04 ஜூன் 2017

காதலின் பொன் வீதியில் …..


     அந்தக் கடிதம், கசங்கலாய்ச் சற்று எண்ணையேறி இருந்தது. மீண்டும் மீண்டும் படிக்கப்பட்டிருக்க வேண்டும்.

என் சாமிக்கு பிலோமினா எழுதியது,

     நிறைவா ரெண்டு வருஷம் மனுஷியா, உங்க காலைக் கட்டிக்கிட்டு வாழ்ந்துட்டேன். அந்த நினைப்பா, நீங்க கட்டுன தாலிய மட்டும் என்னோட எடுத்து போறேன். என்னை தயவு செய்து தேடாதீங்க. மீண்டும் தப்பு தண்டாவுக்கு போக மாட்டேன். கடவுள் இருந்தால் உங்களை மாதிரிதான் இருப்பார். காலம் பூராவும் உங்களை நினைச்சுக்கிட்டேதான் இருப்பேன்…. சாவுற வரைக்கும்.


     அக்குறும்பா இருக்கே. எவங்களையோ ராணி மாதிரி வச்சிருந்தீங்க. ஒரு கோபம் இல்லை, ஒரு சண்டை இல்லை.

     அவங்க எதிர்பார்த்திருக்க முடியாத வாழ்வு குடுத்தீங்க.

      நீங்க சொல்றதையும், இந்த லெட்டரையும் வச்சு பார்த்தா, சந்தோஷமா, நிறைவா இருந்தாங்கன்னுதான் தோணுது. பின்ன எதுக்கு போனாங்க?

     சில கேள்விகளுக்குப் பதிலு இல்ல முத்து. உறவுகளையும், கட்டுப்பாடுகளையும் நாமதான் விதிச்சிக்கிறோம்.

      எல்லாரும் விளையாடுறது ஒரே விளையாட்டுதான். அந்த விளையாட்டுக்கான ரூலு, அவங்கவுங்க போட்டுக்கிட்டு ஆடிக்கிட்டு ஆடிக்கிட்டிருக்கோம்.

      உன் விளையாட்டு எனக்குப் பிடிக்காது. என் விளையாட்டு உனக்குப் புரியாது.

     நம்மபோட்டு வச்ச எல்லைக் கோட்டைத் தாண்டி, மத்தவங்க விளையாடும்போது, நமக்குப் பிடிக்கிறதில்லை… செலப்போ, நமக்கே நம்ம போட்டுக்கிட்ட கோடுங்களே தடையாயும் சலிப்பாயும் ஆயிடுது.

     வௌங்காத விளையாட்டு ….  வுடு… கொஞ்சம் வெந்நீர் குடிக்க தா முத்து….. அறிஞ்சும் அறியாத புள்ள நீ. ஏதேதோ சொல்லி உன்னைக் குழப்பிட்டேன்.

      வெந்நீர் சுட வைத்துக் கொண்டிருந்த முத்துவுக்கோ, இப்போதுதான் வாழ்வின் குழப்பங்கள் மெல்லத் தெளிவது போல் இருந்தது.

      முத்துவிற்கு மட்டுமல்ல, படிக்கப் படிக்க நமக்கும், வாழ்வின் குழப்பங்கள் மெல்ல மெல்லத் தெளிகின்றன, வாழ்வின் விளங்காப் பொருள் மெல்ல மெல்ல புரியத் தொடங்குகிறது.

      அடுத்த கள்ளிப் பெட்டியை தரையில் சாய்த்தார். அந்த மெலிந்திருந்த மஞ்சள் நிற
ஃபைலைக் கண்டவுடன், சபேசனுக்கு சட்டென்று முதுகில் சொடுக்கி விட்டாற்போல் இருந்தது….. மெல்ல ஃபைலைத் திறந்தார்.

     முதல் காகிதமே, ஏன் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது? என்ற அலுவலக மெமோ.

      நிறுவனத்தின் சார்பில், சபேசன் இட்ட ஒரு ஒப்புதல் கையெழுத்தால் ஏற்பட்ட, பத்தாயிரம் ரூபாய் நஷ்டத்திற்கு, ஒழுங்கு நடவடிக்கை.

