11 ஏப்ரல் 2019

நில மகள் 4




      உன்னால் முடியும், எழு, நட

     தமிழ் ஆணையிட்டது.

    கைப் பிடித்துத் தூக்கி விட்டது.

    மெல்ல, மெல்ல நடக்கலானார்.

    பள்ளி செல்லலானார்.


    மாணவியாய் பள்ளி சென்றவர், செம்மையாய் படித்துத், தன் தந்தையைப் போலவே ஆசிரியரும் ஆனார்.

     பிறந்தது முதலே, தமிழோடு தவழ்ந்ததால், தமிழோடு வளர்ந்ததால், இயற்கைக்கும், அறிவியலுக்கும் உள்ள தொடர்பைத், தமிழால் உணர்ந்தார்.

     பாழ்பட்ட நிலங்களை மீட்கும் வழிமுறைகளை தமிழால் அறிந்தார்.

     2004 இல் ஆழிப் பேரலை, நாகையை கபளீகரம் செய்தது.

     விளை நிலங்கள் எல்லாம், உவர் நிலங்களாய் மாறின.

     வயல்வெளி எங்கும் உப்பின் அடர்த்தி வெகு வேகமாய் உயர்ந்தது.

     தொழில் நுட்பக் குழுவினர் வந்தனர்.

     ஆய்வு செய்தனர்.

      கோடி கோடியாய் செலவு செய்தாலும், விளை நிலங்களை மீட்க குறைந்தது பத்து ஆண்டுகளாவது ஆகும் என கணித்தனர்.

      ஆண்டுகள் பத்து கடந்தாலும், முழு உத்திரவாதத்திற்கு இடமில்லை என நழுவினர்.

      அரசு திகைத்தது..

      இந்நிலையில்தான், விளை நிலங்களை மீட்டுத் தருகிறேன் என தமிழ் மகள் களமிறங்கினார்.

      ஆனால் ஆதரிக்கத்தான் யாரும், தயாராக இல்லை.

       பழந்தமிழரின் வேளாண்மை முறையினைப் பயன்படுத்தி, இந்நிலங்களை மீட்க இயலும், நமது இலக்கியங்களில் இதற்கான வழி முறைகள் கூறப்பட்டுள்ளது, வழி இருக்கிறது என்றார்.

        அரசாங்கத்தினர் தயங்கினர்

         மக்களோ, வாருங்கள், விளை நிலங்களை. மீட்டுத் தாருங்கள், எங்கள் வாழ்வாதாரத்தைச் செம்மையாக்கி, சீர்படுத்தித் தாருங்கள் என அழைத்தனர்.

       நாகை மாவட்ட ஆட்சியருக்கு, இவரிடத்தில் ஓர் நம்பிக்கை பிறக்க, ஒரு சிறு பகுதியில் செயல்படுத்திக் காட்டுங்கள். பின்னர் மற்ற பகுதிகளுக்கும் விரிவு படுத்துவோம் என்றார்.

       பொய்கை நல்லூர்.

        நாகையை அடுத்த பொங்கை நல்லூர் என்னும் சிற்றூர், தமிழ் மகளை இருகரம் நீட்டி அழைத்தது.

         வயலில் இறங்கினார்.

          பணியைத் தொடங்கினார்.

          தமிழ் மகளின் ஒவ்வொரு செயலுக்கும், மீட்டெடுக்கும் முயற்சிக்கும், இயற்கை உடனிருந்து உதவியது.


        

விளை நிலங்களை,உயர் நிலங்களாய் உருமாற்றிய அதே இயற்கை, தன் மனம் மாறி, அழைக்கும் பொழுதெல்லாம், மழையாய் பொழிந்து, விளை நிளங்களையும், மக்கள் மனங்களையும், குளிர வைத்தது.

         மழை பெய்தால் பணி சிறக்குமே, மண் செழிக்குமே என தமிழ் மகள் நினைக்கும் பொழுதெல்லாம், மேகம் மழையாய் மாறி, மகிழ்வோடு அரவணைத்தது.

        விதையிட்டிருப்பதால், ஒரு வாரத்தற்கேனும், மழையின்றி இருப்பின், பயிர் செழிக்குமே, தழைக்குமே என்று எண்ணினால், மழையும் விடுமுறை எடுத்து, வேறு திசை சென்று காத்தது.

       தமிழ் மகளுடன், மழை மகளும் கைகோர்க்க, பிறகென்ன வெற்றிதான்.

       மூன்றே மாதங்களில் 3,000 ஏக்கர் நிலம் மீட்கப் பட்டது.

       செய்தியறிந்து நாளிதழ்களும், வார இதழ்களும், தொலைக் காட்சிகளும் நாகையில் முகாமிட்டன.

        செய்தி மெல்ல மெல்ல பரவியது.

        உலகே வியந்து போய் மூக்கில் விரல் வைத்து அமர்ந்தது.

        

இளைஞர்களின் எழுச்சி நாயகர், முன்னார் குடியரசுத் தலைவர் மேதகு ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் நாகைக்கு வந்தார்.

         பார்த்தார்

      உவர் நிலங்கள், விளை நிலங்களாய் மாறிய, அதிசயத்தை, அற்புதத்தைக் கண்ணாரக் கண்டார்.

        மகிழ்ந்து, உள்ளம் நெகிழ்ந்து பாராட்டினார்.

        வாஷிங்டன், இறக்கைக் கட்டிப் பறந்து வந்து, நாகையில் இறங்கியது.

       ஆம். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், நாகைக்கே வந்தார்.

        நாகையோடு நின்று விடாதீர்கள்.

         சுனாமியால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளுக்கும் வாருங்கள்,வாருங்கள் என அழைத்தும் ‘சென்றார்.

       2006 இல் இந்தோனேசியா

       2007 முதல் 2009 வரை இலங்கை.

        இந்தியாவில் மட்டும், இதுவரை இவர் பயணித்திருக்கும் தூரம் இரண்டு இலட்சத்து, ஐம்பதாயிரம் கிலோ மிட்டர்.

       இதுவரை பதினோறு இலட்சம் விவசாயிகளை நேரில் சந்தித்திருக்கிறார்.

        பண்டைத் தமிழரின், இயற்கை வேளாண்மை முறைகளை, இவர்களிடத்தில் விதைத்திருக்கிறார்.

தமிழ் மகள்
நில மகள்
இளம் பிள்ளை வாதக் கால்
தேயத் தேட
வயல் வெளிகளில்
நடந்து கொண்டே இருக்கிறார்.

இவர் பாதம் பட்ட
பூமி எல்லாம்
பசுமையாய்
செழுமையாய்
வளமையாய்
மாறிக் கொண்டே இருக்கிறது.

இவர்தான்,
நம்
தமிழ் மகள்
நம்
திரு மகள்
நம்
நில மகள்



திருமதி மா.இரேவதி.

இவரை வாழ்த்த, தகுந்த வார்த்தைகள் இல்லை என்னிடத்தில்
இவரைப் போற்ற போதிய வார்த்தைகள் இல்லை என்னிடத்தில்,
இருப்பினும்,
மனமார வாழ்த்துவோம்
நெஞ்சாரப் போற்றுவோம்
தமிழ் போல் வாழ்க வாழ்க
என
வாழ்த்துவோம்,    போற்றுவோம்