16 ஆகஸ்ட் 2016

உமாமகேசுவரம்



தன்னலங் கருதாப் பொதுநலத் தொண்டர்
     தமிழ்ப்புல வோர்கள் தம்பெருந் தோழர்
எண்ணில் சிறார்க்கு கண்ணருள் அன்னை
     உடல்பொருள் உயிரெல்லாம் உரிமையாக்கித்
தமிழ்த்தொண் டாற்றிய சங்கத் தலைவர்

செந்தமிழ்ப் புரவலர், தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் அவர்களின் திருப்பெயர் தாங்கி நிற்கும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளியில், மாணவர்களாய் பயின்று, இன்று ஆசிரியர்களாய் பணியாற்றும் ஓர் அற்புத வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.


     எங்களுக்கு என்றால் எனக்கும், நண்பரும் உமாமகேசுவர மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியருமான திரு வெ.சரவணன் அவர்களுக்கும்.


உமாமகேசுவரம்
எங்களின் நான்காண்டுகால உழைப்பின் பயன்

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின்
முதல் முப்பதாண்டு கால வரலாறு இந்நூல்.

    இந்நூல் தமிழகமெங்கும் மெல்ல மெல்ல சிறகு விரித்துப் பறந்ததன் விளைவாய், திரும்பி வரும் கருத்துக்கள் எம்மை நெகிழவைத்துக் கொண்டிருக்கின்றன.

செந்தமிழ் அந்தணர், தமிழ்க் கடல்
திருவள்ளுவர் தவச்சாலையின் நிறுவுநர்
புலவர் இரா.இளங்குமரனார் அவர்களின்
எழுத்துக்களைத் தாங்கி, பறந்து வந்த மடல்





கரந்தைத் தமிழ்ச் சங்கக் கைத் தொழில் கலாசாலையின் தலைமையாசிரியராய் செம்மாந்தப் பணியாற்றிய, உமாமகேசுவரனாரின் ஆரூயிர் நண்பர் திரு சிவ.குப்புசாமி பிள்ளை அவர்களின் திருமகனார்,
கரந்தைப் புலவர் கல்லூரியின் முன்னாள் முதல்வர்
தமிழக அரசின் தமிழ்நாடு சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் மொழிபெயர்ப்பாளராகவும், புதுச்சேரி அரசின் சட்டத்துறையில் மொழிபெயர்ப்பு அலுவலராகவும் பணிபுரிந்த பெருமைக்குரியவர். புதுவை மொழியியல் நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராக விளங்கியவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேரகரமுதலி சீராய்வுத் திட்டத்தின் பதிப்பாசிரியர்
முனைவர் கு.சிவமணி அவர்களின்
எண்ணத்தையும் எழுத்தையும் தாங்கி வந்த மடல்.





தஞ்சை, தமிழ்ப் பல்கலைக் கழக, இலக்கியத் துறையின் முன்னாள் தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக் கழக, திருக்குறள் இருக்கையின் தலைவருமான
முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் கருத்துரை.



பாரதிதாசன் பல்கலைக் கழக, தமிழ்த் துறைத் தலைவர்
முனைவர் பா.மதிவாணன் அவர்களிடம் இருந்து,
இணைய வானில் பறந்து வந்த மின்னஞ்சல்.



அண்மையில் (24.7.2016) நடைபெற்ற, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் ஓர் அங்கமாய் திகழும்,
இராதாகிருட்டினத் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவில்
தலைமையுரையாற்றிய
பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர்
திருமிகு இல.கணேசன் அவர்கள்,
தன் உரையில்



என்னைப் பொறுத்தவரை கொஞ்சம் கூடத் தயக்கமில்லாமல், வெட்கப்படாமல் ஒரு கருத்தைச் சொல்கிறேன்.

நான் தஞ்சையில் பிறந்தவன். எனக்குத் தஞ்சை இராஜராஜேசுவரத்தைத் தெரியும், எனக்குத் தஞ்சை சரசுவதி மகாலின் பெருமை தெரியும், ஒரு காலத்தில் இங்கிருந்த விவசாயத்தின் மேன்மைகள் தெரியும், தஞ்சை நகரத்திலே ஆட்சி புரிந்தவர்கள் நீர் மேலாண்மைக்காகச் செய்தத் திட்டங்கள் எல்லாம் தெரியும்,


ஆனால் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் பெருமை என்ன? என்பது குறித்து இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாகத்தான் தெரிந்து கொண்டேன் என்பதை நான் பகிரங்கமாக, மிகுந்த வெட்கத்தோடு ஒப்புக் கொள்கின்றேன்.

உமாமகேசுவரம்

எனக்குத் தந்த புத்தகம். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் வெளிவந்த புத்தகம், நான் அவர்களைப் பாராட்ட வேண்டிய அம்சம் ஒன்று இருக்கிறது.

மகாத்மா காந்தி அவர்களோடு உமாமகேசுவரனார் உரையாடுகிறார்.

