02 ஜூன் 2020

பனி வீடு




     ஆண்டு 1833.

     போஸ்டன்.

     அமெரிக்கா.

     ஃபிரட்ரிக் டூடர்.

     வயது 23.

     தொழிலில் நட்டம் ஏற்பட்டுக் கடனாளியானார்.

     கடன்காரர்கள் வழக்குத் தொடுக்க, சில நாட்கள் சிறைக் கம்பிகளை எண்ணினார்.


     சிறையில் இருந்து தற்காலிகமாக வெளியே வந்தவர், கடன்களை அடைப்பதற்கான வழிவகைகளைத் தேடத் தொடங்கினார்.

     சனவரி மாதக் குளிரில், ஆழ்ந்த சிந்தனையுடன் கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார்.

     போஸ்டன் நகரக் குளங்களும், ஏரிகளும் உறைந்துபோய், பனிப் பாளங்களால் மூடப்பெற்று, வெள்ளைவெளேரென்று, வழுக்கும் தரையாய் காட்சியளித்தன.

     டூடருக்கு திடீரென ஓர் எண்ணம், மின்னலாய் மனதில் வெட்டியது.

     முதல் போடாமலேயே, தொழில் செய்து, பொருளீட்டுவதற்கான வாய்ப்பு கண் முன்னே தெரிந்தது.

     இந்தப் பனிக் கட்டிகளை வெட்டி எடுத்து, இந்தியாவிற்கு அனுப்பி வியாபாரம் செய்தால் என்ன? என்னும் எண்ணம் தோன்றியது.

     வியப்பாக இருக்கிறதல்லவா?

     பனிக்கட்டிகளை விற்பதா?

     இன்றைக்கு 187 ஆண்டுகளுக்கு முன், பனிக்கட்டி என்றால் என்னவென்றே, இந்தியாவில் எவருக்கும் தெரியாது?

     உண்மை.

     இன்று வேண்டுமானால், வீட்டிற்கு வீடு குளிர்சாதனப் பெட்டி வந்திருக்கலாம், பனிக் கட்டியை நம் வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளலாம்.

     ஆனால், அன்று அப்படியல்ல.

     எப்பொழுதாவது, ஏதேனும் ஒரு சிறு பகுதியில்,  அபூர்வமாய் பொழியும், ஆலங்கட்டி மழையின்போது வேண்டுமானால், சிறு சிறு, உருண்டை வடிவிலானப் பனிக் கட்டிகளை, இந்தியர்கள் பார்த்திருக்கலாம்.

     எனவே, டூடர் முடிவு செய்தார்

     பனிக்கட்டிகளை அனுப்புவது என்று முடிவு செய்தார்.

     டூடரின் முயற்சியினை அறிந்த போஸ்டன் நகரே, அவரை கிண்டல் செய்தது. கைகொட்டிச் சிரித்தது.

     பனிக்கட்டியை அனுப்பி காசு  பார்க்கப் போகிறாராம்.

     நகர் முழுவதும் கொட்டிக் கிடக்கும் பனியை, யார் வாங்குவார்கள்?

     ஆனால் டூடர் உறுதியாக இருந்தார்.

     பனிக்கட்டிகளை அனுப்புவது என்னும் முடிவில் உறுதியாக இருந்தார்.

     எப்படி அனுப்புவது?

     கப்பல் வேண்டுமே.

     டூடரின் நண்பர் சாமுவேல் என்பவர் கப்பல் தர முன்வந்தார்.

     இவர் இந்தியாவில் இருந்து பலவிதமானப் பொருட்களை இறக்குமதி செய்யும் வணிகர்.

     இந்தியாவில் இருந்து தேக்கு, சந்தனம், மிளகு போன்ற பொருட்களைச் சுமந்து வரும் இவரது கப்பல், மீண்டும் இந்தியாவிற்குச் செல்லும்போது, காலியாகவே, வெறும் கப்பலாகவே சென்று கொண்டிருந்தது.

     எனவே, என் கப்பலைப் பயன்படுத்திக் கொள் என்றார்.

     பார்த்தீர்களா, இந்தியாவில் இருந்துதான், பல பொருட்கள் அமெரிக்காவிற்குச் சென்றிருக்கின்றன.

     அமெரிக்காவில் இருந்து எதுவுமே இந்தியாவிற்கு வரவில்லை.

     முதன் முதலாகப் பனிக் கட்டிகள் வந்தன.

  



   கல்கத்தா, பம்பாய் மற்றும் மதராஸ் துறைமுகங்களுக்குப் பனிக் கட்டிகள் வந்தன.

     நான்கு மாதப் பயணம்.

     பாதி பனிக் கட்டிகள் வரும் வழியிலேயே உருகிப்போயிருந்தன.

     பின்னர் வைக்கோல் சுற்றியப் பெட்டிகளில், பனிக் கட்டிகள் வரத் தொடங்கின.

