06 ஜனவரி 2018

உதிரிலைகள்



என்னுடைய
பிள்ளைகளுக்கும்
மனைவிக்கும்
எதையேனும் விட்டுவிட்டுச்
செல்லவேண்டுமென்ற
எண்ணம்
எதிர் வீட்டுக்காரரின்
மரணத்தின்போது எனக்கு
உணர்த்தப் பட்டது……..

     படிக்கும்போதே மனம் திடுக்கிட்டுப் போகிறது. அரை நூற்றாண்டைக் கடந்து நகரும் வாழ்வு. கால் நூற்றாண்டாய் கணிசமான மாதச் சம்பளம். ஆனால் சேமிப்பு? விழித்துக் கொள்ள வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதை உணர்த்துகிறது கவிதை.

அப்பா இறந்துபோன பின்
எல்லாம் வைத்தது வைத்தபடி இருக்கிறது
அப்பா இருந்த காலத்தில் செய்ததைப் போலவே
இப்போது அந்தப் பெரிய வீட்டில் அம்மாவும்
வைத்ததை வைத்த இடத்தில்தான் பேணுகிறாள்

ஆனால் அவளாலும் அதைப் பராமரிக்க முடியாதபடி
கன்னாபின்னாவென்று வீடெங்கும்
இறைந்து கிடக்கிறது தனிமை.

     பல நிமிடங்கள் நெஞ்சம் நினைவற்றுப் போகிறது. இதயத் துடிப்புக்கூட, சற்றுத் தட்டுத் தடுமாறித்தான் துடிக்கிறது. பிரிவின் துயரை, அத் துயரால் விளையும் தனிமையை நினைத்துப் பார்த்தாலே, நெஞ்சம் கலங்கித்தான் போகிறது.

முதல் திதி
என்பதால் முன்கூட்டியே
வந்திருந்தார்கள்.

பெரியக்கா
நடு அக்கா
சின்னக்கா
கடைசித் தம்பி
அவர்கள் குடும்பங்களுடன்,

…………………………
………………………..
எல்லாம் முடிந்து அவரவர்
ஊருக்குத் திரும்புமுன்
சொல்லிவிட்டுப் போனார்கள்.

கடைசி வரைக்கும் அப்பா
அவனுக்குத்தான் எல்லாம்
செஞ்சாரு ………… பென்ஷன் உட்பட.

வீட்டுக்காக வாங்கிய
வங்கிக் கடன்
அப்பா மருத்துவமனைச்
செலவுக்காக வாங்கிய
கூட்டுறவுச் சங்கக் கடன்
பி.எஃப்., கடன் என
எல்லாக் கடன்களும்
பிடித்தமாக வருவது
பிடித்தமில்லை என்பதை
எப்படியுரைக்க முடியும்?
என மௌனித்திருக்க

மௌம் சம்மதம் என்று
போகிறார்கள் ……..

      ஒரு சில வரிகளில், ஒரே பக்கத்திற்குள், வாழ்வின் சாரத்தை, உறவுகளின் ஒட்டாத இதயத்தை, தேவைப்படும்போது எல்லாம், விலகியே இருந்துவிட்டு, எல்லாம் முடிந்தபின், ஏதுமறியாதது போல், எட்டிப் பார்த்து, எல்லாம் தனக்குத்தான் என எதிர்பார்க்கும், உறவுகளை, எழுத்துக்களால், இவர் காட்சிப் படுத்தும் விதத்தைக் காணும்போதே, தெரிந்து விடுகிறது, இவர் வாழ்வும் இப்படித்தான் காயப் பட்டிருக்கிறது என்பதும் புரிந்து விடுகிறது.

பூர்வீக வீடு சிதைந்து கொண்டிருந்தது.

விரைவில் மாற்றிவிடுங்கள் என்று
சொல்லிவிட்டுப் போனார் பெரியப்பா ….

இடித்துவிட்டு மனை பிரித்து
பாகம் பிரித்துக் கொள்ளலாம் என்பது
சித்தப்பாவின் கருத்து.

மனையாகப் போட்டால்
முன் மனை நமக்குத்தான்
பேசிக் கொண்டார்கள் மருமகள்கள்.

……………………………………………………………………
……………………………………………………………………….

ஆனாலும்
பூர்வீக வீடு சிதைந்து கொண்டிருந்தது
வாழ்ந்த காலத்தின் நினைவுகளோடும்
வாழும் சிலவற்றின் கனவுகளோடும்.

     படிக்கப் படிக்க மனம் கனத்துத்தான் போகிறது. இவர் மெத்தப் படித்ததனால், எழுந்த கவிதைகளாக, இவை தோன்றவில்லை. மாறாக, நித்தம், நித்தம் சந்தித்த சோதனைகளின், வேதனைகளின் வடிகால்களாகவேத் தோன்றுகின்றன.

எதையாவது செய்திருக்கிறீர்களா
உருப்படியாக என்று
அடிக்கடி கேட்கிறாள் …………

செய்துகொண்டுதானிருக்கிறேன்
ஆனாலும் மனசாட்சி
தருமம், நேர்மை
ஒழுக்கம் கடமை என்கிற
இவற்றையெல்லாம் கூச்சமில்லாமல்
உதறிவிட்டால், இந்த உலகத்தின்
உருப்படியாகி விடுவேனோ
என்னவோ ……….

         இந்நூலின் ஒவ்வொரு கவிதையும், நமது கருத்தை உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கிறது. இவர் தன் வாழ்வின் சில பக்கங்களை, எழுத்தால் கோர்த்து, சொற்களாய் வடித்து, கவியாக்கி இறக்கி வைத்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாய் புரிந்து போகிறது.

      இவர் படைப்புலகில், கவிதை, கதை., நாடகம், சிறுவர் இலக்கியம், பெண்ணியம், கட்டுரையியல் என்னும் கூறுகளில் விரிந்த படைப்பாளுமை உடையவர்.

      இவரது பெரும்பான்மையானப் படைப்புகள், ஆய்வாளர்களுக்கு, ஆய்வுக் களங்களாகவும், பல்வேறு பல்கலைக் கழகங்களில் பாடத் திட்டங்களாகவும் இருக்கின்றன.


உதிரிலைகள்

     படிக்கப் படிக்க ஒவ்வொரு பக்கமும், நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்குகின்றன. படித்து முடித்தபின் வெளி வருவதற்குத்தான் சற்று அதிக நேரமாகும்.

      நிச்சயமாக பொழுது போக்கு நூல் அல்ல.

      தன் பொழுதுகளை எல்லாம் நூலாக்கி இருக்கிறார் இவர்.

      இவர் தனிமனித ஒழுக்கம், நேர்மை, உண்மையான உழைப்பு, ஈடுபாடு, மனித நேயம், மனசாட்சிக்கு ஒப்ப நடத்தல் என்னும் அறவியல் நெறிகளில், தன்னை மட்டுமல்ல, தன் படைப்புகளையும் இறுகப் பிணைத்துக் கொண்டிருப்பவர்.

பேராசிரியர், முனைவர்,

கவிஞர் ஹரணி