28 மார்ச் 2019

நில மகள் 2



இந்த மண் உங்கள் மண் அல்ல.

        இந்த மண் உங்கள் சொந்த மண்ணே அல்ல.


       விஞ்ஞானிகள் திகைத்துத்தான் போயினர்.

       எவ்வித ஆய்வினையும் செய்யாமல், வெறும் கண்களால் பார்த்தே சொல்கிறீர்களே, எப்படி? நம்பும்படி இல்லையே? என்றனர்.

      மீண்டும் சொல்கிறேன், இது உங்கள் சொந்த மண் அல்ல.

      உங்கள் சொந்த மண், சுமத்ரா தீவின் அசல் மண், பூமிக்கும் கீழே, இரண்டு அடிக்கும் கீழே இருக்கிறது.


       இயந்திரங்களைக் கொண்டு வாருங்கள். நோண்டிப் பாருங்கள்..

        இயந்திரங்களைக் கொண்டு வந்தனர்.

        மண்ணை அகழ்ந்து எடுத்தனர்.

        சரியாக ஒன்றரை அடி ஆழத்தில், ஏராளமாய், ஏராளமாய், மிக மிக ஏராளமாய் கடல் சகதி எட்டிப் பார்த்தது.

        கடல் சேற்று மண்.

        கடல் சேற்று மண்ணை நோண்ட, நோண்ட, உள்ளே, சுமத்ரா தீவின் வளமான மண். விளைச்சலுக்கு உகந்த மருத நிலத்து மண்.

      அனைவரும் வியந்து போனார்கள்.

       எப்படி? எப்படி? எப்படிக் கூறினீர்கள்.

        பனிரெண்டு மாதங்களாய், படாத பாடு பட்டு, பல்வேறு ஆய்வுகளைச் செய்தும், எங்களால் கண்டு பிடிக்க முடியாத  உண்மையை, வெறும் கண்களால் பார்த்தே எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?

         கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.

         எங்களது பாட்டன், எங்களுக்கு ஏற்கனவே கூறியிருக்கிறார் என்றார்.

         என்ன உங்களது பாட்டனா? தாத்தாவா? அவர் சுனாமியைப் பார்த்திருக்கிறாரா? அவர் எப்போது சொன்னார்.

         அவர் சுனாமியைப் பார்த்தாரா இல்லையா என்று தெரியாது, ஆனால், அவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

         கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குக், கிட்டத் தட்ட மயக்கமே வந்து விட்டது.

         என்ன இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரா? நம்பவே முடியவில்லையே? அவர் பெயர் என்ன?

         அப்பெண், அமைதியாய், புன்னகையோடு பதில் கூறினார்.


என் பாட்டனின் பெயர் திருவள்ளுவர்.

         என்ன, திருக்குறளை எழுதிய திருவள்ளுவரா?

         ஆம், திருவள்ளுவர்தான்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் – காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்.

         இதுவே அந்தக் குறள்.

         ஒரு மனிதன் நல்ல குலத்தில் பிறந்துள்ளாரா என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால், யாரிடமும் போய் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அம்மனிதரின் பேச்சே, அவரது வாய்ச் சொல்லே, அவரது குலத்தினை, குலத்தின் குணத்தினை நமக்கு உணர்த்திவிடும்.

         இக்கருத்தினைக் கூற வந்த வள்ளுவர், இதற்கு உதாரணமாய், போகிற போக்கில் கூறிச் சென்றதுதான், நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் என்பதாகும்.

        நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் என்றால், நிலத்திற்கு மேல் நிற்கும் தாவரங்கள், நிலத்திற்குள் இருப்பதை நமக்கு உணர்த்தும் என்கிறார்.

        ஒரு செடி வளர்கிறதென்றால், பூமிக்குமேல் எவ்வளவு உயரம் செல்கிறதோ, அதைப்போல், இரண்டு மடங்கு, நிலத்திற்குள் வேராக இறங்கும்.

         இதனால்தான் சுனாமிக்குப் பின், பயிர் செய்தபோது பலனில்லாமல் போய்விட்டது.

        ஏனெனில், பூமிக்கு அடியில், கடல் சேர் இருந்ததால், அதனைத் தொட்ட உடனேயே, வேரின் வாழ்க்கை முடிவுக்கு வந்து கருகத் தொடங்கியிருக்கிறது.

        வேர் கருக, கருக, தாவரங்களும் கருகிச் சாய்ந்து விட்டன.

        இவ்விடத்தில், பாதிப்பில்லாமல் வளர்ந்து நிற்கும் செடிகளைப் பாருங்கள். இதன் பெயர் குதிரைக் குளம்பு. மிகவும் சிறிய செடி. எனவே இதன் வேர் பகுதியும் மிகவும் சிறியது.

         எனவே இச்செடிகளின் வேர்கள், கடல் சேற்றைத் தொடாததால், தப்பித்துக் கொண்டன. மற்ற தாவரங்கள் பிழைக்க வழியின்றி கருகிவிட்டன என்றார்.

         பிறகென்ன இந்தோனேசிய உவர் நிலம், சில மாதங்களிலேயே, விளை நிலமாய் உயிர் பெற்று எழுந்தது.

         மக்களும், விஞ்ஞானிகளும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

          இந்திய மகளை, தமிழ் மகளை, நம் நில மகளைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியவர்கள், லடாங் மற்றும் சவான் பகுதிகளில் கொண்டுபோய் இறக்கி விட்டனர்.

         இப்பகுதியினையும் மீட்டுத் தாருங்கள் என்றனர்.

         லடாங் – மலையும், மலை சார்ந்த இடமுமாய் இருந்தது.

         சவான் – வயலும், வயல் சார்ந்த இடமுமாய் இருந்தது

         மலையும், மலை சார்ந்த இடத்திற்குப் பெயர் குறிஞ்சி.

         வயலும், வயல் சார்ந்த இடத்திற்குப் பெயர் மருதம்.

        இதற்கும் உங்கள் தாத்தா, ஏதாவது எழுதி வைத்திருக்கிறாரா? இம்முறை மிகவும் மரியாதையுடன் கேட்டனர்.

        ஆம் எழுதியிருக்கிறார். ஆனால் இவர் வேறொரு தாத்தா என்றார்.

        வேறொரு தாத்தாவா? அவர் யார்?

       

இந்த தாத்தாவின் பெயர் இளங்கோ அடிகள் என்பதாகும். இவர் ஒரு சூழலியலாளர். இவர், தான் எழுதிய, சிலப்பதிகாரத்தில், இதைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறார்.

       கூடியிருந்தோல் வியந்து போயினர்.

       நில மகளின் முகத்தையே பார்த்திருந்தனர்.

குறிஞ்சியும் முல்லையும்
மருதமும் நெய்தலும்
தன் இயல்பில் திரியின்
நல்லியல் பிளந்து
நடுங்கு துயருற்று
பாலையெனும் ஒரு
படிமம் கொள்ளும்

என்று எழுதியிருக்கிறார் என்று கூற, கூடியிருந்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றனர்.

        இந்நிலமும் மீட்கப் பட்டது

        விளை நிலமாய் மாற்றப் பட்டது.

        ஒன்றல்ல, இரண்டல்ல, சுமத்ரா தீவுக் கூட்டத்தின், 32 இரண்டு தீவுகள் வளமை பெற்று, செழுமையுற்றன.

        நண்பர்களே, இந்த தமிழ் மகள்

        நம் நில மகள் யார் தெரியுமா?

.                                                         ........... தொடரும்