      தன்மேல் விசாரனை நடந்த ஆறு மாத காலம், தன் மனதில் பாறாங்கல்லாய் விழுந்த மரண வேதனை.

      சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல்… எல்லோரம் தன்னைப் பார்த்து, கைக் கொட்டி சிரிப்பது போல் குமைந்து, தலை கவிழ்ந்து ஊர்ந்த நாட்கள்.

      மெமோவை மீண்டும் கையிலேடுத்தார். இரண்டாய் கிழித்தார், நாலாய், பதினாறாய், நூறாய் உருத் தெரியாமல் அது நுணுங்கியது.

      வாயருகில் அந்தக் குப்பலைக் கொண்டு வந்து, வாய் குவித்து, வேகமாய் ஊதினார்.

       ஆனாலும் பலம் குன்றிய அந்த ஊதலில், அத்துணுக்குகள் பரவலாய் சிதறாமல், சபேசன் மடியிலேயே விழுந்தன.

        அவற்றை உதறித் தள்ளினார்.

        படபடவென்று வந்தது. சற்று ஆசுவாசப் படுத்திக் கொண்டார்.

       எழுந்து போய், பனியன் நனைய, மடமடவென்று தண்ணீரை வாயில், சரித்துக் கொண்டு, மீண்டும் காகித அடுக்கல்கள் மத்தியில் அமர்ந்தார்.

        இந்தக் காகிதங்களைக் கிழித்து எறிந்து ஒழிப்பதுபோல், நினைவுகளையும் ஒழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

        கூளம்

        ஒவ்வொரு காகிதத்தைச் சுற்றியும் பின்னிப் பினைந்து செல்லும் நினைவுப் பின்னல்கள், நம்மையும், நம் வாழ்வின், தவிர்க்க இயலா துன்ப நினைவுகளின் சுழலுக்குள் மூழ்கி மூச்சுத் திணற வைக்கின்றன.

        அந்த அறையில் நுழைந்த போதே, அவன் விரல்கள் மேல்ல நடுங்கின. அந்த கேபினை ஒட்டியபடி ஸ்டெனோ வரலட்சுமி டைப்ரைட்டர் சகிதம், அந்நாளில் அமர்ந்திருந்த கோலம், குருவினுள்ளே விஸ்வரூபம் எடுத்தது.

      
வரா …… வரா…. என்று குருவின் நாடி நரம்பெல்லாம் ஒலித்த அந்த பெயர்……. அவன் வாழ்க்கைக்குள் வராமலேயே அல்லவா போய்விட்டது?

        எனக்கு மட்டும் போகனும்னு ஆசையா குரு? குடும்பத்தோடு போக அப்பா ஏற்பாடு பன்னிட்டாங்க. என் ராஜா இல்ல ….. பத்தே நாள் …. ஓடி வந்திடுவேன்….. சரியா?

       அதுவரைக்கும் நான் என்ன பன்ன?

        இரு

       வரா தன் நெற்றியில் இருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்தாள். அவள் மேஜை பக்கலில் இருந்த மரத் தடப்பில் ஒட்டினாள். ஒட்டப்பட்ட பொட்டினை சுற்றி, நீலப் பேனாவால் அழுத்தமாய் வட்டம் இட்டாள்.

      குரு, இந்த பத்து நாளும் இந்த ஸ்டிக்கர்தான் உன் வரா….பாத்துக்கிட்டே இரு.

      அடுத்த பத்து நாட்களும், அந்தப் பொட்டில் குரு புதைந்து போனான்.

    யாருமற்ற ஒரு பின் மாலையில், அந்தப் பொட்டை பாதுகாக்க வேண்டி, அதன் மேற்புறம் விநாயகர் படத்தை ஒட்டினான்.

      குரு நினைவின் பிரவாகத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். மேல்ல அந்த வாழ்த்து அட்டையை, மேல் நோக்கி வளைத்து, ஸ்டிக்கர் பொட்டைத் தேடினான்.

      வராவின் பொட்டு, இன்னமும் அங்கே பத்திரமாய் இருந்தது. அதன் சின்ன வெல்வெட் பரப்பு சற்று மங்கியும், சுருக்கம் கண்டும் இருந்தது.

      மெல்ல விரலால் அதைத் தொட்டான்.

