17 மார்ச் 2019

சீனா தானா






     நேரில் பார்த்த அடுத்த நொடி, விரைவாய் விரிவும் அன்புப் புன்னகை.

     தன்னை அறியாமலேயே நீண்டு, நம் கரம் பற்றி மகிழும் மெல்லியக் கரங்கள்.

     பாசம் கலந்த நேசக் குரல்


     சிறு, குறு, புது எழுத்தாளர்களைக் கூட, உச்சானிக் கொம்பில் ஏற்றி வைத்து, அழகு பார்த்த நல் இதயம், தன் துடிப்பை நிறுத்தி, நம்மையெல்லாம் துடி துடிக்க வைத்திருக்கிறது.

வலையுலகப் பிதாமகர்
வலைச்சர நிறுவுநர்

சீனா தானா
என உறவுகளாலும், நட்புகளாலும்
பெருமையோடு அழைக்கப்படும்
நம்


அன்பின் சீனா
இன்று இல்லை.

கடந்த 16.3.2019 சனிக்கிழமையன்று,
இயற்கையோடு இணைந்து விட்டார்.

     நினைத்துப் பார்க்கிறேன்.

     ஐந்து ஆண்டுகளுக்கும் முன், பெரியவர் சீனா தானாவை, மழலையாக, மாணவனாகப் பார்க்கும், ஓர் அற்புத வாய்ப்பு எனக்கு, எனக்கு மட்டுமே கிடைத்ததை நினைத்துப் பார்க்கிறேன்.

     சீனா தானா

    

தன் அன்புத் துனைவியார், திருமதி மெய்யம்மை ஆச்சி அவர்களுடன், தஞ்சைக்கு வந்து, இந்த எளியேன் வீட்டில், இரண்டு நாட்கள் தங்கியிருந்த, நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன்.

    சீனா தானா

    பிறந்ததும், தவழ்ந்ததும், எட்டாம் வகுப்புவரைப் படித்ததும் தஞ்சையில்தான்.

     தான் பிறந்த வீட்டின் நினைவுகளை, அடையாளங்களைக் கூற, அவ்வீட்டினைத் தேடிக் கண்டுபிடித்து, அவரை அவ்வீட்டிற்கே அழைத்தும் சென்றேன்.

    


     ஆம், இது, இதுதான் நான் பிறந்த வீடு

     நான் தவழ்ந்த வீடு

     நான் வளர்ந்த வீடு

     குழந்தையானார்.

     தான் ஐந்தாம் வகுப்பு வரைப் படித்தது, சுப்பையா நாயுடு தொடக்கப் பள்ளி.

     ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பு வரைப் படித்தது வீரராகவா உயர்நிலைப் பள்ளி என்றார்.

     


   
     அவ்விரு பள்ளிகளுக்கும் அழைத்துச் சென்றேன்.

     ஒவ்வொரு வகுப்பாய் நுழைந்து, நுழைந்து பார்த்தார்.

      நான் படித்த பள்ளி

     இதோ இதுதான் என் வகுப்பறை

     மாணவனாகவே மாறினார்

அன்பின் சீனா

இன்று இல்லை.


ஆனாலும் அவரின் நினைவுகள்
என்றும், என்றென்றும் நம்மோடிருக்கும்.

தமிழ் வலையுலகு என்று ஒன்றிருக்கும்வரை,
அன்பின் சீனா
என்னும் பெயரும் நிலைத்திருக்கும்.

அன்பின் சீனா அவர்களின் நினைவினைப் போற்றுவோம்