22 அக்டோபர் 2021

அடுத்து என்ன?


 


     மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை, அவனைத் தொட்டுத் தொடருகிறது ஒரு கேள்வி.

     அடுத்து என்ன?

     பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து பள்ளிக்குப் போகிறோம்.

     அடுத்து என்ன?

     கல்லூரிப் படிப்பு, வேலை தேடுதல்.

     அடுத்து என்ன?

    

வேலை கிடைத்தாகி விட்டது, வசதி பெருகிவிட்டது. திருமணம், குடும்பம்.

     அடுத்து என்ன?

     பிள்ளைகளை வளர்த்தல், ஆளாக்குதல்.

     அடுத்து என்ன?

     இறுதி வரை இந்தக் கேள்வி, உடன் வந்து கொண்டே இருக்கிறது.

     நல்ல வேலை வாய்ப்பு, அதன் மூலம் பொருள் ஈட்டுதல், வசதியாக வாழ்தல். வீடு, வாகனங்கள்.

     இதுமட்டுமே வாழ்க்கை என்று எண்ணி, மக்கள் வாழ்வைக் கழிக்கின்றனர்.

     அடுத்து என்ன?

     இக்கேள்விக்கான விடையை, பலரும், பொருளாதார வசதி குறித்த கேள்வியாக எண்ணியே, தங்கள் வாழ்வை நகர்த்துகிறார்கள்.

     அடுத்து என்ன?

     உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும், வசதியான வாழ்வை நாடுவதும், தேடுவதும் தவறல்ல.

     ஆனால், அதிலேயே முடங்கிப் போவதுதான் வேதனை.

     அடுத்து என்ன?

     இக்கேள்விக்கான, உண்மையான விடை, நாம் வாழும், சமூகத்திற்கு, நாம் என்ன செய்தோம் என்பதில் அடங்கி இருக்கிறது.

     சமூக சிந்தனையோடு செயலில் இறங்கி பாடுபடுபவர்களால்தான், சாதனையாளர்களாக உயர முடியும்.

      இதுவே, நாம் முழு வாழ்க்கை வாழ்ந்ததற்கான அடையாளமாகும்.

     இன்றைய இளைஞர்கள் வரலாற்றைப் படிக்க வேண்டும்.

     மனிதன் தோன்றிய காலம் முதல் பதிவு செய்யப் பெற்றுள்ள வரலாற்றைப் படித்து அறிய வேண்டும்.

     இதுபோன்ற வரலாற்றுத் தகவல்களை அள்ளித் தரும் பணியினை, தமிழின் தொன்மையை, மேன்மையை உலகிற்கு உணர்த்தும் பணியினை ஏடகம் முன்னெடுத்து சீரிய முறையில் செயலாற்றி வருகிறது.

     ஏடகத்தைப் பாராட்டுகிறேன்.

     சென்னை உயர்நீதி மன்ற நீதியரசரின் பொழிவு, அரங்கில் குழுமியிருந்த, இளைஞர்களிடைய ஒரு புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் உண்டாக்கியது.

     யாரும் சொல்லாததை, யாரும் செய்யாததை, யாரும் நினைக்காததை, நினைத்து, சொல்லி, செய்து காட்டுபவதுதான் உண்மையான ஆய்வு ஆகும்.

     இத்தகைய ஆய்வினைச் செய்து வரும் ஏடகம், மேலும் மேலும் தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.

     ஒரு கல்வியாளருக்கே உரிய தனித்தன்மையுடன், பல்கலைக் கழகத் துணைவேந்தரின், இரத்தினச் சுருக்கமானப் பேச்சு, அவையை முற்றாய் கவர்ந்தது.




கடந்த 18.10.2021 திங்கள் கிழமை மாலை,

தஞ்சாவூர், பெசண்ட் அரங்கில்

நடைபெற்ற,

ஏடகம்

அமைப்பின்

ஐந்தாவது ஆண்டு விழா

மற்றும்

புதிய நூல்கள்  வெளியீட்டு விழாவிற்கு

பாரதிதாசன் பல்கலைக் கழக

மாண்பமைத் துணைவேந்தர்


பேராசிரியர் எம்.செல்வம் அவர்கள்,

தலைமையேற்றார்.