     மக்களால் நம்பவே முடியவில்லை.

     தொட்டால் கையெல்லாம் சில்லிட்டுப் போகிறதே என்று வியந்தனர்.

     கல்கத்தா, பம்பாய் மற்றும்  மதராஸ் மூன்று நகரங்களிலும், பனிக் கட்டிகளைப் பாதுகாக்க சேமிப்புக் கிடங்குகளைக் கட்டத் தீர்மானித்தார் டூடர்.

    மதராஸில் கடற்கரையை ஒட்டிய ஓர் இடத்தில், ஒரு கட்டடத்தை 1842 ஆம் ஆண்டு கட்டினார்.

     இக்கட்டடத்தில் தினமும் காலை பத்து மணி முதல், மாலை நான்கு மணி வரை பனிக் கட்டி விற்கப்பட்டது.

     இக்கட்டடத்தின் மையப் பகுதியில், ஒரு கண்ணாடிப் பெட்டியில், மக்கள் பார்த்து மகிழ்வதற்காகவே, ஒரு பெரும் பனிக் கட்டி, பார்வைக்காக வைக்கப் பட்டது.

     நாள்தோறும் மக்கள் வரிசையில் நின்று, இப்பெரும் பனிக் கட்டியைக் கண்டு மகிழ்ந்தனர்.

     நீராவியைப் பயன்படுத்தி செயற்கையாய் பனிக் கட்டிகளை உருவாக்க முடியம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு, 1878 ஆம் ஆண்டு, பெங்கால் ஐஸ் கம்பெனி தொடங்கப்பட்ட காலம் வரை, டூடர் இந்தியாவின் ஐஸ் ராஜாவாகவே திகழ்ந்தார்.

     1882 ஆம் ஆண்டு டூடரின் பனிக் கட்டி வியாபாரம் முற்றாய் நின்று போனது.

     அதனால் என்ன, அதற்குள் டூடர், தன் கடன்களை எல்லாம் அடைத்துவிட்டு, கோடீஸ்வரராக உயர்ந்து போனார்.

     ஒரு ஆண்டிற்கு, ஒரு இலட்சத்து என்பத்து ஐந்தாயிரம் டாலர் சம்பாதித்து இருக்கிறார்.

     கிட்டத்தட்ட ஒரு இலட்சம் டன், பனிக்கட்டிகளை, இந்தியாவிற்குக் கொண்டு வந்து விற்றிருக்கிறார்.

     ஒரு வழியாக பனிக்கட்டி வியாபாரம் முடிவிற்கு வந்தபின், இந்தியாவில் இருந்த கட்டடங்களை எல்லாம் விற்றுவிட முடிவு செய்தார்.

     இனி எதற்குக் கட்டடங்கள்.

     மெட்ராஸ் கட்டடத்தினை, அன்றைய உயர்நீதிமன்ற வழக்கறிஞரான பிலிகிரி ஐயங்கார் விலைக்கு வாங்கினார்.

    சிற்சில மாற்றங்கள் செய்து, தனது மாளிகையாக மெருகேற்றினார்.

     பிலிகிரி ஐயங்கார், சுவாமி  விவேகானந்தரின் சீடர்.

     1897 ஆம் ஆண்டு, சிகாகோவில் இருந்து தாய்நாடு திரும்பிய விவேகானந்தருக்கு, மெட்ராஸில் சிறப்பான வரவேற்பு அளிக்கப் பட்டது.

     பிலிகிரி ஐயங்கார் விவேகானந்தரை தனது இல்லத்தில் தங்க வைத்தார்.

     இவரது மாளிகையில்தான் விவேகானந்தர், தினமும் சொற்பொழிவாற்றினார்.

    

பிலிகிரி ஐயங்காரின் மறைவிற்குப் பின் இம்மாளிகை விற்கப்பட்டது.

     வாங்கியவர், விசாகப்பட்டினத்தைச்  சார்ந்த ஒரு சமீன்.

     1917 ஆம் ஆண்டு இம்மாளிகை, மெட்ராஸ் அரசாங்கத்தால் விலைக்கு வாங்கப்பட்டது.

     கணவனை இழந்த பிராமணப் பெண்களுக்கான இலவச தங்கும் விடுதியாய் மாறியது.

     பின்னர் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவியருக்கான விடுதியாய் மாற்றம் கண்டது.

     1963 ஆண்டு, சுவாமி விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடிய, தமிழக அரசானது, இம்மாளிகையை விவேகானந்தர் இல்லமாய் மாற்றியது.

     கல்கத்தாவிலும், பம்பாயிலும் ஐஸ் ஹவுஸ் இன்று இல்லை.

     ஐஸ் ஹவுஸ்

     சென்னையில் மட்டும் இருக்கிறது.

    
அன்று

இன்று

                                               விவேகானந்தர் இல்லமாய் இருக்கிறது.