01 ஆகஸ்ட் 2021

ஓய்வெடுங்கள் ஐயா

 


பரிதிமாற் கலைஞர்

மறைமலை அடிகளார்

தேவநேயப் பாவாணர்

இம்மூவரின், மறுஉருவாய் வாழ்ந்தவர்.

    

          எனக்குப் பெயர் தந்தவர் மலைமலை அடிகள், நெஞ்சம் தந்தவர் திரு வி.க., தோள் தந்தவர்கள் பாவாணரும், இலக்குவனாரும், துணிவு தந்தவர்கள் பாரதியாரும், பாவேந்தரும் என முழங்கியவர்.

     தனித் தமிழ் இயக்க அறிஞராய், திருக்குறள் வித்தகராய், இலக்கண, இலக்கிய ஏந்தலாய், அகராதியியல் ஆற்றலாளராய், சொல்லாராய்ச்சித் தோன்றலாய், பதிப்பியல் செம்மலாய் வாழ்ந்த

செந்தமிழ் அந்தணர்

தமிழ்க் கடல்


உலகப் பெருந்தமிழர்

முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

இன்று இல்லை.

     தமிழின் தொன்மை, தமிழின் தூய்மை, தமிழின் வளமை இம்மூன்றையும், தன் மூச்சாய், பேச்சாய், எழுத்தாய், வாழ்வாய் வடிவமைத்து வாழ்ந்து, ஓயாது உழைத்த, ஓய்வறியா உத்தமர்

கடந்த 25.7.2021

ஞாயிற்றுக் கிழமை மாலை

ஓய்வெடுக்கத் தொடங்கினார்.

ஓய்வெடுங்கள் ஐயா.

     திருவள்ளுவர் தவச்சாலை நிறுவி, பாவாணர் நூலகம் அமைத்து, வாழும் வள்ளுவராகவே வாழ்ந்து, 94 ஆண்டுகளில், தொள்ளாயிரம் ஆண்டுகாலப் பணியினைச் செய்தவர் தாங்கள்.

ஓய்வெடுங்கள் ஐயா.

ஐநூறுக்கும் மேற்பட்ட நூல்கள்

4,642 தமிழ் முறைத் திருமணங்கள்.

ஓய்வெடுங்கள் ஐயா.

     தமிழ் நாடு முழுவதும், வாழும் தமிழறிஞர்கள் பலருக்கும் பயிற்சி அளித்து, தமிழ் வழி திருமணங்கள், தன் காலத்திற்குப் பிறகும் தொடர, ஆவண செய்தவர் தாங்கள்.

ஓய்வெடுங்கள் ஐயா.

     தாங்கள் வாழ்ந்த காலத்தில், நாங்களும் வாழ்ந்தோம், என்பதே எங்களுக்குப் பெருமை.

    



கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களைப் பலமுறை நேரில் காணவும், பேசவும், தங்களைப் பற்றி எழுதவும், எனக்குக் கிட்டிய வாய்ப்பு, என் தனிப் பெருமை.



தங்களின் சொல் சுமந்து வந்த கடிதமே,

இனி என்றென்றும், என் பரம்பரைப் பொக்கிசம்.

     கடந்த 30.1.2021 அன்று, தங்களின், 94 ஆம் அகவையின், முதல் நாளில், பெரும்புலவர் முனைவர் இரா.கலியபெருமாள், புலவர் ம.கந்தசாமி, குறள் அறச்சுடர், தமிழ்ச் செம்மல் பழ.மாறவர்மன், சிங்கப்பூர் மேனாள் விரிவுரையாளர் பேராசிரியர் ப.திருநாவுக்கரசு ஆகியோருடன்  இணைந்து, மதுரைக்கு வந்து, தங்களை இறுதியாய் சந்தித்ததை எண்ணிப் பார்க்கிறேன். உள்ளம் சிலிர்க்கிறது.






ஓய்வெடுங்கள் ஐயா