03 நவம்பர் 2019

குரு பக்தி




     ஆண்டு 1975

     சென்னை

     மயிலாப்பூர்

     மயிலாப்பூர் மட்டுமல்ல, இசை உலகே சோகக் கடலில் மூழ்கி இருந்தது.

     காரணம், ஓர் இசைக் கலைஞரின் மறைவு


     சித்தூர் சுப்பிரமணியம்

     கருநாடக இசையினை அறியாதவர்களைக் கூட, தன் இசையினை மெய்மறந்து கேட்கச் செய்யும் ஆற்றலாளர்.

     தன் அனுபவத்தையும், கற்பனை ஆற்றலையும் கலந்து மணிக் கணக்கில் பாடுவதில் வல்லவர்.

     ஐம்பது ஆண்டுகள் இசைக் கச்சேரிகளைத் தொடர்ந்து நடத்தியவர்.

     இன்று அமைதியாய் மீளாத் துயிலில்.

     சித்தூர் சுப்பிரமணியம் அவர்களின் திருமகனார், இறுதி நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்து கொண்டிருந்தபோது, ஒருவர் இவரை மெல்ல அணுகினார்.

     சோகமே உருவாகி வந்தவர், கை கூப்பி வணங்கியவாறு, சித்தூராரின் மகனிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார்.

     வேண்டுகோளினைச் செவிமடுத்துக் கேட்டவர் திடுக்கிட்டுத்தான் போனார்.

என் குருவான, உன் தந்தைக்கு, நீ செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை, உனக்கு பதிலாக, நான் செய்ய விரும்புகிறேன். அதற்கு உன் அனுமதி வேண்டும்.

-----

     ஒன்றல்ல, இரண்டல்ல, முழுதாய் பதிமூன்று ஆண்டுகள், சித்தூராரிடம் இசை நுணுக்கங்களை முழுதாய் கற்றவர்.

     பதிமூன்று ஆண்டுகள்

     குருகுல வாசம்

     வாரத்திற்கு ஒரு நாள்தான் வகுப்பு

     மற்ற நாட்களில், காலையில் எழுந்தவுடன், சித்தூரார் வீட்டில் இருக்கும் எருமை மாட்டை, எக்மோருக்கு ஓட்டிச் செல்ல வேண்டும்.

     சென்னை எலும்பூரில் உள்ள, சித்தூராரின் பெற்றோர் வீட்டிற்கு, எருமை மாட்டை, ஓட்டிச் சென்று, பால் கறந்து கொடுத்துவிட்டு, மீண்டும் மாயிலாப்பூருக்கு, எருமையுடன் திரும்ப வேண்டும்.

     இப்படித்தான் படித்தார்

     இவரது இசை ஆர்வம் அப்படிப்பட்டது.

-----

     இதோ தன் குருநாதர் மறைந்த செய்தியறிந்து பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டார்.

     குருநாதர்

     குருநாதரைத் தன் தந்தையினும் உயர்வாய் உள்ளத்தில் வைத்துப் போற்றியவர்.

     குருநாதருக்கு, இறுதிச் சடங்குகளைத் தானே செய்ய வேண்டும்

     உள்ளத்து வேதனைகளுக்கு அதுவே வடிகாலாய் அமையும் என்று எண்ணி, சித்தூராரின் மகனிடம் வாய் திறந்து கேட்டும் விட்டார்.

     நின் தந்தைக்கு, என் குருவிற்கு, இறுதிச் சடங்குகளை நான் செய்ய வேண்டும்.

     அனுமதிப்பாயா?

     ஒரு நிமிடம் கண்மூடி யோசித்த சித்தூராரின் அன்பு மகன் கூறினார்.

     நீங்களே இறுதிச் சடங்குகளைச் செய்யுங்கள்.

     சீடனே குருவிற்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

     இறுதிச் சடங்குகளை மட்டுமல்ல, பத்து நாள் சடங்குகளையும், மகனின் இடத்தில் இருந்து, சீடரே செய்தார்.

     பத்து நாள் வரை தான் ஒப்புக் கொண்ட, இசை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தார்.

---

     நண்பர்களே, இந்தச் சீடர் யார் தெரியுமா?

     குருநாதருக்குத் தன் வாழ் நாள் முழுவதும், பாடல்கள் மூலமும்., பணிவிடைகள் வழியாகவும், கடவுள் பக்தியைவிட, குரு பக்தியை அதிகமாய் வெளிப்படுத்தியவர்.

     கருநாடக இசைக் கச்சேரிகளில், அதிகமானத் தமிழ்ப் பாடல்களைப் பாடி, உலகெங்கும் வாழும், தமிழர்களது நெஞ்சங்களில் நிலையான இடத்தினைப் பிடித்தவர்.

      இசைத் துறையில் மட்டுமல்ல, திரைத் துறையிலும் தனி இடம் பிடித்தவர்.

மருதமலை மாமணியே முருகையா ……..
என்ற ஒரே பாடலின் மூலம் புகழின் உச்சம் தொட்டவர்



மதுரை சோமு.