29 ஜனவரி 2021

முற்றுகை

 


 

     இதற்குத்தானா?

     இதற்குத்தானா, அந்த காலத்தில், அவ்வளவு கஷ்டப் பட்டோம்.

    

வேறு வழியில்லை என்று ஒரே அறையில் மட்டும், முடங்கிக் கிடந்த, அந்த பூதம், இப்போது ஒவ்வொரு மேஜையிலும், ஒவ்வொரு ஊழியரையும் ஆட்டி வைக்கிறதே.

     எல்லாமே தலை கீழாக மாறிவிட்டதே.

---

     அசோக் பானர்ஜியின் நினைவுகள் பின்னோக்கிச் சுழல, போராட்டக் களம், நம் கண் முன்னே விரிகிறது.

---

     காலியாக இருந்த கட்டிடத்தில், இரவு நேரத்தில் சில நடவடிக்கைகள், மர்மமாக நடப்பதாக அருகில் இருந்த, ரைட்டர்ஸ் கட்டிடத்தில் பணியாற்றிய அரசு ஊழியர்கள் சொன்னார்கள்.

     உள்ளே சென்று பார்த்தால், புதிதாக மின் இணைப்புகள், வயரிங் வேலைகள் நடந்து கொண்டிருந்தது.

     அங்கே என்ன வரப்போகிறது என்று, அங்கே பணியாற்றிய தொழிலாளர்களுக்கோ, ஏன் அந்த ஒப்பந்தக்காருக்குக் கூடத் தெரியவில்லை.

---

     பத்திரிக்கைகளில் செய்தி கசியத் தொடங்கியது.

---

     ஒரு கம்ப்யூட்டர், பத்தாயிரம் பேருடைய வேலையைச் செய்யும்.

     திசைக்கொன்றாக நான்கு கம்ப்யூட்டர்களை நிறுவி, அனைத்து வேலைகளையும் அவற்றை வைத்தே முடிப்பது.

     இனி புதிதாக யாரையும் வேலைக்கு சேர்ப்பது கிடையாது.

     இருப்பவர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டுக்கு அனுப்புவது.

---

      பம்பாய் போல் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்ற சிந்தனை கல்கத்தாவில் இருந்தவர்களை ஆக்கிரமிக்க, அவர்கள் ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள்.

     அந்த வழியை, மெட்ராஸில் நடந்த அகில இந்திய செயற்குழுவில் முன் வைத்தபோது, அரங்கே அதிர்ந்து போனது.

---

     முற்றுகை தொடங்கியது

---

     விவசாயிகள் ஒரு நாள்.

     அரசு ஊழியர்கள் ஒரு நாள்.

     ட்ராம் ஊழியர்கள் ஒரு நாள்.

     ஆசிரியர்கள் ஒரு நாள்.

     மாணவர்கள் ஒரு நாள்.

     வாலிபர்கள் ஒரு நாள்.

     மின்சார ஊழியர்கள் ஒரு நாள்.

     ரயில்வே ஊழியர்கள் ஒரு நாள்.

     போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள்.

     துப்புரவு ஊழியர்கள் ஒரு நாள்.

     பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒரு நாள் என ஒவ்வொரு நாளும், ஒரு சங்கம் முற்றுகைக்குப் பொறுப்பேற்று நடத்தியது.

---

     ஒரு முக்கியமானப் பொதுத்துறை நிறுவனத்தில் பத்து மாதமாக, ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

     நாடெங்கும் வேலை நிறுத்தம் நடக்கிறது.

     மத்திய அரசு ஏன் தலையிடவில்லை?

     மத்திய அரசுடைய நிலை என்ன?

     அவர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள்?

---

     இப்பிரச்சினையில் ஒரு சுமூகமான உடன்பாடு வரவேண்டும் என்றுதான் அரசு விரும்புகிறது.

     இப்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு, எந்த பாதிப்பும் வராது என்று அரசு உறுதியளிக்கிறது.

     இது தொடர்பாக விவாதிக்க, ஒரு முத்தரப்பு மாநாடு ஒன்றை அரசு ஏற்பாடு செய்யும்.

---

     நம்முடைய உறுதியான போராட்டம், இக்கூட்டத்தை நடத்தும் நிலைக்கு அரசை தள்ளியுள்ளது.

