04 மே 2020

செந்தமிழ் அரிமா





கெடல் எங்கே தமிழின் நலம்? – அங்கெல்லாம்
தலையிட்டுக் கிளர்ச்சி செய்க

என்னும் பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்குத், தன் வாழ் நாள் முழுவதும் உயிர் கொடுத்தவர் இவர்.

     தமிழுக்குத் தீங்கு எனில், நரம்பெல்லாம் இரும்பாகி, நனவெல்லாம் உணர்வாகக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்தவர் இவர்.


     நாம் அனைவரும் தமிழைத் தாய் என்றுப் போற்றிக் கொண்டாடுகிறோம். ஆனால் இவரோ தமிழைத் தன் குழந்தையாகவே கருதினார்.

     தன் பிள்ளைக்குச் சாலையில் செல்லும் ஊர்திகளாலோ, முரடர்களாலோ, நோய்களாலோ, இனப் பகைவராலோ தீங்கு வந்துவிடக் கூடாதே என்னும் பதைபதைப்புடன், ஒரு தாய், தன் பிள்ளையை அரணிட்டுக் காப்பது போலவே, இவர் எந்நேரமும் தமிழைக் கண்ணும் கருத்துமாய் காக்கும் பொறுப்பை மேற்கொண்டவர்.

     ஆய்வுலகிலோ, ஆட்சியிலோ, மக்கள் மன்றத்திலோ எங்கேனும் தமிழுக்குத் தீங்கு வந்துவிடக் கூடாது என்னும் விழிப்புணர்வுடனும், தீங்குற்ற நேரத்தில் முந்திச் சென்றும், தமிழின் நலனைக் காக்கும் பணியில் ஈடுபடுவதே, தம் பணியெனக் கருதி வாழ்ந்தவர் இவர் என்று உணர்வு பொங்கக் கூறுவார் உரைவேந்தர் ஔவை துரைசாமி பிள்ளை.

     பள்ளிப் பருவத்திலே, இவருக்குத் தமிழமுதின் சுவை காட்டியப் பெருமகனார், தமிழாசிரியர் சாமி.சிதம்பரனார் அவர்களாவார்.

     இவர் ஊட்டிய தனித் தமிழ் உணர்வும், சுயமரியாதை வீறுணர்ச்சியும், பசுமரத்தாணியாய், இவரது உள்ளத்தைப் பற்றிக் கொண்டன.

     தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்று அரசர் கல்லூரியில், புலவர் வகுப்பு மாணவராய் பயின்ற போது, தன் பேராசிரியரோடு தமிழுரிமைப் போர் நடத்தியவர் இவர்.

     பேராசிரியர் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார்

     இவரது தமிழாசிரியர்

     தமிழாசிரியர் மட்டுமல்ல, கல்லூரியின் முதல்வரும் இவரே.

     இவர் தமிழும், சமஸ்கிருதமும் கற்றுத் தேர்ந்தவர்.

    இருப்பினும், சமஸ்கிருதத்தின் மேல் அதிகப் பற்று கொண்டவர்.

     வகுப்பிற்குத் தொல்காப்பியப் பாடம் நடத்த வந்த சாஸ்திரியார், வடமொழி இலக்கணங்களின் வழி நின்றே, தொல்காப்பியம் இயற்றப் பெற்றது எனக்கூறிய போது, சிங்கமெனச் சிலிர்த்து எழுந்து எதிர்வாதம் புரிந்தார்.

     சாஸ்திரியார் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நூலாக வெளியிட்டிருப்பதையும் அறிந்தார்.

     வடமொழிச் சார்புடையவர், தன் மொழிபெயர்ப்பிலும், வடமொழியைத் தூக்கிப் பிடித்திருப்பதை அறிந்தார்.

     அன்றே, தன் மாணவப் பருவத்திலேயே, ஒரு முடிவெடுத்து, தொல்காப்பியத்தின் தனிச் சிறப்பை உணர்த்தும் வகையில், தொல்காப்பியத்தை  தானே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அகிலமெங்கும் தமிழின் பெருமையைப் பரப்புவேன் என்று சூளுரைத்தார்.

     அன்றுமுதல் தொல்காப்பியக் கடலில் மூழ்கி முத்தெடுக்கத் தொடங்கினார்.

     உரையாசிரியர்களை ஊன்றிப் படித்தார்.

     கால்டுவெல் இயற்றிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஆங்கில நூலைக் கரைத்துக் குடித்தார்.

Origin and Growth of Tamil Language

தமிழ் மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்

     இதுதான் இவரது எம்.ஓ.எல்., பட்ட மேற்படிப்பிற்கான ஆய்வு நூலாகும்.

     எம்.ஓ.எல்.,

     இன்று பி.ஏ., எம்.ஏ., என தமிழும் ஆங்கிலமும் படிக்கலாம்.

     ஆனால் அன்று தமிழ் படிக்க வேண்டுமானால், பி.ஓ.எல்., மற்றும் எம்.ஓ.எல்., தான் படித்தாக வேண்டும்.

     பி.ஓ.எல்., பட்டப் படிப்பு

     எம்.ஓ.எல்., பட்ட மேற்படிப்பு

     பி.ஓ.எல்., என்றால் Bachelor of Oriental Language

     எம்.ஓ.எல்., என்றால் Master of Oriental Language

     எம்.ஓ.எல்., முடித்தபின், முனைவர் பட்ட ஆய்விற்காக இவர், சமர்ப்பித்த ஆய்வேட்டின் தலைப்பு என்ன தெரியுமா?

