலைமைச் செயலக அலுவலர்கள்

     எனன? என்ன? இவர்களுக்கா?

     நம்ம முடியவில்லை அல்லவா?

     இவர்களுக்கு யாரால் இது போன்ற சுற்றறிக்கையை அனுப்ப இயலும்.

    ஒரு மாநில முதல்வர் அனுப்பினார்

    என்னது, மாநில முதல்வரா?

    ஆம்,

    எந்த மாநிலத்தின் முதல்வர்? கேள்வி எழுகிறதல்லவா?

    நம் தமிழகத்தின் முதல்வர்

    என்ன, என்ன? நம் தமிழகத்தின் முதல்வரா?

    ஆம். தமிழகத்தின் முதல்வரேதான்.

     பிறகு என்ன நடந்தது தெரியுமா?

    சட்ட மன்ற உறுப்பினர்கள் எல்லாம் கொதித்து எழுந்தார்கள்.

இது எங்களுக்குப் பெரும் தலை குனிவு
இது எங்களின் தன்மானத்திற்கு இழுக்கு
அறிக்கையினைத் திருப்பப் பெறுக

முதலில் வேண்டுகோள் வைத்தனர்

முதல்வரோ அசைந்து கொடுக்கவில்லை.

பின் கட்டாயப் படுத்தினர்

சுற்றறிக்கையினைத் திரும்பப் பெற மாட்டேன்.
வேண்டுமானால் நீங்கள், வேறு ஒரு தலைவரை
தமிழக முதல்வராக
தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

உறுதியாகக் கூறி விட்டார்.

விடுவார்களா சட்டமன்ற உறுப்பினர்கள்.

1949 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள்
முதலமைச்சர்
பதவி விலகினார்.

இப்பேர்ப்பட்ட நேர்மையான மனிதர்,
நேர்மையான மாமனிதர் யார் தெரியுமா?

இம்மாகாணம் எத்தனையோ தலைவர்களையும், முதலமைச்சர்களையும் கண்டுவிட்டது. எத்தனையோ பேர் மந்திரி பதவிகளை விட்டு நீங்கியிருக்கின்றனர், நீக்கப் பட்டிருக்கின்றனர்.

ஆனாலும் இவரது பதவியிழப்பினால், திராவிடப் பொது மக்கள் கவலைப் படுகிற அளவுக்கு, இதுகாறும் வேறு எந்த மந்திரிக்காகவும் மக்கள் கவலைப் பட்டதேயில்லை.

மந்திரிப் பதவி என்பது நிரந்தரமல்ல. இருப்பினும், இவர் பதவியிழப்பால் மட்டும், ஏதோ ஒரு பெரிய நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக திராவிடர்கள் தங்களை அறியாமலே உணர்கிறார்களே,

காரணம் என்ன தெரியுமா?

அவர் தன்மானமே உருவானர்

அசல் மனிதர்

ஆதலால் கிராமம் நோக்கிப் போகிறார்

போய் வாருங்கள்

நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்

நேர்மையற்ற உலகம் இது.

நாணயத்திற்கு இந்த உலகில் இடமில்லை, அதுவும் இந்த நாட்டில், சிறிது கூட இடமேயில்லை.

உங்களை பலி கொடுத்த தமிழன், திராவிடன்
இன்று கடுகளவாவது அதிக அறிவு பெற்றிருப்பான்.
இது உறுதி

போய் வாருங்கள்

போர்க்களத்தில் முதுகுப் புறமாய் குத்தப்பட்ட வீரர் தாங்கள்,
காயம் மார்பில் அல்ல

பரவாயில்லை

இதுதான் உலகம்

நன்றி கெட்ட உலகம்

போய் வாருங்கள்

     நண்பர்களே, படிக்கப் படிக்க மேனி சிலிர்க்கிறதல்லவா?

    

முதல்வர் பதவியில் இருந்து, இம் மாமனிதர், பதவி விலகிய, 6.4.1949 இல், வெளி வந்த, விடுதலை நாளிதழின் தலையங்கம்தான் இது.

நாம் இழந்த இப்பேர்ப்பட்ட முதல்வர்
யார் தெரியுமா?



ஓ. பி. ஆர்.,

ஓமந்தூரார்

ஓமந்தூரார், பெரிய வளைவு ராமசாமி ரெட்டியார்.