03 பிப்ரவரி 2018

தமிழே தவமாய்



      ஆண்டு 1971.

      சென்னைப் பல்கலைக் கழகம்.

      பொறியியல் தேர்வுப் பிரிவில் தட்டச்சராக., அந்த இளைஞர் சில நாட்களுக்கு முன்னர்தான்  பணியில் சேர்ந்திருக்கிறார்.

      படித்த  இளைஞர்

      பட்டதாரி இளைஞர்

      இவருக்குத் தமிழ் படிக்கத்தான் ஆசை.

       தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று, இவரது ஊரில், அனைவரும், ஒரே மாதிரியாகச் சொன்னதால், இளங்கலையில் இயற்பியல் படித்தார்.

       படித்துப் பட்டமும் பெற்றார்.

       இயற்பியல் படித்தாலும் வேலை கிடைக்காது என்பது, இவருக்குப் பிறகுதான் தெரிந்தது.


       அழகப்பா கல்லூரியில், இளங்கலை இயற்பியல் படிக்கும் பொழுதே, விளையாட்டாய் கற்றுக் கொண்ட தட்டச்சுதான், இவருக்குக் கை கொடுத்தது.

       சென்னைப் பல்கலைக் கழகத்தில், வேலை வாங்கிக் கொடுத்தது.

       தட்டச்சராய் பணியில் சேர்ந்துவிட்ட போதிலும், இவர் மனதில் ஒரு ஏக்கம்.

        தமிழ் பயில வேண்டும் என்னும் தணியா தாகம்.

        இளங்கலையில் படிக்க முடியாததை, முதுகலையிலாவது பயின்றுவிட வேண்டும் என்னும் தீரா வேட்கை.

         பச்சையப்பன் மாலை நேரக் கல்லூரிக்கு விண்ணப்பித்தார்.

        இடமும் கிடைத்தது.

        பகலில் பல்கலைக் கழகத்தில் தட்டச்சர்.

        மாலையில் கல்லூரியில் மாணவர்.

        அலைச்சல்தான் அதிகமாகிப் போனது.

        ஆனாலும் தமிழார்வம் அலைச்சலை இனிமையாக்கியது.

        பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து, இரண்டு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், ஒரு நாள், பாட வேளையின்போது, பணியாளர் ஒருவர், முதல்வர் அழைப்பதாக, இந்த இளைஞரை அழைத்தார்.

        தமிழ் வகுப்பில் பாதியில் எழுந்து செல்லதா என்னும் தயக்கம்.

        ஆனாலும், முதல்வர் அழைக்கும்போது, சென்றுதானே ஆக வேண்டும்.

         முதல்வரைச் சந்தித்தார்.

தம்பி, மாலை நேரக் கல்லூரியில் சேருவதற்கு, 23 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்கிறது விதி. ஆனால் உனக்கோ, வயது 21 தான் ஆகிறது.

உனது சேர்க்கையினை ஏற்க இயலாது என்று, பல்கலைக் கழகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது.

எனவே உனது சேர்க்கை ரத்து செய்யப்படுகிறது.

இனி கல்லூரிக்கு வரவேண்டாம்.

      வானமே இடிந்து தலையில் விழுந்த உணர்வு இளைஞருக்கு.

      என்ன செய்வதென்றே தெரியவில்லை.

      பச்சையப்பன் கல்லூரிப் படிக்கட்டுக்களில் அமர்ந்து குலுங்கி குலுங்கி அழுதார்.

      பின் மெல்லத் தெளிந்தார்.

நான் படிப்பதற்கு, வயதுதானே தடையாய் இருக்கிறது.

அதுவும் இரண்டே இரண்டு வயதுதானே.

வருடங்கள் இரண்டு, புரண்டு ஓடட்டும்.

மீண்டும் வருவேன்

தமிழ்ப் படிப்பேன்

தமிழ் என் தவம்

படித்தே தீருவேன்.

     விழிகளில் வழிந்தோடிய நீரைத் துடைத்துக் கொண்டு, படிக்கட்டுக்களில் இருந்து எழுந்தார்.

     ஆண்டுகள் இரண்டு கடந்தபின், மீண்டும்  விண்ணப்பித்தார்.

     சேர்ந்தார்.

     படித்தார்

     பட்டமும் வாங்கினார்.

     முதுகலைப் பட்டம் மட்டுமல்ல, முனைவர் பட்டமும் பெற்றார்.

     பேராசிரியராய் உயர்ந்தார்.

     நண்பர்களே, இவர் யார் தெரியுமா?

     இன்று இவரை அறியாதவர்கள் யாருமில்லை.

வரலாறுகளைப் புரட்டி – அவர்
நம் கண் முன்னால் விரித்து
வைக்கும் செய்திகள்,
நிகழ்வுகள் அனைத்தும்
தெவிட்டாத விருந்து.

அழகானத் தமிழ்

ஆணித்தரமான குரல்

அடுக்கடுக்கான உவமைகள்

அத்தனையும் அறிவுக் கடலின்
ஆழத்திலிருந்து
எடுத்த முத்துக்கள்

என்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் புகழப் பெற்றவர்

கலைஞர் தொலைக் காட்சியின்

ஒன்றே சொல் நன்றே சொல்

நிகழ்ச்சியின் நாயகர்.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின்
பொதுச் செயலாளர்


பேராசிரியர் சுப.வீரபாண்டியன்