19 மார்ச் 2020

அமின்



     டக்காகி கான்சிரோ

     தலைவர்

     ஒரு படையின் தலைவர்

     கப்பற் படையின் தலைவர்

     ஜப்பான் கப்பற் படையின் தலைவர்

     இவருக்கு ஒரு பழக்கம்

     நீண்ட நாட்கள் கடலிலேயே செலவிட்டு, பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு, தாயகம் திரும்பும் கப்பற் படை வீரர்களை, துறைமுகத்திற்கே சென்று நேரில் வரவேற்பது இவரது பழக்கம்.

     அன்றும் அப்படித்தான், வீரர்களை வரவேற்க, துறைமுகத்திற்குச் சென்றார்.

     வீரர்கள் கப்பலில் இருந்து இறங்கி அணிவகுத்து நிற்க, மகிழ்வோடு பாராட்டி வரவேற்றார்.

     வரவேற்பு நிகழ்வு முடிந்து, தன் அலுவலகத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்த, கப்பற் படைத் தலைவரின் முகத்தில், தீவிரமான சிந்தனையின் ரேகைகள்.

     அலுவலகத்திற்குச் சென்றபின், முதல் வேளையாக, கிரிஸ்டியான் ஜக்குமான் என்பவரை அழைத்தார்.

     கிரிஸ்டியான் ஜக்குமான்

     ஜப்பானியக் கப்பற் படையின் மருத்துவக் குழுத் தலைவர்

     இன்று நம் கப்பற் படை வீரர்களை வரவேற்கத் துறைமுகம் சென்றேன். தாயகம் திரும்பிய வீரர்களில் பாதி பேர், சுறுசுறுப்பாக இருந்தனர், மகிழ்வோடு இருந்தனர், ஆனால் மீதி வீரர்களின் முகங்களில் மகிழ்ச்சி இல்லை, அதிக சோர்வுதான் காணப்பட்டது. மிகவும் தளர்ந்திருந்தனர்.

     போர் வீரர்களின் சோர்வு, படைக்குப் பலவீனமல்லவா.

     காரணத்தைக் கண்டுபிடியுங்கள்.

     வீரர்களின் சோர்வைப் போக்குங்கள்.

     மருத்துவக் குழுத் தலைவர் அன்றே களத்தில் இறங்கினார்.

     அன்று கப்பற் படை கப்பலில் வந்த ஒவ்வொரு வீரரையும் தனித் தனியே சந்தித்தார்.

     வீரர்களின் சாப்பாடு, ஓய்வு நேரம், உடற் பயிற்சி, போர்ப் பயிற்சி போன்ற பல விவரங்களைச் சேகரித்தார்.

     ஆனாலும் அவரால் சோர்விற்கானக் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

     ஒரு நாள் இவர், ஓர் அலுவல் காரணமாக, ஜாவா தீவிற்குச் செல்ல வேண்டி இருந்தது.

     ஜாவா தீவிற்குள் ஒரு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த மருத்துவர், ஒரு சாலையோரத் தேநீர் கடையினைக் கண்டார்.

     தேநீர் அருந்த விரும்பினார்

     வண்டியை நிறுத்தச் சொல்லி, தேநீர் அருந்தியவாரே, நாற்புறமும் பார்த்தார்.

     நிறைய கோழிகள் மேய்ந்து கொண்டிருந்தன

     பல கோழிகள் சுறுசுறுப்பாய் அங்கும் இங்கும் இயங்கிக் கொண்டிருக்க, பல கோழிகள் சோர்வடைந்து, சோகத்துடன் நின்றன.

      மருத்துவரின் மனதில் ஒரு தீப்பொறி

     கோழிகளின் உருவில், கப்பற் படை வீரர்களைக் கண்டார்

     ஏன்?

     சுறுசுறுப்பு ஏன்?

     சோர்வு ஏன்?

     இக்கோழிகள் எல்லாம் யாருடையவை? தேநீர் கடைக்காரரிடம் விசாரித்தார்.

     சோகமாய் நிற்பவை எல்லாம், அருகாமையில் இருக்கும் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகள். சுறு சுறுப்பாய் இருப்பவை எல்லாம், அதோ அங்கிருக்கும் சிறைச்சாலையில் வளர்க்கப்படும் கோழிகள் என்றார்.