அந்தச் சந்திப்பை உள்ளது உள்ளபடி, எப்படித்தான் பதிவு செய்தார்களோ, அதைப் பதிவு செய்து புத்தகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தில் காந்திஜி, இவர்கள் ஏற்றுக் கொண்ட, கரந்தைத் தமிழ்ச் சங்கம் ஏற்றுக் கொண்ட கொள்கைகளை காந்திஜி ஏற்றுக் கொள்ளவில்லை, ஆனால் இவர்கள் பேசும்போது அதைத் தெளிவாகக் கேட்டு, அதற்குரிய பதிலை, தன் தரப்பில் இருந்து தருகிறார்.

ஆனால் இந்த கண்ணியத்தை நான் பாராட்டுகின்றேன்.

தங்களது கொள்கை பற்றிப் பேசும் பொழுது, மறுதலித்துப் பேசுகிற பதில்களை காந்திஜி தந்திருந்தாலும், உள்ளது உள்ளபடி அப்படியே அந்தப் புத்தகத்தில் போட்டிருக்கிற அந்த கண்ணியமும், பெருந்தன்மையும் பாராட்டிற்குரியது, அதை நான் பாராட்டுகின்றேன்
என்று பாராட்டிள வார்த்தைகள், எங்கள் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன

அன்று மாலையே, எங்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற,
நீதிக் கட்சியின் நூற்றாண்டு விழாவில்
தலைமையுரையாற்றிய
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர்
மானமிகு, டாக்டர் கி.வீரமணி அவர்கள்
தன் உரையில்,



      கரந்தை ஜெயக்குமார் அவர்களும் கரந்தை சரவணன் அவர்களும் இரண்டுபேரும் அற்புதமானப் பணியினைச் செய்திருக்கிறார்கள்.

      தமிழ்நாட்டின் மறைக்கப் பட்ட அல்லது மறக்கப்பட்ட செய்திகளை எல்லாம் புதைபொருள் போல இந்த நூல்கள் கொண்டுவந்திருக்கின்றன.

      ஒவ்வொருவர் கையிலும் இந்த நூல் இருக்க வேண்டும். ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும் இந்த நூல் இருக்க வேண்டும். இந்நூல் எல்லா நூலகங்களிலும் இருக்க வேண்டும்.

      16.6.1927 அன்று மகாத்மா காந்தி அவர்கள் தஞ்சைக்கு வந்தபொழுது, நடைபெற்ற ஒரு முக்கிய நிகழ்வு, நீதிக் கட்சியினைச் சார்ந்த சர் ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களும், தமிழவேள் உமாமகேசுவரனாரும் காந்தியைச் சந்தித்த நிகழ்ச்சியாகும். இந்நிகழ்வினை இந்நூலில் மிக அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

      இச்சந்திப்பின்போது காந்தியார் அவர்கள், தமிழவேள் உமாமகேசுவரனார் அவர்களை நோக்கி, சில ஆண்டுகளுக்கு முன், நான் சென்னை வந்தபொழுது, எஸ். சீனிவாச ஐயங்கார் வீட்டின் தாழ்வாரத்தில்தான் உட்கார்ந்திருந்தேன். இப்பொழுது அவர் வீட்டினை, என் வீடாகவே நினைத்துப் பழகி வருகிறேன். என் மனைவி அவர்களுடைய அடுப்பங்கரை வரை செல்கிறார் என்று இந்த உமாமகேசுவரம் நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளது,

        அன்றைய சுதேசமித்திரன் நாளிதழில் வெளியான செய்தியை அப்படியே எடுத்து, இதன் ஆசிரியர்கள் இந்நூலில் வெளியிட்டுள்ளனர்.

       இந்த செய்தி நமக்கு உணர்த்தும் செய்தி என்னவென்றால், சில ஆண்டுகளுக்கு முன்வரை  சீனிவாச ஐயங்கார் வீட்டின் தாழ்வாரம் வரை மட்டுமே அனுமதிக்கப் பட்ட மகாத்மா காந்தி, இன்று அவரது வீட்டை தன் வீடாகவே நினைத்துப பழகுகிறார், காந்தியாரின் மனைவி  ஐயங்கார் வீட்டின் அடுப்படி வரை செய்கிறார் என்றால், இம்மாற்றத்திற்குக் காரணம் நீதிக் கட்சியின் அயரா உழைப்பும், இந்த  நீதிக் கட்சி தமிழகத்து மக்கள் மனங்களில் ஏற்படுத்திய மாற்றமும்தான் காரணம். எனவே மகாத்மா காந்திக்கே சுயமரியாதையினை மீட்டுத்த தந்த இயக்கம் நீதிக் கட்சிதான் என்று திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் பெருமையுடன் குறிப்பிட்டார்.
-------
பெற்ற அன்னையை அன்னாய் என்றுவாய்
பெருக அழைக்கவும் நேரமேயில்லாமல்
தமிழ், தமிழ் என தன் மூச்சினையும், பேச்சினையும், செயல் அனைத்தினையும் தமிழுக்கே ஈந்த உமாமகேசன் பற்றி எழுத எங்களுக்கும் ஓர் வாய்ப்பு கிடைத்தமையை எண்ணி எண்ணி மகிழ்கின்றோம்.
எமக்குக் கல்வி புகட்டிய
எமக்கு ஆசிரியப் பணி அளித்து வாழ்வளித்த
எம் பள்ளிக்கும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கும் எங்களால் இயன்ற சிறு கைமாறு இந்நூல்.

வாழ்க தமிழவேள்
வளர்க கரந்தைத் தமிழ்ச் சங்கம்