சென்னை, உயர் நீதிமன்ற

மாண்புமிகு


நீதியரசர் இரா.சுரேஷ் குமார் அவர்கள்,

நூல்களை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.

ஒன்றல்ல, இரண்டல்ல ஏழு நூல்கள்.


முனைவர் மணி.மாறன் அவர்களின்

தஞ்சையும் அரண்மனையும்

ஏடகப் பொருளாளர், ஆசிரியை திருமதி கோ.ஜெயலட்சுமி அவர்களின்

தொல்லியல், சுவடியியல் ஆய்வில் முனைவர் மணி.மாறன்

பழங்குடிகள்

என்னும் இரு நூல்கள்

முனைவர் மணி.மாறன் அவர்களும்

திரு க.முரளி அவர்களும்

பதிப்பாசிரியர்களாய் தொகுத்த

திகிரி கட்டுரைகள்

முனைவர் மணி.மாறன் அவர்கள்

பதிப்பாசிரியராகவும்

நான்

தொகுப்பாசிரியராகவும்

தொகுத்த

ஏடகம் இரண்டாவது ஆண்டு மலர்

ஏடகம் மூன்றாவது ஆண்டு மலர்

ஏடகம் நான்காவது ஆண்டு மலர்

என

ஏழு நூல்கள்  வெளியிடப் பெற்றன.

சிங்கப்பூர், மேனாள் விரிவுரையாளர்


திரு ப.திருநாவுக்கரசு

கும்பகோணம் நகராட்சி ஆணையர்


திரு வே.நவேந்திரன்

தஞ்சாவூர், வட்ட வழங்கல் அலுவலர்


திரு  சமத்துவராஜன் சம்பத்,

ஜே.கே.அசோசியேட்ஸ் தணிக்கையாளர்


ரொட்டேரியன் டி.என்.ஜெயக்குமார்


கரந்தை ஜெயக்குமாராகிய

நான்

என ஐவர் வாழ்த்துரை வழங்கினோம்.

முன்னதாக,

விழாவிற்கு வந்திருந்தோரை

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்கள்

வரவேற்றார்.

ஏடகப் பொருளாளர்


திருமதி கோ.ஜெயலட்சுமி அவர்கள்

நன்றி கூற

விழா இனிது நிறைவுற்றது.

தஞ்சாவூர், பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி

தமிழ்த் துறைத் தலைவர்


முனைவர் சு.சத்தியா அவர்கள்

விழா நிகழ்வுகளைத்

திறம்பட, சுவைபடத்

தொகுத்து வழங்கினார்.

 

நான்கு ஆண்டுகள்

நாற்பத்து எட்டு மாதங்கள்

நாற்பத்து எட்டு – ஞாயிறு

முற்றப் பொழிவுகள்.

நாள்தோறும்

ஓலைச் சுவடி வகுப்புகள்.

ஆண்டு தோறும்

தமிழ்த் தாத்தா

உ.வே.சா இருக்கை நிகழ்வுகள்.

வரலாற்றுச் சுவடுகளைத்

தேடும் பயணங்கள்.

நம் முன்னைத் தமிழரின்

நீர் மேலாண்மைத் திறனை

உலகிற்கு உணர்த்தும்

உன்னத கண்டுபிடிப்புகள் – என

ஏடகம்

பீடு நடைபோடுகிறது – காரணம்

ஒரு தனி மனிதரின்

ஏடகத் தலைவரின்

ஓயா உழைப்பு

அயரா அரும்பணி.

ஏடக அன்பர்களை

ஏடகப் புரவலர்களை

அரவணைத்து

ஒருங்கிணைத்துச் செயலாற்றும்

உன்னதப் பண்பாளர்

ஏடக நிறுவுநர், தலைவர்


முனைவர் மணி.மாறன் அவர்களைப்

போற்றுவோம், வாழ்த்துவோம்.