     ஆனால், இக்கூட்டத்தின் மூலம் தீர்வு வராது.

     நம் உறுதியும், ஒற்றுமையும்தான் தீர்வைத் தரும்.

---

உறுதியும், ஒற்றுமையும் தீர்வைத் தந்தது.

---

     எண்பதே எண்பது பக்கங்களில், அறுபதாண்டுகளுக்கு முந்தைய போராட்டக் களத்தை, புனைவு பாத்திரங்களின் வழியாக, சற்றும் காரம் குறையாது, நம் கண் முன் நிறுத்துகிறார் இவர்.

     ஒரு தொழிற் சங்கம் எப்படி சமூக பிரச்சனைகளோடு, தொழிலரங்க நிகழ்வுகளை இணைக்க வேண்டும், அதற்கான கருத்துருவாக்கம் விரிந்த தளத்தில் எவ்வாறு நடந்தேற வேண்டும், அயர்வில்லாமல் நீடிக்கும் களங்களை எப்படி கட்டமைப்பது, அரசியல் முரண்பாடுகளை எவ்வாறு கையாள்வது, இதர நேச சக்திகளை எப்படி இணைப்பது என்கிற முன்னுதாரனத்தை, இந்திய தொழிற் சங்க இயக்கத்திற்குத் தந்த வரலாற்று நிகழ்வை, தன் எழுத்தாற்றலால், சற்றும் உணர்வு குன்றாமல், உயிர்ப்பித்துக் காட்டுகிறார்.

     இந்நூல் உருவாக்கத்திற்காக, கல்கத்தா வரை பயணித்துத் தரவுகளைத் திரட்டியுள்ளார்.

    


இப்பெரும் போராட்டத்தின் வாழும் சாட்சியாக உள்ள, 97 வயது, மேனாள் தலைவரை, சந்திர சேகர போஸ் அவர்களை, நேரில் சந்தித்து, மணிக் கணக்கில் உரையாடி, உண்மை நிகழ்வுகளை முழுதாய் உள்வாங்கி, தன் நூலினை வடிவமைத்திருக்கிறார்.




மு ற் று கை 

1960 களில்

அகிய இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

முன்னெடுத்தப் போராட்டம்.

இ லா க் கோ  வி ஜி ல்

 

நூலின்

ஒவ்வொரு பக்கத்திலும்

வெப்பம் கூடிக் கொண்டே போகிறது.

வேலூர் கோட்ட,

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கப்

பொதுச் செயலாளர்

வேலூர் சுரா

அவர்களின்

வீரியமிக்கப் படைப்பு.

 

வேலூர் சுரா

நாம் நன்கறிந்தவர்தான்.

ஒவ்வொரு நாளும்

என்னுள்

வியப்பை விதைத்துக் கொண்டே

இருப்பவர்தான்.

காரணம் இவரது அயரா

எழுத்துப் பணி.

 

காப்பீட்டுக் கழக அலுவல்

ஒரு புறம்.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கப்

பணிகள் மறு புறம்.

இதையும் தாண்டி,

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும்,

ஒரு ஊழியனின் குரலாய்,

உழைக்கும் மக்களின்

எதிரொலியாய்

ஓங்கி ஒலிக்கும்

வலைப் பூவின்

எழுத்துப் பணி மறு புறம்.

 

எனக்கெல்லாம்

வலைப் பூவில்

வாரம் ஒரு பதிவு

எழுதுவதற்கே

மூச்சு வாங்குகிறது.

ஆனால் இவரோ

தினந்தோறும்

எழுதிக் கொண்டே இருக்கிறார்.

 

பல சமயங்களில்,

ஒரே நாளில் பல பதிவுகள்

தொடர் வண்டியாய்

இணையத்தில் ஏறி

உலகை வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

ஒரு ஊழியனின் குரல்

இவர்தான்


வேலூர் தோழர் எஸ்.ராமன்

வேலூர் சுரா

மு  ற்  று  கை

அனைவரும் அவசியம் வாசித்து அறிய வேண்டிய, உணர வேண்டிய நூல்.

 

நூல் கிடைக்குமிடம்

பாரதி புத்தகாலயம்,

மின்னஞ்சல்

thamizhbooks@gmail.com/www.thamizhbooks.com

விலை ரூ.80/-