      அந்தத் தொடுகைக்காக மட்டுமே, இதுநாள் வரை காத்திருந்தது போல், அந்தப் பொட்டு உதிர்ந்தது.

       குருவின் வயிற்றிலிருந்து அலையலையாய் விம்மி எழுந்த ஒரு கேவல் வெடிக்க அழுதான். அன்றும் இன்றும் சட்சியாய் மட்டுமே இருந்த, அந்த அறையின் சுவர்களில், அவன் விசும்பல் மோதி வெறுமையில் மெல்லக் கரைந்தபடி இருந்தது.

        படிக்கப் படிக்க மனம், எழுத்தில், எழுத்தின் நடையில், வாசிப்போரை, எழுத்துக்குள் இழுத்து கரைந்து போகத்தான் செய்கிறது.

       படித்து முடித்த பின்னும், பல நிமிடம் நினைவற்று, சொல்லற்று, வெறுமையில் அமர்ந்திருந்தேன்.

        சராசரி வாசகனுக்கான எழுத்துக்களே அல்ல, இவரது எழுத்துக்கள். அதையும் தாண்டி, மேலான வாசகருக்கானது.

        இவர் தன் ஒவ்வொரு சிறுகதையிலும், சொன்னதை விடவும், சொல்லாமல் புரிய வைத்தவை, உணர வைத்தவை ஏராளம், ஏராளம்.

        இருபத்து இரண்டு சிறு கதைகள்.

        சொல்லப் போனால், இவைகள் கதைகளே அல்ல, வாழ்வியல் யதார்த்தங்கள்.

         வாழ்வியல் யதார்த்தங்கள் என்பதாலோ என்னவோ, இவரது பெரும்பாலான கதைகளில், ஒரு சோகம் இழையோடுகிறது.

பொன் வீதி

      நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

      வந்தே மாதரம்.

      இப்படியும் இவருக்கு ஒரு பெயருண்டு.

      எட்டு வயதில் மேடையேறி, பேசப் போனவர், மேடை ஏறியவுடன், ஏற்பட்ட பயத்தில், பேச வேண்டியதை மறந்து, வந்தே மாதரம், வந்தே மாதரம் என, கை தூக்கி வீரமாய், முழங்கி விட்டு, மேடையை விட்டு இறங்கி ஓடிவிட்டார்.

      அன்று முதல் சில காலம், இவரது பெயரே வந்தே மாதரம் என்று மாறித்தான் போனது.

     அன்று மேடையை விட்டு ஓடியவர், இன்று மேடையிலேயே குடியிருக்கிறார்.

      பல்கலைக் கழகங்கள், வங்கிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் என அனைத்திலும், மேடையேறி, மேலாண்மை, ஆளுமைப் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.

       மோகன்

       ஒரு முறை, ஒரு கவியரங்கில், இரு மோகன்கள்.

       கவியரங்கிற்குத் தலைமையேற்ற, தமிழ்ப் பேராசிரியர், இவரது முன்னெழுத்தை, பெயருக்குப் பின்னால் இணைத்து, மோகன்ஜி என அழைக்க, அன்று முதல் இவர் மோகன்ஜி ஆகவே மாறிப்போனார்.

மோகன்ஜி

     சிறு வயது முதலே, கவிதை, கதை, நாடகத்தோடு வளர்ந்தவர்.

     தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில், 35 ஆண்டுகள் பணியாற்றியவர்.

     சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்பாளர்.

     கவிதையே காதலாய்…. கனவே வாழ்க்கையாய் …. வானவில் மேல் கூடு கட்டி, கூவித் திரியும் குயில் இவர்.



வானவில் மனிதன்
மோகன்ஜி

     காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன் என்று எப்பொழுதோ கேட்டு, ரசித்த இனிமையானப் பாடல், மீண்டும் காற்றில் மிதந்து வந்து செவிகளில் நுழைவதைப் போன்ற ஒரு உணர்வு.


பொன் வீதி

வாருங்கள்
பொன் வீதியில்
பயணித்துப் பார்ப்போம்.

…………………………………………………………………………………………………..


வெளியீடு
அக்ஷரா பிரசுரம்,
G 1702, அபர்ணா சரோவர்,
நல்லகண்டலா,
ஹைதராபாத் -500 107
விலை ரூ.125