04 ஏப்ரல் 2019

நில மகள் 3


       

     
        நண்பர்களே, இந்த தமிழ் மகள்

        நம் நில மகள் யார் தெரியுமா?


-----


        ஆண்டு 1972.

        சித்திரை முதல் நாள்.

        ஈரோடு மாவட்டம், திங்களூர் என்னும் சிற்றூர்.

        நிலமகள் பிறந்தார்.

        தந்தை மாரிமுத்து, தாய் சரசுவதி.

        பெற்றோரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

       செல்வ மகள் பிறந்திருக்கிறார். செல்ல மகள் பிறந்திருக்கிறார்.

       மழலையைக் கொஞ்சிக், கொஞ்சி, சீராட்டி, தாலாட்டி மகிழ்ந்தனர்.

        ஆனாலும் ஆறு மாதங்களுக்குமேல் மகிழ்ச்சி நீடிக்கவில்லை.

        ஆறு மாதங்கள் கடந்த பிறகுதான் தெரிந்தது, தங்கள் மகளால் இனி எப்போதும் நடக்க முடியாது என்பது புரிந்தது.

         மழலையின் இரு கால்களும், இளம் பிள்ளை வாதத்திற்கு இறையாகி இருந்தன.

        தெருவில் பிள்ளைகள், ஓடி ஆடி விளையாடுவதை, வீட்டுச் சன்னலின் கம்பிகளைப் பிடித்தவாரே, ஏக்கத்தோடு பார்ப்பார்.

      எழு, ஓடு என மனம் சொல்லும்.

      எழுந்தால், உடல் தானே கீழே விழும்.

      எழுந்து நிற்கக் கூட முடியவில்லை.

      தன் மகள் விளையாடக் கூட முடியாமல், மூலையில் முடங்கித் தவிக்கிறாரே, என தந்தை, தவியாய் தவித்தார்.

      தன் மகளும் விளையாட வேண்டும்

      விளையாடியேத் தீர வேண்டும்

      அதனை நான் கண்களால், என் இரு கண்களால் பார்த்தே ஆக வேண்டும்.

       தீவிரமாய் யோசித்தவர், இறுதியில் தன் மகளை விளையாட வைத்தார்.

       தமிழோடு, தன் மகளை விளையாட வைத்தார்.

       தலைமையாசிரியர், அதுவும் தமிழாசிரியர் அல்லவா, இவர் தந்தை.

       எனவே, தமிழையே விளையாட்டு பொம்மையாக்கி, தன் மகளோடு விளையாட விட்டார்.

      

செல்ல மகளை, செந்தமிழ் மகளை, தன் மடியில் அமர்த்தி, ஒவ்வொரு எழுத்தையும், வரிசையாய் அணிவகுத்து வரச்செய்து, அறிமுகப் படுத்தி நண்பர்களாக்கினார்.

       உயிர் எழுத்து 12

       மெய்யெழுத்து 18

       உயிர்மெய் எழுத்து 216

என இரண்டு வயதிலேயே, இவருக்கு 246 நண்பர்கள், விளையாடக் கிடைத்தனர்.

      நண்பர்களை, மாற்றி மாற்றி இணைத்து, இணைத்து சொல் சொல்லாய் சொல்லி மகிழ்ந்தார்.

      இரண்டரை வயதிலேயே, எழுதுகோலை எடுத்து, அழுத்தம் திருத்தமாய் எழுதத் தொடங்கினார்.

      நான்கு வயதில், பாரதியார் கவிதைகளை, முதல் பக்கத்தின் முதல் வரியில் தொடங்கி, கடைசிப் பக்கத்தின் கடைசி வரி வரை, தடங்கலின்றி, தடுமாற்றமின்றி, மூச்சுவிடாமல், தெளிவாய் வாசிக்கும், தமிழ் மகளானார்.

      தமிழ் உதிரத்தோடு கலந்தது

      தமிழ் உறுதியைக் கொடுத்தது

      உள்ளத்தில் வலிமையைக் கொடுத்தது.

      நம்பிக்கையை வளர்த்தது.

      தமிழ் ஆணையிட்டது.



     உன்னால் முடியும், எழு, நட

                                                       ..... தொடரும்