Tholkappiam in English with Critical Studies

ஆங்கிலத்தில் தொல்காப்பியம் விமர்சன ஆய்வு

     மாணவப் பருவத்தில் எடுத்த சபதத்தில் வென்று வாகை சூடினார்.

     தொல்காப்பியர் காலம் கி.மு. ஆயிரத்திற்கும், கி.மு., அறுநூற்றுக்கும் இடைப்பட்ட காலமாகும். கி.மு., ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

     தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் சமஸ்கிருதச் சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே.

     தமிழ் எழுத்துமுறை சமஸ்கிருத்தில் இருந்து கடன் வாங்கப்படவில்லை.

     ஆரியர் வருகைக்கு முன்னரே, தமிழ் மொழி, எழுத்து முறையும், இலக்கணச் செப்பமும், இலக்கிய வளமும் பெற்றிருந்தது.

     பிறப்பினால் கூறப்படும் சாதி என்னும் வேறுபாடு, தொல்காப்பியர் காலத்தில் இல்லை.

     தொல்காப்பியர் காலத்துக் கல்விமுறையானது, பொதுக் கல்வி, தொழில் முறைக் கல்வி, ஆராய்ச்சி என்னும் மூன்று நிலைகளில் இருந்தது.

     இவையெல்லாம், இவர் தன் ஆய்வின் வழி நிரூபித்த, முடிவுகளில் ஒரு சிலவேயாகும்.

     அன்றைய தமிழக முதல்வராக இருந்த, அறிஞர் அண்ணாதுரை அவர்கள், ஏல் பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்று, அமெரிக்கா செல்லும் வழியில், ரோம் நகரில், அன்றைய போப்பாண்டவரைச் சந்தித்தது சிலருக்கு நினைவிருக்கலாம்.


இச்சந்திப்பின்போது, அறிஞர் அண்ணாதுரை அவர்கள், அருள்மிகு போப்பாண்டவருக்கு, பெருமிதத்துடன், தமிழ் நாகரிகத்தின் பெட்டகமாகத் திகழும் இந்நூலை, வாடிகன் நூலகத்திற்கு , அன்பளிப்பாய் அளிக்கிறேன் என்று தன் கைப்பட எழுதி, போப்பாண்டவரிடம், வழங்கியது, இவரது முனைவர் பட்ட ஆய்வு நூலைத்தான்.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     நண்பர்களே இவர் யார் தெரியுமா?

     எழுதுதற்கு ஏடும், பேசுதற்கு மேடையும் எப்போதும் வேண்டும் தமிழ் பரப்ப, என்று முழங்கியவர்.

     இவர் 1936 ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை, ஆசிரியர், பேராசிரியர், முதல்வர்  எனப் பல நிலைகளில் பணியாற்றியவர்.

     இவர் பணியேற்ற நாள்முதல், ஓய்வு பெற்றதுவரை, எந்த நிறுவனத்திலும், ஓராண்டு அல்லது இரண்டாண்டுகளுக்குமேல் பணியாற்றியதே இல்லை.

     காரணம், இவரது தமிழ் வளர்ச்சிக்கானப் போராட்டம்.

     இதனாலேயே  இவர், தன் பணிக்காலம் முழுவதும், அந்த ஊர், இந்த ஊர் என பந்தாடப்பட்டவர்.

     ஆனாலும் ஒருபோதும் அசராதவர்.

     பள்ளிகளில் தமிழ் வகுப்புகளில் மாணவர்கள், Present Sir என ஆங்கிலத்தில் வருகைப் பதிவினை வழங்கிக் கொண்டிருந்த நிலையினை மாற்றி, உளேன் ஐயா என்று தமிழில கூறும் வழக்கத்தைக் கொண்டுவந்தவர்.

     திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் முதன் முறையாக ஆட்சியைப் பிடித்தபோது, அரசு இலட்சினையில் இருந்த சத்ய மேவ ஜயதே என்னும் தொடரை அகற்றி, வாய்மையே வெல்லும் என்னும் தொடரை அறிமுகப்படுத்துமாறு வலியுறுத்தியவர்.

     தமிழின எழுச்சிக்குத் தந்தை பெரியாரையும், தமிழ் மறுமலர்ச்சிக்கு மறைமலை அடிகளாரையும், தனது இருபெரும் தலைவர்களாய் போற்றிச் செயலாற்றியவர்.

     இருபத்து ஐந்திற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர்.

     தான் பணியாற்றச் சென்ற இடங்களில் எல்லாம், சிற்றிதழ்களை நடத்தியவர்.

     இவரது இயற்பெயர் இலட்சுமணன்.

     இவரது தமிழாசிரியர் சாமி.சிதம்பரனார் அவர்கள் இவர் பெயரை மாற்றினார்.

     இலக்குவன்

இவர்தான்,


இலக்குவனார்
செந்தமிழ் அரிமா, பேராசிரியர் இலக்குவனார்.

     இத்தமிழ்ப் பெருமகனாரைப் பற்றிய எண்ணற்ற அரிய செய்திகளை, ஒரு மின்னூலில் படித்து வியந்தேன்.

தமிழியக்கத் தலைமைப் பேராளி இலக்குவனார்

இந்நூலைத் தொகுத்து வழங்கியிருப்பவர்,
பேராசிரியர் இலக்குவனாரின் திருமகனார்


மறைமலை இலக்குவனார்








    
செந்தமிழ் அரிமா- ஒலிப் பேழை