     வீட்டுக் கோழிகளிடம் சோர்வு

     சிறைக் கோழிகளிடம் சுறு சுறுப்பு

     உடனே சிறைச்சாலைக்குச் சென்றார்

     கோழிகளின் உணவு என்ன? எப்படிப் பராமரிக்கிறீர்கள்?

     கேள்விகளை வீசினார்.

     அப்பொழுதுதான் தெரிந்தது, சிறைக் கோழிகள், உமி நீக்கப்படாத அரிசியை உண்ணுகின்றன.

      ஒவ்வொரு வீடாய் ஏறி இறங்கினார்

     வீட்டுக் கோழிகள் உமி நீக்கப்பட்ட  அரிசியை உண்ணுகின்றன.

     சுறுசுறுப்பின் ரகசியம் உமியில் ஒளிந்துள்ளதை அறிந்தார்.

     உமி நீக்கப்படாத அரிசியில் இருப்பது என்ன?

     உமி நீக்கப்பட்ட அரிசியில் இல்லாதது என்ன?

     ஆராய்ந்தார்

     கண்டுபிடித்தார்

     விட்டமின் பி சத்து உமியில் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தார்

     இனி வீரர்கள்  உமி நீக்கப்படாத அரிசியை உண்ண வேண்டும் என்று அறிவித்தார்.

     1911 ஆம் ஆண்டில், காஸிமிர் பங்க் என்னும் ஆராய்ச்சியாளர், கிரிஸ்டியான் ஜக்குமானின் இந்தக் கண்டுபிடிப்பை, சற்று விரிவு படுத்தினால் என்ன? என்று யோசித்தார்.

     விட்டமின் பி குறைபாட்டினைப் போக்க, உமி நீக்கப்படாத அரிசிக்கு பதில், இதனையே மாத்திரை வடிவில் தயாரித்துக் கொடுத்தால் என்ன? என்று யோசித்தார்.

     பல்வகை தானியங்களை, சில ரசாயணக் கலவைகளோடு சேர்த்து புதிய சத்து மாத்திரையினை உருவாக்கினார்.

     பி காம்ப்ளெக்ஸ்

     இந்த ஊட்டச் சத்து மாத்திரைக்கு அமின் என்று பெயரிட்டார்.

     அமின் என்றால் அத்தியாவசியமானது என்று பொருள்

     வைட்டல் என்றால் அவசியமானது என்று பொருள்

     அவசியமானதுடன், மிக அத்தியாவசியமானதும் சேரவே புதுப் பெயர் பிறந்தது.

     வைட்டல் + அமின்

     வைட்டமின்

     வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ்

     வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் உருவான கதையை, ஒரு நூலில் படித்தபோது வியந்துதான் போனேன்.

     கண்டுபிடிப்பு பற்றிய செய்தி ஏற்படுத்திய வியப்பு ஒருபுறம் என்றால், இந்தச் செய்தியை நான் கண்டெடுத்த நூல் ஏற்படுத்திய வியப்பு மறுபுறம்.

     இந்நூலை எழுதியவர் மருத்துவரல்ல

     காவலர்

     காக்கிச் சட்டை அணிந்த காவலர்

     இருபத்து நான்கு மணி நேரமும் ஓய்விலாப் பணியில் இருப்பவர், அரிதினும் அரிதாய் கிடைக்கும் ஓய்வு  நேரங்களிலும், ஆய்வியல் அறிஞர்களை எல்லாம் தேடித் தேடிக் கண்டுபிடித்து, தன் நூலின் பக்கங்களில் எழுத்தாக்கி, நமக்கு நல் அறிமுகம் செய்திருப்பது கண்டு வியந்துதான் போனேன்.

தொழில் நுட்பம் தேர்ச்சி கொள்

     அன்றைய கண்டுபிடிப்பு முதல், இன்றைய கணினி வளர்ச்சி வரையிலான பல்வகைச் செய்திகள், இக்கட்டுரையில் அணிவகுத்து நிற்கின்றன.

பெரிதினும் பெரிது கேள்

திருச்சி, ரயில்வே காவல் கண்காணிப்பாளர்
முனைவர் த.செந்தில்குமார் அவர்களின்
அற்புத நூல்


பெரிதினும்  பெரிது கேள்