28 அக்டோபர் 2017

பெருந்தன்மை



      ஆண்டு 1952.

      உயர் அதிகாரி அவர்.

      அன்று அஞ்சலில் வந்த அழைப்பைப் பார்த்ததும் திடுக்கிட்டுத்தான் போனார்.


     விழா அழைப்பிதழ் அது.

      படத் திறப்பு விழாவின் அழைப்பிதழ்.

      படத்தினைத் திறந்து வைக்க இருப்பவர், தமிழ் நாட்டின் முதல்வர்.

      தமிழ் நாட்டின் முதல்வர், சீரியப் பணியாற்றிவரும், உயர் அலுவலர் ஒருவரின் படத்தினைத் திறந்து வைக்க இருப்பதை அறிந்து, இவர் ஏன் அதிர்ச்சி அடைய வேண்டும், என்ற கேள்வி எழுகிறதல்லவா?

      காரணம் இருக்கிறது.

      முதல்வர் திறந்து வைக்க இருப்பது, இவரது படத்தைத்தான்.

      சென்னை, வண்ணாரப்பேட்டை, சர் தியாகராயர் கல்லூரியில், இவரது படத் திறப்பு விழா.

      அரசு ஊழியர் ஒருவரின் படத்தினை, அவர் பணியாற்றிக் கொண்டிருக்கும் காலத்திலேயே, முதல்வர் திறந்து வைக்க இருக்கிறார்.

      அன்றே முதல்வரைச் சந்தித்தார்.

நான் வேலையில் இருக்கிறேன். தாங்களோ எங்கள் முதல் அமைச்சர்.

நான் ஓய்வு பெறும்போதோ அல்லது ஓய்வு பெற்ற பிறகோ, என் உருவப் படத்தைத் திறந்து வைத்தீர்கள் என்றால், யாரும் குற்றம் குறை காணமாட்டார்கள். இப்பொழுது அப்படிச் செய்வது சரியாகப் படவில்லை.

கல்லூரியை நடத்துபவர்கள், என்னைக் கேட்காமலே, இப்படிச் செய்துவிட்டார்கள். தயவுசெய்து அவர்களைக் கூப்பிட்டுச் சொல்லி விடுங்கள், இவ்விழா வேண்டாம் என்று.

தயவுசெய்து, தாங்களும், இவ்விழாவிற்குப் போக வேண்டாம்.

       முதல்வரோ, ஒரே ஒரு வார்த்தையில் பதில் அளித்தார்.

இருக்கட்டும்.

      முதல்வர் விழாவிற்குச் சென்றார்.

      படத்தினைத் திறந்தும் வைத்தார்.

ஸ்ரீமான் சுந்தரவடிவேலு கருப்பா, செவப்பா என்று கூட எனக்குத் தெரியாது.

நான் தமிழ்நாடு காங்கிரசுத் தலைவராக இருந்தபோது, பலர், கல்வித்துறை சம்பந்தமா, என்னிடம் வந்திருக்கிறார்கள்.

பள்ளிக் கூட நிர்வாகி வந்தாலும், நெ.து.சு வுக்குச் சொல்லுங்கள், அவர் உதவியாக இருப்பார் என்பார்கள்.

ஆசிரியரகள், நிர்வாகிமேல் புகார் கொண்டு வந்தாலும், நெ.து.சு கண்டிப்பானவர், நியாயமானவர் என்று சொல்வார்கள்.

ஆசிரியர்கள் இவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நிர்வாகிகளும் இவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மாணவர்களும் இவரிடம் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

எல்லோருடைய நம்பிக்கைக்கும் உரியவராக இருப்பதால், இவரை இயக்குநராக நியமித்தோம்.

படம் திறக்கிறது, இவரைப் பெருமைப் படுத்த அல்ல.

கிராமத்தில், சாதாரண விவசாயி வீட்டில், பிறந்தவர் கூட, பெரிய நிலைக்கு வரலாம் என்பதை நினைவுபடுத்தி, இளைஞர்களை ஊக்குவிப்பதற்காகத்தான்.

       


நெ.து.சுந்தரவடிவேலு
பொதுக் கல்வித் துறை இயக்குநர்.

இவரது படத்தினைத்தான், அன்றைய முதல்வர் திறந்து வைத்தார்.

அரசு ஊழியரின் படத்தினைத் திறந்து வைத்த முதல்வர்


கல்விக் கண் திறந்த
கர்ம வீரர் காமராசர்.