05 ஜூலை 2016

வெற்றிவேல் முருகன் பேசுகிறேன் 2



அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
என்று பாடுவார் ஔவையார். அந்த அரிதினும் அரிதான மானிடப் பிறவியில், பிறவிக் குறைபாடுடன் பிறந்தவன் நான்.

     விழியிருந்தும் பயனில்லாக் குழந்தையாய் பிறந்தேன். பெற்றோர் இருவரும், என் விழிகளாய் இருந்து என்னைக் காத்தனர்.

     தமிழ் வழியில் படித்தேன். பார்வை அற்றோருக்கானப் பள்ளியில் படித்தேன். வளர்ந்தேன், தன்னம்பிக்கையோடு வளர்ந்தேன்.

    விழி இல்லா விட்டால் என்ன, வழி இல்லாமலா போய்விடும்.


          ஐ.ஏ.எஸ்., ஆசை, மோகம் தகர்ந்தபோது, யோசித்தேன், இனி என்ன செய்யலாம்.

    ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் சமூகவியல் துறையில், எம்.ஃ.பில்., ஆய்வுப் படிப்பில் சேர்ந்தேன்.

      ஆறே மாதத்தில் JRF  (junior Research Fellowship)  தேர்வில் வெற்றி பெற்றேன்.

       அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். இனி மூன்று வருடங்களுக்குக் கவலை இல்லை. கல்வி உதவித் தொகை தொடர்ந்து வரும்.

         தொடர்ந்தும் வந்தது.

            பெற்றோரின் உதவியின்றி, என் செலவினங்களை நானே பார்த்துக் கொண்டேன் .இதுமட்டுமல்ல, எனக்குத் தேவையான தொலைபேசி, கணினி மற்றும் இணைய வசதிகளையும் ஏற்படுத்திக் கொண்டேன்.

       மூன்று வருடங்கள் சென்றதே தெரியவில்லை. ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டது.

       எம்.ஃ.பில்., படிப்பிற்கான ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பித்தேன்.

       இனி அடுத்து முனைவர் பட்டத்திற்கானப் படிப்புதான்.

       
முனைவர் படிப்பில் சேர சில நுழைவுத் தேர்வுகளை எழுதியாக வேண்டும். எனவே TOFEL மற்றும் GRE தேர்வுகளை எழுதினேன். தேர்வு எழுதும் பொழுதே தெரிந்து விட்டது. வெற்றி உறுதி என்பது.

        சற்றேரக்குறைய எட்டு பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பச் செலவு மட்டுமே ரூ.13,000 ஐத் தாண்டிவிட்டது.

       பல மாத காத்திருப்பிற்குப் பின், ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு பல்கலைக் கழகத்தில் இருந்தும் கடிதங்கள் வரத் தொடங்கின. அனைத்தும் ஒரே மாதிரியானச் செய்திகளையேச் சுமந்து வந்தன.

முனைவர் ஆய்வுப் படிப்பிற்குத் தாங்கள் தேர்வு செய்யப்படவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

                                                                                                                                          தொடர்ந்து பேசுவேன்